Sunday, July 26, 2009

"சூரிய கிரஹணம்" - இரு எண்ணங்கள்!

சூரிய கிரஹணத்தன்று இரவு் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, மனத்தில் எழுந்த சில எண்ணங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்! நன்றி.

"சூரிய கிரஹணம்"

http://vizhiyan.wordpress.com/2009/07/22/solar-eclipse-photographs/

[நன்றி: விழியன்]

ஒளிர்மிகுந்தெழுந்தான் ஆதவன்
உலகின் ஒளியே நானென மகிழ்ந்தான்
மறையும்போதில் நிலவைப் பார்த்தான்
என்னைத் தாங்கிடு நீயே என்றான்

ஒளியைத் தாங்கிட முடியா நிலவன்
தேய்ந்தும் வளர்ந்தும் சற்றே நெளிந்தான்
அடங்கிய ஒளியில் அலர்ந்த நிலவினில்
அடங்காக் காதலை அனைவரும் உணர்ந்தார்

தன்னொளியில்லா நிலவின் ஒளியில்
மயங்கிய அனைவரும் மயங்கியே போனார்
நிலவனும் உணர்ந்தான் தன்நிலை தன்னை
உலவிடும் தானும் நிழலென் றறிந்தான்

எனக்கென ஓர்நாள் இருக்குமா என்றான்
என்னையே மறைப்பாய் நீயும் ஓர்நாள்
ஒளியும் நிழலும் ஒன்றே என்பதை
உலகிற் குணர்த்தும் அந்நாள் தன்னில்

எனவே யுரைத்த ஆதவன் மொழியில்
அகமே மகிழ்ந்தான் நிழலவன் நிலவன்
இடையில் வருகையில் இகமே உணரும்
என்செயல் எதுவென யானும் காட்டுவேன்

பகலவன் சிரித்தான் பரமன் சிரித்தான்
அகிலம் சிரித்தது ஐம்புலன் சிரித்தன
மறைவதும் தெரிவதும் மாயவன் வேலை
அதனில் யாமெலாம் அவனது கருவிகள்

கிரஹணம் வந்தது ஆதவன் மறைந்தான்
நிலவன் உணர்ந்தான் நிஜமது அறிந்தான்
ஒருசில நொடியே நிழலும் மறைக்கும்
உண்மை யொன்றே என்றும் நிலைக்கும்

மறுக்கும் குணமும் மனதில் துளிர்க்கும்
குருவின் அருளால் அனைத்தும் புரியும்
மறைவதை உணர்த்தி மங்களம் தருவான்
குறைவிலா வாழ்வினை எமக்கே தருவான்!

குருவே சரணம்! குருவடி சரணம்!
***************************

"கிரஹணம் விலகிட....."

நிலவும் ஆதவன் மறைத்திடும் நேரம்
நீயும் கொண்டாய் நெஞ்சினில் சோகம்

உதயம் எழுந்திடும் பகலவன் முகத்தை
மூடிட எண்ணிடும் அறியா நிலவும்

மெதுவாய்ப் படர்ந்து நிழலால் தவழ்ந்து
சூரியன் மறைத்திட நிலவும் மகிழும்

அதனால் படரும் இருளின் துன்பம்
நிலத்தில் பட்டிட பூமியும் கலங்கும்

கலக்கம் அனைத்தும் ஒருசில நொடியே
விலக்கம் உடனே விரைவில் துவங்கும்

மூடிய நிழலும் சுழற்சியில் நகரும்
மீண்டும் ஆதவன் ஒளியும் தெரியும்

பரவிடும் ஒளியினில் இருளும் விலகும்
பல்லுயிர் மகிழ்ந்து நீரினில் ஆடும்

பாதைகள் முட்டும் புள்ளியில் சிலநொடி
ஒன்றால் ஒன்று மறைதலும் நிகழும்

பாதைகள் விலகிட பேரொளி தெரியும்
சோதனை தீர்ந்து வேதனை மறையும்

விளக்கம் இல்லா விலக்கம் இங்கே
விலகும் அனைத்தும் விளக்கிடும் அன்றோ

அறிவால் இதனை அடைதலும் கூடுமோ
புரிந்திடும் அருளினில் புரிந்திடும் அன்றோ!

குருவே சரணம்! குருவடி சரணம்!
*****************************

Read more...

Wednesday, July 22, 2009

"அ. அ. திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"


இந்தத் திருப்புகழ் பலரும் அறிந்த ஒரு புகழ்! இசைநிகழ்ச்சிகளில் அடிக்கடி பாடப்படும் பாடல். மதுரை சோமு மிக அருமையாகப் பாடுவார் இதை! இன்றையப் பதிவில் இந்த எளிய, பொருள் நிறைந்த பாடலின் புகழ் பார்க்கலாம்! முருகனருள் முன்னிற்கும்!

****** பாடல் ******

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்


இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்


மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே


செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.


****** பொருள் ******
[பின்பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பார்க்கலாம்!!]


அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி

[அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி]


'அகரமும் ஆகி'

எழுத்துகளின் தொடக்கம் அகரம்
உயிர்களின் தொடக்கம் இறைவன்


பிறவெழுத்துகளின் இயக்கமும் இதனால்

உயிரும் உலகும் இறையின்றி இயங்கா


அனைத்தெழுத்திலும் உன்னி நின்றிடும் அகரம்

அனைத்துயிரிலும் மறைந்திருப்பவன் இறைவன்


அகரம் சொல்லிட அதிகச் சிரமமில்லை

இறைவன் இயக்கமும் தானாய் நிகழும்

அ,உ,ம, எனும் மூவெழுத்து இதனுள்

முத்தொழிலும் இறைவன் கையில்


அருளெழுத்தாம் 'வ'கரமும் அகரத்துள்

அருளைத் தருபவன் எம்முடை இறைவன்


தொலைவையும் சுட்டும் 'அ'வெனும் எழுத்து

எட்டிநிற்பினும் அருள்வான் இறைவன்


இத்துணை பெருமை கூடிய அகரமும் ஆகி,


'அதிபனும் ஆகி'

'எந்தக் கடவுளும் என் தோள் போழ்
கந்தக் கடவுளை மிஞ்சாதே'எனும்

பாம்பன் சுவாமியின் வாக்கிற்கொப்ப

தனிபெருந் தலைவனாய்த் திகழ்பவனாகி,


'அதிகமும் ஆகி'

தெய்வங்கள் பலவுண்டு இத்திருநாட்டினிலே
அனைத்துக்கும் அதிகமாய் நிற்பவன் முருகன்

'சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை

சுப்ரமண்யர்க்கு மிஞ்சிய தெய்வமுமில்லை'
எனும்
பழமொழிக்கேற்ப அதிகமானவானுமாகி,


'அகம் ஆகி'

முத்தி பெறும் அனைவருமே அகத்துள் செல்வர்
அகத்தில் உறைபவன் அழகிய முருகன்

வீடு பேற்றினை நல்கிடும் நல்லருட் தெய்வமுமாகி,


'அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்'

படைப்பினைச் செய்திடும் பிரமனுமாகி
காத்தலை நிகழ்த்திடும் மாலுமாகி

அழித்திடச் செய்யும் உருத்திரனுமாகி

அவர்க்கும் மேலாய் அற்புதம் காட்டும்

அழகிய முருகனுமாகி,


'இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே'
[இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே]

தொலைபொருள் காட்டும் அகரமும் ஆனவன்
அருகினில் இருக்கும் இகரமும் ஆகி

அண்டிடும் அடியர்க்கு நல்லருள் புரிவான்


காற்றாகிக் கொடியாகி கானகமுமாகி

ஊற்றாகி உயிராகி உள்ளவை யாவுமாய் ஆகி
தோற்றுவிக்கும் அத்தனையும் தானேயாகி

ஆற்றல்நிறைப் பரம்பொருளாய் யாவுமாகினான்


கனியிலும் இனியன் கரும்பினும் இனியன்

பனிமலர்குழல் பாவையரினும் இனியன்
தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன்

உயிரினும் இனியன் உணர்வினும் இனியன்

இனிக்கும் இனிமையாய் வருபவன் முருகன்



'இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்'
[இருநிலம் மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்]

பூவுலகில் வாழ்கின்ற அனைத்துயிரும் நலம்வாழ
எனதுமுன்னே நீ விரைந்தோடி வரவேணும்



'மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே'
[மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே]


அசுவமேத யாகம்பல செய்ததனால்
யாகத்தின் அதிபதியெனப் பெயர் பெற்று
வலன் எனும் அரக்கனை அழித்தமையால்

வலாரியெனப் புகழ்பெற்ற இந்திரனும்

தம்மகளாம் தெய்வநாயகி மணாளனின்

பேரழகைக் கண்டு மனதிலங்கு வியந்து

மகிழ்வுடனே போற்றும் வடிவழகு பொருந்தியவனே


'வனமுறை வேடனருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே'

வனத்தில் வாழ்ந்தான் வேடனொருவன்
தனக்குள் ஆசையை அவனும் வளர்த்தான்

மனமயில் முருகனின் பூஜனை செய்திடும்

நினைவினில் அவனும் கோயிலை அடைந்தான்


கையினில் கனிகளும் கொம்புத்தேனும்

கொய்திட்ட புதுமலர்க் கொத்தும் கொண்டு

பையவே நடந்தான் கதிர்காமக் குமரனின்

மெய்வழிச் சாலையின் கோவிலை நோக்கி


செய்திட்ட பூஜையில் முருகன் மகிழ்ந்தான்

வந்திட்ட வேடனின் பூஜனை ஏற்றான்

மந்திரமில்லப் பூஜையிலும் மகிழ்வான்
மனமதிலொன்றி மகிழ்வுடன் செய்தால்


'செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே'

பொருந்திடும் போரில் வருந்திடும் உயிர்கள்
எழுந்திடும் விழுந்திடும் அவுணரின் உடல்கள்

வேலனின் மயிலின் போரதில் மாயும்

செககணசேகு தகுதிமிதோமி எனவெழும்
மயிலின்
மீதினில் அமர்ந்து அடிடும் முருகோனே


'திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே'

செல்வம் மலிந்து கிடக்கும்
பழமுதிர்ச்சோலை மலையின்மீது

பெருமையுடன் அமர்ந்திருக்கும்

மனமயில் முருகோனே!

***********


****** அருஞ்சொற்பொருள் ******

அகரம் = 'அ' எனும் முதல் எழுத்து

அதிபன் = பெருந்தலைவன்

அயன் = பிரமன்

அரி = திருமால்

அரன் = சிவன்

இகரம் = சமீபத்தில் இருப்பவர்

இருநிலம் = பெரிய நிலம்

மகபதி = ஆயிரம் யாகம் செய்தவன்

வலாரி = வலன் எனு அசுரனைக் கொன்ற இந்திரன்

திரு = செல்வம்

***********


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

*********************************

Read more...

Monday, July 20, 2009

"திரை சொன்ன கதை!"

"திரை சொன்ன கதை!"


கவலைகளை மறந்திருக்கத் திரையரங்கம் சென்றேன்
கொறிக்கக் கொஞ்சம் வாங்கிவந்து இருக்கையிலே அமர்ந்தேன்

விளக்கெல்லாம் அணைந்திருக்கத் திரையில் படம் ஓட

வியப்புடனே நடப்பதனை விழியகலக் களித்தேன்

எட்டிவந்த எட்டுப்பேரை எத்திவிட்ட நாயகன்

கிட்டவந்து காதலியைக் கட்டியணைத்துக் கொஞ்ச

மொட்டவிழ்ந்த மலர்போல இசையென்னை வருட
கொட்டக்கொட்டப் பார்த்திருந்தேன் எனைமறந்து

திரையை
எதிரில்வந்த அனைவருமே நிஜமெனவே தெரிந்தார்
எதிர்த்து நின்ற அனைவருமே குருதிகொட்ட நின்றார்

புதியதிந்த உலகமெனத் தலையைச் சற்று நிமிர்ந்தேன்

புதிரான புகைமூட்டம் தலைக்கு மேலே கண்டேன்


புகைவந்த திசைநோக்கி பார்வை சுழல விட்டேன்

ஒளிவெள்ளம் ஒருபுள்ளியில் தொடங்கிவரக் கண்டேன்

திரையில் விழுந்த அனைத்துமே நிழலெனவே தெரிய

அரைகுறையாய் ஏதோவொன்று எனக்குள்ளே புரிய


திரையில் வந்த எல்லாமே நிஜமில்லை இங்கு

ஒளியொன்று செலுத்திவர உயிர்த்ததவை என்று

நிஜமான நாயகனோ எனக்குப் பின்னே இயக்க

விதவிதமாய்த் தெரிவததின் மூலமிங்கு கண்டேன்


புரியாதது புரிந்தபின்னர் அதனில்நாட்டம் கொண்டேன்

தெரிகின்ற ஒளியொன்றில் மனமாழ்த்தி நின்றேன்

விரிகின்ற மலர்போல என்னுள்ளம் மலர

இறையவனும் இதுபோல என்பதிங்கு புரிந்தேன்


கண்ணெதிரே தெரிகின்ற காட்சியெல்லாம் நிழலே
விண்ணதிரக் காண்பதெல்லாம் என்றுமிங்கு பொய்யே

பின்னிருந்து இறையொருவன் இயக்கமொன்று செய்ய

முன்னிருக்கும் எல்லாமும் நகர்வதென்று தெளிந்தேன்


இறையொன்றில் நாட்டம்வைத்து அதனுள்ளே நினைந்தால்

கரைசேர்க்கும் காவலென அவனிங்கே வருவான்

பிறைநிலவும் வாங்குமொளி ஆதவனின் கருணை

திரைமீது வருமொளியும் பேரொளியின் துளியே


இன்னும் சற்றுப் புரியவேண்டி தாளிணையைப் பணிந்தேன்

மின்னுமொளி கூடிவர குருநாதன் வந்தான்
என்னுடனே வாவெனவே என்னைக் கூட்டிச் சென்றான்

தன்னருளால் இன்னலெல்லாம் எனிலகற்றிக் காத்தான்


பேரருளின் திறன் புரிய பேருலகம் கண்டேன்

பேருலகில் உள்ளதெல்லாம் இறையென்றே அறிந்தேன்

வேறுசுகம் வேண்டாத ஓர்நிலையில் நின்றேன்

பாருலகில் அனைவரையும் இறையெனவே புரிந்தேன்


படைத்தவனைப் புரிந்துவிட்டால் பாருமிங்கே ரசிக்கும்

கிடைத்ததிலே மகிழ்வுகொண்டால் சோர்வுமிங்கே பறக்கும்

பிடித்தவனைப் பற்றிக்கொண்டால் பயணமிங்கே ருசிக்கும்

விடையிதனைத் தெரிந்துகொண்டால் வாழ்வுமிங்கே செழிக்கும்


திரைப்படமும் முடிந்துவிட எழுந்தங்கு நடந்தேன்

கறையெல்லாம் தீர்ந்துவிட்ட மனத்துடனே வந்தேன்
உரைக்கின்ற எல்லாமும் யான் சொன்னதும் அல்ல

நிறைவான குருவருளால் சிலவிங்கு சொன்னேன்.

************

குருவடி சரணம்! குருவே சரணம்! **********************************************

Read more...

Tuesday, July 14, 2009

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல்

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல்


மன்னாரைத் தேடிக்கொண்டு வழக்கமான நாயர் கடைக்குப் போனேன்.
அமரச் சொல்லிவிட்டு, மசால் வடையும், டீயும் வழங்கினார் நாயர்.
'வர்ற நேரந்தன். இப்ப வரும்' எனச் சொல்லிவிட்டு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.


கடையிலிருந்து வந்த பாட்டு என் காதுகளில் ரீங்கரமிட்டது!

'அழகிய அசுரா! அழகிய அசுரா! அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சுகிச்சு மூட்டவில்லையா'

என அனிதா சந்திரசேகர் பாடிக் கொண்டிருந்தார்.


அடையாறிலிருந்து வந்த பேருந்து ஒன்றிலிருந்து அநாயசமாகக் குதித்து இறங்கினான் மயிலை மன்னார். முகத்தில் கோபம் வீசிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தும் பார்க்காதவன் போல், நேராக நாயரிடம் சென்று, ஒரு டீயை வாங்கிக் கொண்டுவந்து என்னருகில் அமர்ந்தான்.


அவனாகப் பேசட்டும் எனக் காத்திருந்தேன். இதுபோன்ற நேரங்களில் ஏதேனும் பேச்சுக் கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்வது நாமாகத்தான் இருக்கும் எனத் தெரியும் எனக்கு!


ஒரு பீடியைப் பற்றவைத்தவன், நாயரைப் பார்த்து, 'அந்தப் பாட்டை நிப்பாட்டு நாயர்! இல்லைன்னா ஸ்டேஷனை மாத்தித் தொலை' எனக் கோபமாகக் கத்தினான்.

விஷயம் கொஞ்சம் தீவிரமானது எனப் புரிந்த நான் மன்னாரின் தோள் மீது கையைப் போட்டேன்.

என்னைப் பார்த்து கொஞ்சம் சிரித்தான்.


'இன்னாடா இன்னிக்கு மன்னாரு படா ஜூடா இருக்கானேன்னு பாக்குறியா? அது ஒண்ணுமில்லேப்பா. இந்த காலத்துப் பசங்க தானா ஒருத்தனை/ஒருத்தியை மனசுல நினைச்சுகிட்டு, கனவு காண ஆரம்பிச்சிடறாங்க. அவன்/அவ மனசுல நாம இருக்கோமான்னு கூட கவலைப் படாம! இது எம்மாந் தூரத்துக்கு வெவகாரத்துல கொண்டுபோயி விட்டுடுதுன்னு அப்போ தெரியறதில்ல. குடும்பத்துல பிரச்சினை, தனக்குள்ள பிரச்சினைன்னு இது பல பிரச்சினைங்களுக்கு கொண்டு போயிடுது.
நம்ம கபாலி மவ கற்பகம்... ஒரு பதினைஞ்சு, பதினாறு வயசுதான் இருக்கும்.... அது இதுமாரி ஒரு கனவுல மாட்டிகிட்டு கன்னாபின்னான்னு எதையோ கிறுக்கி வைச்சிருக்கு. அது கபாலி கையில் கிடைச்சு, போட்டு பின்னி எடுத்துட்டான். கபாலி சம்சாரம் என்னைக் கூப்பிட்டு ஒடனே வரச் சொல்ல, அங்கே போயிப் பார்த்தா, ஒரே ரணகளம். அதை இன்னா ஏதுன்னு விசாரிச்சு நாட்டாமை பண்ணிட்டு வந்தேன். இதுல இன்னா வேதனைன்னா, அந்தப் பையன் இதுகிட்ட நீ எனக்கு சரிப்படாதுன்னு கண்டிசனா சொல்லியிருக்கானாம். இதுதான் அதைக் கண்டுக்காம தடுமாறிகிட்டு இருக்கு! அத்தோட இங்க வந்தா 'கனவுல வந்து கிச்சுகிச்சு மூட்டறா ஒருத்தி' !! அதான் கொஞ்சம் டென்சனாயிட்டேன்' எனச் சொன்னவன் திடீரெனக் 'கடகட'வெனச் சிரிக்கத் தொடங்கினான்.


'என்ன? என்னாச்சு?' என நான் துருவினேன்.

'அட! அது ஒண்ணுமில்லீப்பா! இந்த ஒருதலையாக் கனவு காண்றது இன்னிக்கு நேத்திக்கு இல்ல. வள்ளுவன் காலத்திலியே இருந்திருக்கு! இத்த வைச்சு, ஒரு அதிகாரமே எளுதியிருக்காரு. படா தமாசா இருக்கும் அது. எளுதும்போது சிரிச்சுகிட்டே எளுதியிருப்பாருன்னு நினைக்கறேன். இப்ப அதைச் சொல்றேன். எளுதிக்கோ! எனக்கும் கொஞ்சம் மனசு லேசாகும்' எனச் சொல்லித் தொடங்கினான். மகிழ்ச்சியுடன் எழுதிக் கொண்டேன். இதோ உங்கள் பார்வைக்கு!

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னார் சொன்ன விளக்கமும்.!

'அதிகாரம்- 122.' " கனவுநிலை உரைத்தல் "

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. [1211]


இந்தக் கனவு காண்றதெல்லாம், அதிகமாப் பொண்ணுங்களே செய்யறாங்கன்றது ஐயனோட அபிப்பிராயம்னு நினைக்கறேன். அதுனால, இந்தப் பத்துக் குறள்லியும் ஒரு பொண்ணு காண்ற கனவைப் பத்தியே சொல்லியிருக்காரு! ஆனா, இது ஆம்பளைப் பசங்களுக்கும் பொருந்தும்ன்றதை நெனைப்புல வைச்சுகிட்டு புரிஞ்சுக்கோ! சரியா!

மொதல்ல இந்தக் காதல்ன்றத சரியாப் புரிஞ்சுக்கோ! ஒருதலையா அன்பு வைக்கறதுக்குப் பேரு காதல் இல்லை! காதல்ன்னா அது ரெண்டு பேருக்குள்ள வர்றது. மத்ததெல்லாம் காதல் இல்லை. ஒருத்தியை நெனைச்சுகிட்டு தாடியை வளர்த்துக்கறதோ, இல்ல, அவனை நெனைச்சுகிட்டே சாப்பிடாம ஒரு பொண்ணு மெலிஞ்சு போறதோ மட்டும் காதல்னு ரொம்பப் பேரு நெனைக்கறாங்க! இது வெறும் அன்பு வெறி மட்டுந்தான்! காதல் இல்லை! சரி விடு! இப்ப குறளைப் பார்ப்போம்.


இந்த மொதக் குறள்ல, ஒரு பொண்ணு கனவு காண்றா! அதுல இவ காதல் பண்ற ஆளுகிட்டேர்ந்து ஒரு தூது எடுத்துகிட்டு வருதாம் அது! கனவுன்றதே இவ நெனைக்கறதோட வெளிப்பாடுதானே! அதான் அவன் வந்து எனக்கு ஒன்னிய ரொம்பவே பிடிச்சிருக்குன்னு சொல்றதா இவ கனவு காண்றா! ஒடனியே, ஆஹா! இப்பேர்ப்பட்ட நல்ல சேதியைச் சொன்ன இந்தக் கனவுக்கு நான் இன்னா விருந்து வைக்கறதுன்னு அடுத்த கனவுக்குப் போயிடறா!!


கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். [1212]


நேருல பாக்கறப்பல்லாம் ஒண்ணுமே நடக்கலை! அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லை. ஆனா, இவளுக்கோ அவன் மேல ஆசை அதிகமாயிட்டே இருக்கு! அதுனால தூக்கங்கூட சரியா வர்றதில்ல!
கொஞ்சமாவது தூங்கினாத்தானே கனவுன்னு ஒண்ணு வந்து அதுலியாவது அவனோட பேசலாம்; ஆடலாம்! அதுனால, இவ இன்னா பண்றான்னா, கண்ணுகிட்ட வேண்டிக்கறா!
'ஏ! கண்ணே! கண்ணே! கொஞ்சம் ஒன்னோட இமைங்களை மூடச் சொல்லேன்! அப்பத்தானே என் கனவுல அவரு வருவாரு! அவரு வந்தாத்தானே 'நீ இன்னாதான் என்னைக் கண்டுக்கலைன்னாலும், நான் ஒனக்காகவே காத்துகிட்டிருக்கேன்'ற சமாச்சாரத்தை நான் அவர்கிட்ட சொல்லமுடியும்'னு பொலம்பறா.
நேருலதான் ஒண்ணும் ஆவலை! கனவுலியாவது கெஞ்சலாமேன்னு நெனைக்கறா இவ!


உயல் உண்மைன்னா, இருக்கற உண்மைன்னு பொருள்!

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். [1213]


முளிச்சுகிட்டு இருக்கறப்ப, அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லை! அப்பிடியே கண்டுகிட்டாலும், எனக்கு ஒம்மேல காதல்னு ஒண்ணும் இல்லைன்னும் சொல்லிட்டானாம்! இருந்தாலும் இதுக்கு மட்டும் ஆசை விடலை! அவனையே நெனைச்சுகிட்டு கனவு காண்றா! அதுனாலத்தான் இவ உசுரே இவ கிட்ட இன்னும் இருக்குதாம்!
இவளா ஒண்ணை நெனைச்சுக்க வேண்டியது! அப்பால, அதுனாலத்தான் என் உசுரே எங்கிட்ட இருக்குன்னு முடிவு பண்ணிட வேண்டியது. இதே பொளப்பாப் போச்சு!


கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. [1214]


இந்த 'நனவினான் நல்காரை'ன்னு திருப்பித் திருப்பி ஐயன் சொல்றதைக் கெவனி!
நேர்ல ஒண்ணும் கொடுக்காதவன்னு அவனோட நிலையைக் கண்டிசனா சொல்லிடறாரு. இதான் கெடந்து அல்லாடுது.

இப்பிடி அவனைக் கனவுல அடிக்கடி பாக்கறதுல இதுக்கு வர்ற சந்தோசம் இருக்கே அதுவே அவன் நேர்ல ஒண்ணுமே தராததைக் கூட மறக்கடிச்சு அவ்ளோ குஜாலைக் கொடுக்குதாம்!


நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. [1215]


எதுத்தாப்புல அவன் வர்றப்ப, அவனைப் பாக்கறப்ப, அவனோட பளகறப்ப, கிடைக்கற சந்தோசம் அந்த நேரத்துக்கு மட்டுமே இருக்கு. அவன் போனப்பறந்தான் அவன் சொன்னதுல்லாம் மனசுல வந்து கஸ்டத்தைக் குடுக்குதே!
அதேபோல, கனவுல அவன் வர்றதும், பளகறதும் அந்தக் கனவு இருக்கற வரைக்குந்தான் இன்பமா இருக்கு. முளிச்சவொடனே, நெசம் புரியறதால, மறுபடியும் தொல்லைதான்! துக்கந்தான்!

இதைத்தான் சொல்றாரு ஐயன் தெளிவா இதுல. ரெண்டு பேருக்கும் ஒத்துப் போவலைன்னா, அல்லாமே கொஞ்ச நேரத்துக்குத்தான் இன்பமா இருக்கும். அது பூடுச்சுன்னா, அப்பால ரோதனைதான்!


நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். [1216]


இந்தக் குறள்தான் ரொம்பவே தமாசா இருக்கும் பாரேன்!
கண்ணு முளிச்சு இருக்கற நேரம்லாம், உண்மைநிலை இன்னான்னு புரியறதுனால, அவன் எனக்கு இல்லைன்றது தெளிவா வெளங்கி கஸ்டப்படுத்துது.
கனவு காண்றப்ப, இதெல்லாம் மறைஞ்சுபோயி, அவனோட ஆட்டம், பாட்டம் எல்லாம் நடக்குது
...... நம்ம மனசுதானே காணுது! அதுக்கு நாமதானே எசமான்! இஸ்டம்போல எது வேணும்னாலும் கண்டுக்கலாமே!.....
அதனால, இப்ப இந்தப் பொண்ணு இன்னா நெனைக்குதுன்னா, இந்த நனவுன்ற நெசமே இல்லாம இருந்தா, ஜாலியா எப்பவுமே கனவு கண்டுகிட்டே இருக்கலாமே. அவனோடேயே இருக்கலாமேன்னு இதுக்கு ஐடியா தோணுது!

இப்பிடித்தான் நெசத்தைத் தொலைச்சுபிட்டு கனா காண்றதுலியே நிக்குதுங்க பலபேரு! மறந்திராதே!
இது பொம்பளைக்கு இங்கே சொன்னாலும், ஆம்பளைங்களுக்கும் பொருந்தும்!


நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது [1217]


இப்ப, இன்னும் கொஞ்ச மேல போறாரு ஐயன்!
கனவுன்றது நாமளே நெனைச்சுக்கறதுன்னு சொன்னேன்லியா! அதுல அப்பப்ப, இவன் நேருல சொன்ன சில விசயங்களும் வரும்! அதான் 'நான் ஒன்னியக் காதலிக்கலை'ன்னு சொன்னதும்!
இன்னாடா இது ரோதனையாப் போச்சு! நனவுலதான் ஒண்னும் நல்லபடியாக் கொடுக்கலை! நிம்மதியா நம்ம இஸ்டத்துக்குக் கனாக் காணலாம்னா அதுலியும் வந்து இப்பிடி சொல்லிட்டுப் போறானேன்னு இதுக்குக் கோவம் கோவமா வருது. 'நேருல வந்துதான் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டே! இப்ப கனாவுலியும் வந்து ஏன் கஸ்டம் கொடுக்கறே?'ன்னு அவனைத் திட்டுது!


துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தவர் ஆவர் விரைந்து. [1218]


படுத்துத் தூங்குது!
இஸ்டத்துக்குக் கனா வருது.
கனவுல வந்து இன்னான்னமோ பண்றான் அவன்!
அவ தோள்மேல நின்னுகிட்டு ஆடறானாம்!
'டக்'குன்னு முளிப்பு வருது! முளிச்சுப் பார்த்தா அவனைக் காணும்! அல்லாம் கனவுன்னு தெரியவருது.
அந்த கனா கொடுத்த சந்தோசத்துலியே அதுவே நெசம்னு ஏமாந்துபோயி, அவனைத் தூக்கி நெஞ்சுக்குள்ள வைச்சு மூடிக்கறாளாம் இவ!
ஆசைதான் இன்னும் ஜாஸ்தியாவுது! அப்பால இன்னா? தொடர்ந்து கஸ்டந்தான்!


நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். [1219]


எத்தினிவாட்டி 'நனவினால் நல்காதவர்'னு இந்த அதிகாரத்துல சொல்லியிருக்காரு பாரு!
சில சமயம் இன்னோரு தமாஸ் நடக்கும். எப்பவுமே இவனைப் பத்தின கனாவே வரும்னு சொல்ல முடியாது. நாளைக்கு ஒரு பரிட்சை இருக்குன்னு வைச்சுக்கோ! அதை நல்லா எளுதணுமேன்ற நெனைப்புல அதைப் பத்தின கனா கூட வரலாம். இது மாரி, வேற சில கனாக்களும் வரலாம். அன்னிக்கெல்லாம் இவன் ஜூட் விட்டுட்டான்னு மறுநாளைக்கு முளிச்சுகிட்டதும், நீ ஏன் நேத்திக்கு என்னோட கனவுல வரலைன்னு அவங்கிட்ட சண்டை போடறா!
கனான்றதே நாமளா கொண்டுவர்றதுதான்னுகூட புரிஞ்சுக்காம! இதான் அவஸ்தை!


நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்க்கொல் இவ்வூ ரவர். [1220]


இது அல்லாத்துலியும் இதான் டாப்!
அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லைன்றது அரசப் பொரசலா அக்கம்பக்கத்துக்கு தெரிய வருது!
'ஏம்மா! அவன் ஒன்னை விட்டுட்டானா?'ன்னு அவங்க கேக்கறப்ப, இது இன்னா பதில் சொல்லுது தெரியுமா?
'இல்லியே! அடிக்கடி என்னோட கனாவுல வந்து போறாரே! அது உங்களுக்குத் தெரியாதா?'ன்னு திருப்பிக் கேக்குதாம்.
அந்த அளவுக்கு முத்திப் போயிருது இந்த ஒருதலையான நேசம்!


அந்தக் காலத்துலியே இப்படில்லாம் இருந்திருக்கு. இது இன்னிக்கும் தொடருதுன்றதுப்பா!

தனக்குன்னு ஒருத்தன் வருவான்றதை நம்பாம, இப்பிடிப் போயி விளுந்திட்டு பின்னாடி அல்லல் படறதை விட்டுட்டு, அந்தந்த வயசுல இன்னா செய்யணுமோ அதைச் செஞ்சுகிட்டிருந்தா தானே அல்லாம் நடக்கும்னுதான் கற்பகத்தாண்டை சொல்லிட்டு வந்திருக்கேன். பார்ப்போம்! இன்னா நடக்குதுன்னு' எனச் சொல்லிவிட்டு, 'சரி வா! ஏதாச்சும் சாப்பிடலாம்!' எழுந்தான் மயிலை மன்னார்.

இந்த அதிகாரத்தை இப்படியும் பார்க்க முடியுமா என வியந்துகொண்டே நானும் கூடச் சென்றேன்... 'ஹோட்டல் சங்கீதா'வை நோக்கி!
**********************************

Read more...

Sunday, July 12, 2009

"அ.அ. திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"

அருணையார் அருளிய திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"


மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், இன்று ஒரு திருப்புகழ்!
மாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
முருகன் அருள் செய்ய வேண்டும்.


இன்றைய திருப்புகழ் கொல்லிமலை முருகனைப் போற்றிப் பாடியருளியது.
பரமானந்தக் கடலில் நானும் மூழ்க அருளிச் செய்யப்பா என வேண்டுகிறார் அருணையார்!
இப்போது இந்த அழகிய பாடலைப் பார்ப்போம்!

முருகனருள் முன்னிற்கும்!!

********************************

***********பாடல்***********

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்

சொல்லுகுண மூவந்த மெனவாகி

துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து

தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்


பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்

பல்குதமிழ் தானொன்றி யிசையாகி

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த

பௌவமுற வேநின்ற தருள்வாயே


கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு

கல்வருக வேநின்று குழலூதுங்

கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை

கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா


கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று

கொள்ளைகொளு மாரன்கை யலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த

கொல்லிமலை மேனின்ற பெருமாளே.


இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பாடல்! பொருளறியும் போது புரியும்! வழக்கம் போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

********** பொருள் *********

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு

கல்வருக வேநின்று குழலூதுங்
கையன்

கல் உருகவே இன்கண் அல்லல்படு
கோ அம்
புகல் வருகவே நின்று
குழல் ஊதும் கையன்

குழலூதி நின்றால் கல்லும் உருகிவிடும்
புகலிடம் ஏதென்று அல்லல் படுகின்ற

ஆவினங்களுக்குச் சொந்தயிடம் இதுவென்று

புரிந்திடும் வண்ணம் புல்லாங்குழல் எடுத்து

இனியகானம் இசைக்கின்ற கண்ணனெனும்


மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா


மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன்
எந்தை
கைதொழ
மெய்ஞ்ஞானம் சொல் கதிர்வேலா

திரிபுரம் எரிக்கப் புறப்பட்ட வேளையில்
விநாயகனை வணங்காமல் தேவர்கள் தொடங்க

தேரின் அச்சு முறிந்து வீழ்கையில்

இடபமாக வந்து நின்று திருமால்அருள

அதன்மீது ஏறியருளிய பெருமானாம்

மெலிந்த சடைகளை உடைய எந்தைபிரான்

சிவனாரும் கைதொழுது நின்று

ஓமெனும் பிரணவத்தின் பொருளை அறியவேண்டி

பணிந்து நின்று கேளெனச் சொல்லி

பிரணவப் பொருளினை அருளிச் செய்த

ஆதவன்போல ஒளிபொருந்திய
வேலினைத் தாங்கும்
முருகோனே!

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த

கொல்லிமலை மேனின்ற பெருமாளே


கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமே சென்று

கொள்ளைகொளும் மாரன்கை அலராலே

கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா! கந்த!

கொல்லிமலை மேல் நின்ற பெருமாளே!


தினைப் புனத்தைக் காவல் செய்யவேண்டி
கையில் கவண்கல் எடுத்து வந்து

ஆலோலம் பாடிநின்ற வள்ளிநாயகியாரின்

புனத்தை நாடிச்சென்று காதலுணர்வைக்

கூட்டித்தரும் மன்மதன் எறிகின்ற மலர்க்கணை
விளைவித்த காதல் பெருக்கினால் ஆட்பட்டு

கையில் கிடைத்த தழைகளையெல்லாம் பறித்துக்கொண்டு
சென்ற கட்டழகு உடையவனே! கந்தக் கடவுளே
!
கொல்லிமலைமீது வீற்றிருக்கும்
பெருமை மிகுந்த சிறந்தவனே!


தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த மெனவாகி

துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து

தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்


தொல்லைமுதல் தான் ஒன்று மெல்லி இரு பேதங்கள்

சொல்லு[ம்]குணம் மூ[ன்று] அந்தம் எனவாகி

துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து

தொய்யு பொருள் ஆறு அங்கம் என மேவும்


[இந்த வரிகள் ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகிய கவித் திறத்தைக் காட்டுகின்றது.]

பழைமை எனவரும் இறைவனே முதல்வன்

சக்தியும் சிவனுமாய் இருவராகி அருள் புரிவான்


சத்துவம், இராஜஸம், தாமஸம் என்னும்

முக்குணங்களின் சொரூபமாய் விளங்கும்

அயன்,அரி,அரன் என்பவரின் மூலமாய் விளங்குவான்


ருக்,யஜுர்,சாம, அதர்வணம் என்னும்

நான்கு வேதங்களின் ஆதியாய்த் திகழ்வான்


சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்னும்

ஐந்து புலன்களையும் வென்றவனும் இவனே


நாசி வழியே உருவாகும் எழுத்துகளின் ஒலியானவன்

வாய் வழியே எழுந்த ஒலியின் விளைவாய்
மகேச்வர சூத்திரம் என்னும் இலக்கணம் பிறப்பித்தவன்
கவிதைகளின் பாதம் போலும் சந்தஸ்
இதனுதவி இல்லாமல் எழுதும்கவி நிலைக்காது

இத்தனை இத்தனை எழுத்து, மாத்திரை என
வரையறுக்கும்
கால் போலும் சந்தஸை உருவாக்கியவன்

எதனால் இப்பதம் இங்கு வந்ததென உணர்விக்கும்

நிகண்டு எனப்படு நிருக்தம் காதுவழியே தந்தவன்

காணும் பொருளைக் காட்டுவிக்கும் கண்போல

விளைவதைக் காட்டும் ஜோதிடம்எனும் கண்ணானவன்

இன்னின்ன செயல் செயும் கைகள்போலானவன்


என எம்மை சோர்வடையச் செய்யும்

ஆறு அங்கங்களை உடையவனாகி


[இவற்றை எல்லாம் விட்டால்தான் அவன் தெரிவான்! அறிவழிந்தாலே அவன் அகப்படுவான்!]

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகி

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த

பௌவமுற வேநின்ற தருள்வாயே
.

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள்

பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி

பல்லுயிருமாய் அந்தம் இல்ல[லா] சொரு[ரூ]ப ஆனந்த

பௌவம் உறவே நின்றது அருள்வாயே


ஒலிக்கின்ற ஓசையெலாம் நீயே ஆனாய்
வாழுமுலகில் கட்டிவைக்கும் பசு பாசங்களானாய்

வெள்ளமெனப் பெருகிவரும் தீந்தமிழில் பொருந்தி நின்றாய்

மனதை மயக்கும் இசையாகவும் ஆனாய்

அத்தனை உயிர்களிலும் வாழும் ஒரே உயிருமானாய்

இதன் காரணமாகவே முடிவே இல்லாதவனும் ஆனாய்

இத்தனையும் நிறைந்த ஆனந்த உருவக் கடலும் ஆன


இவைஅத்தனையும் கூட்டிவந்து நிலையாய் அளிக்கவல்ல

அந்தப் பொருளை எனக்குக் காட்டி அருள்வாயே!

*****************

******அருஞ்சொற்பொருள்*******

வெய்ய = கொடிய

தொய்யு பொருள் = சோர்வடையச் செய்யும் பொருள்

அல்க = தங்க

பௌவம் = கடல்

புகல் = அடைக்கலம்

மிசை = மீது

நொய்ய = மெலிதான, நுண்மையான

எந்தை = எம் தந்தை

மாரன் = மன்மதன்

மழவன் = கட்டான உடலை உடைய இளைஞன்

********************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!

******************************

Read more...

Thursday, July 09, 2009

குருவடி சரணம்! குருவே சரணம்!


குருவடி சரணம்! குருவே சரணம்!



என்றோ செய்த புண்ணியப் பலனாய்
சென்றிடும் போதெலாம் தரிசனம் தந்தாய்
அன்பே ஒன்றே அணிகலனாக்கி
அகமும் புறமும் நிறைத்திட வந்தாய்


கனிவுடன் பணிவாய் பணிவினில் வெல்வாய்
காணும் யாவிலும் கடவுளைக் காண்பாய்
இனிமை ஒன்றே நின் சொலில் வந்திட
அடியவர் யாவரும் மகிழ்ந்திடச் செய்வாய்


பழகிட எளிமை பார்த்திட இனிமை
அழகிய முகத்தின் அருளொளி இனிமை
திகழும் புன்னகை சிந்திட இனிமை
புகலும் மொழிகள் கேட்டிட இனிமை


இறைவன் இருப்பது நின்னால் புரிந்தேன்
நம்பிடும் சொல்லில் வேதம் உணர்ந்தேன்
கும்பிடும் அடியவர் குணங்கள் அறிந்தேன்
கோபம் இல்லா வாழ்வினை விழைந்தேன்


இறைவழி சென்றிட இன்னல்கள் இல்லை
தன்வழி சென்றிடும் குணமும் அவனே
தன்வழி இறைவழி சேர்ந்திடும் போது
தன்னலமில்லா இன்பம் வருமே


என்வழி எனநான் எண்ணிடும் செய்கை
இறைவழி விட்டு விலகிடும் பாதை
என்செயல் செய்திட விளைந்திடும் வினைவுகள்
என்விதி என்பதை எனக்கே தெளிந்தாய்


தாயை வேண்டிட தயவவள் புரிவாள்
வேண்டும் யாவையும் விரைந்தே அருள்வாள்
கொடுப்பது ஒன்றே அவளின் குணமாம்
கோபம் கொள்வது இறையிலை என்றாய்


காலையில் தினமும் ஒருசிலநொடிகள்
தாயை வேண்டி தியானம் செய்தால்
நாளும் உடனே அன்புடன் காத்திட
நற்செயல் செய்திட தாயவள் வருவாள்


பலநூல் படித்துக் காலத்தைக் கழித்து
படித்ததன் பொருளை உணர்ந்திட மறுத்து
அனைத்தும் அறிந்ததாய் ஆணவம் பிடித்து
இருக்கும் நாட்களைச் செலவிடல் முறையோ


படித்தது போதும் பயிற்சியில் நுழைவாய்
நாளும் சிலநொடி தியானம் புரிவாய்
கனவினில் நிகழ்வது யாவும் பொய்யே
நனவிலும் அதுவே என்பதை உணர்வாய்


எதிரினில் இருப்பவர் யாரென உணர்ந்திட
ஐம்புலன் ஆளுமை அவசியம் தேவை
புலன்வழி அறிந்திடும் யாவும் பொய்யே
மெய்வழி எதுவென மனதினுள் தேடு


தன்னை அறிந்திட கனவுகள் புரியும்
நனவினில் நிகழ்வதும் கனவெனப் புரியும்
நின்னைத் தவிர்த்து நித்திலம் இல்லை
காணும் அனைத்திலும் தாயே கடவுள்


அனைத்தும் கடவுள் அகிலமும் கடவுள்
அன்பே கடவுள் ஆழ்மனம் கடவுள்
எல்லாம் கடந்தபின் ஏதெவர் கடவுள்
எல்லையில்லா நிறைவே கடவுள்


இறைவழி ஒன்றி நின்செயல் நடத்து
மறைவழி யாவும் மனதினுள் விளங்கும்
குறைவிலா இன்பம் உள்ளினுள் பெருகும்
நிறைவாய் வாழ்ந்திடும் நிம்மதி விளங்கும்


தெளிவிலா எதுவும் ஆன்மீகம் இல்லை
துணிவுடன் அதனைத் தள்ளிடல் நன்றே
இதுவே தெளிவென உள்மனம் சொல்லும்
அதுவே குருவருள் வாய்த்திடும் நன்நாள்


கனிவுடன் வருவான் கைகளைப் பிடிப்பான்
அன்பனே வாவென அழைத்துச் செல்வான்
இன்பம் நிறைத்திடும் வழியினைக் காட்டி
நண்பனாய் நின்னை நடத்திச் செல்வான்


பெருங்கடல் போலே நீசொன்ன வேதம்
சிறுதுளி அதனில் செப்பினேன் இங்கே
புரிதலில் மொழிதலில் தவறுகள் இருப்பின்
நீயே அறிவாய் குறைகள் களைவாய்


குருவருள் இன்றி திருவருள் இல்லை
குருவே ஒருவரின் வாழ்வின் எல்லை
அருளைப் பொழிந்திடும் அவன் தாள் சரணம்
குருவடி சரணம்! குருவே சரணம்!
********************************************

Read more...

Monday, July 06, 2009

"குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்."

"குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்."


உருநின்று உள்ளாடும் ஓர்நினைவில் மகிழ்ந்திருக்க

திருமுகத்தின் வனப்பினையே மனமெண்ணிக் களித்திருக்க

பெருநதியாய்ப் பாய்ந்துவரும் பேரன்பில் கலந்திருக்க

குருவருளை நாடியே திருமுருகன் அடிபணிந்தேன்.

***********



ஒருமுகம் திருமுகம் எதிர்வரும் குருமுகம்

அருள்முகம் தருமுகம் நிறைமுகம் குருமுகம்

மருள்தனை நீக்கிடும் மாதவன் குருமுகம்

வருமுகம் நகைமுகம் அழகுறு குருமுகம்



என்முகம் பார்த்தெனை அருள்செயும் குருமுகம்

இன்முகம் காட்டியே இதம்தரும் குருமுகம்

விண்முகம் காட்டிடும் வகைசெயும் குருமுகம்

உள்முகம் நோக்கியே தினம்வரும் குருமுகம்



பெருமுகம் அருள்தனைத் தருமுகம் குருமுகம்

அறுமுகம் வினைகளை அறுமுகம் குருமுகம்

உருமுகம் உள்ளினுள் காட்டிடும் குருமுகம்

மறுமுகம் வேண்டா மலர்முகம் குருமுகம்



எழில்முகம் நினைவினில் திகழ்ந்திடும் குருமுகம்

அழகிது வெனவே நகைமுகம் குருமுகம்

பழகிட எளிதாய் ஒளிர்ந்திடும் குருமுகம்

மெழுகென வென்னை யுருக்கிடும் குருமுகம்



பிழைமுகம் காணப் பொறுக்கா குருமுகம்

மழைமுகி லெனவே பொழிந்திடும் குருமுகம்

குழைந்திடக் குழைந்திடும் குழந்தைக் குருமுகம்

வழியெனக் கெனவே வந்தவோர் குருமுகம்



நனிமுகம் கனிமுகம் பனிமுகம் குருமுகம்

இனியெனைக் காத்திட அருளிடும் குருமுகம்

பனிமல ரிரவில் பொழிமுகம் குருமுகம்

பூரண நிலவாய் மலர்ந்திடும் குருமுகம்



ஓமெனும் மறையின் பொருள்முகம் குருமுகம்

'ஓம்'எனச்சொல்லி வரந்தரும் குருமுகம்

போமெனத் துயரைப் போக்கிடும் குருமுகம்

'ஊம்'எனும் குறிப்பால் கதிதரும் குருமுகம்



அடிமலர் தொழுதிட அருள்செயும் குருமுகம்

மடியினில் வைத்து மகிழ்ந்திடும் குருமுகம்

வடிவழ கெல்லாம் காட்டிடும் குருமுகம்

வடிவேல் தாங்கிடும் முருகனின் குருமுகம்



அருள்முகம் நினைமுகம் வழிசெயும் குருமுகம்

திருமுகம் கண்டிட வினையழி குருமுகம்

இருள்முகம் நீக்கிடும் குமரனின் குருமுகம்

குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்.



குருவடி சரணம்! குருவே சரணம்!

**********************************************

Read more...

Thursday, July 02, 2009

"திருச்செந்தூர் குடமுழுக்கு"

"திருச்செந்தூர் குடமுழுக்கு"

வடமலைராயன் மனம் மிக நொந்தான்
மனம்நிறை முருகனின் உருதேடி அலைந்தான்

கள்வரன்று கொண்டுபோன சேதிகேட்டுத் துடித்தான்

மறுசிலையும் வடித்திடவே ஆணையொன்று செய்தான்


கனவிலங்கு முருகன் வந்தான்

கடலிடையே தேடென்றான்

எலுமிச்சை மிதக்குமென்றான்
எடுத்துவர அருள் கொடுத்தான்


கட்டுமரம் ஏறியங்கு வடமலையான் புறப்பட்டான்

நடுக்கடலில் நாயகனைத் தேடியங்கு அலைந்தான்

கருடனொன்று வட்டமிட அதன்பின்னே சென்றான்
கள்வரிட்ட இடத்தினிலே எலுமிச்சை மிதக்கக் கண்டான்


சிலையின் கனம் அதிகரிக்க

கட்டுமரம் தத்தளிக்க

பரிதவித்த கள்வரவர்

பொற்சிலையைக் கடலிலிட்டார்


ஆழ்கடலுள் குதித்தங்கே ஆண்டவனைக் கண்டெடுத்தான்

வாழ்கின்ற வாழ்க்கையிலே பேரருளும் சிறக்கக் கண்டான்

சூழ்ந்திருந்த கவலையெலாம் நொடிப்பொழுதில் அகன்றுவிட
மகிழ்வுடனே வடமலையான் முருகனுரு மீட்டுவந்தான்


இறையருளிருக்க ஏனிங்குகவலை

கரைசேர்க்கும் கந்தனிவன்
அலைகடலில் குளித்தபின்னர்

அலைவாயில் கோயில் கொண்டான்


திருச்செந்தூர் சந்நிதியில் தினமெல்லாம் திருவிழா

அருட்செந்தில் பதியினிலே ஆனியிலே பெருவிழா

குடமுழுக்கு காணுகிறான் கோலமயில் முருகனிவன்

ஓடிவந்து தரிசிப்போர் உள்ளமெலாம் நிறைத்திருப்பான்


வேலில்லா முருகனிவன்

கமலமலர் கையினிலே

அப்பனுக்கு அனுதினமும்

அருட்பூசை செய்கின்றான்


அலைமோதும் கடலிங்கு அரகரோகரா தினம்பாட

அலையலையாய் அடியவர்கள் அருள்முருகன் முகம்காண

சிலையாக நிற்கின்ற திருவுருவம் அருள்சொரிய

மலைபோலும் துன்பமெலாம் பொடிப்பொடியாய்த் தகர்ந்திடுமே


முருகனுக்கு அரோகரா

வேலனுக்கு அரோகரா

கந்தனுக்கு அரோகரா

செந்திலாண்டவனுக்கு அரகரோகரா!


வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!
*********************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP