Sunday, August 20, 2006

"கிழுமத்தூராரின் தொடரும் [அன்புத்]தொல்லைகள்!"

"கிழுமத்தூராரின் தொடரும் [அன்புத்]தொல்லைகள்!"

"மருதநாயகம் என்று நீ கண்டுபிடித்துச் சொன்னதில், கிழுமத்தூராருக்கு ரொம்ப சந்தோஷம்!" என்று மயிலை மன்னார் வாங்கிக் கொடுத்த டீயை உறிஞ்சியவாறே சொன்னேன்!

"உட்டாலங்கடி விசயம் இது! அத்தான் நம்ம கையில அப்பவே கமல் ஸார் சொல்லிட்டாரே! இதெல்லாம் நம்க்கு ஜுஜுப்பீம்மா" என்று சிரித்தான், மன்னார்!

"ம்க்க்கூம்! இப்ப என்ன ஆயிற்று தெரியுமா?" என்று அவனைக் கோபத்துடன் பார்த்தேன்!

:"இன்னா? இன்னா ஆச்சு இப்ப? எவனாவுது உங்கிட்ட ராங் பண்றானா? சொல்லு! ரெண்டு தட்டு தட்டிறலாம்!" என்று பரிவுடனும், சற்றே வேகத்துடனும் கேட்டான், மன்னார்!

அவன் கோபப்பட்டால் என்ன ஆகும் என்று எனக்கு நன்கு தெரியுமாதலால், உடனே அவனை சமாதானப்படுத்தவெண்ணி, "சே! சே! அதெல்லாம் ஒன்றுமில்லை மன்னார்! நீ டென்ஷன் ஆகாதே! நம்ம கிழுமத்தூரார் இப்ப இன்னுமொரு கமல் கவிதையைப் போட்டு உன்னை டெஸ்ட் பண்ணுகிறார்! அவ்வளவுதான் விஷயம்!" என்றேன்.

"ப்பூ! இம்புட்டுத்தானா! நான் என்னவோ ஈதோன்னு நெனச்சுட்டேன்! இன்னா கவித அது! படி பாப்பம்" என்றான் மன்னார்.

கீழ்வரும் அக்கவிதையை.....

"அமலை அன்னை அவள் ஆரணாகாரி
அந்திப் போதனை யானுட னாடுவள்
உமையாள் உடையாள் உயிர்கிழத்தி
உரிமையுடன் தவங்கலைக்கும்
ஆட்டணத்தி மனங்கொணும் நேர்முலையாள்
தினங்காணக் கல்லாக வீற்றிருப்பள்
கனந்தாங்கும் களத்தியாய் கலவிசெய்கையிலென்
தடந்தோளைக் கடித்துச் சந்தோஷம்
சொல்லிடுவள் நாபிக்கொடி நறுக்கியெனை
நர மேட்டிலொரு லோபத்தெருவினிலே
மறுபடி எறிந்திடுவள் சப்பிடும்
வாய்கதற முலைபிடுங்கி யகற்றி
செப்பிடும் வார்த்தைகள் மெல்லத் தந்திடுவள்
நித்தமு மாறிடும் ஜீவ தாளத்தில்
என்னுடன் ஆடிடும் ஆசைநாயகி
காமுகி க்ராதகி
மாதவி கண்ணகி ஸ்நேகிதி"


.......நான் படித்ததும், ஒரு இரண்டு, மூன்று தடவை திருப்பிப் படிக்கச் சொன்னான்! ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டு சிறிது நேரம் நெற்றியைச் சுருக்கியவாறே நிதானமாக யோசித்தான்! திடீரெனப் பிரகாசமானான்!

"சும்ம ஸொல்லக்கூடாதுப்பு! நெசமாவே அந்த ஆளுக்கு மண்டை முளுக்க மூளைன்னு நான் ஸொன்னதுல தப்பில்லப்பா! ஆகா! ஆகா! இன்னாமா எளுதியிருக்கான் மனுசன்!" என்று ரொம்பவும் புகழ்ந்தான்!

சற்று பொறுமை இழந்த நான், "என்னதான் சொல்லியிருக்கிறார் என்று சொல்லிவிட்டு பிறகு உன் புகழ்ச்சியை வைத்துக் கொள்ளேன்!" என்று பொறாமையுடன் சொன்னேன்... எனக்குப் புரியாதது அவனுக்குப் புரிந்துவிட்டதே என்னும் ஆதங்கத்தில்!

"இந்தக் கவிதயை வரிக்கு வரி படிச்சேன்னா அர்த்தம் அனர்த்தமாத்தான் போயிடும்! ஏதோ பலான விசயத்த ஸொன்ன மாரித்தான் இருக்கும்! ஆனா, ரொம்பப் பெரிய விசயத்த இன்னா அசால்ட்டா ஸொல்லிருக்காரு தெரியுமா? நா மொத்தக் கருத்தயும் ஸொல்றேன்! அப்ப்டியே எளுதிக்கோ!" என்று ஆணையிட்டான், மன்னார்.

கீழே வருவது அவன் சொன்னது!

" இப்ப ஒனக்கு ஒன் சினேகிதனைப் புடிக்கும், என்னிய ஒனக்கு புடிக்குமே அதுமாரின்னு வெச்சுக்க! ஸரியா!
என்னியவுட ஒன் தங்கசிய ஒனக்கு ரொம்பப் புடிக்கும்; அத்த வுட ஒன் அம்மாவ ஒனக்கு ரொம்ப ரொம்பப் புடிக்கும், கரீட்டா!
இப்ப ஒன் பொஞ்சாதி வந்தவொடன, அவுங்களை ஒனக்கு ரொம்பப் புடிக்குது! இல்லியா!
அது ஒனக்கு ஒரு பொண்ணக் குடுத்துச்சு! நீ இப்ப இன்னா பண்ற? ஆகா! ஒலகத்துல, இத்த வுட, சந்தோசம் தர்றது வேற ஒண்ணுமில்லன்னு மயங்கற! வாஸ்தவமா இல்லியா?
ஆனா..... இதுக்கெல்லாம் மேல நீ எத்த ரொம்ப நேசிக்கற? தமிள, தமிள் மொளிய!

ஏன்னு கேளு!
ஏன்னா, அதுதான் ஒனக்கு அல்லாமாவும் இருக்கு! எப்ப்டீன்ன்றியா? அவர் ஸொன்ன மாதிரியே ஸொல்லிக் காட்றேன் பாரு! ஒனக்கு புரிஞ்சிடும்!

அஞ்சு ருவா கொடுத்து ஒரு பொஸ்தவத்த வாங்கிப் படிக்கற நீன்னு வெச்சுக்க, சந்தோசமா இருக்கு ஒனக்கு.
அத்தப் படிக்கறப்ப, அவ, ...அத்தான் தமிள், தமிள்மொளி... கூடவெ இருக்கா ஒன்னோட!
ஒனக்கு அம்மாவா, பொண்டாட்டியா, சில சமயம் வேசியாக் கூட இருப்பா அவ, நீ பாக்கற பார்வைல, படிக்கிற புக்குல!!
நல்ல பொஸ்தவத்த படிக்கிறப்போ, நல்ல பொண்ணு மாரி, கெட்ட சமாச்சாரத்தப் படிக்கிறப்பொ, ஒன்னியக் கெளப்பி வேடிக்கை பாக்கற வேசி மாரி, சே! இத்தெல்லாம் தப்பு; இனிமே நல்ல புக்குதான் படிக்கணும்றப்போ, ஒன்னைத் தூண்டறமாரி ஒரு புக்கைக் காமிச்சு ஒன் மனச மாத்துவா! ஆனாக்காண்டி,.... இத்தாலயெல்லாம், 'நீ ஒன் அறிவத்தான் வளத்துக்கறே'ன்னு ஸொல்லி, ஒன்னிய ஆசைகாட்டி மயக்குவா!

அவ பொல்லாதவ, ராட்சசி, வேசி, பத்தினி, ஒனக்குத் தோளியும் கூட! ஆனா, நீ அவளக் கண்டுக்கலையின்னா, கல்லு கணக்கா குந்திக்கினே இருப்பா! நாம தான் அவளத் தேடிப் போவணும்!

இதுமாரி ஆராச்சும் வருவாங்களா ஒன்கூட எப்பவும், அல்லாமாமும்?
வரமுடியாது!
அதான் நம்ம தமிள் மொளியோட அருமை, பெருமை!

இத்தத்தான் நம்ம ஒலகநாயகன் மறமொகமா ஸொல்றாரு! வெளங்கிச்சா?"


என்று சர்வ சாதாரணமாகச் சொன்னவனை 'ஆ'வென்று வாயைப் பிளந்தவாறு பார்த்துக் கொண்டே இருந்தேன்!

"ஸரி, ஸரி! டீ ஆறிப்போச்சு! மாஷ்டர்! நம்ம தம்பிக்கு இன்னோரு டீ ஷ்ட்ராங்கா போடு!" என்று மிதப்பாகச் சொன்னான் மயிலை மன்னார்!

"அது சரி, மன்னார்! மிக அழகாகச் சொல்லி விட்டாய்! எல்லாம் சரிதான்! ஆனால், ஏன் "அமலை அன்னை" என்று ஆரம்பித்திருக்கிறது இக்கவிதை?" எனக் கேட்டேன் நான்.

"அமலைன்னா ஆரு? நம்ம மதர் மேரி! அவுங்க ஆரு? கன்னி களியாத தாயி! தமிள்த்தாயும் அப்ப்டித்தான்! ஆரு அத இன்னாம்மாரி சீரளிச்சாலும், தன்னோட கன்னித்தம்மய இளக்காம, அப்டியே என்னிக்கும் புச்சா இருக்கறதனால, அமலைன்னு ஸொல்லியிருக்காரு கமல்!" என்றான் மயிலை மன்னார்!

மேற்கொண்டு அவனை எதுவும் கேட்க மனமின்றி, அவன் சொன்னதை அப்படியே உங்கள் முன் வைக்க கணினியைத் தேடி ஓடினேன், ..... டீயைக் குடித்தபின் தான்!!!

இல்லாவிட்டால் மயிலை மன்னார் விட மாட்டானே!

(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))



Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP