Tuesday, March 17, 2009

"உந்தீ பற!" - 33

"உந்தீ பற!" - 33

'பகவான் ரமணரின் திருவுந்தியார்'

[முந்தைய பதிவு]

பந்தவீ டற்ற பரசுக முற்றவா
றிந்த நிலைநிற்ற லுந்தீபற
விறைபணி நிற்றலா முந்தீபற. [29]

பந்த வீடு அற்ற பரசுகம் உற்றவாறு
இந்த நிலை நிற்றல் உந்தீ பற
இறைபணி நிற்றலாம் உந்தீ பற.

கட்டுகள் விலகிட அறியாமை விலகும்
அறியாமை விலகிட கட்டுகள் அறுந்துபோம்

உள்ளொளி உணர்ந்திட பெருவெளி தெரியும்
வீடுபேறென்னும் ஓர்நிலை புரியும்

பேரானந்தம் எதுவென உணரும்
சீராளர் எம்மில் சிலரே உண்டு

இதனில் திளைப்பவர் அறியும் சுகமோ
அவரே அறிவார்! அவரை வணங்குவோம்!



விடுதலை, முக்தி என்னும் ஒன்றை அடைந்தால் மட்டுமே நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்; அதுவரையிலும், இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் எனும் ஒரு எண்ணம் நமக்குள் விதைக்கப் பட்டிருக்கிறது.


எனவே, நம் மரணத்திற்குப் பின்னரே இந்த மகிழ்ச்சி, அதாவது சொர்க்கம் என்னும் ஒன்றை அடைந்த பின்னரே, இதெல்லாம் நமக்குக் கிட்டும் எனவும் எண்ணுகிறோம்.

ஆனால், பகவான் ரமணரோ 'இந்த சந்தோஷம் என்பது இங்கேயே கிட்டும்; அப்படி அதை அடைந்தவர்களை அன்றாட வாழ்க்கையிலேயே நம்மால் காணமுடியும்! அவர்கள் வணங்கத் தக்கவர்கள் எனச் சொல்லுகிறார்'
இந்தப் பாடலில்!

விடுதலை என்றாலே சந்தோஷம் என்பதோடு மட்டுமே சம்பந்தப் படுத்தி மயங்குகிறோம் பொதுவாக நாமெல்லாரும்.
ஆனால், நம் இயல்பே மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே எனப் புரிய வரும்போது???

இந்த உலகில் அடையக் கூடிய எந்தப் பொருளினாலும் நீடித்த மகிழ்ச்சி நமக்குக் கிட்டுவதில்லை என முந்தைய பாடல்களில் பார்த்தோம்!
நிலைத்த நீடித்த மகிழ்வே உண்மையான மகிழ்ச்சி என முந்தைய பாடல்[28] சொன்னது.

அப்படியாயின், சாவுக்குப் பின்னரே மகிழ்வு கிட்டும் என எப்படி நம்புகிறோம்?

தன் இயல்பே மகிழ்ச்சி தான் என்னும் போது, இறந்தபின்னரா அதனைத் தேடுவது?

இந்த உலகில் இந்த உடலால் நமக்குக் கிடைத்த சொந்த பந்தங்கள் எல்லாமும் நிலையானவை என்னும் அறியாமை நீங்கும்போது, .... மனம் என்னும் ஒன்றே நம்மை இப்படி அலைக்கழித்தது எனப் புரிய வரும்போது, நிலையான மகிழ்வு என்பது எது எனப் புரிகிறது.

இப்படி எல்லாருக்கும் புரிகிறதா என்றால், இல்லை என்றே சொல்ல முடியும்.

இதுதான் எனக்கு விதித்தது என முடங்கிப் போகும் பலரையே நாம் பொதுவாகக் காண்கிறோம்.

இந்தநிலையை நமக்குத் தருவது இந்த உடல் மேல் நமக்கு இருக்கும் ஆசையும், அதைத் தொட்டு நம் மனம் நம்மை அலைக்கழிக்கும் நிலையுமே.

இதைப் புரிந்த ஒரு சிலர் இந்த நிம்மதி, சந்தோஷம் என்பது என்ன என ஆராயப் புகுந்து, இதன் விளைவாக ஒரு குருவின் துணையால் பயிற்சியில் ஈடுபட்டு தன்னை அறிந்து, தன்னை உணர்ந்து, தெளிவு பெறுகிறார்கள்.

இதன் விளைவாக, இருக்கும்போதே மகிழ்வாக இருப்பது எப்படி என்பதற்கு உதாரண புருஷர்களாக, நம் கண் முன்னே நடமாடுகிறார்கள்.

நான் பார்த்திருக்கிறேன்!

இவர்களைப் பார்த்தாலும், இவர்களுடன் பேசினாலும், இவர்களுடன் பழகினாலும், இவர்களைப் பற்றி நினைத்தாலுமே இவர்களது மகிழ்ச்சி அப்படியே நம்மைப் பற்றிக் கொள்ளும்!

அப்படிப்பட்ட மஹான்களை அவர்களது அருளால் மட்டுமே நாம் காண்கிறோம்.

இவர்கள் வணங்கத் தக்கவர்கள்!

இவர்களை எப்படி அடையாளம் காணுவது?

ஒரு நான்கு குணங்களின் மூலம் தெரிய வரும் எனப் பெரியவர்கள் சொல்கின்றனர்!

1. விவேகம்: நிஜத்துக்கும் , நிஜம் இல்லாதவற்றுக்கும் இடையிலான வேறுபாடை அறிந்திருப்பர்.

2. வைராக்யம்: இவ்வுலக, மேலுலக இன்பங்கள் எவற்றுக்கும் ஆசைப்படாத குணமுடையவர்கள்.

3. ஷட் ஸம்பத்தி: ஆறு வகையான செல்வங்களைப் பெற்றிருப்பர்.
[அ] ஸம= மனக்கட்டுப்பாடு
[ஆ] தம= புலன்களின் மீதான கட்டுப்பாடு
[இ] ஸ்ரத்தா= குருவின் மீதும், நன்னூல்களின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்.
[ஈ] திதிக்ஷா = பொறுமை
[உ] உபரதி = வெளிப் பகட்டிலிருந்து விலகி நிற்பர்.
[ஊ] ஸமாதனா = எப்போதும் சமநிலையில் இருந்து தன்னில் ஆழ்ந்திருப்பர்.
4. முமுக்ஷுத்வம் = விடுதலையில் எப்போதும் நாட்டமுடையவராயிருப்பர்.

இத்தகைய பிறப்பு பல பிறவிகளில் அடைந்த புண்ணியத்தால் கிடைக்கவரும் ஒருவர், தக்க குருவின்பால் ஈர்க்கப்பட்டு, அவரது அருட்பார்வையினால், அறியாமை என்னும் மாயையில் இருந்து சட்டென விடுபடுகிறார்.
இதன் மூலம், பிறப்பு, இறப்பு என்னும் தளையிலிருந்து விடுபடுகிறார்.

சொல்லே சொல்லாகி சொல்லிழந்த சொல்லாத சுகமிதுதான்!

இப்படிப்பட்ட மஹான்கள் எப்போதும் வணங்கத் தக்கவர்!



எளிமையான தவம் எது என்பதை அடுத்த பாடலில் சொல்லி பகவான் நிறைவு செய்கிறார்!

“எந்தரோ மஹானுபாவுலு! அந்தரிகு வந்தனமுலு!”
********************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP