Saturday, September 23, 2006

"அ.அ.திருப்புகழ்" -- 10 "கருவடைந்து" [4]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 10 -- "கருவடைந்து" [4]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதை சற்று விளக்கமாகச் சொல்ல விழைகிறேன்! [வழக்கத்தை விட!!].
நான்கு பதிவாக வரும்!!!
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் "குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ"

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி
னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த
அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்.....................[நான்காம் பகுதி]

"குழந்தை வடிவாகி கழுவி அங்கு எடுத்து,
சுரந்தமுலை அருந்துவிக்கக் கிடந்து,கதறி,
அங்கு கை கொட்டித் தவழ்ந்து, நடமாடி,
அரைவடங்கள் கட்டி, சதங்கை,இடுகுதம்பை, பொற்சுட்டி, தண்டைஅவையணிந்து,, முற்றிக் கிளர்ந்து "

குழந்தையென வந்துதித்த பின்னர்
அதனைக் கழுவிக் குளிப்பாட்டி,
தாயின் முலையினின்று சுரந்திட்ட
பாலருந்த பக்கவாட்டில் கிடந்து,

ஓர் கணம் கதறலும், உடனேயே
கைகொட்டிச் சிரித்தலும் மாறி மாறிச் செய்து
பின்னர் உடல் திருப்பி,மார்பினால் தவழ்ந்து,
இன்னும் உடலெழுப்பி நின்று நடை பழகி,

துணையென்று ஒலிகேட்கத் தாயவளும்

இதன் இடையில் அரைவடம், கால்களிலே சதங்கை
காதசையக் காதணிகள், கைவிரலில் மோதிரம்
இவையெல்லாம் அணிவித்து அழகு பார்த்து

பசியறிந்து, தன் ருசியறிந்து
உடல் வலு சேர்க்க பதம் அறிந்து
தாயவள் ஊட்டிய அன்புச் சோற்றினால்
உடல் நன்கு முற்றி வலுவடையும் அந்த,

"வயதேறி அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து"

பதினாறு வயதினிலே, தான் பிறந்த
பயனறியாது, காலத்தின் உயர்வறியாது,
உய்யக் கரை சேரும் வழி அறியாது
பருவக்கிளர்ச்சியால் மனம் சஞ்சலித்து

கண்ணில் படுகின்ற பெண்களின் கருத்தைக்
கவர எண்ணி அதுபற்றியே சிந்தித்து
அவருடன் இணக்கமாக வழியனைத்தும்
தேடுவதில் காலத்தைச் செலவிட்டு,

"பிணியுழன்று சுற்றித் திரிந்தது அமையும்"

பல்வேறு வகையாலும் பாவச் செயல்களைப் புரிந்து
அதனாலே பல்வேறு விதமாய நோய்நொடி அடைந்து
துன்புற்று, பாவ, புண்ணியங்களால் மீண்டும் மீண்டும்
இப்பூவுலகில் வந்து உழற்படா வண்ணம் அருளுகின்ற

"உன் க்ருபைச் சித்தம் என்று பெறுவேனோ ?"

நின்னுடைய கருணைத் திறனை
நான் பெறும் நாள்தான் எந்நாளோ?

[இத்துடன் இந்த சிறிய தொடர் நிறைவுற்றது!
இதில் சொன்ன பல நிகழ்வுகள் உங்களுக்கு ஒரு வாரத்திற்கு சிந்திக்க உதவும் என்னும் நம்பிக்கையுடன் தாற்காலிகமாக உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!
பின்னூட்டங்கள் இடவும்!
அவை படித்து பிரசுரிக்கப் படும்!
திரும்பி வந்ததும் விரிவாக பதிலிட முயலுவேன்!]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

"அ.அ.திருப்புகழ்" -- 10 "கருவடைந்து" [3]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"-- 10 -- "கருவடைந்து" [3]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதை சற்று விளக்கமாகச் சொல்ல விழைகிறேன்! [வழக்கத்தை விட!!].
நான்கு பதிவாக வரும்!!!
இது மூன்றாம் பகுதி! [முதல் இரு பகுதிகளும் படித்தாயிற்றா?!]
[பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

"கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த

முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து

பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி

னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த

அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து

உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்.....................[மூன்றாம் பகுதி]

"கருவடைந்து பத்துற்ற திங்கள்வயிறிருந்து முற்றி"

[இந்த ஐந்து சொற்களுக்கு ஒரு அழகிய விளக்கம் கண்டேன்!
எந்தவொரு விஞ்ஞான வசதிகளும் இல்லாத அக்காலத்தில், எவ்வளவு சரியாக இதைச் சொல்லியிருக்கிறார்கள் என எண்ணியதால், அதை இங்கு எடுத்துரைக்க விழைகிறேன்.]

தாம் செய்த நல்வினையும் தீவினையும்
அதன் பயனும் நுகர்ந்த பின்னர்,
கலப்பான வினைப்பயனை நுகர்தல் பொருட்டு
விண்ணினின்று மழை வழியே, இறைவனாணையால்

பூவுலகம் வருகின்ற உயிர்களனைத்தும்
காய், கனி, மலர், நீர், தானியம்
இவற்றினுள்ளே கலந்து நின்று,
அதையுண்ட ஆணிடம் கலந்த வண்ணம்,

அறுபது நாள் அவன் கருவில் இருந்தபின் விந்தாகி
பெண்ணுடனே சேருகின்ற காலத்தில்
கருமுட்டையுடன் கலக்கின்ற விந்தையினை
அருணையாரும் சுருங்கக்கூறி விளக்குகின்றார்

கருப்பம் உண்டாகும் நற்காலம்
ருதுவென்று பெயர் விளங்கும்
மாதவிடாய் ஆன நாள்முதல்
பன்னிரன்டு நாட்கள்வரை ருதுவாகும்

விலக்கு முதல் நான்கு நாட்கள்
சங்கமித்தல் ஆகாது
ஐந்து முதல் பதினைந்து வரை
ஒற்றைப்படை நாட்களிலே சங்கமித்தால்
பெண் மகவு பெற்றிடலாம்

இரட்டையான நாட்களிலோ, அதாவது,
ஆறு முதல் பதினாறு வரை நாட்களில்
சங்கமமோ ஆண் குழந்தை
பிறக்குமென்று சொல்லி வைத்தார்.

கருப்பையின் வாய் அங்கு
குவிந்து போவதனால்
அதன் பின்னர் கருத்தரிக்கும்
வாய்ப்பெதுவும் இருப்பதில்லை.

ருது கழிந்த நான்காம் நாளினிலும்
பகற்பொழுதிலும் சேர்ந்தங்கே
கருவொன்று வருமாயின் ஆயுள், அறிவு,
செல்வம் இவை குறைந்த மகவு தோன்றும்.

ஐந்தம் நாள் கருத்தரிக்கின்
பெண் மகவு தோன்றி வரும்
ஆறாம் நாள் கருத்தரிக்கின்
மத்திமமாய்ப் பிள்ளை வரும்

ஏழாம் நாள் பெரும்பாலும்
கருவொன்றும் வருவதில்லை
எட்டாம் நாளோ குணமிக்க
பெண்மகவு உருவாகும்

ஒன்பதம் நாள் கருவுறின்
நலம் சேர்க்கும் பெண் வந்திடும்
பத்தாம் நாளில் பார் புகழும்
உயர்ந்த ஆண்மகன் வருவான்

பதினோராம் நாள் கருத்தரித்தால்
தரம் குறைந்த தருமமற்ற
பெண் மகவு வந்து உதிக்கும்
பனிரண்டாம் நாளன்று உத்தமனும் வந்திடுவான்

பதிமூணாம் நாள் வரும் பெண்ணோ
பலரை விரும்பும் குணமுடையாள்
பதினாலாம் நாளன்று ஜனிப்பவனும்
உலகாளும் நன்றியுள்ள மகனாவான்

பதினைந்தாம் நாளுதிக்கும் பெண்ணவளோ
பார்புகழும் பேரரசன் பத்தினியாய்
பல்வகைப் பெருமயெலாம் பெற்றிட்டு
உத்தம புத்திரரும் பெறுவாள்

பதினாறாம் நாள் திருக்குமரன்
கல்வி கலைகளிலே தேர்ச்சி பெற்று
நல்லொழுக்கம் மிக்கோனாய்ப் பலராலும்
விரும்புகின்ற பாக்கியவானாய் ஆவானாம்.

முழுநிலவோ, கருநிலவோ,
அட்டமியோ, சஷ்டியோ, துவாதசியோ
இந்நாளில் அமையுமாயின்
அந்நாளில் சேர்க்கை தவிர்த்திடவும்.

கருவொன்று உதித்த பின்னர்
அது வளரும் நிலையினையை
முன்னோர்கள் சொன்ன
வாக்கைஇப்போது காண்போம்!

விந்தும் முட்டையும் சேர்ந்த கரு
இரண்டும் கலந்ததாலே திரவமாகி நிற்கும்
ஏழாம் நாளினில் அது ஒரு மலர் போல விரியும்
பதினந்தாம் நாளினில் அது சற்றே இறுகிவரும்

ஒரு மாதம் போனபின்னர் இன்னும் கடினமாகி
இரண்டாம் மாதத்தில் தலையொன்று முளைத்துவரும்
மூன்றாம் திங்களிலே கால்கள் தோன்றவரும்
நாலாம் திங்களிலே விரல், வயிறு, இடுப்பென

தனித்தனியே பிரிந்து உருத் தோன்றும்
ஐந்தாம் மாதத்தில் முதுகெலும்பு ஊன்றிவரும்
ஆறாம் திங்களிலே கண், மூக்கு, செவி உதிக்கும்
ஏழாம் மாதம் ஜீவன் வந்துதிக்கும் [Viable]

எட்டாம் மதத்தில் அங்கமெல்லாம் வளர்ச்ச்சி பெறும்
ஒன்பதாம் திங்களிலே முன் ஜென்ம நினைவு வரும்
மீண்டும் இந்த பிறப்பு இறப்பென்னும்
துன்பமதில் விதித்தாயே என்னிறைவா என வருந்தும்

தன் துன்பம் மிக நினைத்து தானங்கே வாடுகின்ற
ஒன்பதாம் மாதத்தில் இறைவனிடம் முறையிட்டிடினும்
யோனித்துவாரம் வழி வருகையில் ஏற்படும் துன்பத்தால்
அவை அழிந்து, முன் நினைவு மறந்து போகுமாம்.

பத்தாம் திங்களிலே, தனஞ்சயன் எனும்
வாயுவால் தள்ளப்பட்டுத், தலைகீழாய்
சிசுவங்கே வெளிவரும் நேரத்தில்,
மலையினின்றுஉருட்டப்படும் துன்பத்தை அனுபவிக்கும்.

[மீதி வரிகளுக்கு அடுத்த பதிவில் பொருள் விளக்கமளித்து முடித்து விடலாம்!]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP