Thursday, September 29, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 29

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 29
28.


'எளிமையாப் பாடிகிட்டே வந்தவருக்கு திடீருன்னு ஒரு நெனைப்பு வந்திருது.
'இன்னாடா, இன்னாமோ குடுத்தாரு, குடுத்தாருன்னு சொல்லிக்கினே வரோமே, அத்த இப்ப வெலாவாரியா சொல்லிறணும்னு முடிவு பண்ணிட்டு, அது இன்னான்னு நெனைச்சுப் பாக்கறாரு.


முருகனைப் பாத்தது நெனைப்பிருக்கு!
அவுரு கையில தாங்கிப் பிடிச்சது நெனைப்புல வருது!
இன்னாமோ சொன்னாரேன்னு ஒரு நெனைப்பு க்கீது!
அதுக்கப்புறமா?????.........


ரொம்பவே யோசனை பண்ணிப் பாக்கறாரு!
இன்னாமோ நடந்திச்சேன்னு புரியுது!
அது இன்னான்னு சொல்லத் தெரியல!
அதான் இந்தப் பாட்டு!
எங்கே படி கேக்கலாம்' என்றான் மயிலை மன்னார்!
நான் படிக்க, மன்னார் பதம் பிரித்துச் சொன்னான்!

ஆனா வமுதே யயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானா கியவென் னைவிழுங் கிவெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே.

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே .

"ஆனா அமுதே அயில்வேல் அரசே ஞானாகரனே நவிலத் தகுமோ"

நேத்து ஒரு வூட்டுக்கு விருந்து சாப்பிடப் போயிருந்தேன்!
நல்ல சாப்பாடு!

எல்லா அயிட்டமுமே ரொம்ப நல்லாயிருந்தாக்கூட, அந்தப் பால் பாயாசம் க்கீதே, அத்தச் சொல்லவே முடியாது!
அவ்ளோ ருசியா இருந்திச்சு!
ரெண்டு டம்ளர் குடிச்சுட்டேன்!

அப்பவும் ஆசை விடலை!
அத்தப் புரிஞ்சுகிட்ட அந்த வூட்டுக்க்காரம்மா 'அண்ணே! இன்னும் ஒரு கப்பு தரட்டுமா'ன்னாங்க!
நான் பதிலே பேசாம டம்ளரை நீட்ட, மேல ரெண்டு கரண்டி ஊத்தினாங்க!
அப்பறம், இன்னும் ரெண்டு கரண்டி!
அவங்க ஊத்த ஊத்த, நானும் வேணான்னே சொல்லாம குடிச்சுக்கினே இருந்தேன்!
எப்பிடி குடிச்சேன்னு இப்ப நெனைச்சுப் பார்த்தா, இப்ப அத எப்பிடி சொல்றதுன்னே தெரியலை!


இப்ப எதுக்கு சம்மந்தமேயில்லாம இத்தச் சொல்றானேன்னுதானே நெனைக்கறே?
அதான் இந்த 'ஆனா'!!




மேல மேல போதும்ன்னே சொல்லாம இருக்கறதுக்குப் பேருதான் 'ஆனா'.
அப்பிடியாப்பட்ட அமுதத்தை தர்றவனேன்னு முருகனைக் கூப்பிடறாரு
ஆனா அமுதேன்னு!


அயில்னா கூர்ப்புன்னு முன்னாடியே சொல்லியிருக்கேன்!
கூரான வேலைக் கையுல வைச்சுக்கினு க்கீற என்ராசாவேன்னு கொஞ்சறாரு! அதான் 'அயில்வேல் அரசே'!


'ஞான ஆகரனே'ன்னா ஞானத்த உண்டுபண்றவன்னு அர்த்தம்!

'ஆகரன்'னா பொறக்க வைக்கறவன்.

இப்ப இந்த மூணையும் கொஞ்சம் சேர்த்துப் பாப்போமா!

வேலு ஞானத்தோட அடையாளம்!
அந்த ஞானம் பொறக்கற வேலு முருகன் கையுல !
அந்த வேலு ரொம்பவே கூர்ப்பா க்கீது!
அதாவுது, கூர்மையான ஞானம் இவுரு கையுல!

அந்தக் கையால ஒரு அமுதத்தைத் தராரு அருணகிரியாருக்கு!
அது அமுதம் மாரி க்கீதாம்!

அப்பிடி ஒரு அமுதத்தைக் குடுக்கறப்ப, அதைக் குடிக்கறாரு அருணையாரு!

போதும்னே இவுருக்கும் சொல்லத் தெரியல.
அவரும் குடுக்கறத நிறுத்தவேயில்லை!

ஞானாகரனே அயில்வேல் அரசே ஆனா அமுதே சொல்றது இதைத்தான்!


இப்பிடி அவுரு குடுத்த ஞானத்தை இன்னான்னு சொல்லச் சொன்னா, இவரால சுத்தமா முடியலை!

'நான் எப்பிடிப்பா இத்தச் சொல்றதுன்னு முருகன்கிட்ட பொலம்பறாரு!
நவிலத் தகுமோன்னு கதற்ராரு!
அதைத்தான் அடுத்த ரெண்டு வரியுல சொல்றாரு!

"யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே ."

இதப் பத்திச் சொல்றதுக்கு முன்னாடி, ஒண்ணு நான் கண்டிப்பா சொல்லியே ஆவணும்!
போன பாட்டுல சொன்னேனே, அந்தக் கொணந்தான் இந்தப் பாட்டுலியும் வருது.... இன்னொரு விதமா!


எனக்குக் கிடைச்ச மாதிரியே எல்லாருக்கும் கிடைக்கணும்னு பாடினாருன்னு சொன்னேனே.. அதையே, இப்ப, இன்னொருமாரி,
தனக்குக் கிடைச்சதை நாம இவங்களுக்கு சொல்லலாமேன்னு நெனைக்கறாரு. ஆனா, முடியலை ! இன்னாமோ நடந்திச்சுன்னு புரியுது!
அதச் சொல்ல முடியல!

இந்த இடத்துலதான் நாம ஒண்ணைப் புரிஞ்சுக்கணும்!
எதுக்காவ, அவரு இப்பிடிப் பொலம்பணும்?

அப்பிடி இன்னாத்த இவரு அனுபவிச்சாரு? அது இன்னான்னு சொல்ல முடியலியேன்னு கூட சொல்றாரே? ன்னு நம்மளையெல்லாம் ஒரு செகண்டு நெனைக்கவைச்சு, அது இன்னாவாத்தான் இருக்கும்னு நம்மளோட ஆசையையும் தூண்டிவிடறதுக்காவத்தான் அருணையாரு இப்பிடில்லாம் சொல்றாருன்றதப் புரிஞ்சுக்கோ!

அப்பிடி நம்ம ஆசையைத் தூண்டறமாரி இன்னாதான் சொல்றாரு?

"யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே ."

மனுஷனாப் பொறந்த அன்னைக்கே நம்மளையெல்லாம் வந்து பிடிச்சுக்கற சனியன் இந்த 'நானுன்ற' ஆணவம்! மொளைச்சு மூணு நாளுகூட ஆயிருக்காது ஒரு கொள[ழ]ந்தைக்கு! அதுக்குள்ளாறயே 'இதான் என்னோட அம்மா'ன்னு ஒரு நெனைப்பு எங்கேருந்தோ வந்து
ஒட்டிக்கிரும் அதுக்கு! அவளைத் தவர, வேற ஆராச்சும் வந்து தொடட்டும்.... இன்னாமோ தன்னோட சொத்தே பறிபோனமாரி, 'வீல்,வீலு'ன்னு அலறித் தீத்திரும்!

அப்பத் தொடங்கின இந்த 'நானு'ன்ற ஆணவம் மேல மேல வளர்ந்துக்கினே போவும்! கொறையவே கொறையாது!

இந்த 'என்னோடது'ன்ற ஆணவம் இருக்கற வரைக்கும் ஆண்டவனைப் பாக்க்கறதுன்றது கொஞ்சங்கூட நடக்கவே நடக்காதுன்னு அன்னைலேர்ந்து இன்னிக்குவரைக்கும் எத்தினியோ பேருங்க... பெரிய பெரிய மகானுங்கள்லாம் சொன்னாலும், இதைப் பத்திக் கவலைப் படறவங்க ரொம்பவே கம்மின்னுதான் சொல்லணும்!

இதைப் பத்தித்தான் இந்த வரி சொல்ல வருது.

அதும் மூலமா தனக்கு இன்னா ஆச்சுன்றதையும் நமக்கெல்லாம் ஒரு கோடி காட்டி, இதைப் பத்தி நமக்குள்ளியும் ஒரு ஆசையைத் தூண்டறமாரி ஒரு கருணை பண்னியிருக்காருன்னுதான் சொல்லணும்.

இன்னான்னமோ தப்புல்லாம் பண்ணி, இந்த ஆணவத்தால தறிகெட்டு அலைஞ்சப்பக் கூட, தனக்கு இந்த கந்தன் பண்னின கருணையைச் சொல்லிக் கலங்கற வரியாத்தான் இதை நான் பாக்கறேன்.


இந்த சாமிங்களுக்கே பொதுவா ஒரு கொணம் இருக்குன்னு பெரியவங்க சொல்லுவாங்க!

அது இன்னான்னா, தப்பு பண்றவங்களைத் தீர்த்துக் கட்டறதுதான் அது!
சிவன், பெருமாளு, துர்க்கைன்னு அல்லா சாமியும் பண்ணினதைப் பார்த்தியானா, நான் இன்னா சொல்ல வரேன்னு ஒனக்குப் புரியும்!


ஆனா, முருகனோட வளி[ழி] எப்பவுமே தனி... வளி[ழி]!

ஒங்கிட்ட ஒரு தப்பு இருக்குன்றதுக்காவ ஒன்னைத் தண்டிக்க மாட்டாரு!
ஒங்கிட்ட இன்னா தப்பு, குத்தம், கொறை இருக்கோ, அத்த மட்டும் தீர்த்துக் கட்டிட்டு, ஒன்னியத் திருத்தி, தன்னோடயே வைச்சுக்கிருவாரு!

பிரம்மா, சூரன், இந்திரன், ஔவையாருன்னு இப்பிடி ஆரை வோணும்னாலும் பாரு.. இப்பிடித்தான் பண்ணியிருப்பாரு!

தனக்கும் அப்பிடித்தான் பண்னினாருன்னு இவுருக்கு ஒரே பூரிப்பு!

அப்பிடி இன்னா பண்ணினாரு?
ஆணவத்தால அலைஞ்சு திரிஞ்ச அருணகிரியைத் தன்னோட கையுலியே வாங்கிக்கினு, அவருகிட்ட இருந்த அந்த 'யான்' அப்பிடீன்ற கொணத்தை 'லபக்'கினு முளு[ழு]ங்கிட்டாரு முருகன்!

இந்த எடத்துல அருமையான ஒரு சொல்லைப் போட்டிருக்காரு அருணையாரு!
'விழுங்கி'ன்னு!


இப்ப ஒரு ஜிலேபி க்கீது!
அத்தக் கையுல வைச்சுக்கினு க்கீற நீ! பாக்கறே! சுருள்சுருளா பாக்கறதுக்கே அள[ழ]கா செவப்பா க்கீது! நாக்குல வைச்சு லேசா ருசி பாக்கறே. அந்த ஜீராவும், அந்த மணமும் அப்பிடியே நாக்குல எச்சி ஊறவைக்குது. கொஞ்சமாக் கடிக்கறே! இனிப்பு அடிநாக்கு வரைக்கும் போயித் தாக்குது! வேக வேகமா அதைக் கடிச்சுத் துண்றே! மொத்தமா முளு[ழு]ங்கிட்டே அந்த ஜிலேபியை இப்ப!

அதுக்கப்பறம்??? இன்னா ஆச்சு அதுக்கு!

இத்தினி நேரமா நீ அனுபவிச்ச அத்தினியும் காலி!

நல்லா இருந்திச்சுன்னுதான் சொல்லமுடியுமே தவர, வேற ஒண்ணுமே இப்ப ஒன்னால சொல்ல முடியாது!

அந்த நெலைமையுலத்தான் க்கீறாரு அருணகிரியும்!

இவர்கிட்ட இருந்த அந்த 'யான்' இப்ப காணோம்!

முருகன் அத்த எடுத்து முளு[ழு]ங்கிட்டாரு!
இப்ப தான் ஆருன்னே அருணகிரியாருக்குத் தெரியலை!
அதே சமயம் அத்த எப்பிடிச் சொல்றதுன்னும் சொல்ல முடியலை!

யான் இப்ப தான் ஆயிருச்சு!

அந்த தான் ஆருன்னா எப்பவுமே நெலைச்சு நிக்கற அனுபவந்தான் 'அந்தத் 'தற்பரம்'.

'தற்பரம்'னா தனக்கும் மேலே க்கீற ஒரு பெரிய பொருளு!

அது எப்பிடி இருக்கும்... அந்த அனுபவம் எப்பிடி இருக்கும்ன்றத என்னால சொல்லவே முடியலியே முருகா!ன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு அந்தப் பெரியவரு!

ஒரு சாதாரண ஜிலேபியப் பத்தின அனுபவமே இப்பிடி இருக்கும்னா, நமக்கெல்லாம் மேலான ஒரு பெரிய தெய்வம்.... அந்த முருகன்....நமக்குள்ளியே வந்து குந்திக்கினா அது எப்பிடி இருக்கும்ன்றதை நமக்குள்ள புகுத்தி, இதைப் பத்தி நம்மளையெல்லாம் இன்னும் தீவிரமா ஈடுபடச் செய்யறதுக்குன்னே இதையெல்லாம் இங்க சொல்றாரு அருணகிரியாரு!

இதான் கந்தன் கருணையோட தனிப் பெருமை!

கந்தன் மட்டுமில்ல, அவர் மேல பக்தி பண்றவங்களுக்குங்கூட இந்தக் கருணை தானா வரச் செஞ்சிருவாரு முருகன்!

ஆனாக்காண்டிக்கு, இப்ப சாப்ட்டது ஜிலேபிதான்னு மட்டும் தெரியறமாரி, தனக்கு வந்தது ஞானம்னு மட்டும் இவருக்குத் தெரியுது! அதுனாலத்தான், 'கூர்வேல் போலக்கீற ஆனா அமுது கொடுத்த ஞானாகரனே'ன்னு மொதல்ல சொல்லி ஆரம்பிச்சாரு அந்தக் கருணையாறு....அருணையாரு! '
என ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்!

'ஓம் சரவண பவ' எனும் மந்திர ஒலி நாயரிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்தது!
********************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, September 23, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 28

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 28
27.

"போன பாட்டுக்குச் சொன்னமாரி பெருசா சொல்லாமலியே, இப்ப வர்ற பாட்டு ரொம்பவே ஈஸியாப் புரிஞ்சிறும்! சும்மாப் படிச்சாலே புரியறமாரி அருணகிரியாரு எளு[ழு]தியிருக்காரு. படிப்பா, கேக்கலாம்' என்றான் மயிலை மன்னார்.


அவன் சொன்னதுபோலவே பாடல் எளிமையாகத்தான் இருந்தது.

மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலே றியவா னவனே.


மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே.

"மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?"

இதுக்கு இன்னா புதுசாச் சொல்லப்போறான் இவன்னுதானே பாக்கறே! பெருசா ஒண்ணுமில்லை.


போனபாட்டுல 'நீ கொஞ்சங்கூட என்னியப் பத்தி நெனைக்கமாட்டேன்றியே முருகா'ன்னு சொன்னவருக்கு இன்னொரு நெனைப்பு வருது! இந்த சென்மம் சீக்கிரமே முடிஞ்சிறப் போவுதே! அதுக்குள்ளார முருகன் வரணுமேன்னு பதைக்கறாரு.


ஒரு மின்னல்மாரி ஒரு செகண்டுல பளிச்சின்னு வெட்டி, மறைஞ்சிறப்போற இந்த வாள்[ழ்]க்கை மேல ஆசைப்பட்டேனேன்னு பொலம்பறாரு.


மின்னலைப் பாத்திருக்கேல்ல? ஒரு செகண்டுகூட இருக்காது. ஆனா, அதுக்குள்ளாரவே கண்ணைப் பறிக்கறமாரி வெளிச்சமா இருக்கும்! வந்த வேகத்துலியே முடிஞ்சும் போயிறும்.


ஆனாக்க, அதுக்குள்ளதான் இன்னா ஆட்டமில்லாம் போடறோம்! இது தான் சதம்னு நம்பிக்கினு, இதும்மேல ஆசைப்பட்டு, இதும் பின்னாடியே சுத்தினேனே! ன்னு தன்னோட தலைவிதியை நொந்து 'நூடுல்ஸ்' ஆறாரு!


அப்பத்தான் ஒரு உண்மை இவருக்குப் புரியவருது!

"பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே."

நெசமான பொன்னு, மெய்யான மணி, உண்மையான பொருளுல்லாமே 'தோ! மயிலுமேல 'ஜம்'முன்னு குந்திக்கினு ஒரு ராசா மாரி வராரே இந்த முருகந்தான் மெய்யின்னு 'பொட்'டுல அடிச்சமாரி வெளங்குது!


இந்த ராசாவோட அருளு இருந்தாப்போறுமே. அத்த சீக்கிரமே எனக்குக் குடுக்கமாட்டியான்னு கேக்கறாரு அருணையாரு.


அதுனால, இந்தக் கடைசி ரெண்டு வரியை இப்பிடிப் படிக்கணும்.

'பொன்னே மணியே பொருளே மன்னே மயிலேறிய வானவனே,.....அருளே'

அதாவுது, எனக்கு அருள் பண்ணே'ன்னு அவர் கேக்கறதுபோல' என்றான் மன்னார்.


'ஆமாண்டாப்பா! இதைத் தமிழ் இலக்கணத்துல 'வியங்கோள்வினை, ஏவல்வினையா' வர்றதுன்னு சொல்லுவா! அதாவது ஆச்சரியமாச் சொல்ற ஒரு வார்த்தையை அப்படியே ஒருத்தரைப் பார்த்துச் சொல்றமாதிரி! இப்ப ரொம்ப அழகா ஒருத்தர் இருக்கார்னா, அந்த சந்தோஷத்துல 'அழகே'ன்னு அவாளையே கூப்டறோமோன்னோ! அதுமாதிரி' எனச் சொன்னார். சாம்பு சாஸ்திரிகள்!


'சேட்டன் பறயாதது ஐயர் பறஞ்சு!' எனச் சிரித்தான் நாயர்!


*************
[தொடரும்]


வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, September 16, 2011

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் - 27

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 27
26.

[சற்று நீளமான இந்தப் பதிவை, ஒருமுறைக்கு இருமுறையாகப் படிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.]

நாயர் கடையில் அவனது ஸ்பெஷல் மசால் வடையையும், ஒரு கப் டீயையும் குடித்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பி வரவும், மயிலை மன்னார் சாம்பு சாஸ்திரிகளின் வீட்டு வாசலில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது!


என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தவன் நேராக அடுத்த பாடலைப் படிக்கச் சொன்னான்.

ஆதா ரமிலே னருளைப் பெறவே
நீதா னொருசற் றுநினைந் திலையே
வேதா கமஞா னவிநோ தமனா
தீதா சுரலோ கசிகா மணியே!

என நான் படித்து அதைப் பிரித்தும் சொல்லிக் காட்டினேன்.... அதிகக் கடினமாக இல்லையென்பதால்!

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோதா மனா
தீதா சுரலோக சிகாமணியே!

என்னை ஒருவித இரக்கத்துடன் பார்த்துவிட்டு, 'இதுக்குத்தான் அவசரப்படக் கூடாதுன்றது! அப்பிடிப் பிரிக்கக் கூடாது இத்த! மொத ரெண்டு வரியும் சரிதான். அதுல ஒண்ணும் கஷ்டமில்ல! அடுத்த ரெண்டு வரியையும் வேற விதமாப் பிரிக்கணும் எனச் சொல்லிவிட்டு, முழுப்பாடலையும் பிரித்துச் சொன்னான்.

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மன
அதீதா சுரலோக சிகாமணியே!

'ஞான விநோதா மனா தீதா' இல்ல! 'ஞான விநோத மன....அதீதா' அது' எனத் திருத்தினான்!

சாஸ்திரிகள் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது போல எனக்குப் பட்டது! அவரைப் பார்த்தேன். ஆனால், அவர் முகம் சலனமில்லாமல் இருந்தது!


'சரி, அது கெடக்கட்டும் இப்ப நல்லாக் கவனமா நான் சொல்றதை கேட்டுக்கோ! ஒரு பெரிய உண்மை இந்தப் பாட்டுல வரப் போவுது! அது இன்னான்றத அப்பாலிக்கா சொல்றேன். இப்ப மொதல்ல இந்த மொத ரெண்டு வரியும் ஒனக்கு எப்பிடிப் புரியுதுன்னு சொல்லு' என என்னைப் பார்த்துச் சிரித்தான்.


ஒன்றும் புரியாமல், அந்த வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தேன்!

"ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே"

உன்னுடைய அருளைப் பெறுவதற்கான எந்த விதமான ஆதாரமும் என்னிடம் கிடையாது! அதனால்தானோ என்னவோ, நீ கூட அதைப் பற்றிக் கொஞ்சம் கூட நினப்பதும் இல்லை' எனப் படுகிறது' என்றேன்.


'நீ சொல்றது சரிதான்! ஆனா, இதை வேற எப்பிடிப் பார்க்கலாம்' என என்னைச் சீண்டியபடியே நாயரைப் பார்த்தான்!


கொஞ்ச நேரம் யோசித்த நாயர், ' சேட்டன் பறஞ்சது சரியாயிட்டு உண்டு. பக்ஷே, இன்னொரு விதமாயிட்டும் பறயலாம்' என்றான்.


'சொல்லு' என்பது போலப் பார்த்தான் மன்னார்.


'அனுபூதி கிட்டிட்ட பின்னேதானே ஈ பாட்டு அருணகிரி பாடின்னு? பின்னே எந்தா இப்பிடி பறயின்னு?' என்றான் நாயர்!


'சபாஷ்!' என்றார் சாஸ்திரிகள்!


மன்னர் முகமும் நன்றாக மலர்ந்தது!


'பாயிண்ட்டைப் பிடிச்சிட்டே நாயர்! ' என்றான் .


'நாயர் சொல்றதுதான் கரீட்டு! இந்தப் பாட்டைப் பாடறப்ப, அருணகிரியாருக்கு ஏற்கெனவே முருகன் அருள் பண்ணிட்டான்! பின்ன, எதுக்காவ அவரு இப்பிடி சொல்லணும்?


பொம்பளைப் பித்து பிடிச்சு பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கினு இருந்தப்பவோ, இல்லாக்காண்டிக்கு, கோபுரத்துலேந்து குதிச்சப்ப முருகன் காப்பாத்தினப்பவோ, இல்ல, வயலூரு, விராலிமலையிலியோ இவுரு இந்தப் பாட்டைப் பாடலை! முருகன் 'சொல்லற; சும்மாயிரு'ன்னு சொல்லிட்டு, அப்பாலிக்கா, 'முத்தைத்தரு'ன்னு சொல்லெடுத்துக் குடுத்தப்ப, அவரு முருகன் மேல திருப்புகள்[ழ்]தான் பாடிக்கினுத் திரிஞ்சாரு!


முருகனே நேருல வந்து அவருக்கு பிரணவ உபதேசம் பண்ணினதுக்கு அப்பாலதான், அவரு கந்தரநுபூதியும், கந்தரலங்காரமும் பாடினாரு! எல்லாமே கெடைச்சதுக்கு அப்பாலிக்கா, இப்பிடி ஒரு பாட்டைப் பாடினாருன்னா, நம்ப முடியுமா?


அப்ப ஏன் இப்பிடி சொல்றாரு?


இங்கதான் கொஞ்சம் யோசிக்கணும்!


தனக்காவப் பாடலை அவுரு! அவுருக்குத்தான் வேணுன்றதுக்கு மேலியே முருகன் வாரி வாரிக் குடுத்துட்டானே!


அப்ப, வேற ஆருக்காவ பாடினாரு இப்பிடி?


ஒனக்கும், எனக்குந்தான்!


புரியிலியா?


அவரோட கருணை மனசு அவரை அப்பிடிப் பாட வைக்குது!
தனக்குக் கெடைச்சது அல்லாருக்கும் கெடைக்கணுமேன்னு துடிக்கற துடிப்புல பாடின பாட்டுங்க இதெல்லாம்!


எனக்குக் கிடைச்சிருச்சுன்றதச் சொல்ற பாட்டா இருந்தா அதோட கொரலே [தொனியே] வேற மாரி இருந்திருக்கும்! 'ஆ! பாருங்கப்பா! முருகன் எனக்கு இன்னாமா அருள் பண்ணியிருக்காருன்னு' ஒரு கெர்வமா வந்திருக்கும் அதெல்லாம்!


ஆனா, அவரோட பாட்டெல்லாத்தியுமே பாத்தியானா, அல்லாமே, ஒன்னையும், என்னியும் போல சாதாரண ஜனங்க பாடினா எப்பிடி இருக்குமோ, அதும்மாரிப் பாடின பாட்டுங்க!


அவருக்குக் கெடைச்சதைப் போல கெடைக்காம, .......ஆனாக்காண்டிக்கு, அதே சமயத்துல, அவுரு பண்னினதுக்கும் மேல, நெறையத் தப்பு பண்ணினவங்களுக்கும் இந்த அனுபூதி கெடைக்கணும்னு நெனைச்ச அவரோட பெரிய மனசுதான், இதும்போலப் பாட்டா வந்திருக்கு!


அதுனாலத்தான், அருணகிரியாரோட பாட்டுங்களைப் படிக்கறப்பல்லாம், அது தனக்கும் சரியாவே இருக்கறமாரி ஒரு 'ஃபீலிங்' உள்ளுக்குள்ள வரும் ரொம்பப் பேருக்கு!


இதான் அவரோட பாட்டுங்கள்ல க்கீற ஒரு இஸ்பெசல்!


இத்தப் புரிஞ்சுக்கினு, இப்பப் படிச்சியானா, ஒனக்கும் நாயர் சொன்னாமாரியே புரியும்'! இதான் நான் சொல்ல வந்தது' என நிறுத்தினான் மன்னார்!

எங்கள் கண்களிலெல்லாம் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது!


அதைக் கவனியாதவன் போல, மன்னர் தொடர்ந்தான்!

'ஆதாரம்'னா ரெண்டு விதமா சொல்லலாம்.


சாட்சின்ற பொருளு ஒண்ணு.


ஒன்னோட அருளு கெடைக்கறதுக்கான ஒண்ணுமே நான் பண்ணலியே முருகா!ன்னு சொல்றமாரி வரும்.


இன்னொண்ணு, பிடிச்சுக்கறதுக்கான ஆதாரம்!


ஒரு கொடி படரணும்னா, அதுக்கு ஆதாரமா ஒரு கொம்பு வோணும்!


இல்லேன்னா நாலா பக்கமுமா அந்தக் கொடி இங்கியும், அங்கியுமா அலையும், எதுனாச்சும் ஆதாரம் கெடைக்காதான்னு!


அதும்மாரி, ஒன்னோட அருளுன்ற ஆதாரம் எனக்குக் கெடைக்கணும்னா, அதுக்கு நீ மனசு வைக்கணும், அத்த வைக்க மாட்டேன்றியே முருகான்னு பொலம்பற மாரியும் புரிஞ்சுக்கலாம்!


இப்ப அடுத்த ரெண்டு வரியையும் பாப்பம்!


அதுக்கும், இப்ப சொன்னதுக்கும் இன்னா சம்பந்தமின்னு பாக்கலாமா' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்!

ஏதோ இதிலும் பொடி வைத்துச் சொல்லப் போகிறான் என ஆவலுடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்!

"வேதாகம ஞான விநோத மன அதீதா சுரலோக சிகாமணியே!"

மூணு சமாச்சாரம் இதுல வருது!

வேதாகம ஞான விநோத
மன அதீதா
சுரலோக சிகாமணியே!

ஒண்ணொண்ணா பாப்பம்!


வினோதன்னா, புதுமை பண்றவன்னு அர்த்தம்! இல்லாட்டி, புதுசு புதுசா வெளையாடறவன்னும் சொல்லலாம்!


அப்பிடி இன்னா புதுசா புதுமை பண்ணினாரு முருகன்!


அருணகிரிக்கு தன்னைப் பத்தியே நெனைப்பு வருது!


எந்த ஒரு காரியத்தையும் பண்ணினா, ஒண்னு அது வேதத்துக்கு சம்மதமா இருக்கணும். இல்லேன்னா, ஆகம விதிங்களுக்கு கட்டுப்பட்டதா இருக்கணும்! அதுவுமில்லேன்னா, ஞான வளி[ழி]யிலியாவுது அதுக்கு ஒரு கட்டளை இருக்கணும்! இந்த மூணுலியும் எதுனாச்சும் ஒண்ணுலியாவுது ஒர்த்தன் பண்ற காரியத்துக்கு ஒப்பு இருக்கணும். இல்லேன்னா அந்தக் காரியம் சரியில்லேன்னு அர்த்தம்! இதான் பெரியவங்க நமக்கெல்லாம் சொல்லியிருக்கறது!


இவுரு,... தான் பண்ணின காரியத்தையெல்லாம் ஒண்ணொண்ணா நெனைச்சுப் பாக்கறாரு.
தாம் பண்ணின எந்த ஒரு காரியத்துக்கும் மேலே சொன்ன மூணுலியுமே சரின்னு சொல்லிருக்கலைன்னு நல்லாப் புரியுது!


ஆனாக்காண்டிக்கும், முருகன் இவுருக்கு நேராவே வந்து அருள் பண்ணியிருக்காரு!


நெனைச்சுப் பார்க்கறப்பவே இவுருக்கு ஒரே ஆச்சரியமாப் பூடுது!


இது அத்தினிக்கும் மீறின சக்தியா அந்தக் கந்தன் நின்னுக்கினு ஒரு வெளையாட்டா இந்தக் காரியத்தப் பண்ணியிருக்காருன்னு புரியுது! அவரால மட்டுந்தான் இப்பிடிப் பண்ண முடியும்னு புரிய வருது!

அதான் வேத, ஆகம, ஞான விநோத'!!


இப்பிடிப் பண்றதுன்றது பொதுவா நடக்கவே முடியாது. ஆராச்சும் வந்து சொன்னா நம்ம மனசு அத்த ஒத்துக்காது! அடப் போடா! சும்மா கதை வுடாதேன்னு வெரட்டிருவோம்! ஆனாக்க, இப்பிடியாப்பட்ட ஒரு அருளை ரொம்ப 'அசால்ட்டா' பண்ணிட்டுப் போறாரு முருகன்.


அதத்தான், 'மன அதீதா' மனசையெல்லாம் கடந்தவனே, மனசுக்கெல்லாம் எட்டாதவனேன்னு சொல்லிக் கும்புடுறாரு அருணகிரியாரு!


இப்பிடி சொன்னதுமே, இதும்போல, வேற ஆருக்காவுது பண்ணியிருக்காரா நம்ம முருகன்னு கொஞ்சம் நெனைச்சுப் பாக்கறாரு!

ஏன்னா, ஒரே ஒரு தபா மட்டுந்தான் நடந்திச்சுன்னா, அத்த ஏதோ லக்கி சான்ஸுன்னு சொல்லிருவோம். அதே, ஒண்ணுக்கும் மேல நடந்திருச்சுன்னா, அப்ப அது அவரோட லீலைன்னு வெளங்குமில்லியா, அதுக்குத்தான்!


அப்பிடி நெனைக்கறப்ப, சட்டுன்னு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது!


தப்பும் மேல தப்பு பண்ணின தேவருங்களுக்கும் இதும்மாரி அருள் பண்ணித்தானே அவங்களையெல்லாம் சூரனோட பிடிலேர்ந்து காப்பாத்தினாரு; அதுனாலத்தானே, இவுருக்கே பட்டங் கட்டி, அவங்கள்லாம் கந்தனோட காலுல விளு[ழு]ந்து கெடக்காங்கன்னு தோணுது! 'சுரலோக சிகாமணியே'ன்னு கூப்புடுறாரு! தேவலோகத்துக்கே தலைவனா இருந்து அவங்களோட தலையெல்லாம் ஒன்னோட காலடியுல கெடக்கறமாரி நிக்கறவனேன்னு துதிக்கறாரு!


இதும்போல மனசால கூட நெனைக்க முடியாத காரியம்லாம் பண்ற நீ கொஞ்சம் கருணை வைச்சு, என்னையும்.... என்னைப் போல இருக்கறவங்களையும்...... பாருப்பான்னு சொல்ற அருமையான பாட்டு இது!


கொஞ்சம் சாஸ்தியாத்தான் சொல்லிட்டேன்னு தெரியுது! இருந்தாலும், சொல்லாம இருக்க முடியலே' என ஒரு மழலை போலச் சிரித்தான் மயிலை மன்னார்!

சாஸ்திரிகள் மௌனமாக அமர்ந்திருந்தார்! நானும், நாயரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்! என்னையுமறியாமல் என் வாய் பாடலை மீண்டும் ஒருமுறை முணு முணுத்தது.


ஆதா ரமிலே னருளைப் பெறவே
நீதா னொருசற் றுநினைந் திலையே
வேதா கமஞா னவிநோத மனா
தீதா சுரலோ கசிகா மணியே.

'கொஞ்ச நேரம் இந்தப் பாட்டுல சொன்னத நெனைச்சுப் பாரு' எனச் சொல்லிவிட்டு, எழுந்து நின்று சோம்பல் முறித்தான் மயிலை மன்னார்!


அருணகிரிநாதரின் கருணை உள்ளத்தை நினைக்கையில் மனம் கசிந்தது!
*************
[தொடரும்]


வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, September 09, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 26"

"'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 26"
25.

லேசாக மழைத் தூறல் பெய்யத் தொடங்கியது! காற்று சில்லென்று வீசியது! மாலை மங்கிய இனிய நேரத்தில் மேலே வானத்தில் ஒரு அழகிய வானவில் தெரிந்தது!
மனதையள்ளும் அந்தக் காட்சியில் மனதைப் பறிகொடுத்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் பார்ப்பதைக் கவனித்த மன்னார் லேசாகச் சிரித்தான்.


'எவ்ளோ அள[ழ]கா இருக்கில்ல?' என்றான் மெதுவாக.
'ஆமாம் மன்னார்! அப்பிடியே பார்த்துகிட்டே இருக்கலாம்போல இருக்கு!' என்றேன் பரவசமாய்.
'ஆமாமாம்! நல்லாப் பார்த்துக்க. இல்லேன்னா சீக்கிரமே மறைஞ்சிரும்' என்றான் மன்னார்.


துணுக்குற்று திரும்பினேன் ! அவன் சொல்வதில் ஏதோ பொருள் இருப்பதாக உணர்ந்தேன்.
'நீ என்ன சொல்றே மன்னார்?' எனக் குழப்பத்துடன் வினவினேன்.


'பாக்கறதுக்கு எவ்ளோ அள-ழ]கா இருந்தாக்கூட, இது நெலையானதில்ல. ஒரு மாயம் அவ்ளோதான். இந்த நேரத்துக்கு நல்லா இருக்கு. ஆனா நெலைச்சு நிக்குமோ? நிக்காது! அப்பிடித்தான் நம்மளோட வாள்[ழ்]க்கையும்! இதைப் பத்தித்தான் அடுத்த பாட்டு சொல்லுது! அத்தப் படி;.... கேப்போம்' என்றதும்தான்,


'ஆஹா! வந்த விஷயத்தை மறந்துவிட்டு இப்படி கவனத்தைச் சிதறவிட்டுவிட்டேனே' என ஒரு குற்ற உணர்வுடன் பாடலைப் படித்தேன்.

மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே/னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றியசே வகனே . [25]

மயிலை மன்னார் அதைப் பதம் பிரித்துச் சொன்னான்.

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே .

'மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ அடியேன் அலையத் தகுமோ?'

'வானவில்லைப் பார்த்தியான அதுல விதவிதமான கலருங்க இருக்கும். ஒண்ணொண்னும் ஒரு கொணத்தக் காட்டும்! ஒரு நேர்க்கோட்டுலியும் இருக்காது! வில்லு மாரி வளைஞ்சுக் கீறதாலத்தானே அதுக்கே அந்தப் பேரு வந்திச்சு!


ஒரு சமயம் பாத்தா ஒரு கலரு தூக்கலாத் தெரியும், இன்னொரு சமயம் வேற ஒரு கலரா இருக்கும்.
அதுமாரித்தான் நம்ம வாள்[ழ்]க்கையும்!


அப்பப்ப நடக்கறதுல மனசைத் தவறவிட்டுட்டு, அதும் பின்னாடியே அலைஞ்சு திரிஞ்சு, படாத பாடுல்லாம் பட்டு, அப்புறமாத்தான் புத்தி வரும்.... இதெல்லாம் மெய்யில்ல; அத்தினியும் பொய்யின்னு!


ஆனாக்காண்டிக்கு, நடக்கற வரைக்கும் பாத்தியானா, இன்னாமோ அதான் கெடைக்கக்கூடாத பெரிய செல்வம்ன்றமாரி தெரியும். பின்னாடி பாத்தா, இதுக்கா அலைஞ்சோம்னு நமக்கே வெக்கமாப் பூடும்!
இப்பிடி அலையறதைப் பத்தித்தான் மொத ரெண்டு வரியும் சொல்லுது!


எப்பிடிப் பாத்தாலும் வெறும் சோகத்த மட்டுமே தர்ற இந்த ஒலக வாள்[ழ்]க்கையைப் போயி மெய்யின்னு நம்பி அதும் பின்னாடியே ஓடி இப்பிடி நான் அலையுறது நியாயமா முருகான்னு கேட்டுத் தலையைத் தூக்கறாரு!


எதுத்தாப்புல முருகன்!!!
அந்த சாமியைப் பாத்ததுமே அடுத்த ரெண்டு வரி தானா வந்து விளுது!

'கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் மயிலேறிய சேவகனே !'

செக்கச்செவேல்னு முருகன் ஜொலிக்கறாரு!
கையைப் பாத்தா அது செவப்பு!
கேட்டவங்களுக்கெல்லாம் அருளை வாரிவாரிக் குடுக்கற கையில்லியா அது! அதான் அம்மாம் செவப்பு!


கையுல பிடிச்சிருக்கற வேலு.... அதும் செவப்பு!
சூரனைக் கிளிச்சதுனாலியா?
இல்லையில்லை!
வேலு ஞானத்தோட சின்னம்!
கூர்ப்பான அறிவைக் காமிக்கறதுதான் வேலு! செம்மையான ஞானத்தோட அடையாளம் அந்த வேலு!


ஒடம்பு முளுக்க பாத்துக்கினே காலுகிட்ட வராரு!
அந்தக் காலும் செவப்பாக் கீது! எதுனால தெரியுமா?
ஒன்னைப் போல எத்தினியோ ஜனங்க முருகா! நீதாம்ப்பா கெதின்னு அவரு காலைப் பிடிச்சுகிட்டு விடாம க்கீறதால, அதுவும் செவந்து போயிருச்சு!


இப்பிடி ஒடம்பு முச்சூடும் செவப்பா ஜொலிக்கறாரு முருகன்!'அதான் கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்'!


அவரு குந்திக்கினு க்கீற மயிலைப் பாக்கறாரு!
அது இன்னொரு ஆச்சரியத்தக் குடுக்குது இவுருக்கு!


மயிலுதான் இருக்கற பறவைங்களுக்குள்ளியே ரொம்ப ரொம்ப அள[ழ]கான பறவை!
கண்ணு ஒரு கலரு, தலைக் கொண்டை ஒரு கலரு, களு[ழு]த்து ஒரு கலரு மூக்கு ஒரு கலரு... இதெல்லாம் பத்தாதுன்னு.... தன்னோட தோகையை விரிச்சா, அதுல ஏகப்பட்ட கலருங்க!
அதுவும் அது நல்லா முளு[ழு]சா அந்தத் தோகையை விரிச்சா, அப்பிடியே ஒரு பெரிய வானவில்லுமாரி இருக்கும்!


ஆனா, ஒரே ஒரு கலரு மட்டும் அதுல 'மிஸ்ஸிங்காப்' பூடும்!
அதான் செவப்பு!


இப்ப ஒனக்குங்குடக் கொஞ்சம் புரிஞ்சிருக்கணுமே!' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!


''ஓம் சரவணபவ' என உதடசையச் சொல்லிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்த நாயர், உடனே தன் கண்களை அகலமாக விரித்து, 'ஞான் பறயட்டே! இங்கியும் ஒரு வானவில்' எனக் குதூகலித்தான்!


'கரீட்டாச் சொல்லிட்டேப்பா! தோகை விரிச்ச மயிலுக்கு நடுவுல ஒக்காந்துக்கினு க்கீற செவப்பான முருகனோட கலரு தூக்கலாத் தெரிய நெசமாவே இங்கியும் ஒரு வானவில்லுதான் தெரியுது அருணகிரியாருக்கு! அதான் மயிலேறிய சேவகனே !'ன்னு பாடறாரு!




ஆனா, ஒரு வித்தியாசம்!


இந்த வானவில்லு நெசம்! மறையாது! கலையாது!
அதும்மேல கெவனம் வைச்சு அதையே தியானம் பண்ணினியானா, இந்த வானவில்லு ஒனக்கு முன்னாடியே, எப்பவும் நிக்கும்!


இந்த சேவகனேன்றத ரெண்டு விதமாப் பாக்கலாம்!


சேவகன்னா சண்டைக்குப் போற வீரன்னு சொல்லலாம்.
எஜமானனுக்கு கைகட்டி சேவகம் பண்ற ஆளுன்னும் சொல்லலாம்!


பலவிதமா என்னை வெனைங்கள்லாம் தொறத்தறப்ப, அதுங்களை சண்டை போட்டு வெரட்டறதுக்காவ மயில் மேல வாப்பான்னு கூப்பிடறதாவும் வைச்சுக்கலாம்.

இல்லேன்னா,
இந்த வானவில்லைப் பாத்ததுக்கப்புறமா, நான் ஏன் கண்டதும் பின்னாடியும் அலையப் போறேன்னு சொல்லி கந்தன் காலுல விள, இவரைத் தூக்கியெடுத்து, அவன் சேவகம் பண்றமாரி நிப்பான்னு சொல்றமாரியும் புரிஞ்சுக்கலாம்!
அதான் முருகனோட பெருமை!
எனச் சொல்லி நிறுத்தினான் மன்னார்.

ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம்!
'சரி, ஒரு வேலை க்கீது! அத்த முடிச்சிட்டு ஒரு அரை அவர்ல வந்திடறேன் வாரேன்' எனச் சொல்லி எழுந்தவன், எங்களைப் பார்த்து,
'ஆமா, முருகன்மாரியே செவப்பா க்கீற இன்னொரு சாமி ஆரு தெரியுமா? ஐயரே! நீங்க சொல்லாதீங்க!' எனக் கண்சிமிட்டினான்!


சட்டென்று நினைவுக்கு வராமல் நாங்கள் இருவரும் விழிக்க,
'அதாம்ப்பா,... தோ... க்கீறாரே, இந்தக் கபாலிதான் அந்த இன்னொரு ஆளு! ஒன்னோட தோஸ்த்து சிவசிவாகூட சொல்லுவாரே' எனச் சொல்லிவிட்டு, 'பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து' என முணுமுணுத்துக்கொண்டே, அந்தப் பக்கமாய் வந்த ஆட்டோவைக் கைகாட்டி நிறுத்தி, அதில் ஏறிப் பறந்தான் மயிலை மன்னார்!


'அட! ஆமாம்ல!' என நான் நாயரைப் பார்த்துச் சொன்னேன்!
'ம்ம்ம்... ஒனக்கு எந்த விஷயந்தான் ஞாபகத்துல இருக்கப்போறது!' எனத் தன் தலையில் அடித்துக்கொண்டே சாம்பு சாஸ்திரிகள் எழுந்து உள்ளே சென்றார்!


நாயர் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தபடியே, 'சேட்டா, வரு! கடைப் பக்கம் போலாம்' என அழைத்துச் சென்றான்!
*********
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP