Monday, February 16, 2009

"உந்தீ பற” -- 20


"உந்தீ பற” -- 20

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

எண்ணங்க ளேமனம் யாவினு நானெனு
மெண்ணமே மூலமா முந்தீபற
யானா மனமென லுந்தீபற. [18]


எண்ணங்களே மனம் யாவினு[ம்] நா[ன்] எனும்
எண்ணமே மூலமாம் உந்தீ பற
யானா மனம் எனல் உந்தீபற.


இது அதுவென அலை அலையாக
எழுந்திடும் எண்ணக் குவியலின் அளவே

மனமெனும் ஒன்றின் மாண்பைக் காட்டிடும்
இவையெலாம் ஆங்கே எழுதலின் மூலமோ

'நான்'எனும் உணர்வின் தாக்கத்தினாலே!
உணர்வும் செயலும் உள்ளுயிர் சேர்ந்ததென

முன்னம் இங்கே சொல்லியதுணர்ந்திடின்
’யான்'என வருவதே மனமென உணர்க!



'மனம்' என்பது என்ன? எனும் கேள்விக்கான விடைதேடல் தொடர்கிறது!

எண்ணங்களே மனதின் செயல்பாடு . இதனை முன்பே படித்தோம்.
எந்த ஒரு பொருளோ, அல்லது உணர்வுகளோ ஏதேனும் ஒன்றைப் பற்றியே நிற்கிறது.

'இது ஒரு புத்தகம்', என உணர்வது அது பற்றிய நம் மனதின் அறிவினாலே தான்.

இந்த அறிவு, ஒரு அறியப்படுபவன் இல்லாமல் நிகழ முடியாது.

இப்போது, அதுவே, நான் இதை ஒரு புத்தகம் என அறிகிறேன் என மாறுகிறது.
இந்த 'நான்' என்னும் ஒன்றைச் சுற்றியே அனைத்தும் நிகழமுடியும் எனப் புரிகிறது.

'நான்' கோபமாக இருக்கிறேன்; நான் இது ஒரு புத்தகம் என அறிகிறேன் என்னும் போதெல்லாம், 'நான்' எனபதாலேயே நிகழ்கிறது எனப் பொருளாகிறது.

பார்க்கும் பொருள்களும், உணரும் உணர்வுகளும் மாறக்கூடும்.
ஆனல், இந்த 'நான்' என்பது மட்டும் மாறுவதில்லை.

இதன்மூலம் தான் அறிவது என்ன? என ஒரு யோகி சிந்திக்கத் தொடங்கும்போது, மனம் என்னும் ஒன்று முன் சொன்னதுபோல இருவிதமான எண்ணங்களின் கலவை அல்ல; 'நான்' எனும் ஒன்று எழுவதின் மூலமே அனைத்துப் பொருட்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கிறது எனப் புரிகிறார்.

அப்படியானால், இந்த நான் எல்லா நேரங்களிலும் நம்முடன் இருக்கிறதா என ஆராயும் போது, ஆழ்ந்த உறக்கத்தில் இது காணாமல் போவதையும், விழித்தவுடன், உடனே இது வந்து தொற்றிக்கொள்வதையும் உணருகிறார்.

'நான் குண்டாக இருக்கிறேன், நான் வருத்தமாக இருக்கிறேன், நான் ஒரு பொல்லாதவன்' என்கின்ற 'நான்' எல்லாம் உண்மையில் நான் இல்லை எனப் புரியத் தொடங்குகிறது.

எந்த நிலையிலும் மாறாத ஒன்றே 'உண்மை' எனப் புரிந்த இவர், இப்படித் தெரிகின்ற இந்த 'நான்' மனம் சார்ந்ததே தவிர, இதையும் மீறிய ஒரு 'நான்' இருக்கிறதோ எனத் தன் தேடலைத் தீவிரமாக்குகிறார்.
**************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP