Thursday, March 12, 2009

”உந்தீ பற!” -- 31

”உந்தீ பற!” -- 31


’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

அறிவறி யாமையு மற்ற வறிவே
யறிவாகு முண்மையீ துந்தீபற
வறிவதற் கொன்றிலை யுந்தீபற. [27]

அறிவு அறியாமையும் அற்ற அறிவே
அறிவாகும் உண்மை ஈது உந்தீ பற
அறிவதற்கு ஒன்று இலை உந்தீபற.



அறிவன யாவும் அறிவால் கூடும்
அறியாதனவோ பலப்பல ஆகும்


அறிவால் உணரும் அறிவினில் இன்னும்
அறியாதெதுவென அறிவது கடினம்


அறிவும் அறியாமையும் இரண்டும் கடந்த
ஒருநிலை நிட்டையில் கூடிடும் யோகியர்


தன்னை அறிந்திடும் பொருளிதுவென்றே
நிலைத்த அறிவினைத் தெளிந்தே உணர்வர்.


'தன்னிலை உணர்தல்' [Self realization]என்ற சொல்லைப் போலவே, இந்த' தன்னை அறிதல்' [self knowledge]என்ற சொல்லையும் சற்று விளக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பொருளைப் பற்றிய அறிவு புலன்களால்[senses] அறியப்பட்டு, நம் அறிவினால்[intellect] விளங்கிக் கொள்ளப் படுகிறது........ இது அம்மா, இது அப்பா, இது வீடு, எனப் பலவும்.

ஆனால், இவ்வுலகில் நாம் அறியாதன பல இருக்கின்றன.

ஔவை சொன்னது போல 'கற்றது கையளவு; கல்லாதது உலகளவு"!

அப்படித்தான் இந்த 'தன்னை அறிதலும்' நம்மால் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது.

இதுவரை நாம் அறியாத பல பொருட்களில் இதுவும் ஒன்று எனவும், மற்ற பொருட்களை அறிய முடிவது போல, இதனையும் அறிய முடியும் எனவும் நினைக்கிறோம்.

ஆனா, இது அப்படி அறியப்படும் ஒரு "பொருள்" அல்ல !

நமது புலனறிவுக்குக் கட்டுப்படாத, அதற்கும் அப்பாற்பட்ட ஒன்று இந்தத் 'தன்னை அறிதல்' என இதுவரையிலும் பார்த்தோம்.

அப்படியானால், இதனை எப்படி அறிவது என்பதை இப்பாடல் விளக்குகிறது.

சடப் பொருளால் எதனையும் உணர முடியாது என முன்பு பார்த்தோம். புலனறிவு என்பதும் ஒரு சடப் பொருளே எனவும் பார்த்தோம். உடல், உணர்வு, இவற்றால் விளையும் செயல்பாடே இது என முன்னொரு பாடல் விளக்கியது நினைவிருக்கலாம்.

அப்படியென்றால், சடப்பொருளான புலனறிவால் தன்னை அறிய முடியாது என்றாகிறதல்லவா?

புலனறிவால் விளையும் புத்தி ’இது என் மகன்’ எனக் காட்டுகிறது. ஆனால் ’அவனை எப்படிச் சமாளிப்பது?’ என்பது தெரியாமல் திகைக்கிறது! இது கணினி எனத் தெரியும்; ஆனால் அதை எப்படி இயக்குவது எனத் தெரியாது; அப்படியே அதன் இயக்கம் புரிந்தாலும், அதில் ஒரு பிரச்சினை வந்தால் சமாளிப்பது எப்படி எனத் தெரியாது.

இப்படி அறிவும், அறியாமையும் சேர்ந்த ஒன்றே நாம் அறிவது!

"நிலைத்த அறிவு" எனச் சொல்லப்படும் "சித்" இவ்விரண்டுக்கும் ஒளியூட்டுவதால், இவ்விரண்டையும் விட வேறானது. இவ்விரண்டுக்கும் அப்பாற்பட்டது.

தெளிந்தவர் எப்போதுமே தெளியப்படுவதிலிருந்து வேறுபட்டவர்தானே?

இதென்ன குழப்பம்? அப்படியானால், இந்த 'சித்' [Consciousness]என்பதுதான் 'நான்' என்பதை ஒளிரச் செய்கிறதா?

இல்லை!

இந்தத் தெளிந்த நிலையான அறிவு[Consciousness]தான் 'நான்' [self]!

இந்தத் தெளிவு பிறக்கும் போதே, 'நானும்' தெரிய வருகிறது.

'தன்னை அறிதல்' என்பது, 'நான் எனும் சித்தமே புத்தியை பிற பொருட்களை அறியச் செய்கிறது. தானே தெரியவரும் 'நான்', அறிவு, அறியாமை என்கின்ற இரண்டையுமே எனக்குத் தெரியச் செய்வதால், நான் இவற்றிலிருந்து தனித்து நிற்கிறேன் எனப் புரியவரும்.

இப்படிப் புரியும்போது, 'தன்னை அறிதல்' என்பது தானே நிகழ்ந்து, இது ஒன்றும் மற்ற பொருட்களைப் போல் அறியக்கூடியதல்ல என்கின்ற தெளிவும் பிறக்கிறது.

இதுவே இந்தப் பாடலில் ரமணர் வலியுறுத்துவது.

தன்னை அறிந்த பின்னால், அடுத்தது என்ன?
தன்னை உணர்வதுதானே!

நாளை பார்க்கலாம்!
*******************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP