Sunday, November 09, 2008

"கந்தன் கருணை" - 1

"கந்தன் கருணை" -1
['ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்']

கந்த சஷ்டியின் போது போடலாம் என எழுதத்தொடங்கினேன்,..... 'கந்தன் கருணை' என்ற தலைப்பில், கந்தன் பிறப்பு, அவனது லீலைகள், சூரனை அழித்தது, தெய்வானை, வள்ளி திருமண நிகழ்வுகளை வைத்து. ஒரு சில காரணங்களினால், அதை முடிக்க முடியாமல் போனது. இப்போது எழுதி முடித்தபடியால், அதனை இங்கு பதிகிறேன். படித்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி. முருகனருள் முன்னிற்கும்.

*********************************************

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்


கந்தன் கருணையைப் பாடிடவே
கணபதி தாளினை நான் பிடித்தேன்
தடைகளைத் தாண்டி கருணைவெள்ளம்
மடைதிறந்திங்கே பாய்ந்திடுமே

கணபதி தருவான் அருள்வான்
எம்வாழ்வில் இனிமை சேர்ப்பான் [காலையில்]

சூரன் என்னுமோர் கொடுமரக்கன்
தேவரைச் சிறையினில் வதைசெய்தான்
துயரினை நீக்கிக் காத்திடவே
தேவரும் சிவனை வேண்டிநின்றார்

விமலன் அருளிட நினைந்தார்
விழிமலர் திறந்து அருள்செய்தார் [காலையில்]

நடனம் ஆடிடும் சிவனினின்று
எழுந்தன தீப்பொறி மூவிரண்டு
சீறியே பாய்ந்தன கண்ணினின்று
சேர்ந்தன கங்கையின் கரை புரண்டு

என் முருகன் புகழைப் பாடிடுவேன்
அது ஒன்றே என்செயல் என்றறிந்தேன் [காலையில்]

தீப்பொறி வெப்பம் தாளாது
கங்கையும் வறண்டனள் சோர்ந்திருந்து
சரவணப் பொய்கையில் விட்டனளே
கமலங்கள் ஆறும் மலர்ந்தனவே

என் முருகன் பிறந்தான் பிறந்தான்
என் வாழ்வு சிறந்திட மலர்ந்தான் [காலையில்]

கார்த்திகைப் பெண்டிர் மார்பினிலே
கனியமுதம் அவன் சுவைத்திருந்தான்
அன்னை உமையாள் சேர்த்தணைக்க
ஆறுமுகனாய்ப் பொலிந்திருந்தான்

தன் வண்ணம் காட்டியே சிரித்திருந்தான்
என் எண்ணம் யாவினும் அவன் நிறைந்தான் [காலையில்]

நாரதர் மாங்கனி கொணர்ந்துவர
சிவனதை வென்றிட ஏவிவிட
உலகைச் சுற்றிட மயில் மீது
வலம்வரச் சென்றான் என் முருகன்

கணபதி தாய்தந்தை வலம் வந்து
கனியினைப் பெற்றே சுவைத்திருந்தான் [காலையில்]

வலம்வந்த முருகன் திரும்பிவர
கனியதை அண்ணனிடம் கண்டுவிட
கோபம் கொண்டான் என் முருகன்
ஆண்டியாய் நின்றான் பழநியிலே

அகிலத்திற் கோருண்மை உரைத்துவிட
பாலகன் செய்திட்ட விந்தையிது [காலையில்]

தன்னை மதியா பிரமனிடம்
ஓமெனும் மந்திரப் பொருள்கேட்க
விழித்திட்ட அயனைச் சிறையிலிட்டான்
படைப்புத் தொழிலைக் கையெடுத்தான்

தன்னிகரில்லாத் தலைவனிவன்
என்னவன் புகழை என் சொல்வேன் [காலையில்]

பிரமனைச் சிறைவிட வேண்டிநின்ற
சிவனுக்குப் பொருளை உரைத்திட்டான்
பிரணவத்தின் பொருளைச் சொல்லியதால்
தகப்பன்சாமியாய்ப் பெயர்பெற்றான்

கற்றதன் பொருளை உணர்ந்துகொள்ள
என்னவன் செய்திட்ட லீலையிது [காலையில்]



**********************

[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP