Saturday, September 29, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5

முந்தைய பகுதி இங்கே!






3. "அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்." [96]


"உள்ளே வாங்க தம்பி! இப்படி குந்துங்க! கையி பாக்கணுமா? ரூவால்லாம் அப்பறம் பேசிக்கலாம்! சாஸ்தி இல்ல! வாங்க வாங்க!"
என அவனை வரவேற்றபடியே, விரித்திருந்த பாயைக் காட்டி அதில் உட்காரச் சொன்னாள் அந்தக் கிழவி.

"இல்லே! அதுக்கெல்லாம் நான் வரலை! புதுசா இருக்கேன்னு பாத்தேன். அவ்ளோதான்" என்றவாறு இழுத்த அவனை அன்புடன்
பார்த்தாள், கிழவி.

"சும்மா வா ராசா! நீதான் இன்னிக்கு மொதப் போணி! முட்டத்துலேர்ந்து இதான் எனக்கு மொதத் தடவை இந்த சந்தைக்கு வர்றது!
நீ ஒண்ணும் தர வேணாம். சும்மா கையக் காட்டு. சரியாச் சொன்னேன்னா அப்பால நா கேக்கறதைக் குடு!"
என்றவாறே அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தாள்.

அப்படியே ஒரு கோலை எடுத்து, அவன் வலது கையைப் பார்த்தாள்.

"அடேங்கப்பா!" என ஒரு குரல் கிளம்பியது, அவளிடமிருந்து.

கந்தனுக்குள் ஒரு இனமறியா பயம் தோன்றியது.

"கையெல்லாம் ஒண்ணும் பாக்க வேணாம்" என எழத் துவங்கினான்.

"ஆமாமாம்! கை பாக்க வரலை நீ. உனக்கு வர்ற கனாவைப் பத்தி என்னா ஏதுன்னு தெரிஞ்சுக்கத்தான் வந்தே!"

கிழவியின் சொற்களைக் கேட்டதும், மந்திரம் போல உட்கார்ந்தான், கந்தன்!

"ஒனக்கு எப்பிடித் தெரியும் ஆத்தா?" என ஆச்சரியத்துடன் கேட்டான்.

"கனாவெல்லாம், சாமி நம்மளோட பேசறது. நம்ம பாசைல பேசினா, அது என்னன்னு சொல்லிட முடியும்.
ஆனா, சில சமயம் நம்மளோட பேசாம, நம்ம ஆத்மாவோட பேசும் சாமி! அது ஒனக்கு மட்டுந்தான் புரியும்.

அதுக்கு அர்த்தம் சொல்ல என்னால முடியாது. சரி, அது என்ன ஏதுன்னு பாக்கலாம். அதுக்கு முந்தி நான் சொல்றதுக்கு நீ என்ன தரணும்னு
இப்போவே பேசி முடிச்சிருவோம்." என்று கிழவி சொன்னவுடன்,


"ஆஹா! கிழவி நம்மகிட்ட பணம் கறக்க முடிவு பண்ணிட்டா! சாக்கிரதையா இருக்கணும்"
என மனதுக்குள் முடிவு செய்து கொண்டு,

"ஒரே ஒரு கனவு இதுவரைக்கு ஒரு ரெண்டு மூணு தடவ வந்திருச்சு! அது என்னான்னு சொல்றேன். கேட்டுக்கோ.

நான் என் ஆடுங்களை மேச்சுகிட்டு இருக்கேன். அப்போ ஒரு சின்னக் கொளந்தை வந்து, என்னோட ஆடுங்களோட சிரிச்சுகிட்டே விளையாடுது.
சரி, கொளந்தை தானேன்னு நான் அத ஒண்ணும் சொல்லலை. விளையாடிட்டு இருக்கற கொளந்தை, திடீர்னு என்னோட ரெண்டு கையையும்
பிடிக்குது.
அடுத்த நிமிஷம் நாங்க ரெண்டு பேரும் ஒரு புது எடத்துல இருக்கோம். அங்கே நெறய கோவில்லாம் இருக்கு!

கல்லுல செஞ்ச யானை கூட இருக்கு. பக்கத்துலியே கடலும். அந்தக் கொளந்த, .......வயசுல்லாம் தெரியலைன்னு சொல்றேன்ல!....
அது சொல்லுது,நீ இங்கே வந்தியானா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும். இதோ... இங்கதான்..." எனச் சொல்லிகிட்டே இருக்கையில,
சட்டுன்னு முளிப்பு வந்திருச்சு.... ஒவ்வொரு தடவையும்!....... இதுக்கு என்ன அர்த்தம்?
சொல்லு. சரியாச் சொன்னியானா,
துட்டு எவ்ளோ தரலாமின்னு பேசுவோம்" என அமர்த்தலாகச் சொன்னான் கந்தன்.

கிழவி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். அவனையும், அவன் கையையும் மாறி மாறிப் பார்த்தாள்.

வாயிலிருந்த வெற்றிலை பாக்கைத் துப்பிவிட்டு, கொஞ்சம் தண்ணி குடித்தாள்.

மறுபடியும், ஊறின பாக்கைக் கடித்துக் குதப்பி ஒரு வெற்றிலையைக் கிள்ளி, நிதானமாகச் சுண்ணாம்பைத் தடவினாள்.

நாலாகக் கிள்ளி அதை வாயின் இடது பக்கம் அடக்கி,பொறுமையாக மென்றாள்.

கூடவே, கொஞ்சம் கட்டைப்புகையிலையும் வெட்டிச் சேர்த்தாள்.

கந்தன் பொறுமை இழக்க அரம்பித்தான்.

'செல்லியை வேற பார்க்கவில்லை இன்னும்' என்ற எண்ணமும் கூடச் சேரவே, கிழவியைப் பார்த்து,

" இந்தக் கனாவுக்கு என்ன அர்த்தம்?
தெரியுமா, தெரியாதா. சொல்லு ஆத்தா! எனக்கு சோலி இருக்கு"
எனக் கேட்டான்.

"அட! பொறுப்பா! ரொம்பவே அவசரப் படறியே! என்னா மாரி கையி இது! சரி! நீ எனக்கு ஒண்ணும் தரவேணாம் இப்ப! ஆனா, ஒரு கண்டிசன். புதையல் கிடைச்சதும் அதுல பத்துல ஒரு பங்கு எனக்குத் தரணும் நீ!
சம்மதமா?"

கடகடவெனச் சிரித்தான் கந்தன்.

"அப்பாடா! அப்போ இப்ப ஒண்ணும் தர வேணாண்ற! சரி, கனாவுக்கு அர்த்தம் சொல்லு" என ஒரு நிம்மதியுடன் சொன்னான்.

"மொதல்ல, எனக்கு சத்தியம் பண்ணிக் குடு, பத்துல ஒரு பங்கு தருவேன்னு சொல்லு. கனாவுக்கு என்ன அர்த்தம்னு சொல்றேன்"
என மீண்டும் கிழவி வற்புறுத்தவே,

இதன் பொருளைத் தெரிந்து கொள்ளலாமே என்ற ஆவலில், "ம்ம்! சரி, சரி! நீ சொல்லு!"
என்றவுடன் கிழவி ஆரம்பித்தாள்....




"இது நான் முன்ன சொன்னமாரி, ஆத்மாவோட பேசற கனா இல்லை. நமக்கெல்லாம் புரியற ஒரு கனாதான். ஆனா, சொல்லப்போற விசயம்தான்ரொம்ப சிக்கலானது! அதுக்குத்தான் அந்த பத்துல ஒரு பங்கு கேக்கேன். சரியா!.... கவனமாக் கேட்டுக்க!நீ உடனே கிளம்பி அந்த எடத்துக்குப் போவணும்.சென்னப்பட்டணம் பக்கத்துல இருக்கு அந்த எடம். அப்பிடி ஒண்ணு இருக்கான்னு எனக்கு தீர்மானமா தெரியாது. ஆனாக்க, ஒரு கொளந்தை வந்து சொல்லிச்சுன்னா, அது கண்டிப்பா உண்மையாத்தான் இருக்கணும்.அங்கே ஒனக்கு நிச்சயமா புதையல் கிடைக்கும். நீயும் பெரிய பணக்காரனா ஆகப் போறே!"


கந்தனுக்கு எரிச்சல் வந்தது!

'இதைக் கேட்க இங்கு வரணுமா? அதுதான் கனவில் வந்து விட்டதே. கிழவி ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லையே'என எண்ணியபடியே,

"என் நேரத்தை இதுல செலவளிக்கறதா உத்தேசம் இல்லை" என்றவாறே எழ ஆரம்பித்தான்.


அவனைக் கடுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, கிழவி தொடர்ந்து பேசலானாள்.

"அதான் சொன்னேன்ல! இது கொஞ்சம் சிக்கலான கனான்னு! சுளுவா இருந்தா சொல்லியிருப்பேன்ல? கை பாக்கறது முகராசி பாக்கறதுல்லாம்கூட கத்து வெச்சிருக்கேன்! இரு" என்றதும்,



கிழவி சமாளிக்கிறாள் போல என நினைத்து, "அப்போ அந்தக் கோயிலுக்கு நான் போகலைன்னா, ஒனக்கு ஒண்ணும் தரவேண்டியதில்லைதானே"என மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான்.


"ஆமாமாம். சரி, நீ புறப்படு! ஒரு வரும்படியும் இல்லாம இன்னிக்கு முதப்போணி ஆயிருக்கு! பொளப்பைப் பாக்கணும். நா சொன்னதை மட்டும் மறந்திராதே! " என, கிழவி அவனை அனுப்பிவைத்தாள்.

[தொடரும்]

***************************

அடுத்த அத்தியாயம்!

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 4



"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 4

முந்தைய பகுதி இங்கே!




2. "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு." [335]


செல்லி அவனுக்குத் தெரிந்த பெண்தான்!

ஒரு 12-14 வயசிருக்கும்.

பள்ளியில் அவனோடு கூடப் படித்தவள்.

'அஞ்சாம் கிளாஸோட பொட்டைச் சிறுக்கிக்கு படிப்பெல்லாம் போறும்'னு வீட்டில் சொல்ல, அவளும் இப்போது பள்ளிக்குச் செல்வதில்லை.

எப்பவாவது சந்தைக்கு வரும் போது அவனைப் பார்த்து அன்புடன் சிரிப்பாள்.

"நல்லா இருக்கியா செல்லி?" "ம்.. நீ...?" இவ்வளவுதான் அவர்கள் பேசிக் கொள்வது.

போனவாரம் பார்த்தபோது, கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு, "அப்ப இன்னும் நீ படிக்கிறியா என்ன?"
என வெகுளித்தனமாகக் கேட்டாள்.

"வாத்தியார் குடுத்தாரு. பாரதக் கதை! பொளுது போகச்சொல்லி படிக்கறேன்."

"ஆடு மேக்கறவனுக்கு படிப்பு இன்னாத்துக்காம்?" எனத் தொடர்ந்தாள்!

செல்லியைத் தவிர வேறு யார் கேட்டிருந்தாலும் இவனுக்கு கோபம் நிச்சயம் வந்திருக்கும்.

ஆனால், கேட்டது செல்லியாயிற்றே!

அவளைப் பார்த்து சிரித்தபடியே சொன்னான், "சார்தான் சொன்னாரு. நெறயப் படிக்கணுமாம். அல்லாரையும் பாக்கணுமாம்.
அது மட்டுமில்ல செல்லி, நா இப்படியே இங்கியே இருப்பேன்னு நெனைக்காதே! நான் நம்ம ஊரையெல்லாம் தாண்டி, பட்டணம்லாம் போவேன்!
நெறய ஊரைப் பாக்கணும் எனக்கு!" என கண்களில் ஒரு ஒளி தெரிய அவன் சொன்னதைக் கேட்டதும்,

"தோ பார்றா! தொரை சீமைக்குப் போவப் போறாராம்! அப்டீன்னா எங்களைல்லாம் மறந்திருவேன்னு சொல்லு" எனச் செல்லியும்
உற்சாகமாகச் சீண்டினாள்.

"சேச்சே! உங்களையெல்லாம் மறக்கமுடியுமா? அதெல்லாம் எங்க போனாலும் உன் நெனப்பு இருக்கும். நீதான் என்கிட்ட
எப்பவும் பிரியமா பேசறியே! ஒன்னிய எப்படி மறக்கறது?" என இவனும் பதிலுக்குச் சொன்னதும், வெட்கத்துடன் ஒரு
புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் போனது இவன் மனதில் ஓட....

"இரு புள்ள! இன்னும் கொஞ்ச நேரம் களிச்சுப் போவியாம்!" என்று வாய்விட்டுச் சொன்னவன், சட்டென்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

யாரும் பார்க்கலியே என உறுதிப்படுத்திக் கொண்டான்.

அவளை நினைத்துக் கொண்டே, தனக்குள் பேசியதை எண்ணி வெட்கத்துடன் சிரித்துக் கொண்டான்!

'ம்.. ஒருவேளை செல்லி வந்தாலும் வரும்! அதுகிட்ட இந்தக் கனவைப் பத்தி சொல்லணும். அது கொஞ்சம் விவரமான புள்ளை.'
என முடிவு செய்து கொண்டான்.

**********
சந்தை!

எத்தனை விதமான மனிதர்கள்?
என்னவெல்லாம் தேவைகள்?

கூறு கட்டி வைத்திருக்கும் காய்கறிக்கடைகள், ரிப்பன், ஸ்லைடு, சாந்துப்பொட்டு, பவுடர் என ஒப்பனைப் பொருள்களை அடுக்கியிருக்கும் சிறிய கடைகள், அரிசி, மிளகாய், உப்பு இதெல்லாம் மலைபோல குவித்து வைத்து வருவோர் போவோரையெல்லாம் கூவி அழைக்கும் வியாபாரிகள், பக்கத்திலேயே, ஆடு, மாடு விற்க, வாங்குவோரைக் குறி வைத்து அலையும் தரகுக் கும்பல், சிறுவர், சிறுமியருக்கான பொம்மை, ஜவ்வுமிட்டாய் போன்றவற்றை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு அவரவர் கேட்கும் வடிவத்தில் நொடியில் தயாரித்துக் கட்டிவிடும் கடைக்காரர்கள், குடை ராட்டினம் என சந்தை களை கட்டியிருந்தது.

இவ்ளோ பொருளும் வித்துப் போயிருமா?
ஆருக்கு வேண்டியிருக்கும் இதெல்லாம்? என யோசித்தபடியே சுற்றி வந்தவன் கண்களில்,
அந்தக் கொட்டகை பட்டது!

"உள்ளத உள்ளபடியே சொல்லும் ஜக்கம்மா அருள்வாக்கு" என்ற போர்டு அவனை ஈர்த்தது.

கையில் ஒரு சிறிய பிரம்புடனும், ஓலைக் காதோடும், அடக்கி வைத்த புகையிலையுடனும், மஞ்சள் பூசிய முகத்தில், நெற்றி நிறையக் குங்குமத்துடன் அமர்ந்திருந்த
அந்த பருத்த கிழவி, அவனைப் பார்த்து வாய் நிறையச் சிரித்தாள்!

[தொடரும்]
************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP