Friday, October 10, 2008

"கலைஞருக்கு ஒரு கடிதம்"

"கலைஞருக்கு ஒரு கடிதம்"



அன்புள்ள ஐயா!
தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ள உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது என்பதை உறுதியாய் நம்புபவன் என்கிற முறையில் இந்த மடலை வரைகிறேன்.

தமிழுக்கும், தமிழருக்கு பல நல்ல செயல்களைச் செய்யும் மனமும் உங்களுக்கு இன்னமும் இருப்பதை நான் உணர்கிறேன்.

ஆனால், தமிழர் என்பவர் தமிழகம் தாண்டியும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துபோய் விட்டீர்களோ என் ஒரு சந்தேகம்.

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுகிறர்கள் ஐயா!

உங்களுக்கும் தெரியும்தானே!?

கண்ணில் பட்ட எல்லாரும் குண்டுக்கு இரை ஆகிறார்கள்.

சாகாமல் பிழைத்தவர் அல்லல் படுகிறார்கள்.

ஒரு சாதாரண தமிழனான எனக்கு, அதுவும் ஒரு அயல்நாட்டில் இருக்கும் எனக்கே தெரியும்போது, உங்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.

என்ன செய்யப் போகிறீர்கள்?

ஆட்சியில் இருக்கிறீர்கள்.

அதுவும் தமிழக முதல்வராக!

அது மட்டுமல்ல!

40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, மத்திய அரசையே நடுங்க வைக்கும் பலம் கொண்டவராகவும் இருக்கிறீர்காள்.

ஒரு சில துறைகள் தங்கள் கட்சிக்குக் கிடைக்க வேண்டும் என அரசை வற்புறுத்தி, அதையும் பெற்றவர் நீங்கள்!

இவ்வளவு வலுவான நிலையில் இருக்கும் நீங்கள் இப்போது செய்யும் நிகழ்வுகள் உங்களது தலைமையையே சந்தேகப் பட வைக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

குறைந்த பட்சமாக, பாதிக்கப்பட்டு அல்லல் படும் மக்களுக்கு, நம் தமிழருக்கு, அடிப்படை நிவாரண உதவி கிடைக்கக் கூட நீங்கள் செய்யக் குரல் கொடுக்காமல்,
அனைத்துக் கட்சிக் கூட்டம் அது இது என நேரம் கடத்துவது கலக்கம் அளிக்கிறது.

இப்போது உடனடித் தேவை, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவி.

1987-ல் எம்ஜியார் செய்தார்!....செயலிழந்த

நிலையிலும்!!

கப்பல் மறிக்கப்பட்ட நிலையிலும், விமானம் மூலம் இந்திய அரசு உதவி அளிக்க முன்னின்றார்.

அதைச் செய்யுங்கள் இப்போது!

தமிழீழம் கிடைப்பது கடவுள் விட்ட வழி!

அது நிச்சயம் கிடைக்கும்!

ஆனால், அதைக் காண மக்கள் இருக்க வேண்டும்!

நம் தமிழர் உயிரோடு இருக்க வேண்டும்.

தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது....

அனைத்துக் கட்சிக் கூட்டம் அல்ல!
உங்கள் பலத்தைப் பயன்படுத்தி, வருந்தும் தமிழருக்கு நிவாரணம் அளிக்க வேண்டியது மட்டுமே!

பதவியில் இல்லாத போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறப்பது அல்ல!
முதல்வர் பதவியை விட்டு விலக அறிக்கை அளிப்பதே, மத்திய அரசைக் கலங்க வைக்கும்!

செய்வீர்களா!

வருந்தும் நம் ஈழத் தமிழரை வாழ வைப்பிர்களா?

செய்வீர்கள் என நம்புகிறேன்!

நன்றி!
வணக்கம்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP