Monday, October 20, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

"பாரதி கண்ட சில காட்சிகள்"

மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடும் நேரம் இது!

ஈழம் பற்றி எரிகிறது!

தமிழகம் கொந்தளிக்கிறது!

உலகெங்கிலும் தமிழக மக்களின் குரல் உச்சமிட்டு ஒலிக்கிறது!

இந்தியத் தலைநகரிலும் கூட இன்று தமிழரல்லாத மாணவ சமுதாயம் ஆர்ப்பரித்து நிற்கிறது!

தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைத்து தமிழக பாரரளுமன்ற உறுப்பினர்களும் இருவார காலகட்டத்தில்

பதவி விலகுவார்கள் என அதிரடியாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் பாரதி என்ன சொல்லி இருக்கிறான் எனப் புரட்டிப் பார்த்தேன்!

என்னமோ தீர்க்கதரிசிக் கவிஞன் எனச் சொல்லுகிறார்களே, இவன் இதைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பானே என்ற நம்பிக்கையுடனே அவனிடம் கேட்டேன்!

சிரித்தான் பாரதி!

பாரடா எனச் சொல்லி ஒரு பக்கத்தை என்னிடம் காட்டினான்!

படித்தேன்!

சிலிர்த்தேன்!

தொழுதேன்!

கொஞ்சம் அழுதேன்!

கலைஞர் கொடுத்த இருவார அவகாசத்தில் இதைப் பற்றி உங்களுடன் பகிர எண்ணம் கொண்டேன்!

இதோ அது உங்கள் பார்வைக்கு!

இதில் வரும் பல வரிகள் விளக்கம் இல்லாமலே புரியப்படுபவை!

தேவைப்படும் போது என் மனதில் தோன்றிய எண்ணங்களை உங்களுக்குச் சொல்ல எண்ணம்!

இதோ பாடல்!

பாரதியின் அனுமதியோடு, அவன் வரிகளைச் சற்று பதம் பிரித்து இங்கு இடுகிறேன்.

"தமிழச் சாதி"

'எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,

நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்

பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்

நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ?'


என்னடா, இப்படி ஒரு தொக்கில் ஆரம்பிக்கிறானே என நிமிர்ந்தேன்!

விநாயகர் நான்மணிமாலை நினைவுக்கு வந்தது!

சட்டென முந்தைய பாடலைப் பார்த்தேன்!

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி"

எனத் தொடங்கி ஒரு எட்டு கண்ணிகள் எழுதி,

"வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழியவே"

என முடித்திருந்தான் பாரதி!

இப்படிப் பெருமையெல்லாம் பெற்று, வளர்ந்து, சிறந்த தமிழ்மொழி நாற்றமும், சேறும், பாசியும் புதைந்து,

எவருக்கும் பயன்படாத நீராக ஆகி, அது மட்டுமல்லாமல், ஒரு நோய்க்களமாகி அழிந்து போகவோ உனது நோக்கம் எனக் கேட்கிறான்!

யாரைப் பார்த்து இப்படி கேட்கிறான்?

அதை அடுத்த வரியிலேயே சொல்கிறான்!



'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை

என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ?

சார்வினுக்கு எல்லாம் தகத்தக மாறித்

தன்மையும் தனது தருமமும் மாயாது

என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால்

வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடுவாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்து மற்று

உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்

சிதைவுற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?

வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?

விதியே! தமிழ்ச் சாதியை எவ்வகை

விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய்.'



வாழும் நிலைகளுடன் வைக்கப்போகிறாயா?

இல்லை அழிந்துபோகும் பொருள்களுடன் சேர்க்கப் போகிறாயா? என

விதியைப் பார்த்து ஒரு கேள்வி வைக்கிறான் பாரதி!

விதி திகைக்கிறது!

என்ன சொல்கிறான் இவன்?

நிகழ்வதைத்தானே நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்!

இதில், நிலைப்பது, அழிவது என்கின்ற வேறுபாடு எனக்குக் கிடையாதே!

பின் எதைக் குறித்து இப்படிச் சொல்கிறான் என பாரதியைப் பார்க்கிறது!

சற்றும் தயங்காமல், அடுக்கடுக்காய் உதாரணங்களைக் காட்டுகிறான் பாரதி.

நீரில் தோன்றிய இவ்வுலகு மீண்டும் நீரிலேயே முடியும் என்னும்

அறிவியலாளரின் கருத்துக்கொப்ப, எம் தமிழ் அழியாக் கடல் போல இருக்குமா?

அல்லது, ஒரு அழுத்தமான, கனமான மலர்மாலை தோளில் புரண்டதால் ஏற்பட்ட

அணிமலர்த் தடம், சிறிது நேரத்தில் மறைந்து போவதுபோல் போய்விடுமா?

பகலவன், மேகமூட்டம், இவற்றினால் இல்லாதது போலத் தோன்றினாலும்,

எப்போதும் மறையாத நட்சத்திரங்கள் போல அழியாமலா?

இல்லை, வெளிச்சம் வேண்டுமே என்பதற்காக ஏற்றப்பட்டு,

இயற்கை வெளிச்சம் வந்தவுடன் அணைக்கப்படும் ஒரு மாளிகை விளக்கு போலவா?

எவர் எது கேட்டாலும் தயங்காமல் தருகின்ற கற்பத்தருபோலவா?

அல்லது, எவருக்குமே பயனில்லாது தன் பெருமை மட்டுமே பேசி

தனிக்காட்டின் நடுவினில் நிற்கின்ற ஒரு காட்டுமரம் போலவா?

இப்படி எதுவாக வேண்டி எங்கள் தமிழச் சாதியை நீ விதித்திருக்கிறாய்? சொல்!

என அதிரடிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான்!

விதி இன்னமும் புரியாமலேயே விழிக்கிறது!

பாரதி தொடர்கிறான்!

****************************

[நாளை தொடரும்]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP