Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை!" - 6

"இது ஒரு கொலைக் கதை!" - 6

[முந்தையப் பதிவு இங்கே]

'வாங்க வாங்க! எதுனாச்சும் துப்பு கிடைச்சுதா என வரவேற்றார் முத்தண்ணன்.

'நீங்கதான் கொடுக்கணும். அதுக்குத்தான் வந்திருக்கோம்.' என அமர்ந்தார் ராஜேஷ்.

'சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?'

'காசி வித்த சிப்பி பத்தித்தான்! என்ன தரம் அதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?' என்றார் ஜப்பார்.

நல்ல தரமான சிப்பிங்க! எல்லாம் ஒரே குளிச்சல்ல எடுத்த மாரி அசலா இருந்துது. ஆனா, கொஞ்ச நாளு காஞ்ச சிப்பிங்க. இருந்தாலும் பழுதில்லை' என்றார் முத்தண்ணன்.

'கொஞ்சம் விவரமாச் சொல்லுங்களேன்' என ஆவலானார் ஜப்பார்.

'அது வந்துங்க, அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா திருடிச் சேகரிச்ச சிப்பிங்கன்னா, பலதும் கலந்த மாரி இருக்கும். ஒரே குளிச்சல்ல எடுத்ததுன்னா, ஒரே மாரி இருக்கும். காசி கொண்டு வந்தது ஒரே மாரி இருந்தாலும், கொஞ்ச நாளு கழிச்சு கொண்டு வந்த மாரி காஞ்சு போயிருந்தது. இருந்தாலும் தரமா இருந்ததால அப்படியே மறுபேச்சு சொல்லாம வாங்கிகிட்டேன். அவங்களுக்கும் எங்களை விட்ட யாரு இருக்காங்க சொல்லுங்க' என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் முத்தண்ணன்.

'ரொம்ப நன்றிங்க உங்க உதவிக்கு' என எழுந்தார் ஜப்பார்.
*********

'என்னைய்யா, 612! காசி அம்மா வீடு எங்கே இருக்குன்னு கண்டு பிடிச்சீங்களா?' எனச் சலிப்புடன் கேட்டார் ராஜேஷ்.

'தெரியுமைய்யா! அண்ணா தெருவுல 112-ம் நம்பர் வீடுங்க' என்றவுடன், நிமிர்ந்தார் ராஜேஷ்.

அடுத்த சில நிமிடங்களில், அவரது ஜீப் அங்கே நின்றது.

'இங்க சொர்ணம்மான்றது யாருங்க?'

'யாரது? போலீஸா? என்ன வேணும் உங்களுக்கு? என் பசங்க மறுபடியும் எதுனாச்சும் தப்புத்தண்டா பண்ணிட்டாங்களா?' எனக் கேட்டவாறே ஒரு வயதான மூதாட்டி வெளியே வந்தாள்.

'அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! உங்ககிட்ட சில கேள்வி கேக்கணும். போனவாரம் வெள்ளிக்கிழமை ராத்திரி உங்க பசங்க மூணு பேரும் இங்கே இருந்ததாச் சொல்றாங்க! அது உண்மையான்னு விசாரிக்கத்தான் வந்திருக்கோம்' எனச் சொன்னவுடன், சொர்ணத்தம்மாவின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது.

'எங்க பசங்க அடிக்கடி இங்க வந்து போறதுதான். ஆத்தாவைப் பாக்க வருவாங்க; போவாங்க. இதிலென்னங்க விசாரணை?' என சற்று கேலியாகக் கேட்டவுடன் சற்று கோபமானார் ராஜேஷ்.

'ஏய் கிழவி! கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லணும். உங்க பசங்க போன வெள்ளிக்கிழமை ராத்திரி இங்க வந்தாங்களா?' எனச் சற்று கடுமையுடன் கேட்டதும் நடுங்கிப் போனார் சொர்ணத்தம்மாள்.

'போன வெள்ளிக்கிழமையா?' என நெற்றியைச் சுருக்கி சற்று யோசித்தவர், ' ஆங்! வந்தாங்களே! வந்து, கோழிக்கொழம்பு வைக்கச் சொல்லி இருந்து சாப்பிட்டுட்டு கருக்காலைதான் கெளம்பிப் போனாங்க!' எனச் சற்று படபடப்புடன் சொன்னார்.

'நல்லா நினைவு படுத்திச் சொல்லுங்க. அது போன வெள்ளிக்கிழமை ராத்திரிதானா?' என சாந்தமாகக் கேட்டார் ஜப்பார்.

'ஆமாங்க. நான் ஏன் பொய் சொல்லப் போறேன். காசி, மாரி, ராசையன் மூணு பேரும் வந்து இருந்து, சாப்புட்டுட்டு, விடியறப்பத்தான் போனாங்க' எனத் தீர்மானமாகச் சொன்னார் சொர்ணத்தம்மா.


'அப்ப சரி. நாங்க கிளம்பறோம்' என எழுந்தார் ராஜேஷ்.
***********************
[தொடரும்]

2 பின்னூட்டங்கள்:

ரவி Sunday, July 13, 2008 10:27:00 PM  

விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது...

VSK Monday, July 14, 2008 12:14:00 AM  

பாராட்டுக்கும், முகப்பில் கொண்டுவர உதவியதற்கும் நன்றி, திரு. செ. ரவி~!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP