Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை!" - 4


"இது ஒரு கொலைக் கதை!" - 4

[முந்தைய பகுதி இங்கே]

'நீங்க எத்தனை நாளா இந்த தொழில்ல இருக்கீங்க?'

தன் ஆட்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த மரைக்காயர் நிமிர்ந்தார்.

'ஓ! வாங்க இன்ஸ்பெக்டர் சார்! என்ன விசேஷம்? எங்களுக்கு இதுதாங்க பரம்பரைத் தொழிலு. காலங்காலமா இதைத்தான் பண்ணிகிட்டு வர்றோம். என்ன விஷயமாக் கேக்கறீங்க?' என அன்புடன் கேட்டார் மரைக்காயர்.

'எனக்கு உங்களைப் பத்தி நல்லாவே தெரியும் மரைக்காயரே! நீங்க நேர்மையாத் தொழில் பண்றவர்னு நல்லாவே தெரியும். எனக்கு ஒரு விவரம் தேவைப்படுது! அதுக்குத்தான் உங்களைப் பார்க்க வந்தேன். இது என்னோட பெரிய அதிகாரி ஜப்பார்' என அறிமுகப்படுத்தினார் ராஜேஷ்.

'வாங்கைய்யா! என்ன சாப்பிடிறீக? டேய் பையா! ரெண்டு கூல்ட்ரிங்ஸ் சொல்லு' என உத்திரவிட்டபடியே அவர்களை உபசரித்தார் மரைக்காயர்.

'பரம்பரை பரம்பரையாப் பண்ற தொழிலுங்க இது. முத்து குளிக்கப் போறவங்களைப் பார்த்து, அவங்ககிட்டேர்ந்து சிப்பிகளை வாங்கி, அதைத் தரம் பிரிச்சு மேல விக்கறதுதான் எங்க தொழில்! அல்லா நல்லாவே இதுவரைக்கும் படியளந்துகிட்டு இருக்காரு. நாங்களும் நேர்மையாத் தொழில் பண்றோம்' என்றவரை மறித்து,

'அப்படீன்னா, நேர்மையில்லாம தொழில் பண்றவங்களும் இருக்காங்கன்னு சொல்றீங்களா?' என மடக்கினார் ஜப்பார்.

'எதுல தான் இல்லை சொல்லுங்க! எல்லாத்துலியும் இருக்காங்க ஸார்!' எனச் சலித்துக் கொண்டார் மரைக்காயர்.

'என்ன மாதிரில்லாம் அப்படி பண்ணுவாங்க இந்தத் தொழில்ல?' என ஒரு எதிர்க் கேள்வி போட்டார் ஜப்பார்.

'வேற என்ன? திருட்டுத்தனமா சிப்பிகளை விக்கறது, அடுத்தவனோட சிப்பிகளை திருடி வந்து விக்கறதுன்னு பலானது பலானதெல்லாம் நடக்குமுங்க! ஆனா, நாங்க அதையெல்லாம் வாங்கறதில்லை'

'வேற யாரு வாங்குவாங்க?'

'ஒரு மூணு கடை தள்ளிப் போயி, முத்த்கண்ணன் கடையில விசாரிங்க! அவரு இதுல கை தேர்ந்த ஆளு! லாபம் ஒண்ணுதான் அவருக்கு முக்கியம்! தொழில், தர்மம்னுல்லாம் ஒண்ணும் பாக்க மாட்டாரு. அவரைக் கேட்டா எதுனாச்சும் துப்பு கிடைக்கும்' எனச் சொல்லிச் சிரித்தார் மரைக்காயர்! 'நாந்தேன் சொன்னேன்னு சொல்லிடாதீங்க! 'நமக்கு எதுக்குங்க பொல்லாப்பு!' என ஒரு வேண்டுகோளும் கூடவே விடுத்தார்!
***********

'இங்க முத்தண்ணன் கடை....'

'இதாங்க! உங்களுக்கு என்ன வேணும்? ஆரு நீங்க? என்ன விசயமா வந்திருக்கீக?' என்றான் ஒருவன்.

'நாங்க போலீஸ். ஒரு கேஸ் விசயமா ..... முத்தண்ணனைப் பார்க்கணும்' என்றார் சாதாரண உடையில் இருந்த ராஜேஷ்.

'ஒங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு வேலை நேரத்துல தொந்தரவு பண்றீங்க?' என்று மீசையை முறுக்கியபடி தடிமனான ஒரு ஆள் வெளியே வந்தார்.

'நீங்கதான் முத்தண்ணனா?'

'அட! நம்ம இன்ஸ்பெக்டர் ஐயாவா? வாங்க வாங்க! ஆங்... என்ன கேட்டீக?? ஆமாம்! நான் தான் முத்தண்ணன். என்ன விசயமா இவ்ளோ தூரம்?' என்றார் முத்தண்ணன்.

'இந்த சிப்பிகளை எல்லாம் மொத்த விலைக்கு வாங்கற ஆளு நீங்க தானா?'

'தப்பு! அது நான் மட்டும் இல்லை! என்னைப் போல பல பேரு இங்க இந்தத் தொழில் பண்றோம்.' எனச் சொல்லிச் சிரித்தார் முத்தண்ணன்.

'கடந்த ஒரு வாரத்துல உங்க கிட்ட சிப்பி வித்தவங்க லிஸ்ட்டு வைச்சிருக்கீங்களா?'

'எதுக்குக் கேக்கறீங்க? என்ன சமாச்சாரம்? எதுனாச்சும் வெவகாரமா?' என்று உஷாரானார் முத்தண்ணன்.

'கொஞ்சம் பொருள் திருட்டுப் போயிருக்கு. சிப்பிதான். உங்க கிட்ட அப்படி யாராவது வந்து பேசினாங்களானு சொன்னா போறும். வேற ஒண்ணும் இதுல சிக்கல் இல்லை. உங்க ஒத்துழைப்புதான் வேணும்' எனத் தன்மையாகப் பேசிச் சிரித்தார் ஜப்பார்.

முத்தண்ணன் கொஞ்சம் லேஸானார்.

'அதுக்கென்னய்யா? பார்த்துறலாமே' என்று ஒரு நோட்டுப் புத்தகத்தைப் புரட்டினார்.

நாங்கள்லாம் முறையா வாங்கறவங்கதான். அதே சமயம், நமக்குத் தெரிஞ்சவங்க கொண்டு வந்தா, மறுபேச்சில்லாம வாங்கிக்குவோம்! எல்லாம் ஒரு தொழில் தர்மந்தான்!' என்று சில்மிஷமாகச் சிரித்தார் முத்தண்ணன்.

'அதான்! அது மாரி யாராச்சும் இந்த வாரத்துல வந்து எதுனாச்சும் சிப்பி வித்தாங்களான்னுதான் தெரியணும்' என்றார் ஜப்பார்.

'கடலுக்குள்ள முங்கி சிப்பி எடுக்கற ஆளுங்க கிட்ட, வாங்க போட்டா போட்டி இருக்கும். ஆனாக்க, அதையும் தாண்டி. சில பேருங்ககிட்ட எக்ஸ்ட்ராவா சில சிப்பிங்க கிடைக்கும். அதை மறைச்சுக் கொண்டு வந்து விப்பாங்க! அது யாரோட சொத்தும் இல்லை. அதனால, அதை வாங்கி அவங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுப்போம். இதுலியும் தப்பில்ல. சட்டத்துக்குப் புறம்பா எதுவும் நாங்க செய்யறதில்ல.' என்றார் முத்தண்ணன்.

'இப்ப நாங்க உங்களை விசாரிக்கவோ, இல்லை, நீங்க செய்யறது சட்டபூர்வமா இல்லியான்னு குற்றம் சாட்டவோ வரலை. அந்த பயம் உங்களுக்கு வேண்டாம். நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். ஒரு கொலை நடந்திருக்கு. அவர் வைச்சிருந்த சில சிப்பிங்களும் களவாடப்பட்டிருக்கு. சமீபத்துல அப்படி யாராவது நிறைய சிப்பிங்களை யார்கிட்டயாவது வித்திருங்காங்களானுதான் நாங்க தெரிஞ்சுக்க ஆசைப்படறோம். அது மட்டும் சொன்னாப் போதும்.' என்றார் ஜப்பார்.

சற்றே சமாதானமான முத்தண்ணன், 'அதுக்கென்ன! பார்த்திட்டாப் போச்சு! டேய்! சரவணா, அந்தப் பேரேடை எடு!' என அமர்த்தலாகக் கத்தினார்.

சரவணன் கொண்டு வந்த புத்தகத்தைப் பிரித்துப் பார்த்துக் கொண்டு வந்தவர் முகம் சற்று மலர்ந்தது.

'ரெண்டு நாளைக்கு முன்ன ஒரு ரெண்டாயிரம் சிப்பியை யாரோ வித்திருக்காங்க. இருங்க யாருன்னு பார்க்கிறேன்' என மும்முரமானார் முத்தண்ணன்.

[தொடரும்]

2 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் Tuesday, July 08, 2008 11:54:00 PM  

சிப்பி தொழிலைப் பத்தி இன்னும் 'ஆழமா' சொல்லி இருக்கலாமோ?!

VSK Wednesday, July 09, 2008 12:11:00 AM  

நேரா கதையை மட்டும் சொல்லலாமே என எண்ணியதால்,
'ஆழமா' சொல்லாம'மேலோட்டமா சொல்லிட்டேன், கொத்ஸ்!:)

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP