Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை!" - 5

"இது ஒரு கொலைக் கதை!" - 5

[முந்தையப் பதிவு இங்கே]

'காசின்னு ஒருத்தன்.... நமக்குப் பழக்கமான ஆளுதான்.... அவந்தான் வித்திருக்கான்'

'யாரு அவன்? கொஞ்சம் அவனைப் பத்திச் சொல்லுங்க' எனப் பதட்டமானார் ராஜேஷ்.

'அண்ணன் தம்பிங்க மூணு பேரு. காசி, மாரி, ராசையன்னு பேரு அவங்களுக்கு. அவங்கள்ல ஒருத்தன்..... ஆங்.... மாரி,..... மாரி ஒரு ரெண்டு நாளைக்கு முந்தி வந்து, தான் கொஞ்சம் சிப்பிங்க சேத்து வைச்சிருக்கறதாச் சொல்லி, வாங்கிக்க முடியுமான்னு கேட்டான். தரம் நல்லா இருக்கேன்னு நான் அதை வாங்கிகிட்டு, பணம் கொடுத்தேன்' என்றார் முத்தண்ணன்.

ஜப்பாரின் முகம் பிரகாசமானது! 'அவனைப் பத்தி வேற எதாவது தகவல் சொல்ல முடியுமா?' எனக் கேட்டார்.

'சொல்றதுக்குன்னு ஒண்ணும் பெருசா இல்லீங்க. இதான் அவங்க தொழிலே! முத்துக் குளிக்கப் போறதில ரொம்பவே துடியா இருப்பாங்க! தான் உண்டு தங்க வேலை உண்டுன்னு இருப்பாங்க! அதே சமயம் கொஞ்சம் முரடு கூட! சண்டை தகராறுல்லாம் ரொம்பவே அத்துப்படி. இவங்க முரட்டுத்தனம் எனக்குத் தெரிஞ்சதினாலியே, ரொம்ப வெவகாரம் வைச்சுக்காம, அந்த சிப்பிங்களைக் கூட நான் வங்கிகிட்டேன்' எனச் சொல்லிச் சிரித்தார்.

'அவங்க எங்கே இருக்காங்கன்னு தெரியுமா? சரி, சரி, வேண்டாம். அதை நாங்க பார்த்துக்கிறோம். உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி, முத்தண்ணன் ஐயா' என்று ராஜேஷும், ஜப்பாரும் கிளம்பினார்கள்.

'ஏதோ என்னாலான கடமையை நான் செஞ்சேனுங்க. உங்க தயவெல்லாம் எங்களுக்கு எப்பவும் வேணுமில்லியா!' என அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, ' உஸ்! அப்பாடா! என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன்' என முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
*******************

காசி சகோதரர்களைத் தேடுவது பெரிய சவாலாக இருக்கவில்லை ராஜேஷுக்கு.

ஏற்கெனவே ஒரு சில சின்னச் சின்ன விஷயங்களுக்காக கைது செய்யப்பட்டு இருந்ததால், இவர்களைப் பற்றிய விவரங்கள் நிலையத்தில் சுலபமாகக் கிடைத்தது.

" யோவ் 612! போய் அவங்களை ஸ்டேஷனுக்கு இட்டாய்யா' என அனுப்பினார்.

சற்று நேரத்தில், 612 இரண்டு பேருடன் திரும்பி வந்தார்.

'ஐயா! காசி கிட்டலை ஐயா! கடல்ல போயிருக்கானாம். மாரியும், ராசையனும் இருந்தாங்க. கூட்டிகிட்டு வந்திருக்கேன்' என்றார் 612 என்கிற பொன்னுசாமி.

" என்னப்பா மாரி! எப்படி இருக்கே?" என வழக்கமான விசாரணையை ஆரம்பித்தார் ராஜேஷ்.

'ஏதோ இருக்கேன்யா. நாங்க ஒரு தப்புத்தண்டாவும் செய்யலீங்களே ஐயா. எதுக்கு எங்களை இட்டாரச் சொன்னீங்க?' என மரியாதையுடன் கேட்டான்.

'சொல்றேன், சொல்றேன். சொல்லத்தானே போறேன். சிப்பி வியாபாரம்லாம் எப்படிப் போகுது?' என மெதுவாகத் துருவினார் ராஜேஷ்.

'இப்ப சீசன் சுமாராத்தான் இருக்குங்க. நெறையக் கிடைக்கறதில்ல. '

'ஏதோ சிப்பியெல்லாம் வித்தீங்கன்னு சொன்னாங்களே' என ஒரு கொக்கி போட்டார் ராஜேஷ்.

மாரியின் முகம் இருண்டது

'ஓ! அதுங்களா! கடலுக்குள்ள அப்பப்ப போறப்ப கொஞ்சம் சேர்த்து வைப்போம். அதைத்தான் இந்த கஷ்ட காலத்துல வித்தோம்' என்ற ராசையனை நன்றியுடன் பார்த்தான்.

'அப்ப... நீங்க ஒண்ணும் தப்புத்தண்டால்லாம் பண்ணலைதானே' என்றார் ராஜேஷ்.

'இப்பல்லாம் நாங்க ரொம்ப சுத்தமுங்க. நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோமுங்க' என்றான் மாரி.

'போன வாரம் வெள்ளிக்கிழமை ராத்திரி எங்கே இருந்தீங்க நீங்கள்லாம்' விசாரணையை வேறொரு கோணத்தில் துவக்கினார் ஜப்பார். ராஜேஷ் அவரது திறமையை வியந்தவாறே அவரைப் பார்த்தார்.

'எங்கடா இருந்தோம்?' என மாரி, ராசையைனைப் பார்த்தான்!

புருவத்தைச் சுருக்கியபடி ஒரு நொடி யோசித்த ராசையன், சட்டென, 'என்னண்ணே! மறந்திட்டியா! அம்மாவைப் பார்க்கப் போயிருந்தோமே!' என்றான்!

'அட! ஆம்மாமில்ல! மறந்தே போயிட்டேன். அம்மா வூட்டுக்குப் போயி அன்னிக்கு முளுக்க அங்கதாங்க இருந்தோம்' எனத் தெம்பாகச் சொன்னான் மாரி.

'அப்படியா? உங்க அம்மா வீடு எங்கே இருக்கு?' எனத் தன் ஏமாற்றத்தைக் காண்பிக்காமல் கேட்டார் ராஜேஷ்.

'இங்கேதாங்க பக்கத்துலதான்!' என அமர்த்தலாகச் சொன்னான் மாரி.

'சரி! நீங்க போகலாம்! வேணுமின்னா கூப்பிடறேன்!' என அவர்களை அனுப்பி வைத்தார் ராஜேஷ்.

இப்ப அடுத்தது என்ன?' எனக் கேட்டார் ஜப்பாரை.

'வேற என்ன? காசி அம்மாவைப் பார்ப்போம். அதுக்கு முன்னாடி, முத்தண்ணனை மறுபடியும் பார்க்கணும்' என்றார் ஜப்பார் சிரித்தபடி!
*************

[தொடரும்]

4 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Thursday, July 10, 2008 11:52:00 PM  

முத்து, சிப்பி என்று கதையில் வருது...தூத்துக்குடி மேட்டராக இருப்பதால், நெல்லை தமிழில் எழுதி இருந்தால் மிக நன்றாக இருக்கும்

VSK Friday, July 11, 2008 12:20:00 AM  

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
:)))

வெண்பூ Friday, July 11, 2008 2:00:00 PM  

நன்றாக செல்கிறது, சஸ்பென்ஸாக. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

VSK Saturday, July 12, 2008 12:23:00 AM  

திங்கள், புதன், வெள்ளி வரும் திரு/மதி. வெண்பூ.

நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP