Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை!" - 3

"இது ஒரு கொலைக் கதை!" - 3

3.
பத்திரிகை செய்திகள் நிறையவே தீனி கொடுத்தன!

"சத்யன் ஒரு இளைஞன்.
28 வயது அவனுக்கு. முத்தெடுக்க மூழ்க அனுப்பும் ஆட்களிடமிருந்து சிப்பிகளை மொத்த விலைக்கு வாங்கி, அவற்றைத் தரம் பிரித்து, இதை வாங்குகின்ற மொத்த வியாபாரிகளுக்கு விற்கும் ஒரு இடைத் தரகன்.
செய்கின்ற வேலையைஒழுங்காகச் செய்பவன்.


சில ஆண்டுகளாகத்தான் இந்தத் தொழிலில் இருக்கிறான்.
நாணயமானவன், அதிகமாக ஆசைப்படாதவன் என்பதால், இவனை நம்பி வாங்கும் வியாபாரிகள் அதிகம்.


கொஞ்சம் வசதியாக வாழ்பவன்.

சமீபத்தில்தான், தான் காதலித்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டிருக்கிறான்.

இளம் மனைவி கலா!

இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே காலத்தை ஓட்டி வந்திருக்கிறார்கள்.

இது ஒரு இரட்டைக் கொலை!

துப்பாக்கிக் குண்டிருப்பதால், இது கொலைதான்!

கண்டு பிடிக்கப்பட்ட மண்டையோடு ஒரு ஆணுடையது.

எனவே, சத்யனைக் கொலை செய்துவிட்டு, அவர் மனைவி தன்னையும் கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்!

அல்லது இருவரையும் வேறு எவரோ கொலை செய்துவிட்டு வீட்டைத் தீக்கு இரையாக்கி இருக்க வேண்டும்!

தொழில் முறையில் ஏதேனும் தகராறா சத்யனுக்கு?

கலாவுக்கு ஏதேனும் கள்ளக்காதலா?

கள்ளக் காதலன் யார்?

போலீஸார் தீவிர விசாரணை!"
***************************************

மாநில புலனாய்வுத்துறை அதிகாரி ஜப்பார் முட்டம் வந்தார்.


"என்னை இந்த கேஸை விசாரிக்க மேலிட உத்திரவு. அதற்காக நான் உங்க உரிமை எதையும் பறிக்கப் போறதில்லை. உங்க உதவி எனக்கு மிகவுமே தேவை. நாம ஒரு குழுவா இதை விசாரிக்கலாம்னு இருக்கேன்."
ஜப்பாரின் நட்பான சொற்கள் ராஜேஷுக்கு உற்சாகம் அளித்தது.


"என்னாலான எல்லா உதவியையும் உங்களுக்கு தரச் சொல்லி எனக்கு ஆர்டர் வந்திருக்கு சார்! இது நிச்சயமா ஒரு ரெட்டைக்கொலைதான்! யார் செஞ்சிருப்பாங்கன்னு கண்டுபிடிக்கணும் சார்!" எனப் பதட்டத்துடன் சொன்னார் ராஜேஷ்.

"அதுதானே நம்ம வேலை. இதைப் பத்தின எல்லாத் தகவலையும் சொல்லுங்க" என சகஜமாகக் கேட்டார் ஜப்பார்.


"கொலையுண்ட சத்யன் [வயது 28] எந்தத் தப்புத்தண்டாவுக்கும் போகாத ஆளு. திருமணமானவர். இவரையும், இவர் மனைவி கலா [வயது 24]வையும் யாரோ துப்பாக்கியால சுட்டு கொலை பண்ணிட்டு, கொலையை மறைக்க வீட்டையே தீ வைச்சு கொளுத்தியிருக்காங்க. சம்பவம் நடந்ததுக்கு முதல் நாள்தான் சத்யன் ஒரு பெரிய வியாபாரத்தை முடிச்சு. சுமார் ஒரு 2 லட்சம் மதிப்புள்ள சிப்பிகளை விலைக்கு வாங்கி இருக்காரு. வீடு எரிஞ்சு போச்சே தவிர அவர் வண்டி அங்கே இருந்ததா எந்தவொரு அடையாளமும் இல்லை.
அவரோட காரு ஒரு ஒதுக்குப்புறமான இடத்துல இருந்திச்சு.
இப்ப, அதுல ஒண்ணும் இல்லை!


ஆனா, அவர் வாங்கின சிப்பிங்கள்லாமும் கூடவே எரிஞ்சு போச்சான்னும் தெரியலை...இல்லை யாராவது திருடினாங்களான்னும் தெரியலை.

'ரெட்டைக் கொலைன்னு எப்படி சொல்றீங்க?'

கிடைச்சது என்னமோ ஒரு பாதி எரிஞ்சுபோன மண்டையோடுதான்னாலும், மத்த எலும்புங்களை வைச்சு, இதில் ரெண்டு பேரு இறந்திருக்காங்கன்னு தெரியுது.

'இதை எப்படி ஒரு ரெட்டைக்கொலைன்னு சொல்றீங்க? ஒருவரைக் கொலை செய்துவிட்டு, ஏன் இன்னொருவர் தன்னை தற்கொலை செய்திருக்கக் கூடாது?' என தொடர்ந்து மடக்கினார் ஜப்பார்!

ஒருகணம் திகைத்த ராஜேஷ் உடனே சமாளித்துக் கொண்டு, ' அதான் சொன்னேனே சார்! அந்த 2 லட்சம் மதிப்புள்ள சிப்பிகளைக் காணும்னு! அதை வைச்சுத்தான் இதை ஒரு இரட்டைக் கொலைன்னு நினைக்கிறோம்' என்றார்!

'அது காணும்னு எப்படித் தெரியும் உங்களுக்கு?' என்று மேலும் ஒரு கொக்கி போட்டார் ஜப்பார்.

'சத்யனோட வண்டி ஒரு தனி இடத்துல இருந்திச்சு! அதுல அந்தச் சிப்பிங்க இல்லை. அதுல இருந்ததைப் பரிசோதிச்ச போது, சில தடயங்கள் கிடைச்சதை வைச்சு இதைச் சொல்றேன்' என்றார் ராஜேஷ்.

'அப்படி என்ன கிடைச்சுது? அதைச் சொல்லுங்க!' என்று ஆவலானார் ஜப்பார்.

'அதுல சில கைரேகைங்க கிடைச்சிருக்கு. அதுவுமில்லாம, இன்னொரு ட்ரக்கு அங்க இருந்ததுக்கான அடையாளமும் இருக்கு.' என்றார் ராஜேஷ்.

'அப்படீன்னா, இது யாரோ, இதைப் பத்தி நல்லா தெரிஞ்ச யாரோ செஞ்சதுதான்னு சொல்றீங்க இல்லை?' எனக் கொக்கி போட்டார் ஜப்பார்.

'இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்!' என சாமர்த்தியமாகப் பதில் சொன்னார் ராஜேஷ்.

'சரி! நாம இப்ப நம்ம அடுத்த கட்ட நடவடிக்கை பத்தி முடிவு பண்ணலாம்!' என்றபடி எழுந்தார் ஜப்பார்!

'அது என்ன?' என ஆவலுடன் கேட்டார் ராஜேஷ்.

'வழக்கம் போலத்தான்! அக்கம் பக்கம் விசாரிப்போம்! ஆங்! அந்த மண்டையோட்டுல இருந்த குண்டை பரிசோதனைக்கு அனுப்பியாச்சு இல்லை?'

'அனுப்பியாச்சு சார்! ரிப்போர்ட் சீக்கிரமே வந்திரும்' என்றார் ராஜேஷ்.

'நல்லது. நான் போய் ஓய்வு எடுக்கறேன்' என்றபடி நடந்தார் ஜப்பார்.
***************************

[தொடரும்]

2 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Sunday, July 06, 2008 11:42:00 PM  

இப்ப தான் செத்துப் போனவங்க பற்றிய விவரமே கசிந்து இருக்கு. கொலை காரனை பிடித்து தண்டனை தூக்கு வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

கொலைகாரன் சுப்பையா வாத்தியாருக்கு வேண்டியவர் என்று சொன்னாலும் விட்டுவிடாதீர்கள்.
:))))))))

VSK Sunday, July 06, 2008 11:49:00 PM  

எதற்கு ஆசானைச் சீண்டுகிறீர்கள் கோவியாரே!

கொலைகாரன் உங்களுக்கு வேண்டியவராயிருந்தாலும் தண்டனை நிச்சயம் கிடைக்கும்!:)))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP