Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை" - 10

"இது ஒரு கொலைக் கதை" - 10

முந்தையப் பதிவு

ஜப்பார் சொல்லத் தொடங்கினார்!

'சத்யன் ஒரு நேர்மையான சிப்பி வியாபாரி.


நியாயமான விலைக்கு சிப்பிங்களை வாங்கி, அதை அடுத்த வியாபாரிகிட்ட விக்கற இடைத் தரகர்.

கிடைக்கற லாபத்துல ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருந்த ஆளு.

அவரு கையில இந்த சிப்பிங்க கொத்தா கிடைச்சிருக்கு ஒருதரம்~
அது இந்தப் பசங்களுக்கும் தெரிஞ்சதுதான் அவரோட துரதிர்ஷ்டம்.


எப்படியாவது அதை அடிச்சறணும்னு திட்டம் போட்டாங்க!

வெள்ளிக்கிழமை ராத்திரி.
மூணு பேரும் நல்லா தண்ணி அடிச்சிட்டு, அவங்களோட ஓட்டை ஜீப்புல பெட்ரோல் போட்டுகிட்டு, சத்யன் வீட்டுக்குப் போறாங்க.


சத்யன் மட்டும் டி.வி பார்த்துகிட்டு இருக்காரு.

காசி, மாரி, ராசையன் மூணு பேரும் சத்தம் போடாம உள்ளே நுழைஞ்சு, சத்யனை மடக்கறாங்க.

சிப்பி எங்கேன்னு மிரட்டறாங்க!

தன்கிட்ட அப்படி எதுவும் இல்லைன்னு சத்யன் சொல்றாரு.

பொய் சொல்லாதே! எனச் சொல்லி சத்யனை அடிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

சத்யனின் அலறல் சத்தம் கேட்டு மாடியில் இருந்த கலா கீழே இறங்கி வந்திருக்கிறார்.

என்னவெனத் தெரிந்ததும், தடுக்க முயற்சித்திருக்கிறார்.

அப்போதுதான், ஆத்திரத்தில் அறிவிழந்த மாரி இருவரையும் காசியின் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளி இருக்கிறான்.


நிலைமை மோசமாகிப் போனதை உணர்ந்த மற்ற இருவரும் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி வீட்டை எரித்துவிட்டுத் தப்பித்து விடலாம் என ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார்கள்.

தடயங்கள் எல்லாம் அழிந்துவிடும் என நம்பினார்கள்.


ராஜேஷின் காரில் இருந்த சிப்பிகளைக் கைப்பற்றி அதை முத்தண்ணனிடமும் விற்றிருக்கிறார்கள்.


குற்றத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை, காசி கடலில் சென்றபோது வீசி எறிந்திருக்கலாம்.

இன்னும் சரியா, விசாரிக்கற விதத்துல விசாரிச்சா, அதுவும் தெரியவரும்!

மாரியோட காதலி மட்டும், அந்தத் துப்பாக்கி குண்டு பதிஞ்ச மரத்தைப் பத்தி சொல்லலைன்னா, இவங்களை இதுல சம்பந்தப் படுத்தி இருக்கவே முடியாது.

அதே மாரி, சொர்ணத்தம்மாவோட தோழியும் உண்மையைச் சொன்னது நல்லதாப் போச்சு.

இப்படித்தான்! எவ்வளவோ கவனமா இருக்கறதா நினைச்சு செஞ்சாலும், எங்கியாவது ஒரு சின்ன விஷயத்துல கோட்டை விட்டுட்டு மாட்டிப்பாங்க. மாரி மட்டும் தன் ஆளுகிட்ட பந்தா பண்றதுக்காக தோட்டா வீசிக் காமிக்கலைன்னா இந்த சாட்சியம் கிடைச்சிருக்காது நமக்கு!

சரி, இப்ப போயி அந்த மூணு பேரையும் பிடிச்சுகிட்டு வாங்க' எனச் சொல்லிச் சிரித்தார் ராஜேஷ்.


'அதுக்கு முன்னாடி, இதெல்லாம் எப்படி இவ்ளோ சரியாச் சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா' என்றார் பொன்னுசாமி.

ரொம்ப ஈஸிங்க! அதான் முன்னாடியே சொன்னேனே! கார் டயர் அடையாளம், பெட்ரோல் பங்க்காரர் சொன்னது, முத்தண்ணன் வாக்குமூலம், ரோஸி, சொர்ணத்தம்மா சொன்னது, அந்த குண்டு அடையாளம் இதை வைச்சு நான் அனுமானிக்கறது இது! சரி போங்க! கொண்டு வாங்க அவங்களை' என்றார் ஜப்பார்
************

மாரி தப்பிச்சுட்டானுங்கய்யா! அவன் மேலத்தான் கொலைப்பழி விழும்னு ஆரோ சொல்லியிருக்காங்க போல. பட்சி பறந்திடுச்சு.' என வந்தார் பொன்னுசாமி.

'தேடுங்க! நல்லாத் தேடிப் பிடிங்க. மாரி இல்லாம இந்தக் கேஸு ஜெயிக்காது. அவந்தான் சுட்டான்றதை நிரூபிச்சாத்தான் மத்தவங்க இதுக்கு உடந்தையா இருந்தாங்கன்னு காட்ட முடியும். ' எனப் பரபரத்தார்.

பதினெட்டு மாதம் சென்று, திருவனந்தபுரத்தில், ஒரு லாட்ஜில் மாரி கைது செய்யப்பட்டான்.

மரியதாஸ் எனப் பெயர்மாற்றம் செய்துகொண்டு, ஒரு கார் மெக்கானிக்காக இருந்திருக்கிறான் இத்தனைக் காலம்!

வழக்கு நடந்து மூவரும் குற்றவாளிகள் என சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், குற்றமிழைத்த ஆயுதம் கிடைக்காததனால், மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
********************

[இது ஒரு உண்மைக்கதை. கருவை எடுத்துக் கொண்டு நம் நடையில் எழுத முயற்சித்திருக்கிறேன். நன்றி ட்ரூ டி.வி. விரைவில் அடுத்த கதையுடன் சந்திக்கிறேன்!]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP