Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை" - 8

"இது ஒரு கொலைக் கதை" - 8

'எலே! காசி! உன்னோட துப்பாக்கியை எடுத்துகிட்டு ஐயா உடனே வந்து பாக்கச் சொன்னாரு!'

'எந்த ஐயா? எந்த துப்பாக்கி?' என்றான் காசி.

'தோ பாரு! சும்மா விளையாடாதே! இப்ப வந்திருக்கற அதிகாரி ஒண்ணும் சாதாரண ஆளுல்ல. ரொம்பவே குடையறாரு. ஒன் பேருல ஒரு துப்பாக்கி பதிஞ்சிருக்கு. அது எங்க இருக்குன்னு சொல்லு, போதும். இல்லேன்னா உன் கதை அவ்ளோதான்' என்றார் 612 என்கின்ற பொன்னுசாமி.

'துப்பாக்கியா? என்கிட்டயா? இருந்துது சாமி ஒரு காலத்துல. அது இப்ப என்கிட்ட இல்லை' என்றான் காசி.

'அப்படீன்னா, உன் கதை கந்தல்தான்! என்ன ஆச்சுன்னு விலாவாரியா சொல்லு' என்றார் பொன்னுசாமி.

'அது எங்ககிட்ட இருந்ததென்னவோ உண்மைதான். அது ஒரு ஆறு மாசத்துக்கு முந்தி கைதவறி கடல்ல விழுந்திடுச்சு. இப்ப அது என்கிட்ட இல்லை. இதான் உண்மை. நம்புங்க.' என்றான் காசி சிரித்தபடியே!

'அப்படீன்ற! சரி. அப்ப ஏன் அதை உடனே ஸ்டேஷன்ல வந்து ஒரு புகாராக் கொடுக்கலை? ' என மடக்கினார் பொன்னுசாமி.


'அப்படீங்களா? அப்படிச் செய்யணும்னு எனக்குத் தெரியாதுங்களே! வைச்சிருந்தாத்தான் சொல்லணும். இல்லேன்னாலும் சொல்லணுமா?' என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் காசி.

'என்னமோசொல்றே! இது ஒண்ணும் நல்லதாப் படலை. ஜாக்கிறதைப்பா! போலீஸ் விசாரிப்பெல்லாம் வேற மாதிரி இருக்கும். இப்ப நான் வந்து தன்மையாக் கேட்ட மாரி இருக்காது.சரி, நான் வர்றேன்' என எழுந்தார் பொன்னுசாமி.

'சரீங்க ஐயா! எப்ப வேணும்னாலும் வாங்க! என்னாலானதை செய்யறேன். இப்பல்லாம் நான் ரொம்ப திருந்திட்டேங்க' என வழியனுப்பி வைத்தான் காசி.

'போறதுக்கு முந்தி ஒரு கேள்வி. போன வெள்ளிக்கிழமை ராத்திரி எங்க இருந்தே நீ' என்றார் பொன்னுசாமி.

'அதான் பசங்க சொல்லிட்டாங்களே! எங்க அம்மா வூட்டுக்குத்தான் போயிருந்தோம்' எனச் சிரித்தான் காசி.

'நெனைச்சேன்! இதான் சொல்லுவேன்னு! சரி. நான் வரேன்' எனச் சிரித்தவாறு கிளம்பினார்.
************

'துப்பாக்கியும் இல்லை. இவங்க சொல்றதையும் ஒதுக்க முடியலை. இப்ப என்ன பண்றது?' என்றார் ராஜேஷ்.

'இந்தப் பசங்களைப் பத்தி இன்னும் எதாவது தீவிரமா விசாரிக்கணும்' என்றார் ஜப்பார்.

'என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் புரியலியே?' என வினவினார் ராஜேஷ்.

'இவங்களுக்குத் தெரிஞ்சவங்க இவங்களைப் பத்தி என்ன சொல்றாங்கன்னு விசாரிங்க ராஜேஷ்' என நகர்ந்தார் ஜப்பார்.
**************

'உன் பேரு என்னம்மா?' என்றார் ராஜேஷ்.

'ரோஸிங்க' என ஒருவிதப் பயத்துடன் சொன்னாள் அந்தப் பெண்.

கருப்பானாலும் நல்ல களையான முகம்!

இளம் பெண்! வாலிபம் தவழ்ந்தோடியது அவளிடம்!

வாயில் புடவையிலும் இளமையின் எழில் துள்ளிக் குதித்தது.

'மாரியை உனக்கு எவ்வளவு நாளாத் தெரியும்?' என அதட்டினார் ராஜேஷ்.

'இப்பத்தாங்க. ஒரு ரெண்டு வருஷமா' எனத் தயங்கியபடியே சொன்னாள் ரோஸி.


'ரொம்பவே பழகிட்டீங்களோ?' எனக் கேட்டதும் பதறினாள் ரோஸி.

'என்னங்கையா சொல்றீங்க. எதுக்கு இப்படியெல்லாம் கேக்கறீங்க' என ஒரு கண்டிப்புடன் கேட்டாள்.

'சரி. நேரடியா விஷயத்துக்கு வர்றேன். உங்க மாரி எதுனாச்சும் துப்பாக்கி வைச்சுப் பார்த்திருக்கியா?' என்றார்.

'துப்பாக்கியா? ஆமாங்க! அப்பப்ப என்கூட இருக்கறப்ப, ஒரு துப்பாக்கியைக் காமிச்சிருக்காருங்க. சில சமயம் சுட்டுக்கூட காமிச்சிருக்காருங்க, என்னை... என்னை விட்டுருவீங்கதானே!' என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்தார் ராஜேஷ்.

'எங்கே? எங்கே சுட்டுக் காமிச்சான்' என ஆவலுடன் கேட்டார்.

'தோப்புலதானுங்க. ஒரு மரத்துல கூட சுட்டுக் காமிச்ச தடயம் இருக்குங்க' என வெள்ளந்தியாகச் சொன்னாள் ரோஸி.

'எந்த மரம்? காட்டு அதை' என இன்னமும் தீவிரமானார் ராஜேஷ்.

'காட்டறேன் சாமி. அதுக்கப்புறம் என்னை விட்டுருவீங்கதானே? நான் ஒரு அறியாப் பொண்ணுங்க!' என்றவாறே அவரை அழைத்துச் சென்று ஒரு தென்னை மரத்தைக் காட்டினாள் ரோஸி.

என்ன ஆச்சரியம்!

ஒரு குண்டு அதில் பாய்ந்திருந்தது தெரிந்தது!

மிக மிகக் கவனமாக அந்தக் குண்டு தோண்டி எடுக்கப் பட்டது.

பரிசோதனைக்கு அதை அனுப்பி வைத்தார்.

ஜப்பாரிடம் சொன்னபோது மிகவும் பாராட்டினார்.


'இந்தக் கேஸ் முடிஞ்சதும் உங்களுக்கு ப்ரமோஷன் காத்திருக்கு'
*****************************

[தொடரும்]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP