Wednesday, April 09, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]



மறுநாள் மாலை!

டேவிட் வீட்டில் இல்லை.

பதறுகிறாள் க்ளாரா!

தனது வளர்ப்பு மகள் லிண்டாவையும் கூட்டிக் கொண்டு தனது பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள்.

அந்தப் பகுதியில் இருக்கும் சில பெரிய உணவு விடுதிகளைத் தேடிச் செல்கிறாள்.

எங்கும் டேவிட்டின் காரைக் காணவில்லை!

பதட்டம் அதிகமாகிறது க்ளாராவுக்கு!

அப்போது, பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ஓட்டல் கண்ணில் பட்டது!

ஹில்டன் இன்டெர்நேஷனல்!

அவளுக்குத் திருமணம் டேவிட்டுக்கு நிகழ்ந்ததும் இதற்கு அடுத்த ஒரு இடத்தில்தான்!

ஏதோ ஒரு உணர்வு உந்த, அங்கு செல்கிறாள்.

வண்டிகளை நிறுத்தும் இடத்தில்,[Parking Lot] டேவிட்டின் கார் இருப்பதைப் பார்க்கிறாள்!

சற்றுத் தள்ளி தன் காரை நிறுத்திவிட்டு, தன் பெண் லிண்டாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே விரைகிறாள்!

வரவேற்பில் விசாரிக்கிறாள்.

டேவிட்-லோரா பெயரில் எவரும் பதிவில்லை என்ற தகவல் வருகிறது.

க்ளாராவுக்குத் திருப்தி இல்லை.

லிண்டாவைக் கூப்பிட்டு தன் தந்தைக்கு ஒரு தொலைபேசச் சொல்கிறாள்.

லிண்டாவும் அப்படியே செய்து, தனது தம்பிகளில் ஒருவனுக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு பொய்யைச் சொல்கிறாள்.

அடுத்த 3 நிமிடங்களில் ..........பதட்டத்துடன் 'தானியங்கி ஏற்றுமிடத்தில்[elevator] இருந்து டேவிட் வெளியே வருகிறான்... அந்த ஓட்டலில் இருந்து!

கூடவே கைகளைப் பிடித்தபடி லோரா!~

அவள் கண்களில் கண்ணீர்!

தன் சந்தேகம் உறுதியாகிவிட்டது எனும் நினைப்பில், க்ளாரா ஆத்திரத்துடன் இருவர் மீதும் பாய்கிறாள்.

லோரா தாக்குதலில் அடிபட்டு கீழே விழுகிறாள்.

டேவிட்டுக்கும் சரியான அடி!

இதுவெதையும் சற்றும் எதிபார்க்காத லிண்டா, "நான் உன்னை வெறுக்கிறேன்" அம்மாவை நோக்கிக் கத்தியபடியே, இருவரையும் தாக்குதலில் இருந்து தடுக்க முனைகிறாள்.

சமாளித்துக் கொண்டு எழுந்த டேவிட்,"பொதுவிடத்தில் சொன்னால் அவள் எப்படி இதை எதிர்கொள்வாளோ எனவெண்ணி ஒரு தனியறையில் இதைச் சொல்லிவிட்டு, இப்போதுதான் கிளம்பிக்கொண்டிருந்தேன். அதற்குள் இப்படி அவசரப் பட்டுவிட்டாயே!" என வெறுப்புடன் சொல்லிவிட்டு, அடிபட்டு விழுந்ந்திருந்த லோராவை எழுப்பி, அவளை அவளது காருக்கு கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறான்.

அவசர அவசரமாக, லிண்டாவை அழைத்துக் கொண்டு, க்ளாராவும் தன் காருக்கு விரைகிறாள்.

லோராவை அவள் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு, டேவிட் தன் காரை நோக்கி நடக்கிறான்.

க்ளாராவின் பென்ஸ் கார் விரைந்து வந்து அவனைத் தாக்குகிறது!

அவன் மேல் முழுதுமாக ஏறி அவனைத் தாண்டிச் சென்று, நின்று, அவனை 3-4 முறை சுற்றிச் சுற்றி வருகிறது.

அவனது துடிப்பு முழுதுமாக அடங்கிய பின்னர், க்ளாரா இறங்கி வருகிறாள்.

'நீ எனக்கு இல்லையெனில் எவருக்குமே இல்லை' எனச் சொல்லி மீண்டும் காருக்குத் திரும்புகிறாள்.

இதற்குள், நடந்த செய்தி காவல்துறைக்குச் சென்று, அவர்கள் வந்து க்ளாராவைக் கைது செய்கிறார்கள்.

வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.

டேவிட்டின் பெற்றோர்கள், தங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஒரு தாயும் இல்லாமல் போகக் கூடாதே என அஞ்சி, அவள் மேல் வழக்கு தொடுக்க மறுத்துவிட்டார்கள்.

இப்போது, இது ஒரு அரசு வழக்கு.

யாரும் துணையில்லை அவர்களுக்கு.

ஆனால், கண்முன்னே ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது!

4,500 பவுண்டு எடையுள்ள ஒரு சாதனத்தைக் கொண்டு டேவிட்டைக் கொலை செய்ததாக க்ளாரா மீது வழக்கு பதிவு செய்யப் படுகிறது!

[தொடரும்]

5 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Wednesday, April 09, 2008 10:22:00 PM  

அச்சச்சோ என்ன இப்படி ஆச்சு :(

VSK Wednesday, April 09, 2008 11:09:00 PM  

ஆமாங்க கோவியாரே!

அப்படித்தான் ஆச்சு!

வடுவூர் குமார் Thursday, April 10, 2008 1:07:00 AM  

அவசரம்.. அவசரம்..
அவசர புத்தியோ??

குமரன் (Kumaran) Friday, May 02, 2008 8:05:00 PM  

வாவ். எதிர்பார்த்தமாதிரியே நடந்துருச்சே. முந்தியே க்ளூ கொடுத்திருந்தீங்கள்ல?

VSK Friday, May 02, 2008 11:17:00 PM  

ஆமாங்க குமரன்!
சரியாப் பிடிச்சுட்டீங்களே

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP