Monday, March 12, 2007

"திருமுருகாற்றுப்படை"

"திருமுருகாற்றுப்படை" - நக்கீரர் அருளியது!

ஜி.ரா. எழுதிய பதிவைப் படித்ததும் இல்லம் சென்று என்னிடம் இருக்கும் திருமுருகாற்றுப்படை நூலைப் புரட்டினேன்.

நா. சந்திரசேகரன் என்பவர் திறம்பட எழுதிய நூல் இது.

கங்கை புத்தக நிலையம், வானதி பதிப்பகத்தின் துணையோடு வெளியிட்ட நூல்.

இதில் தெய்வயானை பற்றிய குறிப்புகள் கீழே!

வரி6. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்":

குற்றமில்லாத அ[ற]க்கற்பையுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்.

வரி 175-176. "தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்":

இடையீடில்லாத அருட்கற்பினது கோட்பாட்டையுடைய தெய்வயானையாருடனே சின்னாள்[சித்தன் வாழ்வென்னும்] ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே தங்குதலும் உரியன்.

வரி 216. "மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத் தந்து":

மெல்லிய தோள்களையுடைய பலவாகிய மான்பிணைகள் போலும் மெய்தீண்டி விளையாடுதற்குரிய "தெய்வமகளிரோடு" தழுவிக்கொண்டு அவர்கள் களவறிந்து அவர்கட்கு இருப்பிடம் கொடுத்து....

இது தவிர 'வள்ளி' பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது.
வரி 100-102. "ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"

ஆறுமுகங்களிலே ஒரு முகம் வள்ளியொடு மகிழ்ச்சி பொருந்த இயைந்தாலும், எனச் சொல்லி,

அடுத்து வரும் வரிகளில், பன்னிரு கைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்,

[வரி 116-117]"ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட"

எனச் சொல்லி,

ஒரு கையானது தேவருலகத்தில் தேவமகளிராகிய தெய்வயானையர்க்கு மணமாலையைப் புனைய எனவும் உடன் வருகிறது.

இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.

வாரியார் ஸ்வாமிகள் சொல்லுவது போல,

இகம் வள்ளி,
பரம் தெய்வயானை.
முகம் வள்ளியைப் பார்க்க, கைகள் தெய்வானைக்கு மணமாலை சூடுகிறது.
இகபர விநோதன் அவன் என உணரலாம்.

அடுத்து, வரி 264-ல்,"மங்கையர் கணவ"

தெய்வயானையார்க்கும், வள்ளி நாய்ச்சியாருக்கும் கணவனே!

என்னும் பொருள்படவும் பாடுகிறார்.

திருமுருகாற்றுப்படை என்ன சொல்கிறது?

பாணன் ஒருவன் பரிசில் பெற்று வருகிறான்.
அவனை எதிர்கொள்லும் இன்னொரு பாணன் விவரம் கேட்கிறான், ... 'எவரிடமிருந்து இப்பரிசில் பெற்றாய்?'.... என.

அவனுக்கு மறுமொழியிடும் வண்னமாக முதல் பாணன் உரைக்கிறான்.

"இத்தன்மையெனச் சொல்லப்படவொண்ணா ஒளியையும்[3],

தாளையும்[4],

கையையும் [5], உடையனாகித்

தெய்வயானைக்குக் கணவனாகி[6],

மாலை அசையும் மார்பனாகிக்[11],

காந்தள் மாலையைச் சூடிய திருமுடியை உடையனாகிய[44],

சேயினது திருவடியிலே செல்ல வேணும் என்கிற மனத்தோடு[62],

அவன் தங்குமிடத்துக்கு[[63],

வழியை விரும்பினையாகில்[64],

உன்னுடைய ஆசைப்படியே[65],

இப்போது பெறுவாய் நீ நினைகருமம்[66],

இதற்கு அவன் உறையும் இடம் திருப்பரங்குன்றிலே அமர்ந்திருத்தலும் உரியன்[77],

அதுவன்றி அலைவாயெனும் திருச்செந்தூரிலெ எழுந்தருளுதலும் நிலையுடைய குணம்[125],

அதுவன்றி, ஆவினன்குடியிலே தங்குதலும் உரியன்[176],

அதுவன்றி ஏரகத்துறைதலும் உரியன்[189],

அதுவன்றி, மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் நிலைபெற்ற குணம்[217],

அதுவன்றி, விழாவின் கண்ணும்[220],

அன்பர் ஏத்தப் பொருந்தும் இடங்களிலும்[221],

வெறியாடும் இடங்களிலும்[222],

காடும், சோலையும் முதலாகச் சொல்லப்பட்ட அவ்விடங்களீலும் உறைதற்குரியன்[249],

இம்முறையாக யான் அறிந்த வழி: அவ்விடங்களிலே ஆயினுமாக, பிற இடங்களிலே ஆயினுமாக[250],

முற்படக் கண்ட போதே முகமலர்ந்து துதித்துப் பரவி வாழ்த்தி வணங்கி[252],

ஆறு வடிவைப் பொருந்திய செல்வனே![255],

கல்லாலின் கீழ் இருந்த கடவுள் புதல்வனே![256],

என்று துடங்கிக் குரிசில் அளவாக[276],

நினக்குக் கூறிய அளவால் ஏத்தி ஒழியாதே துதித்து[277],

நின் திருவடியைப் பெறவேணும் என்று கருதி வந்தேன் என்று நீ கருதிய அதனைச் சொல்வதன் முன்னே[281],

பிள்ளையாரைச் சேவித்து நிற்பவர் தோன்றி[283],

அறிவு முதிர்ந்த வாயையுடைய புலவன் வந்தான் நின் புகழைக் கேட்ட்டு என்று கூற[285],

தெய்வத்தன்மையால் நின்ற நிலைமை உள்ளடக்கித் தனது இணைய அழகைக் காட்டி[290],

"அஞ்சவேண்டாம் புலவரே[291],

நின் வரவு யாம் அறிந்தோம்" என்று அன்புடனே நல்வார்த்தை அருளிச் செய்து[292],

உலகத்தில் நீ ஒப்பிடமுடியாத அளவுக்கு வீட்டின்பத்தைத் தருவான்[295],

அருவியையும் சோலைகளையும் உடைய மலைக்குரியோன்[317],

என்று எதிர் வந்த பாணனுக்கு உரைத்தான் இவன்.

முருகனிடத்திலே செல்ல வழிப்படுத்துதலே திருமுருகாற்றுப்படை!
[நன்றி: திரு. நா.சந்திரசேகரன்]


"யாமோதிய கல்வி அவன் தந்தது" அவன் புகழ் பாடவே!

முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, March 08, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16--சரவணஜாதா நமோ நம

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.


[பொருள்]

{முன் பார்த்து பின் பார்க்கலாம்!}


"இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற"

புழுதி பறந்தது ஆதவனின் மண்டலம் தனிலும்,
விண்வெளியெங்கிலும், மண்ணுலகம்தனிலும்
மூவுலகும் மறைந்தது புழுதியின் மிகுதியால்


"வானவர் எவர்களும் ஈடேற ஏழ்கடல் முறையோ என்று
அடர் பட"


புழுதியின் துகள் எழக் கண்டு வானவரும்
பொழுதினி ந்ன்கினி நமக்கே விடிந்ததென
வானவரும் மகிழ்வுடனே கூத்தாடி களிகூற
ஏழுகடல்களும் குய்யோ முறையோவென
கூக்குரலிட்டுக் கதறிக் கதறி வருந்திட


"மாமேரு பூதரம் இடிபடவேதான் நிசாசரர்
இகல் கெட"

மலைகளிலே பெருமலையாம் மாமேரு மலையும்
தன்நிலை மறைந்து துகளாகி இடிபடவும்,
எவருக்கும் பயமின்றி இரவிலே உலவுகின்ற
இராக்கதரும் தம்நிலை மறந்து ஒழிந்திடவும்


"மா வேக நீடு அயில் விடுவோனே"

இத்துணை இயல்புகளும் இவ்வாறு நிகழ்ந்திடவே
செயுமாறு தன் வீரவேலை விட்டெறிந்த வேலாயுதரே!

"மரகத ஆகார ஆயனும், இரணிய ஆகார வேதனும்,
வசு எனும் ஆகார ஈசனும், அடிபேண"


பச்சை நிறம் கொண்ட ஆயர் குலத்துதித்த
'மச்சாவதார மால்எனும் திருமாலும்,
பொன்னிறம் கொண்ட மறைகளின் தலைவனாம்
பிரமனெனும் படைப்புக் கடவுளும்,
நெருப்பு நிறம் கொண்ட சிவந்த வண்னமுடை
உருத்திரன் என்னும் உக்கிர மூர்த்தியும்,
அனைத்துக்கும் முதலான, அனைத்தையும் ஆளுவிக்கும்
உனது திருவடியை விரும்பி வணங்கிடவும்,

"மயில் உறை வாழ்வே"

அழகிய மயிலினை வாகனமய்க்
கொண்டுவரும் என் இறைவனே!

"விநாயக மலை உறை வேலா"

திருப்பத்தூருக்குக் கிழக்கே
ஐந்து மைல் தள்ளி அழகுடனே
பிள்ளையார்பட்டியெனும் விநாயகர்மலையினில்
விருப்புடன் அமர்ந்திருக்கும் வேலாயுதரே!

"மகீதர வனசரர் ஆதாரம் ஆகிய பெருமாளே!"

மலையும் மலை சார்ந்த இடமாகும்
குறிஞ்சி யெனும் காட்டில் வாழ்கின்ற
வேடருக்கு ஆதாரமாகிய பெருமைக்கு
என்றென்றும் உரியவரான பெரியவரே!

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!


"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!

"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!


"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!

"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!


அருஞ்சொற்பொருள்:
ஜாதா -- தோன்றியவரே
அதீதா -- கடந்து நின்ற பொருளே
சததளபாதா -- நூறு இதழ்த் தாமரை போலும் பாதங்கள் உடையவரே
அபிராம -- பேரழகு
தருண -- இளமை
நிருப அமர் -- தலைமை தங்கிய
பூபா -- தலைவரே
பகவதி -- ஐஸ்வர்யம், வீர்யம், புகழ், திர்ரு, ஞானம், வைராக்யம் எனும் ஆறு குணமுடையவர்
விரவிய -- மறையுமாறு
பூதரம் -- மிகப் பெரிய
நிசாசரர் -- இரவில் உலவும் இராக்கதர்
அயில் -- வேலாயுதம்ம்
ஆகார -- நிறமுடைய
இரணிய -- பொன்னிறம்
மகீதர -- மலைகளுடன்கூடிய
வனசரர்- வனத்தில் உறையும் வேடர்

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!



Read more...

Wednesday, March 07, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.

[பொருள்]

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!

"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!


"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!

"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!


"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!

[இன்னும் வரும்!]

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

Wednesday, February 28, 2007

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! 11

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! [11]
"படைச் செருக்கு" [771]


இந்த லப்-டப் எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தேன்... இப்பவெல்லாம் மன்னாரைப் போய் பார்க்கவே நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது!

இன்றைக்கு எப்படியாவது பார்த்துடணும்னு முடிவு பண்னி, அவனைத் தேடி 23B பஸ் பிடித்து லஸ் கார்னரில் இறங்கி, சூடான வேர்க்கடலை ஒரு 2 ரூபாய்க்கு வாங்கி, கொரித்துக் கொண்டே வழக்கமான டீக்கடை நோக்கி நடந்தேன்.

திடீரென ஒரு கரம் என்னை இழுத்து ப்ளாட்ஃபாரத்தில் தள்ளியது.
அதே நேரம், "ஸர்"ரென்று ஒரு பஸ் என்னைத் தாண்டிச் சென்றது!

"இன்னாப்பா! வூட்ல சொல்லிக்கினு வண்ட்டியா? என் பஸ்தானா ஒனக்குக் கெடச்சது அதுக்கு.... சாவுக்கிராக்கி" என்ற மாமூல் திட்டுடன் டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

சற்று சுதாரித்துக் கொண்டு யார் நம்மைக் காப்பாற்றியது எனப் பார்த்தால்... சாக்ஷாத் மயிலை மன்னார்!

"ஒரு ஸெகண்டு வுட்ருந்தா இன்னா ஆயிருக்கும்! பாத்து வரக்கூடாது ஸங்கரு! ஸரி ஸரி.. வா! கெதி கலங்கிப் போயிருக்கே! நாயர் கடைல டீயும், வடையும் துன்னியானா அல்லாம் ஸரியாப் பூடும்" என ஆதரவாய்ச் சொல்லிக் கொண்டே என்னைக் கூட்டிப் போனான், மன்னார்.

'ஆமா! அப்டி இன்னா தல போற விசயம் யோஸிச்சிகினு இருந்தே! சொல்லு!' என்றான்.

'ஒண்ணுமில்லேப்பா! உன்னைப் பர்த்து நாளாகி விட்டதே. இன்று எப்படியும் பார்த்து விடணும்னு வந்தேன். கொஞ்சம் அஸால்ட்டா இருந்துட்டேன். ரொம்ப நன்றிப்பா!' என்று மஸால் வடையை கடித்துக் கொண்டே ஸொன்னேன்!

'அதான் நாம ஒனக்கு ஒரு ஸோல்ஜர் மாரி இருக்கோம்ல! எங்ஙன போனாலும் வுட்ட்ருவோமா? சமயத்துல ஸோல்ஜர்! ஆனா நெஸமாலும் ராஸா!' என்று சற்று மிதர்ப்பாக சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்.

இப்படி ஒரு ஆளு எனக்கு நண்பனாய் இருப்பதற்கு, இல்லை இல்லை ராஜாவாய் இருப்பதற்கு, இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே, 'இதே மேட்டர்ல ஒரு குறள் சொல்லி பொருளும் சொல்லேன்' என்றேன் நான்.

'அவ்ளோதானே! என்னிய மாரி ஒர்த்தன் ஒனக்கு இருக்கான்றதை நீ எப்படி போயி மத்தவங்ககிட்ட சொல்லுவேன்னு ஒரு குறள்..... வேணாம்... கதை ஒண்ணு சொல்றேன், எளுதிக்கோ!" என்றான்.


இனி வருவது, அவன் சொல்ல, நான் எழுதி உங்கள் முன் வைப்பது!

"அதியமான், அதியமான்னு ஒரு ராஸா இருந்தானே, தெர்யுமா? அதாம்ப்பா! நம்ம அவ்வைப்பாட்டிக்கு கூட நெல்லிக்கா கொடுத்தன்னு படிச்சோமே நம்ம இஸ்கூல்ல! அவந்தான்!

அவனும், இந்த அவ்வையாரும் ரொம்பவே தோஸ்துங்க. நீயும், நானும் மாரின்னு வெச்சுக்கயேன்!

எதுனாச்சும் ஒண்ணுன்னா, இவன் அந்தம்மாவுக்கு ஒதவி பண்றதும், அவனுக்கு எதுனாச்சும் புத்தி சொல்லணும்னா இந்தம்மாவைக் கேக்கறதும், அவங்க அத்தினி வேலையையும் போட்டுட்டு வந்து இவனுக்கு அட்வைஸ் கொடுக்கறதும் .... அப்படியே ரொம்ம்ம்ம்ப ஃப்ரென்ட்ஷிப்பா இருந்தாங்க.

இந்தம்மா அவனோட வீரத்தைப் பத்தில்லாம் நெறையவே பாட்டெல்லாம் பாடியிருக்கு!

ஒருநாளைக்கு அடுத்த ஊர்ல இருக்கற, தொண்டமான்ங்ற ராஸா ஒர்த்தன்.. இன்னாமோ இவன்ட்ட கோவிச்சுகிட்டு, பலான பலான தேதிக்கு நான் ஒன் நாட்டு மேல படையெடுக்கப் போறேன். ஒன்னால ஆனத செஞ்சிக்கோன்னு ஒரு ஓலை வுட்டான்.

அதியமானும், வலுச்சண்டைக்கு போறதில்லை; வந்த சண்டைய வுடறதில்லன்னு சண்டைக்கு ரெடியாயிட்டு இருக்கான்!

ஆனாக்காண்டி, நாட்டுல கொஞ்சம் நெலமை மோசமாயிருந்திச்சு அப்ப.

கொஞ்சம் பஞ்சம்,
மக்கள்ல்லாம் பசி, பட்டினின்னு பஞ்சம் பொளைக்கப் போயிருக்காங்க!

இந்த சமயத்துல, சண்டை வேணாமேன்னு அவ்வையாரம்மா நெனைக்கறாங்க.

"தா! நீ கொஞ்சம் கம்முனு இரு. ஒன் வீரம்ல்லாம் எனக்குத் தெரியும் நல்லாவே! ஆனா, அது இப்ப வேணாம்! நா போயி இன்னா, ஏதுன்னு கண்டுகினு வரேன்'ன்னு சொல்லிட்டு தொண்டமான் ஊருக்கு வராங்க!

'ஆஹா! எப்பவும் நம்ம ஊருக்கு வராத கெளவி இப்ப நம்மைத் தேடி வந்திருக்காங்களே'ன்னு ராஸாவுக்கு ஒரே குஷியாப் பூடுச்சு!

தடபொடலா விருந்து வைக்கிறான்!

ராஸான்னா, அவனைப் பத்தி எதுனாச்சும் பாடணுமே!

'இன்னாடா பாடறது. நம்ம ஆளை வுட்டுக் கொடுக்காம நாம இவனைப் புகழ்ந்தும் பாடணுமே'ன்னு யோசிக்கறாங்க!

அப்ப, இந்த ராஸா இன்னா பண்றான்; ....அவனோட கத்தி கபடால்லாம் வெச்சிருக்கற எடத்துக்கு கூட்டிகினு போயி காமிக்கறான்.

'பாட்டியும் பாக்கட்டும், பார்த்தா, போயி, அதியமான்ட்ட சண்டை இல்லாம பணிஞ்சுறச் சொல்லிடும் இந்த அம்மா'ன்னு ஒரு கணக்கு போடறான்.

அங்க பாத்தா, வேலு, வில்லு, அம்பு, கத்தி, கேடயம், ஈட்டின்னு அளகா அடுக்கி வெச்சிருக்கு.

பாட்டிக்கு டமார்னு ஒரு ஐடியா கிடைக்குது!
பாடறாங்க!

"இங்கே பார்த்தா, மாலை சூட்டி, பொட்டு வெச்சு, எண்ணை தடவி, சும்மா பளபளான்னு பட்டை தீட்டி, புச்சா, இத்தினி அடுக்கி வெச்சிருக்கே ராஸாவே!

ஆனா, அங்கே அதியமான்ட்ட போயி பார்த்தியானா, சதா சண்டை போட்டு, சண்டை போட்டு, அவன் கத்தில்லாம் ஒடஞ்சி போயி, ஈட்டில்லாம் முறிஞ்சி போயி, காயலான் கடைல கீற மாரி குமிஞ்சு கெடக்கு.

இதுலேர்ந்து இன்னா தெரியுதுன்னா, சண்டைன்னா அவன் ஒரு கை பாக்காம வுட மாட்டான்.

ஆனா, ஒர்த்தன் கிட்ட ஒண்ணும் இல்லியா அவனோட சேர்ந்து போயி இவன், தன் சோத்தையும் வெச்சு அவனோட சாப்பிடுவான்!

ஆகக்கண்டி,....இன்னா....உன் வேலெல்லாம் பிரமாதமாத்தான் இருக்கு"

அப்பிடீன்னு ஒரு பாட்டு பாடறாங்க!

அவ்ளோதான்!

ராஸாவுக்கு புரிஞ்சிடுது!

இப்ப மாரி அடுத்தவன் அசந்திருக்கற நேரம் பர்த்து அடிக்கற எனம் இல்லை தமிளினம்!

ஒனக்கு சரிசமானமா இருக்கறவனோட மட்டுமே சண்டை போடணும்னு தெரிஞ்சு வெச்ச எனம் நம்முளுது!

'இவுஹ சொன்னதுலேர்ந்து, அங்கே நெலமை சரியில்லை; இப்ப நாம சண்டை போடக்கூடாது'ன்னு தொண்டமானும் அப்போதிக்கு நிப்பாட்டிர்றானாம் சண்டைய!

இதுல வள்ளுவரு எங்கே வராருன்னு கேக்கிறியா!?

அவரும் இந்த அம்மா காலத்துல இருந்தவர்தானே!

அவருக்கும் இது தெரிய வருது!

அவரு இதை ஒரு குறள்ல சொல்லணும்னு நெனைக்கறாரு!

"படைச்செருக்கு"ன்னு ஒரு அதிகாரம் எளுதறாரு!

அதுல மொதக் குறளா இதை வைக்கறாரு!

"என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலர் என்னை
முன் நின்று கல்நின் றவர்." [771]

"ஏ எதிரிங்களே! என் தலைவன் முன்னே நின்னு, போர் செஞ்சு, மடிஞ்சு, அவனவனுக்குக் ஸமாதி கட்டிகிட்டவங்க பல பேரு!
ஆனதுனால, என் தலைவன் முன்னே நிக்காதீங்க!"

அப்படீன்னு அம்ஸமா ஒரு குறளு, அதுவும் இது எங்கினாச்சும் நமக்கு மறந்து பூடுமோன்னு நெனச்சி, மொதக் குறளாவே எளுதியிருக்காரு!

அதே மாரி,.....நீயும் போயி, நம்ம பெருமைய ஊருக்கெல்லாம் ஸொல்லு!"


என்று சொல்லியபடி நகார்ந்தான் மயிலை மன்னார்!

'அது ஸரி மன்னார்! அவ்வையார் பாடினது என்னன்னு ஸொல்லவே இல்லியே' எனக் கேட்டேன்!

"அதுவா! பொறநானூறுல 95ஐப் பாருன்னு கண் சிமிட்டியவாறே ஸொல்லிவிட்டுப் போய்விட்டான் மயிலைமன்னார்!

அவசர அவசரமா வீட்டுக்கு வந்து, புஸ்தகத்தைப் புரட்டினேன்!

இதோ அந்தப் பாடல்!



"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே, அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றிலமாதோ -- என்றும்,
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே."


இதோ நண்பர்களே! உங்கள் பார்வைக்கும் இது!

நன்றி!



Read more...

Saturday, February 17, 2007

ஆத்திகச் சுடர்!

ஆத்திகச் சுடர்!

இந்தச் சுடரை ஏற்றி வலையுலகில் பரவவிட்டு, இன்று சுடராகிப் போன கல்யாணுக்கு அஞ்சலி செலுத்தி இதனைத் தொடர்கிறேன்.

நண்பர் விடாது கருப்பு சதீஷ் இதை எனனிடம் அனுப்பி வைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே!

அவர் சொன்னது போல என் கருத்தை மற்றவரிடம் திணிக்க அல்ல: ஆனால் சொல்லிடவே நான் வலைப்பூவை ஆரம்பித்தேன்.

எதையும் யாரிடமும் திணிக்க எவராலும் முடியாது என்பது என் கருத்து.

நம் கருத்துகளை நம்மால் சொல்லத்தான் முடியுமே தவிர, எவரையும் அதனை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது.

முடிந்தால் மற்றவரைக் கோபப்பட வைக்க முடியும்; வருத்தப்படவைக்க முடியும்; அவர் கவனத்தை ஈர்க்க முடியும்.

ஆனால், புரிவது அவரவரிடமே நிகழ முடியும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்...........

' குதிரையை தண்ணீர்த்தொட்டிக்கு கொண்டு செல்லத்தான் நம்மால் முடியும்; குதிரைதான் குடிக்க வேண்டும்.... முடியும்.'

இதனை உணர்ந்து, தம் கருத்துகளை அடுத்தவரைப் பழிக்காமால், அவர் மனதை நோக வைக்காமால் தம் கருத்துச்சுடரை ஒவ்வொருவரும் ஏற்ற வேண்டும், வலைப்பூவிற்கு வருவது ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வைப்பது வலைப்பதிவார்களின் தலையாய பொறுப்பு எனக் கூறி, இனி எனக்கு அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு வருவோம்!!


அதற்குமுன், சிவாராத்திரியை முன்னிட்டு, சில "ஆத்திக" நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், உடனே இந்தச் சுடரைத் தொடர முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!

இப்போது என் பதில்!

1)ஆன்மீகத்தினை நீங்கள் அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது. உலகில் இவ்வளவு இந்துக் கடவுள்கள் இருக்க அதிலும் குறிப்பாக முருகனைத் தாங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

இது மிகவும் சுலபமான கேள்வி!

நான் பிறந்தது ஒரு தெய்வ நம்பிக்கை உள்ள குடும்பத்தில்! என் தந்தை ஒரு முருக பக்தர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது முருகன், வள்ளி, தெய்வானை உருவச்சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்வார்.

பூஜைக்கு வர வேண்டும்; அனைவரும் அருகில் உட்கார்ந்து கலந்து கொள்ள வேண்டும் என ஒருபோதும் வற்புறுத்தியதில்லை.

ஆனால், பூஜை முடியும் சமயம், ஒரு மணி அடிப்பார்! யார் எங்கு இருந்தாலும், என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அப்படியே அதை விட்டுவிட்டு, தட தடவென ஓடி அவரிடமிருந்து விபூதி பெற்றுக் கொள்ள மட்டும் மறந்துவிடக் கூடாது! வராதவருக்கு அன்று தர்ம அடி நிச்சயம்!

நான் ஒரு நாளும் அடி வாங்கியதில்லை! ஏனென்றால், நான் ஒருவன் தான் அவர் பூஜை ஆரம்பித்த முதல் கடைசி வரைக்கும் அவரருகே அமர்ந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவேனே!

ஆம்! அவர் பூஜை செய்யும் அழகும், முருகனை ஆராதிக்கும் பாங்கும் என் மனதைக் கவர்ந்தது. முருகன் என் மனதை ஆட்கொண்டான்! நான் முருகன் அடிமை ஆனேன்!

எல்லாத் தெய்வங்களும் எனக்குப் பிடிக்கும் என்றாலும், முருகனே என் சொந்தக் கடவுள்!

ஒரு சின்ன தகவல்!

அந்த முருகன் இப்போது என்னிடம்தான் இருக்கிறது! சஷ்டி, கிருத்திகை என பூஜை அவருக்கு கோலாகலாமாய் நடந்து வருகிறது!

2)வலைப்பதிவு உலகில் தற்போது எங்கு பார்த்தாலும் போராக இருக்கிறது. முதலில் பார்த்தீர்கள் என்றால் பார்ப்பனர் - திராவிடர் பிரச்னை. அதன்பின் விடாது கருப்பு- விட்டது சிகப்பு போர். அடுத்து பார்த்தீர்கள் என்றால் ஆரிய திரட்டி - திராவிட திரட்டி சண்டை. அடுத்து டோண்டுவின் பன்முகங்களை கொசுபுடுங்கி என்பவர் தோலுரித்தது. இதற்கெல்லாம் குழுமனப்பான்மைதான் காரணம் என்கின்றனர் பலர். ஒற்றுமை என்பது இனி இல்லையா? இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மேலும் முகம் மூடி எழுதும் பதிவர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உட்தாரணமாக விட்டது சிகப்பு, முகமூடி, கொசுபுடுங்கி, குசும்பன், இட்லிவடை, வந்தியத்தேவன். இது ஆரோக்கியமான சூழலா?

குழு மனப்பான்மை என்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல். தாவரங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாமே ஒரு குழுவாய்த்தான் வாழ்கின்றன. ஏன்... மனிதனே முதலில் தனித்தனியாய் இருந்து, பின்னர், ஒரு குழுவாய்ச் சேர்ந்து வாழ வேண்டியகட்டாயம் ஏற்பட்டதாகத்தான் வரலாறு சொல்லுகிறது.


புதிதாய்., முன்பின் தெரியாத,அமெரிக்காவுக்கு வந்த போது ஒரு இந்திய முகத்தைப் பார்க்க மாட்டோமா எனத்தான் நான் தேடினேன்.

அதுவே ஒரு தமிழ் முகமாயும் இருந்தபோது, என் மகிழ்ச்சி இன்னும் அதிகமானது. இதுதான் மனித இயல்பு.

இதுவே நம் வலைபூவிலும் நிகழ்கிறது என நினைக்கிறேன்.

இது ஆரோக்கியமான சூழலா, இல்லையா என்பது கேள்வி அல்ல இப்போது.

இதனை உணர்ந்து எவ்வாறு நடந்து கொள்வது என்பதே நம் அனைவரின் செயலாக இருக்க வேண்டும்.

அநேகமாக இங்கு எல்லாரும் ஏதோ ஒரு வகையில் 'முகம் மூடி'த்தான் எழுதுகின்றனர். இதில் இவர், அவர் எனப் பிரித்துப் பார்ப்பது தேவையில்லை எனக் கருதுகிறேன்.

சதீஷ் என்ற நீங்கள் 'விடாது கருப்பு' என்றும், சங்கர்குமார் என்ற நான் 'எஸ்கே' என்று எழுதுவதும், முகத்தை மூடி 'பூனை, முருகன்' போட்டுக் கொள்வதும் இது போல ஒன்றே!

இங்கு எல்லாரும் முகமூடிகள் தான்!


3)சென்ற நூற்றாண்டில் திரிக்கப்பட்ட இந்திய வரலாறுகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? விதிக்கப்பட்ட என்றால் அதன் பொருள் என்ன? படிக்காத உயர்ந்த வகுப்பினர் தலித்துகளைப் பீ அள்ளினால் அது பாவமா?

ஐந்து கேள்விகள்தான் கேட்க வேண்டும் என்பது சுடரின் விதி என்பதால் ஒரு கேள்வியிலேயே மூன்று கேள்விகளைத் "திணித்த" உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன்!:))

இது மூன்றுக்கும் ஒரு பொதுவான பதிலை அளிக்கவே நான் விரும்புகிறேன்.

சென்ற நூற்றாண்டை விட்டு இன்னும் சற்றித் தள்ளிப் போய் பிந்தைய வரலாற்றைப் பார்த்தால், நாம் எல்லாருமே ஒன்றாகத்தான் இருந்திருக்கிறோம்.

அதனைப் பிரதிபலிக்கும் வகையாகவா இன்றையப் பதிவுகள் இருக்கின்றன?

நீங்கள் முந்தையக் கேள்வியில் சொன்னது போல, எங்கு பார்த்தாலும் விருப்பு, வெறுப்பு, குழு, சண்டை... இவைதான்!


திரிக்கப்பட்டவை எல்லா இடங்களிலும், வல்லமை படைத்த எல்லாராலும் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நம் மனமே நமக்கு நிலை!
அதன்படி வாழவே நான் முயற்சித்து வருகிறேன்.

"விதிக்கப்பட்ட" என எதை நீங்கள் கேட்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த "விதிக்கப்பட்ட" சிலவற்றைச் சொல்லுகிறேன்.
உங்களுக்குப் புரிகிறதா எனச் சொல்லுங்கள்.

என் பிறப்பு நான் கேட்டு வந்ததிலை என்பதால், அது 'விதிக்கப்பட்டது'.
எவருக்குப் பிறக்க வேண்டும் என்பதும் நான் கேட்டு வராததால், அதுவும் 'விதிக்கப்பட்டது'.
எந்த ஊரில், நாட்டில், மொழியில் பிறக்க வேண்டும் என்பதும் 'விதிக்கப்பட்டதே'... நான் கேட்டு வராததால்!
'குலம்', 'சாதி', 'இனம்' இவையெல்லாமும் நான் உருவாக்காததால், அதில் எதாவது ஒன்றில் நான் வந்து உதித்ததுவும், 'விதிக்கப்பட்டதே'!
இதில் எதுவும், எவரும் குறைவில்லை என்பது என் கருத்து!

இவ்வளவு பலவும் 'விதிக்கப்பட்டதாய்' இருப்பினும், நான் எவ்வாறு இருக்க வேண்டும், மனிதத்தை, மானுடத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு எவராலும் 'விதிக்கப்படாதது'!


இதனை உருவாக்குவது நான் ஒருவன் மட்டுமே!


மேற்கூறிய இவற்றுக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பினும், என்னளவில் மட்டுமே, எனக்குள் மட்டுமே இவை பெருமை பெறுகின்றன!
இவற்றை நான் போற்றுகிறேன்......எனக்குள் மட்டுமே....என் வீட்டுக்குள் மட்டுமே.... வெளியில் அல்ல!


இவற்றை வெளியில் பாராட்டும் போது, இதனைக் கொண்டு அடுத்தவரை எடை போட நான் முயலும் போது, நான் இந்தப் பெருமைகளை எல்லாம் இழக்கிறேன் என்பதினை நான் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறேன் .

எவர் மலத்தையும் எவர் அள்ளுவதும் பாவமில்லை!
அள்ளாமல் விட்டால்தான் பாவம்!
மனித குலமே நாறிப் போகும்!
யாராவது ஒருவர் அள்ளத்தான் வேண்டும்!

இதில் தலித் என்ன, செட்டியார் என்ன, முதலியார் என்ன, நாடார் என்ன, பார்ப்பான் என்ன?
எல்லாம் ஒரே மலம்தான்!


4)தாங்கள் மருத்துவத் துறையில் இருப்பதாகச் சொன்னீர்கள். ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமுன் கடவுளை வேண்டுவீர்களா? அல்லது தங்களின் தொழிலின் மீதுள்ள திறமையை முழுவதுமாக நம்புவீர்களா?

என் திறமை இறைவன் எனக்குக் கொடுத்தது! எத்தனையோ மருத்துவர் இங்கிருக்க, எனை நாடி வந்த நோயாளி நலம் பெற வேண்டும் என என் முருகனை வேண்டிக்கொண்டு என் திறமையைக் காட்டுவேன்!

5)பிராமனர்கள் பொதுவாக தமிழை விட சமஸ்கிருதம் என்ற தேவபாஷையைத்தான் அதிகமாக வாழ்த்துவதாகவும் பாராட்டுவதாகவும் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. சமஸ்கிருதம் வாழ்க என்று சொல்லும் வலைப்பதிவர்கள் தமிழில் ஏன் வலைப்பதிவு செய்ய வேண்டும்? சமஸ்கிருதத்தில் வலைபதிய வேண்டியதுதானே? எனக்குத் தெரிந்து தாங்கள் நடுநிலையாளர். நல்ல சிந்தனையாளர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ் என்று சொன்னார்கள் பெரியவர்கள். தமிழை நீசபாசை என்பவனின் நாவை அறுக்காமல் பல பதிவர்கள் வடமொழியை உயர்த்திப் பேசுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்கள் கேள்வியே தவறு எனக் கருதுகிறேன்.

ஒருவருக்குத் தாயை விட தந்தையை அதிகமாகப் பிடிக்கும், அல்லது தந்தையை விட தாயை அதிகம் விரும்புவார்கள். இதனால், அடுத்தவரை இழிவாகக் குறிப்பதாக எண்ணுவது மதியீனம்.

ஸம்ஸ்கிருதத்தை ஒருவர் விரும்புவதால் அதனைக் கொண்டு அவரது தமிழ்ப்பற்றை கேள்வி கேட்ட்பது, தாயைச் சந்தேகிப்பதை ஒக்கும் என நான் கருதுகிறேன்.

'நீசபாஷை என்பது வடமொழி........ 'காட்டுமிராண்டி மொழி' என்பது தமிழ். ....அவ்வளவுதான் இதில்!


இப்படிச் சொன்னவர் எல்லாரையும் பார்த்து சிரித்து விட்டு அப்படியே போகக் கற்றுக்கொண்டால் வாழ்வு மகிழ்வாய் இருக்கும்!

உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு முன், சுடரின் விதிமுறைகளைப் பார்த்தேன்.. அதில், ஒன்பதாவது விதியாய் இப்படிச் சொல்லி இருக்கிறது!

ஆனால், கடந்த சில சுடர்கள் இதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.


இச்சுடரை ஏற்றி, நம் மீது நம்பிக்கை வைத்து, இது மனிதநேயம் மலர வழி வகுக்கும் எனச் சொல்லி மறைந்த அம்மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையாய் இசுசுடரை நம் ஆன்மீகச் செம்மலாம் குமரனுக்கு அனுப்பி மனிதம் வாழ வகை செய்ய வேண்டுமாய்க் கேட்டு அனுப்புகிறேன் இந்த சுடர் .... ஆத்திகச் சுடர்....... எங்கும் பரவட்டும்!

அன்பு குமரனுக்கு என் ஐந்து கேள்விகள்!

1. நீங்கள் பார்ப்பனர் அல்ல எனத் தெரியும் எனக்கு. உங்களை ... உங்கள் சாதியினரை ஏன் பார்ப்பனரோடு வைத்து சதிராடுகின்றார்கள்? சௌராஷ்ட்ரர்களுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு?.

2.. திருப்பரங்குன்ற முருகனை வைத்து ஒரு கவி பாடுங்களேன்!

3. கூட்டு வலைப் பதிவைத் தவிர, தனியே வலைபதிவதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

4. சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

5. "ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா! மனம் சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடா" என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?


ஆத்திரச் சுடர் அடங்கி, ஆத்திகச் சுடர் ஒளிரட்டும்!
அன்பே சிவம்!

http://karuppupaiyan.blogspot.com/2007/02/blog-post_16.html
http://www.thenkoodu.com/sudar.php

Read more...

Monday, February 12, 2007

இறுதிப் பரிசு!


"இறுதிப் பரிசு!"
[ஒரு கண்ணீர் அஞ்சலி]

உன்னை எனக்கு முழுதுமாய்த் தெரியாது
உன் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்
மரத்தடியில் சாகரன் என ஒருவர் எழுதுகிறார் எனத் தெரியும்
அங்கங்கே கல்யாண் என பெயர் அடிபட்டிருக்கிறது
அது தவிர உன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாது!

இன்று நீ இறந்து விட்டாயாம்
குளிருது எனச் சொல்லி மாத்திரை சாப்பிட்டவன்
வாந்தி எடுத்துவிட்டு படுத்தாயாம்
அன்பு மனையாள் எழுப்ப கண் விழிக்க மறந்தாயாம்
அவ்வளவுதான் தெரியும்

அடுத்து..........
தேன்கூடு நிறுவனர் கல்யாண் என்பவர் மறைந்ததாகச் செய்தி
அருமையான நண்பரை இழந்தேன் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பதிவுகள்
அடுத்தடுத்து அவை எண்ணிக்கையில் அதிகமாகின்றன
தமிழ்ப்பதிவுலகமே ஒன்று திரண்டு புலம்ப ஆரம்பிக்கிறது

என்னை ஏன் அது இத்தனை அளவு பாதிக்கிறது?
எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?
என் கண்கள் ஏன் குளமாகின்றன?
சாதாரணமாக மரணங்களால் பாதிக்கப்படாத நான் ஏன் அழுகிறேன்?
உன் மரணம் என்னை ஏன் உலுக்குகிறது?

உனக்கு இருபத்தெட்டு வயது என்பதா?
இல்லையே!
முப்பது வயதில் என் அக்கா மகன் மறைந்திருக்கிறானே!
இளம் மனைவியுடன் இரு குழந்தைகளை விட்டு அவன் சென்றானே!
அப்போது கூட இவ்வளவு கலங்க வில்லையே!

சாதனையாளன் ஒருவன் சிறுவயதில் மறைந்ததா?
இருக்கமுடியாது.
வருத்தமளிக்கும் விஷயம்தான் என்றாலும் இது ஒன்றும் புதிதில்லையே
இராமானுஜம் முதல் எத்தனையோ சாதனையாளர்கள் அல்பாயுளில் போயிருக்கிறார்கள்
இதுவும் அதில் இன்னொன்று என ஏன் என்னால் நினைக்க்முடியவில்லை

ஏன் இப்படி உன்னைப் பற்றிய எல்லாப் பதிவுக்கும் சென்று வருகிறேன்?
எல்லாப் பதிவினிலும் ஏன் பின்னுட்டமிட்டு வருகிறேன்?
நீ என்ன எனக்கு சொந்தமா இல்லை பந்தமா?
உனக்கும் எனக்கும் என்ன கணக்கு?
எனக்கு ஏன் இந்தக் கண்ணீரும் கவலையும்?

பரஞ்சோதி உனக்குக் கடன் பட்டிருக்கிறார்
முத்துகுமரனும் அப்படியே சொல்லுகிறார்
அவரைத் தொடர்ந்து இன்னும் பலர் சொல்கின்றனர்
எனக்கு வலைத்தளம் அமைத்துக் கொடுத்தாய்
எனக்கு இன்னின்னது செய்தாய் என!

உன் முகம் கூட எனக்குத் தெரியாதே
உன்னிடமிருந்து ஒரு மடல் கூட வந்ததில்லையே
ஒரு பதிவைக் கூட பாராட்டியோ, விமரிசத்தோ இல்லையே
எனக்கும் நீ பின்னூட்டம் இட்டதில்லையே
பின் ஏன் இப்படிக் கலங்குகிறேன்?

இரண்டு நாட்களாய் யோசிக்கிறேன்
எப்படி எப்படியோ சிந்திக்கிறேன்
எதுவும் புரியாமல் விழிக்கிறேன்
பொருளே இல்லாத சோகம் இதுவென
முடிவெடுக்கும் வேளையில் பொறியொன்று தட்டியது!

பதிவுலகில் என்னைப் பாராட்டியவர் பலர் உண்டு
தூற்றியவரும் 'அதிகப்' பலருண்டு!
எதையும் பெரிதென எண்ணாமல் எழுதி வருகிறேன்
ஆனால், என்னையும் பொருட்டென மதித்து
எனக்களித்தாய் நீ ஒரு பரிசு!

அதுவே நீ அளித்த கடைசிப் பரிசு!
இறுதித் தேன்கூடு போட்டியில் இறுதிப் பரிசு!
ஆம்!முதல், இரண்டாம் பரிசுக்குப் பின்னர்
இறுதிப் பரிசு மூன்றாம் பரிசுதானே!
அதுவே நீ அளித்த கடைசிப் பரிசு!

கடன்பட்டோர் பலர் நடுவே
கைம்மாறு செய்திடக் காத்திருப்போர் நடுவே
கண்ணீருடன் நட்பினை நினைந்திருப்போர் நடுவே
கவினுறு எழுத்தை உணர்ந்திருப்போர் நடுவே
கடைசிப் பரிசுடன் வலம் வருகிறேன் நான்!

செத்தும் கொடுத்தான் சீதக்காதி
கொடுக்காமல் போனவர் பல பேர்
இருந்தும் கொடுக்காதவர் எத்தனையோ
இருக்கும் வரை அனைவருக்கும் கொடுப்பவர் ஒரு சிலரே
அதில் ஒன்று, அதுவும் கடைசி ஒன்று எனக்கு!

இதுதான் உலுக்குதோ என்னை
இதுதான் கலக்குதோ என்னை
இருக்கலாம்; இருக்கணும்!
பார்க்காமலேயே, பழகாமலேயே
உன் பரிசினைப் பெற்றவன் நான்!

இன்று நீ பிரிந்தாலும்
எமை விட்டுச் சென்றாலும்
உன் நினைவு என்றுமே
எனை விட்டு அகலாது
உனை என்றும் மறவாது!

உனை இழந்து வாடுகின்ற
அத்துணை பேருக்கும் என் இரங்கல்!
நான் வணங்கும் முருகனை வேண்டுகிறேன்
உன் குடும்பம் நலம் வாழ வாழ்த்துகிறேன்
முருகனருள் முன்னிற்கும்!

---------------------------------------------------------------------

Read more...

Thursday, February 08, 2007

நினைவுகள் இனியவையா?



நினைவுகள் இனியவையா?






இருக்கும் போது எனக்கெனவே
இனிய நினைவு தந்தவளே!
விருப்பமாய் என்னுடன் என்றும்
துணையென வந்தவளே!

நீயில்லா இந்நேரம்
இன்ப நேரம்!

காணுமிடமெங்கும் என்னுடனே
நீக்கமற நிறைந்தவளே!
வாழும் நாள் வரைக்கும்
என் நினைவில் கலந்தவளே!

நீ திரும்பும் நாள்வரைக்கும்
நான் பசியால் வாடுவேன் என
வித விதமாய் செய்து வைத்த
உணவினிலே உனைப் பார்க்கிறேன்!

உன்னன்பை அதில் கண்டு
உணவாறி முன்னறை வந்தால்
தொலைக்காட்சிப் பெட்டியினில்
உன் முகமே தெரியுதடி!

எங்கெங்கு பார்த்திடினும்
உன் முகமே தெரியுதடி
வீம்பாக உனை மறக்க
முயன்றாலும் முடியலைடி!

இருந்தபோதும் எனை நிறைத்தாய்
உன்னன்பால் எனை அணைத்தாய்
விரும்பியுனை நினைக்கின்றேன்
உனையெங்கும் பார்க்கின்றேன்!

போனாலும் இருந்தாலும்
நீயென்றும் என்னவளே!
வாணாள் முடியும்வரை
நீயென்றும் என்னவளே!

ஒரு திங்கள் எனைவிட்டு
போனதற்கே இது போல
மகிழுகிறேன் நானின்று
உனை என்றும் மறவாமல்!

என் நினைவை உன்னுடனே
எடுத்தங்கு சென்றிட்ட
உன் மனதை நானறிவேன்
நானங்கே இருப்பதினால்!

நினைவில்லா மனமிங்கே
களிப்புடனே சிரிக்கிறது!
கனவினிலும் நனவினிலும்
களித்திங்கே வாழ்கிறது!

நினைவுகள் இனியவையா?
நினைவெல்லாம் நனவாக
நிகழ்வெல்லாம் நினைவாக
நிகழ்கையிலே ஏது பிணை?

எல்லாம் சுகமே!

Read more...

Thursday, February 01, 2007

"என்" வலது கை

"என்" வலது கை

அயர்ந்து உறங்கிய நடுநிசியில்
அடி ஒன்று விழுந்தது போல் உணர்வில்
சட்டென்று கண் விழித்தேன்.

கனமாக ஏதோ ஒன்று எனை அழுத்த
உறக்கம் கலைந்த சினத்துடன் பார்த்தால்
என்னவளின் வலது கை என் மீது!

எரிச்சலுடன் அதை விலக்க முனைகையில்
கட்டையான கையைத் தள்ளுகையில்
விலக மறுத்து இன்னும் அழுத்தியது!

என் மனதில் ஏதோ நினைவுகள்!.......

கணநேரச் சலனத்தில் ஆவலுடன் பற்றிய கை
இனி என்றும் விடமாட்டேன் என வாக்களித்த கை
மணம் புரிந்தபோது மனமாரப் பிடித்த கை
தினமும் காலையில் தலை கோதி எனை எழுப்பிய கை
சனிக்கிழமை எனை அமர்த்தி எண்ணை தேய்த்த கை
வட்டிலிலே சோறெடுத்து ஆசையுடன் பரிமாறிய கை
கட்டிலிலே என்னோடு சாகசங்கள் பல செய்த கை
வீட்டினிலும் வெளியினிலும் என்னுடன் இணைந்த கை
எப்போதும் பாசத்துடன் எனை அணைத்த கை
அவ்வப்போது கோபத்துடன் எனை நோக்கி சுட்டிய கை
எப்போதாவது என்கை ஓங்கிட அதைத் தடுக்க முனைந்த கை
ஆதரவாய்ப் பலருக்கும் பிரசவம் பார்த்த கை
ஆசையாய் அனைவருக்கும் அன்னமிட்ட கை


விபத்தொன்றில் அடிபட்டு, நரம்பொன்று அறுந்ததால்
இன்று...வலுவிழந்து, உணர்விழந்து, செயலிழந்து
ஒன்றுக்கும் உதவாமல் போன வலது கை.

சற்றேனும் தளராமல், குறையென்று கருதாமல்
பிறர் உதவி நாடாமல், தன் செயலைத் தான் செய்து
எதிர் நீச்சல் போட்டுவரும் அவளது வலது கை!

அடியென உணர்ந்தது இனித்தது
ஆதரவாய்ப் பற்றினேன்
ஆசையாய்த் தடவினேன்
என்னவளின் வலது கையை!

........அப்படியே உறங்கிப் போனேன்!






Read more...

Thursday, January 25, 2007

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]




"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]

"பாதி தண்ணிதான் பூண்டிக்கு வந்துதுன்னு சொன்னேனா" என்றவாறு ஒரு டீயை உறிஞ்சிக்கொண்டே தொடர்ந்தான் மயிலை மன்னர்.

"ஏண்டா தண்ணி வரலை! என்ன ஆச்சுன்னு பாக்கப் போனாங்க நம்ம ஆளுங்க.

நல்லவேளை, போன தபா மாரி, ஆரும் தண்ணியைத் திருடலை.

சிமிண்ட்டுகரை வளியா தண்ணி ஊறி, வெளியே போவுது.

ஆஹா! சிமிட்டு [] வளியாக் கூட தண்ணி கசியுமேன்னு யோசிக்கலியேன்னு தெகைச்சாங்க.

இப்ப இன்னா பண்றது! இதுக்கு இன்னா வளின்னு ஆலோசனை பண்ணினாங்க.

சிமிண்டுக்கு பின்னாடி, கரை வலுவா இருந்தா தண்ணி போவலை; ஆனா, கரை 'பொத-பொத'ன்னு இருந்தா, தண்ணி கசியுது ரொம்ப-ன்னு தெரிஞ்சுது.

அந்த எடத்துல மட்டும் ஒரு கெமிக்கல் கலந்த பாலிமர் ஷீட்டை போட்டா அது சிமிண்டோட ஒட்டிகிட்டு இன்னும் வலுவாயிரும்னு புரிஞ்சுது.

ஆனா, இன்னும் அதிக செலவாகும்.

இன்னா, அதிகம் இல்ல.

ஒரு 90 கோடி ரூபா மேல!

ஏற்கெனவே 150 கோடி ஆயிப் போச்சு.

ட்ரஸ்டு ஆளுங்க நேரா சாமியப் போய் பார்த்தாங்க!

"செலவப் பாத்தா ஆவாது! இன்னா செய்யணுமோ செய்யுங்க"ன்னு சாமி சொல்லிட்டாரு.

அவ்ளோதான்!

எல்லாம் மளமளன்னு நடந்துது.

ஜூன் மாசம், 3-ந்தேதி, 2005-ம் வருசம்!
நாயுடு போயி, ராஜசேகர ரெட்டி வந்துட்டாரு சீஃப் மினிஷ்டரா!
அவரை வெச்சு ஒரு விளா வெச்சு ஷீட்டு போடற வேலய ஆரம்பிச்சாங்க!

அதே வருசம், நவம்பர் மாசம் சாமி பொறந்த நாளன்னிக்கு[23] தண்ணிய தொறந்து வுட்டாங்க!

"கிருஸ்னாம்மா" சும்மா கலகலன்னு சிரிச்சுகிட்டு குலுங்கி, தளுக்கிகிட்டு ஒரு ராசபாட்டையில வர்ற மாரி ஓடி வருது!



29-ந்தேதி பூண்டிக்கு வருது!

அல்லாருக்கும் சந்தோசம்!

12 டிஎம்சி தண்ணி வருது!

2005லியே தண்ணி வந்திருச்சின்னா இப்ப எதுக்கு விளா எடுத்தாங்கன்னு கேக்கறியா?

தண்ணி வந்தவொடனியே, ஒரு விளா எடுக்கணும்னு நெனச்சாங்க!

ஆனா, அப்ப இங்க இருந்த அம்மா அது முக்கியம்னு நினைக்கலை!

ஆட்சி மாறிச்சு!

கருணாநிதி வந்தாரு!

பத்து வருசம் களிச்சு சாமியும் இப்பதான் சென்னைக்கு வந்தாரு.

68லிருந்து எப்பிடியாவுது சென்னைக்கு குடிதண்ணி கொண்டு வரணும்னு இத்தயே நெனைச்சுகிட்டு இருந்த நம்ம மொதலமைச்சரும், நம்ம தமிள்நாட்டு மக்களோட நன்னியக் காட்ட இதுதான் சமயம்;
அது மட்டுமில்ல, மத்த 3 மொதலமைச்சருங்களையும் இதுக்கு ஒத்துக்க வைக்கவும் இதுதான் சமயம்னு முடிவு பண்ணி ஒரு விளாவுக்கு ஏற்பாடு பண்ணினாரு.

சாமியும் ஒத்துகிட்டாரு.

மத்ததெல்லாம் ஒனக்கு தெரியும்!:)

தமிளனோட நன்றியறிதலக் காட்டின நம்ம மொதலமைச்சருக்கு நெசமாவே ஒரு பெரிய்ய்ய 'ஓ' தான் போடணும்!

ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.

நல்லபடியா நமக்கு தண்ணி கெடைக்கணும்னு நெனச்ச ஆளு சாமிக்கு சமம்.
அவரு சாமியோ இல்லியோ அத அவங்கவங்க நெனப்புக்கு வுட்டுருவோம்.

ஒருத்தரைக் கூப்புட்டு ஒத்த பைசா கொடுன்னு கேக்காம,
ஒருத்தர் வந்து இத்த எங்களுக்கு செஞ்சு கொடுங்கன்னு தன்கிட்ட கேக்காம, ஒரு ஆளு, தானே வந்து ஒரு காரியத்த இன்னொருத்தருக்காவ செஞ்சார்னா, அவர்தான் சாமிக்கும் மேல!

இத்தப் பத்தி நா சொல்றத வுட, நம்ம ஐயன் இன்னா சொல்லிருக்காருன்னு சொல்லிட்டு முடிச்சுக்கறேன்.

ஐயனப் பாத்து ஒர்த்தன் கேக்கறான்!

"மலய வுடப் பெருசு எது?
ஒலகத்த வுடப் பெருசு எது?
கடல வுடப் பெருசு எது?"

அப்படீன்னு.

வள்ளுவன் சொல்றான்.....

"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது." [124]

"காலத் தினாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது." [102]

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது." [103]

அர்த்தம் தெரியலைன்னா கேளு, நாளைக்கு சொல்றேன்!

"மக்கள் சேவையே மகேசன் சேவை"

"அனைவரிடமும் அன்பு செய்; அனைவருக்கும் சேவை செய்"

சரி , ரொம்ப நேரமாச்சு! போயி அல்லாருக்கும் இத்த சொல்லு!

"மொதல்ல மனுசனா இருக்க கத்துக்க! அடுத்தவனப் பத்தி ஒண்ணு சொல்றதுக்கு முன்ன, அத்த தீர விசாரி! ஒன் நம்பிக்கையோட ஒத்துப் போவுதுன்ற ஒண்ணுத்துக்காவே ஒனக்கு சரியா தெரியாதத தூக்கி நிறுத்த தொணை போவாதே!"



தொடர்ந்து படித்த அனைவருக்கும் எனது நன்றி!

வணக்கம்!

சாய்ராம்.

Read more...

Wednesday, January 24, 2007

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]




"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]

[முதல் பாகம் இங்கே!]

"இப்ப நான் இன்னாத்துக்கு பூராக் கதையும் வெலாவாரியா சொல்றேன்னா" எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார், ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டே!

"இன்னாத்துக்குன்னா, அப்பத்தான் ஒனக்கு இதுக்கப்பால நடந்தது என்னான்றது புரியும்.

ம்ம்ம்ம்! எங்க விட்டேன்?.... ஆங்!ஆபிசருங்கல்லாம் கையப் பெசஞ்சுகிட்டு நின்னாங்க!
ஏன்னா, வுடறேன்னு சொன்னது 15 டிஎம்சி; அப்பிடி இப்பிடி ஆவியாப் போனாக்கூட ஒரு 12 டிஎம்சி தண்ணியாவுது பூண்டிக்கு வந்து சேந்ந்திரும்னு நம்ம ஆளுங்கள்லாம் கணக்கு போட்டு வெச்சிருந்தாங்க!

ஆனா, நடந்தது இன்னான்னா, தொண்ணித்தாறுலேர்ந்து, டூ டவுசண்டு வரைக்கும் [1996 - 2000]வர்ஷந்தோரும் வந்த தண்ணி இத்த வுட ரொம்ப கம்மி!
ஒரு ரெண்டு தபா வெறும் அரை டிஎம்சி கூட வரலை இந்த நாலு வர்ஷத்துல.

அத்தத்தான் இவனுக போய் பார்த்திட்டு வந்து 'லபோ-திபோ'ன்னு அடிச்சிகிட்டானுங்க.
ஆக மொத்தம், தெலுங்கு கங்கை,..... வெளங்கலீங்க!
சனத்தொகை கூடிப்போயி, மானமும் பொய்யாப் போயி, மெட்ராஸ் சனங்கல்லாம் தண்ணிக்கு ஆலாப் பறக்க ஆரம்பிச்சாங்க!

இப்பதான் நான் சொன்ன அதிசயம் நடந்துச்சு!
பொங்கல் களிச்சு ஒரு 4 நாளு போயிருக்கும் 2002-ல,... சனவரி பத்தொம்பதாந்தேதி.
பெங்களுர்ல சாமி கட்டின ஆசுபத்திரிக்கு மொதலாம் ஆண்டுவிளா!
பெரிய பெரிய ஆளுங்கள்லாம்.. வாஜிபாயி என்ன, கவுனர் என்னான்னு அத்தினி பேரும் குந்திருக்காங்க!

சாமி எளுந்து பேசறாரு. ஆசுபத்திரியோட நோக்கம், ஒடம்பை எப்பிடி சரியா கவனிசுக்கணும்னுல்லாம் பேசிகினே வந்தவரு, டபார்னு ரூட்டை மாத்தினாரு.


மெட்ராஸ் சனங்களோட தண்ணிக் கஸ்டத்தைப் பத்தி பேச்சு திரும்புது.
எப்டில்லாம் கஸ்டப்படறாங்க, வூட்டுக்குப் பக்கத்துல ஓடற அயுக்கு தண்ணியைவெல்லாம் கொணாந்து பொம்பளைங்க சமைக்கறதுக்கும், குடிக்கறதுக்கும் யூஸ் பண்றாங்கன்னு கேக்கறவங்க மனசெல்லாம் கரையற மாரி பேசறாரு.

கூடவே, ஆருமே எதிர்ப்பாக்கத, ஒரு அறிவிப்பையும் வுடறாரு.
இந்தமாரி, சாமி... அல்லாத்தையும் பாத்துகிட்டு இருக்காரு; துட்டு படைச்சவன்லாம், லாரி, டேங்க்ல தண்ணி சப்ளை பண்ண வெசுகிட்டு குஷாலா கீறாங்கோ. ஏளைபாளைங்களைப் பத்தி ஆரும் கவலப்படற மாரி தெரியல. அதுனால.... இவங்க கஸ்டத்தை போக்கறதுன்னு தான் முடிவு பண்ணியாச்சுன்னு!

அவ்ளோதான்.. அங்க இருக்கறவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்!

சாமி ஒரு நல்ல வார்த்தை சொன்னார்னா, முடிக்காம வுடமாட்டாரு. இனிமே தீந்துது சென்னையோட கஸ்டம்லாம்னு.

மளமளன்னு காரியம் சும்மா மிலிடரி வேகத்துல ஆரம்பிச்சுது.
மொதல்ல ஒரு குரூப் ஆளுங்க, இன்னாடது. ... அகிலபாரத சத்யசாயி சேவா ட்ரஸ்டு... அதிலேர்ந்து போயி, ஆந்திரா கவர்மெண்டைப் பாத்தாங்க.

நம்ம என்டிஆர் மாப்ள சந்திரபாபு நாயுடுதான் சீப்மினிஷ்டர். ஏற்கெனவே, ஆந்திராவுல இதுமாரி ஏகப்பாட்ட வாட்டர் ப்ராஜெக்டுல்லாம் இந்த ட்ரஸ்டு பண்ணி ஒரு 20 லச்சம் பேருங்களுக்கு தண்ணிவசதி பண்ணினதுல்லாம் அவருக்குத் தெரியும்.
ஒடனே சரி, இதுக்கு இன்னா டெக்னிகல் எல்பு[ஹெல்ப்] வோனுமோ அத்தெல்லாம் தாரேன்னுட்டாரு.
எப்பிடியாவது, சென்னைக்கு தண்ணி கிடைக்கும்னா, எது வோணும்னாலும் செஞ்சுக்கலாம்னும் சொல்லிட்டரு.

இப்போ இஞ்சினியருங்கல்லாம் போயி, எதுனால தண்ணி கண்டலேறுலேர்ந்து பூண்டிக்கு போய் சேரலேன்னு டெஸ்டு பண்ணினாங்க. முன்னியே சொன்ன மாரி, காவா[கால்வாய்] சரியாத் தோண்டலை; தோண்டினதும் தூந்து போச்சு; அங்கங்க தேங்கற தண்ணியும் அடுத்தவன் வயப்பக்கமா பூடுது..... இப்படி அல்லாத்தையும் கண்டுபிடிச்சு லிஸ்டு ஒண்ணு தயார் பண்ணினாங்க.




(சில படங்கள்]

கடைசில, ஒரு ரிப்போர்டு தயார் பண்ணினாங்க.
கண்டலேருலேர்ந்து, பூண்டி வரைக்கும் திரும்பவும் புதுப்பிச்சாலொளிய, இந்த கால்வாய்க்கு இனிமே விமோசனமே இல்லேன்னு கண்டிஷனா இருக்கு அதுல!
மொத்த நீளம் இம்மாம் தெரியுமா?
150 கிலோமீட்டரு.
புதுப்பிக்கறதுன்னா இன்னான்னு நெனச்சே!
கண்டலேறு ரிசர்வாயரைப் பலப்படுத்தி, மளை பெய்யாத காலத்துலியும், தண்ணியைத் தேக்கி வைக்கற அளவுக்கு வலுவாக் கட்டணும்
ஏற்கெனவே நோண்டி, தூந்து போன வாய்க்காலை ஆளமாக்கணும்.
கரையை அகலப் படுத்தணும்.
தண்ணி கசியாமப் பாத்துக்கணும்.

இதுக்கான மொத்தச் செலவையும் ட்ரஸ்டே எடுத்துக்கும்னு சொல்லச் சொல்லி சாமி உத்தரவு போட்டுட்டாரு.


ஒர்த்தர்கிட்ட ஒரு நயாபைஸா கேக்கலை. ஒரு நோட்டிசு வுடலை.

லார்சண்ட் டுப்ரோ [L&T] கம்பெனி இந்த வேலைய தானே செஞ்சு தரேன்னு சொல்லிச்சு.

இப்பிடியே பல பேரு முன்னுக்கு வந்தாங்க.

வேலை ஜரூரா ஆரம்பிச்சு அல்லாம் முடிஞ்சுது.

ஒரு வெள்ளோட்டம் போல தண்ணியத் தொறந்து வுட்டுப் பாத்தாங்க!.........

.........பாதித் தண்ணி கூட பூண்டி வந்து சேரலை!!!!


ஏன்???????????!

[நாளை முடிவுறும்!]

ஜெய் சாய்ராம்!



Read more...

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி"

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி"


ரொம்ப நாள் கழித்து, நண்பனைப் பார்க்கும் ஆவலுடன் மயிலை சென்றேன்!

எங்கும் காணோம்!

அக்கம்பக்கத்தில் விசாரித்தேன்!

"அவனா? அவனை ராத்திரி 10 மணிக்கு மேலதான் பாக்கமுடியும்! திருவான்மியூர் வரைக்கும் போயிருக்கான்" எனச் சொன்னார்கள்.

'சரி, இன்றைக்கு எப்படியும் அவனைப் பார்த்துவிட்டுதான் போகப் போறேன். வந்தான்னா, நான் இங்கதான் மாடவீதில இருப்பேன்னு சொல்லுங்க' என அவர்களிடம் சொல்லிவிட்டு, கபாலி கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்து, 'வஸந்த பவனில்' சாப்பிட்டு விட்டு, வெளியே வருகையில், ஒரு அடி என் முதுகில் பலமாக விழுந்தது!

'யாரது' எனத் திரும்பினால், அட்டகாசமாகச் சிரித்தபடி, மயிலை மன்னார்!

"ஆகா! என்ன தரிசனம்! நீ வராமப் போயிட்டியே! அது சரி! நீதான் திருவெம்பாவை, அது, இதுன்னு, என்னை மறந்திட்டியே! இப்பவாவது நெனப்பு வெச்சுகிட்டு வந்தியே! இன்னா சமாச்சாரம்? நல்லா இருக்கியா" என்றபடி என்னை இழுத்துக் கொண்டு சென்றான், மன்னார்.

'ஆமாம்ப்பா! திருக்குறள் உன்கிட்ட கேட்டு ரொம்ப நாளாச்சு. அதான் வந்தேன்' என்றேன்.

'அது இருக்கட்டும். அதுக்கு முன்னாடி நா ஒனக்கு இன்னோரு விசயம் சொல்லணும். இப்ப நா எங்க போயிட்டு வர்றேன்னு கேக்கலியே' என்றான்.

'ஆமா, மறந்தே போனேன். எங்கிருந்து வருகிறாய்' என்று நானும் ஒப்புக்குக் கேட்டு வைத்தேன்.

"நீ அடிக்கடி சொல்லுவியே, சாய்பாபான்னு ஒரு சாமி, அது வந்திருக்கு நம்ம ஊருக்கு. ரொம்ப தபா இங்க வந்தாலும் இதுவரைக்கும் நானும் போய் பாத்ததில்லை. நீயுந்தான் எத்தினி தபா கூப்பிட்டிருப்பே. ஆனா, இப்ப நானே போய் பாத்திட்டு வர்றேன்! ஆச்சரியமா இருக்குல்ல! ஏன்னு கேளு.


ஆரும் செய்யாத ஒரு காரியத்தை அசால்டா செஞ்சிட்டு ஒரு பந்தாவும் பண்ணாம, இப்ப நம்ம ஊரு நல்லா இருக்கணும்னு ஒரு யாகமும் பண்றாரு. அத்தப்பத்தி கேள்விப்பட்டேன். அங்க போனதுந்தான் தெரியுது. எம்மாம் பெரிய வேலைய சத்தமில்லாம செஞ்சிருக்காருன்னு!

இதத்தாம்ப்பா நம்ம ஐயனும் அடிக்கடி சொல்லுவாரு. எதைச் செய்யணுமோ அதைச் செய்யு, செய்யறத ஒயுங்கா செய்யு. ஆரம்பிச்சீன்னா முளுசா செஞ்சு முடி. செஞ்சதைப் பத்தி பீத்திக்காத. முடிச்சியா,... அடுத்தது நம்மால இன்னா செய்ய முடியும்னு அத்த செய்யப் போ" இப்படி பல குறள்ல சொல்லியிருக்காரு! இந்த மாரி நா இதுவரைக்கும் பாத்ததேயில்ல."
என்று ஒரு பெரிய பிரசங்கமே செய்து விட்டான் மன்னார்.

வலைப்பூக்களில் இது பற்றிய ஒரு புரியாத நிலையே நிகழ்வதைக் கண்டு மனம் நொந்து போயிருந்த வேளையில் அவன் இப்படிச் சொன்னதும், 'கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல' உள்ளூர் ஆளைக் கேட்டு அதை எழுதலாமே என எண்ணி, அவனைப் பார்த்து,
நடப்பதையெல்லாம் அவனுக்கு விவரித்தேன்.

"கெடக்கறாங்க வுடு! அவங்களப்பத்தி நீ கவலைப்படாதே! ஆனா, நான் சொல்றதை அப்படியே எளுதிப் போடு. புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கட்டும்" என அவன் சொன்னதை இங்கு பதிகிறேன்.

ஆதி முதல் அந்தமாக அவன் சொன்னதை எழுத ஒரு சில பதிவுகள் பிடிக்கும்!

சென்னப்பட்டணமா இருந்த நம்ம மெட்ராஸ் இங்லீஷ்காரன் காலத்துல இருந்தே ரொம்ப ஃபேமஸான ஊரு.
ஊரு பெருசாக, பெருசாக, ஆளுங்களும் சாஸ்தியாகி, தண்ணிக்கு எப்பவுமே தட்டுப்பாடுதான்!
ஏன்னா, இங்க ஒரு ஆறோ, குளமோ பெருசா சொல்லிக்கற மாரி ஒண்ணுமில்ல.
கொஞ்ச தூரம் தள்ளி ஓடற ஒரு ஆறுதான்.


ஒரு வெள்ளக்காரன், ஃப்ரேஸர்னு பேரு அவனுக்கு, அவந்தான் மொத்மொதலா, 1884ல, சோளவரம், ரெட் ஹில்ல்ஸ் பக்கத்துல ஒரு டாம் கட்டி, மளைக்காலத்துல அந்த ஆத்துல வர்ற தண்னியைத் தேக்கி வெச்சு, கொஞ்சம் நம்மள காப்பாத்தினான்.
அப்ப நம்ம ஊருல எத்தினி பேருன்ற?
வெறும் நாலரை லெச்சம் பேருதான்!
அவனுகளுக்கே இந்தப் பாடு!
குடிக்கறதுக்கு, பாசனத்துக்கு, அல்லாத்துக்கும் இந்தத் தண்ணிதான்.
குடிக்கற தண்ணி கீள்பாக்கத்துலஒரு டாங்குல சுத்தி பண்ணி நமக்கெல்லாம் வந்துச்சு.

கொஞ்ச நாள் களிச்சு, பாசனத்துக்கு வர்ற தண்ணிய நிப்பாட்டிட்டாங்க.
குடிக்கறதுக்கு மட்டும் கீள்பாக்கம் தண்ணி.
இப்படி கொஞ்ச காலம் ஓடிச்சு.

சொதந்தரம் கெடச்சும், ஒண்ணும் பெருசா ஆரும் இந்த தண்ணி விசயத்துக்கு முயற்சி பண்ணலை.
1968லதான் செண்டர்ல கொடுத்த ப்ரெஷர்னால, கிருஸ்னா நதிலேர்ந்து தண்ணி தரதா, ஆந்திரா ஒத்துகிச்சு. மகாராஸ்ட்ரா, கர்நாடகா இதுங்களும் தன் பங்குக்கு கிருஸ்னாலேர்ந்து தண்ணி தரணும்னும் முடிவாச்சு.
மொத்தம் 15 டிஎம்சி தண்ணி இவங்க மூணு பேரும் சேர்ந்துகொடுக்கறதா பேச்சு.

ஆச்சா?

தண்ணி தராங்க, சரி. எப்படி அத்த இங்க கொண்டாறது? இதுல பேச்சு வர்த்தை..... இளுத்தடிச்சாங்க. ஒண்ணூம் முடிவாவல. அப்பிடியே கெடப்புல போட்டுட்டாங்க.

இதான் இப்பிடி ஆயிருச்சேன்னு, அப்போ மினிஷ்டரா இருந்த நம்ம கருணாநிதி, சென்னைவாசிங்களுக்கு தண்ணி வரணும்னு ஒரு திட்டம் போட்டாரு. எவன் எவன்டயோ போய் கேக்கறத விட, வீராணத்துலேர்ந்து கொளாய் மூலமா தண்ணி கொண்டு வந்த்துரலாம்னு எவனோ சொன்னதக் கேட்டு நெறய பணம் செலவளிச்சு முயற்சி பண்னினாரு. பேரு கெட்டதுதான் மிச்சம்! தண்ணியும் வரல; ஒண்ணும் வரல. வாங்கின கொளாய்லாம் அங்கங்கியே கெடந்து சீரளிஞ்சதுதான் லாபம்!

அடுத்தப்பல எம்ஜியாரு வந்தாரா! அவர் தன் பங்குக்கு எதனாச்சும் செய்யணும்னு நெனச்சாரு. கிருஸ்னா திட்டந்தான் இதுக்கு வளின்னு முடிவு பண்ணினாரு.
ஆந்திரா சீஃப்மினிஷ்டரோட பேச்சு வார்த்தை நடத்தினாரு.
ரெண்டு டாம் கட்டி நம்ம ஸ்டேட் பார்டருக்கு கொஞ்சம் பக்கத்துல வரைக்கும் கொண்டு வர்றது; கண்டலேறுன்ற எடத்துல ஒரு ரிஸர்வாயர் கட்டறது; அங்கேருந்து ஒரு வாய்க்கா கட்டி நம்ம பார்டருக்குள்ள வந்து போண்டி தேக்கத்துல அத்த சேர்த்துறதுன்னு முடிவாச்சு.

ஆனா, இதுக்குள்ள ஒரு சூட்சுமம் இருக்கு! அத்த சொல்றேன் கவனமா கேளு.

அப்ப இருந்த ஆந்திரா சீஃப்மினிஷ்டர் படா கில்லாடி!

கிருஸ்னா தண்ணிய ஆந்திராவுல இருக்கற ஊருக்கெல்லாம் பாசனத்துக்கு எப்பிடியாவது பயன்படுத்தணும்னு ஒரு ப்ளான் மனசுக்குள்ள வெச்சிருந்தாரு.

நாம கொடுக்கற பணத்தை வெச்சு, தன் ஊருக்கெல்லாம் தண்ணி காட்டிரலாம்னு அவர் திட்டம்!

அதனால, இதுக்கு ஆதரவு கொடுக்கறதா போக்கு காட்டி, இந்த கண்டலேறு-பூண்டி கால்வாய்க்கு, "தெலுங்கு கங்கா"ன்னு ஒரு பேரும் வெச்சு , இந்திரா அம்மாவ வரவளச்சு 83-ல, மெட்ராஸ்ல ஒரு பெரிய தடபுடலா நடந்து முடிஞ்சது!

மொத்த மதிப்பிடு அப்ப 2,500 கோடி ரூவா!
ஆந்திரா 2000 கோடி அவங்க சைடுல டாம் காட்ட, தமிள்நாடு 500 கோடி இந்த கண்டலேறு-பூண்டி கால்வாய்க்கு கொடுக்கறதா ஒப்பந்தம் போட்டாச்சு!

போட்ட திட்டப்படி ரெண்டு பேரும் பணத்தை கொடுக்க, ஆந்திரர, கண்டலேறு வரைக்கும் ரொம்ப சிரத்தையா அல்லாத்தையும் கட்டிட்டாங்க1
இந்த கண்டலேறு-பூண்டிக்கு மட்டும் வெறூம் குளியத் தோண்டி போட்டுட்டு, தெலுங்கு கங்கா திட்டம் வெற்றிகரமா முடிஞ்சுபோச்சுன்னு 96-ல ஒரு பெரிய விளாவையும் நடத்தி காமிச்சுட்டாங்க!

ஒப்பந்தப்படி, ஆவியாப் போறது போவ, 15 டிஎம்சி தண்ணி பூண்டிக்கு வரணும்.

ஆனா, ஒரு சொட்டு கூட வரல!
இன்னாடா, அத்தினி தண்ணியுமா அவியப் பூடுச்சுன்னு நம்ம அபீசருங்க அல்லாம் விளுந்தடிச்சிகினு ஓடிப் போயிப் பாத்தனுவ!

பாத்தா ஆளுங்களுக்கு பகீர்னு ஆயிப் போச்சு!

கால்வாயின்னு ஒண்ணுமே இல்லை! அங்கங்க அவன் அவன் பாத்தி வெட்டி, வர்ற தண்ணிய அல்லாம், தன் வயலுக்கு திருப்பி வுட்டுருக்கான்!

கால்வாயும் சுத்தமா இல்ல! குட்டையும் குளியுமா தண்ணி தேங்கிக் கெடக்குது!

எப்பிடி தண்ணி வரும்!

போட்ட பணமும் அம்போன்னு போச்சு!
தண்ணியும் வரல!

ஆஹா! கவனிக்காம விட்டுட்டோமேன்னு, திருடனுக்கு தேள் கொட்டின மாரி அல்லாரும் கையப் பெசைஞ்சுகிட்டு நின்னாங்க!


அப்போதான்...........................
ஒரு அதிசயம் நடந்திச்சு!!!!!!!!!!!

[நாளை தொடரும்!]

சாய்ராம்.





Read more...

Friday, January 19, 2007

"உன்னுடன் நானும்!"

"உன்னுடன் நானும்!"

நண்பர் நாமக்கல் [புது]கவிஞர் சிபியார் ஒரு கவிதை இட்டிருந்தார்! அதன் பாதிப்பில் விளைந்த என் சிந்தனை இதோ!

"உன்னுடன் நானும்!"

நீ கேட்ட அத்தனையும்
நானும் கேட்டேனடி
என்னுள்ளே!

நான் பட்ட பாட்டினை
நீயும் படவேண்டாமெனவே
கருவிலேயே உன்னைக்
கலைத்தேனடி!

உச்சி முகர்ந்து கொஞ்ச
இச்சை இருந்த போதும்
எச்சில் என உனைப் பேசும்
பொச்சருக்கு பயந்தேனடி!

நெட்டி முறித்துப் போடவே
நித்தமும் ஆசை இருக்குதடி
தோள்கள் தந்திடவே என்னுள்
பாசம் இருக்குதடி!

காதலை மதிக்காமல்
காமத்தை நினைந்துவிட்டு
மானத்தைத் தொலைத்தேனடி
காமுகன் ஒருவனால்!

என்னைக் கெடுத்த பின்னர்
அடுத்தவளைத் தேடி
அவன் போய்விட்டான்
இங்கே நான் சுமக்கிறேன்!

எப்படி உன்னை வெளிக்கொணர்வேன்
அப்படியென ஓய்ந்து போனேன்
எப்படியோ இது தெரிவதற்குள்
அப்படியே அழிப்பதே வழி!

நீ வளர்ந்து மரமாகி

நிழல் தரும் காலம்வரை

தாயிவளால் தாங்காதென

தங்கம் உனைத் "துடைத்து"விட்டேன்!

நீ யாரென்றே தெரிந்தது
உன்னை பதிவிட்ட[scan] பின்னரே!
பெற்றவர்க்குத் தெரிந்ததால்
குற்றமெனத் தொலைத்துவிட்டார்!

உடல்கள் அழியுமாம்!
உயிர்கள் ஓய்வதில்லையாம்
கற்றவர் சொல்லுகின்றார்- எனவே
பெற்றவள் உனைத் துறந்தேன்!

என்றேனும் ஓர்நாள் உனை
எங்கேனும் சந்திக்க நேர்ந்தால்
பட்டென்று ஒற் அறை
என் முகத்தில் அறைந்துவிடு!

அதுவரையில் என் மகளே
கருவறையில் நீ வேண்டாம்
கண்கலங்கி நிற்கின்றேன்
உன்னுடன் நானும்!

நீ கேட்ட அத்தனையும்
நானும் கேட்டேனடி
என்னுள்ளே!

Read more...

Wednesday, January 17, 2007

"ஷைலஜா" கேட்ட சேந்தனார் கதை!

"ஷைலஜா" கேட்ட சேந்தனார் கதை!

திருவெம்பாவைப் பதிவொன்றில், "ஷைலஜா" அவர்கள் சேந்தன் கதை பற்றிக் கேட்டிருந்தார்.
நானும், திருவெம்பாவையை முழுதும் இட்ட பின்னர் போடுவதாக வாக்களித்திருந்தேன்!

இப்போது அந்தக் கதை என்னவென்று பார்ப்போம்
!

பன்னிரு திருமுறைகளால் ஆன தேவாரத்தில், ஒன்பதாம் திருமுறை "திருவிசைப்பா" என வழங்கும் தித்திக்கும் தேமதுரத் தெய்வீகப் பாடல்கள்!
ஒன்பது அடியவர்கள் இதனைப் பாடியிருக்கின்றனர் இத்திருமுறையில்.
இதில் இரண்டாம் அடுக்கில் இருக்கும் பாடல்களின் சொந்தக்காரர்தான் நமது சேந்தனார்.

இவரைப் பற்றிச் சொல்லப்புகுமுன், நீங்கள் நமக்கெல்லாம் மிகவும் தெரிந்த பெயரான பட்டினத்தாரைப் பற்றிய கதையையும் சற்று அறிந்து கொள்ள வேண்டும்!
ஏனெனில்,
பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாய் இருந்தவர்தான் சேந்தனார்!

பட்டினத்தாரின் இயற்பெயர் திருவெண்காடர்.

இவர் ஒரு பெரிய செல்வந்தராக வாழ்ந்து வருகையில், தனக்குப் பிள்ளை இல்லையே என ஏங்க,
இறைவன் அவருக்கு ஒரு ஆண்மகவை அருள,
அவன் இளவயதில் வியாபாரத்துறையில் ஈடுபாடில்லாமல் இருக்கிறானே என தந்தை வருந்த,
பொருளீட்ட கடல் கடந்து கப்பலில் தன் மகனை அனுப்ப,
கொள்ளையர் நடுக்கடலில் மற்றெல்லாரின் எல்லா செல்வத்தையும் கவர்ந்து செல்ல,
இந்த தெய்வப்பிள்ளை மட்டும் வரட்டி மூட்டைகளாக,
தான் சம்பாதித்தது எனச் சொல்லி சாக்கு மூட்டைகளை வீட்டில் அடுக்க,
தந்தை திருவெண்காடர் மகனைக் கடிந்து கொள்ள,
ஓர் ஓலையைத் தந்தை கையில் அளித்து மகவு மறைய,
உள்ளே சென்று வரட்டிகளை உடைத்துப் பார்க்கையில்,
அவற்றினுள் நவமணிகளும் நிறைந்திருக்க,
வெளியே வந்து மகனைத் தேடி அரற்ற,
மகன் தந்த ஓலை நினைவுக்கு வர,
அதனைப் பிரித்துப் படிக்க,
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!"
என அதில் எழுதியிருப்பதைக் கண்டு,
அலறி, உள்ளம் துடிக்க, அறிவு புலப்பட்டு,
அத்தனை செல்வங்களையும் தன் கணக்குப்பிள்ளை "சேந்தனிடம்" ஒப்படைத்து,
"இவற்றை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடு"
எனச் சொல்லி துறவறம் மேற்கொண்டது தான்,
சுருக்கமாக பட்டினத்தார் கதை!

இந்த சேந்தன் அப்படி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வங்களை, முதலாளிக்குத் துரோகம் இழைக்காமல் காப்பாற்றி வரும் வேளையில், அவர் இட்ட கட்டளைப்படியே, கருவூலத்தை ஏழைகளுக்கென திறந்து விடுகிறார்.
செல்வம் போய்விடுமே என்ற அச்சத்தில், திருவெண்காடரின் உறவினர்கள், சோழ மன்னரிடம், இல்லாது பொல்லாது எல்லாம் சொல்லி, சேந்தனார் சிறையில் தள்ளப்படுகிறார்!

சிலகாலம் சென்று, ஒற்றியூரில் இருக்கும் பட்டினத்தாரிடம், சேந்தனாரின் மனைவி, மக்கள் சென்று நடந்ததைக் கூறி முறையிட, பட்டினத்தார் இறைவனை வேண்டுகிறார். சேந்தனாரும் விடுவிக்கப் படுகிறார்!

பட்டினத்தாரின் காலடியில் வந்து விழும் சேந்தனாரைப் பார்த்து, "நீவிர் சிலகாலம் தில்லை [சிதம்பரம்] சென்று அங்கு விறகு விற்று, இறைவனை வணங்கி, இறையடியார்க்குத் தொண்டு செய்யுமாறு" பணிக்கிறார்.

அவ்வறே, சேந்தனாரும், குருவின் கட்டளையை மனதில் ஏற்று, தில்லைக்கு வந்து, விறகு வெட்டி, அதனை விற்று, தினம் ஒரு சிவனடியாருக்கு அமுது படைத்து வாழ்ந்து வருகிறார்.
இவரது சைவத்தொண்டினைக் கண்டு மகிழும் ஈசன், அம்பலவாணன், ஒரு நாள் தானே சிவனடியாராக வந்து, சேந்தனார் செய்து படைத்த "களியை" உண்டு மகிழ்கிறார்!
இவரது பெருமையை உலகுக்கு அறிவிக்க எண்ணிய இறைவன், தன் திருமேனி முழுதும் அந்த மிகுதியான "களியை" பூசி மறுநாள் அம்பலத்தில் காட்சி தருகிறார்!

அது மட்டுமா!

சேந்தனார் மேல் தனக்கிருக்கும் கருணையினைக் காட்டுமுகமாக, ஒரு திருவாதிரைத் தேர்த்திருநாள் அன்று, தேரை ஓடமுடியாமல் நிறுத்திவிடுகிறார் நடராசப் பெருமான்!
அனைவரும் என்ன செய்தும் கொஞ்சம் கூட நகரவில்லை தேர்!
சேந்தனார் வருகிறார்!
"திருப்பல்லாண்டு" பாடுகிறார்!
ஓடாத தேர் உருண்டு ஓடத் துவங்குகிறது, யாரும் வடம் இழுக்காமலேயே!!
இப்படியே நிலைக்கு வந்தும் சேர்கிறது!

இப்படி இறைவன் புகழ் பாடி இருந்த சேந்தனார், தில்லையிலிருந்து கிளம்பி, "திருவிடைக்கழி" என்னும் தலத்தை அடைந்து, அங்கு ஒரு மடம் நிறுவி, அங்கிருக்கும் முருகனை[....ஆம்!....தகப்பன்சாமியான முருகனேதான்!...]வழிபட்டு ஒரு நிறைவான தைப்பூச நன்நாளில் இறைவனுடன் சோதியாய்க் கலந்ததாக வரலாறு சொல்லுகிறது.


அந்த ஊர் இப்போது "சேந்தமங்கலம்" என வழங்கப்படுகிறது!

இதுதான் சேந்தன் கதை!

அவர் கண்ட தரிசனத்தை நமக்கும் இந்த "காணும் பொங்கல்" நாளில் அருள இறைவனை வேண்டி, அவன் "திருப்பல்லாண்டு" நாமும் பாடுவோம்!

திருச்சிற்றம்பலம்!

"சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு"
"கோயில் மன்னுக!" [தேரோட்டம் முடித்து கோவிலுக்கு திரும்பு ராஜா!]

"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2

நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3

சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4

புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)

ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட

கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பக

னாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்

பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5

சேவிக்க வந்தயன் இந்திரன்

செங்கண்மால் எங்கும்திசை திசையென
கூவிக் கவர்ந்து நெருங்கிக்

குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்
ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்

தனத்தினை அப்பனை ஒப்பமார்
பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்

தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6

சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்?
ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7

சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமு ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 9

தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்
மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11

ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12

எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. 13.

-------

திருச்சிற்றம்பலம்


[அருணையாரும், மயிலை மன்னாரும் தினம் வந்தூ கேட்கிறார்கள், "இனி நாங்கள் வரலாம் அல்லவா" என!
இனிமேல் அவர்கள் ராஜ்ஜியம்தான்!]

Read more...

Tuesday, January 16, 2007

"பாடி, ஆடி, எழுந்தருளாயே!"

"திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி"
மாணிக்கவாசகர் அருளியது.


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்பேசும்போது
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
மாலறியா நான்முகனுங் காணா மலையினை
மானே நீ நென்னலை நாளை வந்துங்களைஅன்னே இவையுஞ் சிலவோ
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
பைங்குவளைக்கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20


போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
அருணண் இந்திரன் திசை அணுகினன்
கூவின பூங்குயில்; கூவின கோழி
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
பூதங்கள் தோறும் நின்றாய்
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
அது பழச்சுவையென, அமுதென
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே
புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்போக்குகின்றோம் அவமே
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [30]


[ திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று!]

"திருச்சிற்றம்பலம்"

Read more...

Thursday, January 11, 2007

"பள்ளி எழுந்தருளாயே" - 10 [30]

"பள்ளி எழுந்தருளாயே" - 10 [30]


"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [10]

"தேவராலும், வேறு எவராலும் நெருங்கவும் முடியா
சிவனை, இப்பூவுலகில் வாழ்ந்திடும் அடியவரோ
மிக எளிதில் அடைதலைக் கண்டு, மண்ணுலகின்
வழியாகவே இவரை அடைதல் கூடும்" என உணர்ந்து


பூதலத்தில் பிறக்காமல் நாட்களை வீணாகக்
கழிக்கிறோமே என ஏங்கி, மீண்டும், மீண்டும்
திருமாலும் இப்பூவுலகில் அவதரித்து வருகின்றார்!
நான்முகனும் அவ்வண்ணமே ஆசைப் படுகின்றார்!

[மீனாகவும், ஆமையாகவும்,வராகமாகவும், வாமனனாகவும்,
நரசிம்மமாகவும், பரசுராமனாகவும், இராமனாகவும்,
பலராமனாகவும், கண்ணனாகவும் ஒன்ப்தவதாரம் எடுத்து
பாரிதனில் மீண்டும் மீண்டும் பிறந்தும், பக்தரை உய்வித்தாலும்,
மீண்டும் ஒருமுரை கல்கியாய் அவதரிக்க

எண்ணம் கொண்டிருப்பதும் இதனாலோ! ]

மிகவும் மலர்ந்திருக்கும், அளவற்ற மெய்க்கருணையுடன்
உமது திருமுகத்துடன் இம்மண்ணுலகில் வந்து
எம்மையெல்லாம் ஆட்கொள்ள வல்லமை படைத்தவனே!
எங்கும் நிறைந்திருக்கும் இனிய அமுதமே!

திருப்பெருந்துறைத் திருத்தலத்தில்
நிறைவாய் வீற்றிருக்கும் சிவபெருமானே!
பள்ளியினின்றும் எழுந்தருள்வாயே!

அருஞ்சொற்பொருள்:

புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.


[திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று!]


"திருச்சிற்றம்பலம்"

Read more...

"பள்ளி எழுந்தருளாயே" - 9 [29]

"பள்ளி எழுந்தருளாயே" - 9 [29]

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்


மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்


கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்


எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே ! [9]

[இன்றைய விளக்கம் ஜி.ரா.வுக்காக!]

விண்ணுலகில் வாழ்ந்திடும் தேவர்கள் எவரும்
மன்னவன் உன்னைக் காண விரும்பினாலும்
பூதகணங்களைத் தாண்டி வாயிலை அடைய வேண்டும்!
வாயிலில் காவலிருக்கும் நந்தியை அணுகி
முறையிட வேண்டும் முதலில் அனுமதி கேட்டு!

அவர் சென்று உள்ளே பார்த்து சிவனிருக்கும்
சூழ்நிலை கண்டறிந்து, அவரிடம் விண்ணப்பித்து
பின்னரே உள்ளே செல்ல முடியுமா, முடியாதா
என்பதைத் தீர்மானிக்க முடிந்திடும்!
இப்படி அரியதாகிய மேலான மெய்ப்பொருளே!

அப்படிப்பட்ட நீயோ எங்களை உன் அடிமையாகக்
கொண்டு எங்களை வாழச் செய்திருக்கின்றாய்!
வளமான திருத்தலமாம் திருப்பெருந்துறையினில்
வாகாய் அமர்ந்திருப்பவனே!

எப்படி அமர்ந்திருப்பினும் அடிமைகளாம் எங்களை
எப்போதும் மறவாமல் எங்களின் கண்களுக்குள்ளேயே
நின்று, காணும் பொருள்களில் எல்லாம் உன் வடிவினைக்
காட்டிக் களிப்பினை வழங்கி அருளும் தித்திக்கும் தேனே!

பரந்தாமன் அன்று பாற்கடலில் தோற்றுவித்த
ஆலகால விடத்தை யாரும் தொட அஞ்சியபோது
பரிவுடன் அதனை வாங்கி தன்னுள் செலுத்திய பின்னர்
மீண்டும் அமுதமாய்த் தோன்றியவனே!

நினைத்தாலே நெஞ்சினில் இனிப்பாய் இனிக்கும்
திருவுருவ அழகினை உடைய கரும்பே!

உன்னை விரும்பி அன்பு செய்திடும் அன்பர்கள்
எண்ணங்களில் நீக்கமற நிறைந்தவனே!

இவ்வுலகம் யாவினுள்ளும் உறையும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிராக உள்ளவ்னே!

தீதில்லா எங்கள் பெருமானே!
பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் !

முருகன் அருள் முன்நிற்கும் !!!

Read more...

Wednesday, January 10, 2007

"பள்ளி எழுந்தருளாயே" - 8 [28]

"பள்ளி எழுந்தருளாயே" - 8 [28]


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !

செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [8]

முதல் எனச் சொல்வதற்கும் முந்தையவனே!
இடைநிலை எனச் சொல்லப்படும் இடையவனே!
அனைத்தும் ஒடுங்கும் இறுதியானவனே!

இம்மூன்றையும் நிகழ்த்துவதாய்ச் சொல்லும்
பிரமன், திருமால், உருத்திரன் இவர்
மூவராலும் அறிய முடியாதவனே!
உன்னை வேறு எவரால் அறிந்திடல் ஆகும்?

இத்தகைய அருமை உடையவனாகிய நீயோ
இப்பூவுலகையே ஒரு பந்து போன்று
தன் விரல்களில் அணிந்திருக்கும் உமையுடன் சேர்ந்து
உன் அடியவர் வாழும் பழங்குடிசைகளில்
எழுந்தருளி அருள் புரிகின்றனை! பரம்பொருளே!

செக்கச் சிவந்த தழல் போலும் உன் திருமேனித்
தரிசனம் எங்களுக்குத் தந்து, கூடவே
திருப்பெருந்துறையினில் நீ அமர்ந்திருக்கும்
கோயில் தரிசனமும் விரைவினில் காட்டி,

சத்குருமூர்த்தியாய், அறிவுப் பிழம்பாய் நீயிருக்கும்
வேடமும் வலியவே வந்து காட்டி,
என்னையும் உன் அடிமையாக ஏற்றுக் கொண்டாய்!
எங்கும் நிறை அமுதமே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.

Read more...

"பள்ளி எழுந்தருளாயே" - 7 [27]

"பள்ளி எழுந்தருளாயே" - 7 [27]

"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென", அமரும் அறியார்,

"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்

மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !

எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே ! [7]

அமரரும் அறியா அப்பரம்பொருளின் தன்மை
"பழம் போல சுவை மிக்கது" எனவும்
அது "அமுதம் போல இனிதானது" எனவும்
"அறிந்து கொள்ள அரிதானது" எனவும்
இல்லை அது "மிக மிக எளிதானது" எனவும்
விண்ணகத் தேவரும் அறிய மாட்டார்கள்!

ஆனால், "இதுவே அப்பரம்பொருளின் திருவுருவம்!"
"இவனே நாம் வணங்கும் சிவபெருமான்!" என
நாங்கள் சரியாக அறியும் வண்ணம் அருள் கொண்டு
எளிவந்த கருணையுடன் எங்கள் முன்னே வந்து
எங்களையும் அடிமையாக ஏற்றுக் கொண்டு
இந்த மண்ணிலே எழுந்தருளி இருக்கின்றாய்!

தேன் சொரியும் மலர்ச்சோலை சூழ்ந்த
திரு உத்தரகோச மங்கைத் திருத்தலத்தில்
எழுந்தருளி இருப்பவனே! சிவனே!
திருப்பெருந்துறை தலத்திற்கு அரசனே!

நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது?
அதனைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம்!
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
மது - தேன்; ஆறு - வழி/முறைமை.

Read more...

"பள்ளி எழுந்தருளாயே" - 6 [26]

"பள்ளி எழுந்தருளாயே!' - 6 [26]

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !

செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே ! [6]


இவ்வுலக வாழ்வின் பரபரப்பை விட்டொழித்து
ஒருமையான மனத்துடன், உட்காட்சியில்
உன்னையே கண்டுணர்ந்த மெய்ஞ்ஞானியர் எல்லாரும்,

இம்மண்ணுலகில் பிறந்தாலும், தம் பந்தக் கட்டுகளை
அறுத்தெறிந்த சிவயோகிகள் எல்லாரும்,

மனித இயல்பிலே நின்று, மையணிந்த கண்ணுடைய
பெண்களைப் போலவே தங்களை நினைந்து
தம் தலைவனாக உனைக் கொண்டு வணங்குகின்றனர்!

தலை மகளாம் மலைமகள் உமையின் மணவாளனே!
செந்நிறம் பொருந்திய தாமரைகள் மலர்கின்ற
வயல்கள் சூழ்ந்த திருநகராம் திருப்பெருந்துறையில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!

இந்தப் பிறவியினை நீக்கி எங்களுக்கு அருள்செய்து
எங்களை ஆட்கொண்டு அருள் புரியும்
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.

Read more...

"பள்ளி எழுந்தருளாயே!" - 5 [25]

"பள்ளி எழுந்தருளாயே!" - 5 [25]

"பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

"எல்லாம் வல்ல இறைவன் பஞ்ச பூதங்கள் எனும்
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவைதனில்
நீக்கமறக் கலந்துள்ளான்; அவனுக்கு இறப்பெனும்
போக்கும் இல்லை; பிறப்பெனும் வரவும் இல்லை!" எனவே
கற்றறிந்த ஞானியர் அனைவரும் கூறுவர்.

அவர்கள் இவ்வண்ணம் பாடியும் ஆடியும் போற்றிடும்
துதிகளை விருப்பமுடன் பாடுதல் அன்றி
உனைக் கண்டறிந்தவர்களைப் பற்றி நாங்கள்
காதினாலும் கேட்டுத் தெரிந்ததில்லை!

இவ்வாறு எங்கள் சிந்தனைக்கும் அப்பாற்பட்டவனாய்
நீ இங்கு அரிதாய் நிற்கின்றாய்!
எங்கள் "கண்முன்னே எழுந்தருளி", நாங்கள்

அறிந்தும் அறியாமலும் செய்கின்ற குற்றங்கள்யாவினையும்
அறுத்தெறிந்து, எம்மையும் உன் அடியவர்களாக்கி
ஏற்று அருள் புரிந்திட அன்புடன் வேண்டுகிறோம்!

எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP