Thursday, December 15, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 39

                                                                உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 39
38.
[சென்ற பதிவில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது. பாடல் வரிசையை மாற்றிப் போட்டுவிட்டேன். எனவே 38-ம் பதிவைப் படித்துவிட்டு, இந்த 39-ஐப் படிக்கவும். சிரமத்துக்கு மன்னிக்கவும். முமு!]

 
வழக்கமாக அமரும் ஐயர் வீட்டுத் திண்ணையில் இன்று புதிதாக இன்னுமொருவன் அமர்ந்திருந்தான். மயிலை மன்னார் சஹஜமாக அவனது தோளின் மேல் கைபோட்டிருந்தான்!


எனக்கும், நாயருக்கும் அவனை முன்னமேயே தெரியுமென்பதால், ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். சாம்பு சாஸ்திரிகள் மட்டும் ஒன்றும் புரியாமல் எங்களைப் பார்த்தார்.


அவரது ஆவலைப் புரிந்த நான், மேலும் அவரை வருத்தவிடாமல், 'என்ன மன்னார்! நம்ம கோபாலையும் இன்னைக்குக் கூட்டிட்டு வந்திருக்கே போல!' எனச் சிரித்தபடியே கேட்டேன்.


சட்டென்று விஷயம் புரிந்து சாஸ்திரிகளின் முகமும் மலர்ந்தது!


'அட! பின்ன இன்னாபா! நம்ம தோஸ்த்துன்னா அப்பிடியே விட்டுருவோமா? இன்னா தப்பு பண்னினாலும் அதுக்குன்னு சீ, போடான்னு தள்ளிருவோமா இன்னா?நம்மாளு என்னிக்குமே நம்மாளுதான்! அதுக்குத்தான் இன்னைக்கு இங்கன அவனையும் இட்டாந்தேன். அது மட்டுமில்ல! இன்னைக்கு சொல்லப்போற பாட்டை அவனும் கேக்கணுன்னுந்தான்! எங்க? பாட்டைப் படி!' என என்னைப் பார்க்க, நான் படிக்கலானேன்.

ஆதா ளியையொன் றறியே னையறத்
தீதா ளியையாண் டதுசெப் புமதோ
கூதா ளகிரா தகுலிக் கிறைவா
வேதா ளகணம் புகழ்வே லவனே.

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

' ஒரு பெரிய சமாச்சாரத்தை அப்பிடியே அசால்ட்டாச் சொல்லிடறாரு இந்த மொத ரெண்டு வரியுல!

'ஆதாளியை ஒன்று அறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ'ன்னு அளு[ழு]து பொலம்பறாரு.

'ஆதாளி'ன்னா இன்னா?


மனக்கலக்கம் ஜாஸ்தியா இருக்கறவனுக்கு இந்தப் பேரு.


எதுனால மனக்கலக்கம் வருது?


இப்ப ஒரு பிரச்சினை ஒண்ணு ஒர்த்தனுக்கு வருதுன்னு வையி! இன்னா பண்றதுன்னு ஒண்ணுமே தெரியலைன்ற வெவரம் அவனோட அடிவயித்தப் பெசையறப்ப, 'அடடா! இன்னாடா இது வம்பாப் போச்சு! நமக்கு ஒண்ணுமே தெரியலியே! எப்பிடி இப்ப சமாளிக்கப்போறோம்ன்ற நெனைப்பு வர்றப்ப வர்றதுதான் இந்த மயக்கம். அதான் ஆதாளி.


ஆச்சா? இப்ப ஆதாளி, ஒன்று அறியேன்னு தன்னை ரெண்டு விதமாச் சொல்லிட்டாரு.


அப்பாலிக்கா, அறத் தீதாளின்னு வேற சொல்லிக்கறாரு.


ஆதாளி ஒனக்குப் புரிஞ்சுதுனால, இந்தத் 'தீதாளி'ன்னா இன்னான்னு ஒருமாரி குன்ஸாப் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.


' தீதாளி'ன்னா கெட்டது பண்றவன்னு அர்த்தம்.

சாதாரணமா கெட்டது பண்ணினாக்கூட, சரி, இது அவன் கொணம்னு பொறுத்துக்கலாம்.


ஆனாக்காண்டிக்கு, நல்ல விசயத்துக்கு, தர்மத்துக்கு கெடுதி பண்றவன் க்கீறானே, அவன் ரொம்பவே மோசமானவன்.


அதைத்தான் 'அறத் தீதாளி'ன்னு சேர்த்து சொல்றாரு.


இப்பியாப்பட்ட என்னை 'நீ பண்ணினதெல்லாம் போறும்'னு கருணை பண்ணி ஒன்னோட சேர்த்துக்கினியே முருகா! இத்த நான் இன்னான்னு சொல்லிப் பாடறதுன்னு கண்ணால தண்னி வுடறாரு அருணகிரியாரு.
இதுக்கு அப்பால ஒரு ரெண்டு வரி போட்டிருக்காரு பாரு,... அதான் ரொம்பவே பிரமாதம்!

கூதாள கிராத குலிக்கு இறைவா; வேதாள கணம் புகழ் வேலவனே.

'கூதாள' ப்பூன்னு ஒரு பூ க்கீது. சாதாரணமா காட்டுல ஆருமே பாக்காத இடத்துல இது பூத்திருக்கும். வாசனையும் ஒண்ணும் அப்பிடி ரொம்பவும் கிடையாது!


இந்தப் பூவை எடுத்து தலையுல வைச்சுக்கற கூட்டம் ஒண்ணு க்கீது!
அவங்கதான் அந்தக் காட்டுலியே வேட்டையாடுற வேடருங்க!


கொன்னு குவிக்கறதே இவங்க தொளி[ழி]லுன்றதால, இவங்களுக்கு 'கிராதர்'னும் ஒரு பேரு உண்டு.


அந்தக் கொலத்துல பொறந்த வள்ளியம்மையைக் கட்டிக்கிட்டதால அந்தக் கூட்டத்துக்கே இவரு தலீவராகிப் போறாரு.


அதான் 'கூதாள கிராத குலத்துக்கு இறைவன்'... நம்ம கந்தன்!


இவருக்குன்னு ஒரு பெரிய படை க்கீது!
அதுல ஆராருடா சிப்பாயிங்கன்னு பார்த்தியான ஒரே வேடிக்கையா இருக்கும்!
இந்தப் பேய்க் கூட்டங்கதான் இதுல பெரிய பெரிய சிப்பாயிங்க!
அவங்களைத்தான் 'வேதாள கணம்'னு சொல்றாரு.


இவங்கள்லாம் புகளு[ழு]ற வேலவனேன்னு கொண்டாடறாரு!


இங்கதான் கொஞ்சம் கவனிக்கணும்!
எதுக்காவ இவங்களையெல்லாம் இந்த இடத்துல கொணாந்து வைச்சுப் பாடறாரு?
இவங்கள்லாம் ஆரு?


கொஞ்சங்கூட மதிப்பே இல்லாத காட்டுப் பூவை எடுத்து வைச்சுக்கினு கண்டவங்களைக் கொல்றவங்க ஒரு பக்கம்!
அவங்களுக்கு இவரு சாமி!


செத்துப் போனதுக்கப்பறமும் போவ[க]வேண்டிய இடத்துக்குப் போவாம, இன்னமும் பேயா அலையுற கூட்டந்தான் இவருக்கு 'ஆர்மி'!
இவங்கள்லாம் இவரைக் கொண்டாடறாங்க!




இதுலேர்ந்து இன்னா வெளங்குது ஒனக்கு?


நீ இன்னாத்தான் கெட்டவனாயிருந்தாக்காண்டியும், தன்னோட ஆளுங்கன்னு முருகன் நெனைச்சுட்டான்னா, அவங்களைக் கைவிடவே மாட்டான் அந்தக் கருணைக் கடலு! அதான் அவன் கொணம்!

திட்டினவங்களைக் கூட நல்லா வாள[ழ] வைக்கற தெய்வம் அவன்!

இதும்மாரிப் பண்ணினவங்களைக் கூட நீ நல்லா நடத்தினப்ப, என்னைப் போல, ஒண்ணுமறியா ஆதாளியை, அறத் தீதாளியை நீ பெரிய மனசு பண்ணி, ஒனக்கு அடிமையா வைச்சுக்கினியே முருகா! இத்த நான் இன்னான்னு சொல்றது!'ன்னு மெய்சிலிர்க்கறாரு அருணையாரு!' என்று சொல்லி நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தன் சகா கோவா[பா]லை அன்புடன் பார்த்தான்!

'அண்ணே!' எனச் சொல்லி மேலே வார்த்தை வராமல் தழுதழுத்தான் கோபால்.


இந்தக் காட்சியைப் பாத்து, தன் மேல் துண்டால் தன் கண்களைத் துடைத்தபடியே, சாம்பு சாஸ்திரிகள், 'இதைக் கேட்டதும் எனக்கு ஒரு ரெண்டு வரி சொல்லணும்னு தோணறது' என ஆரம்பித்தார்.

இந்த 'ஆண்டது செப்புமதோ'ன்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கென்னமோ சட்டுன்னு திருவாசகத்துல மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் பாடினதுதான் ஞாபகத்துக்கு வந்தது!


'திருக்கோத்தும்பி'ல ஒரு வரி வரும்!


'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி'ன்னு!


இதுல வர்ற கண்ணப்ப ஸ்வாமிகளும் ஒரு வேடந்தான்! ஆனாலும் அவரோட அன்புக்குக் கட்டுப்பட்டு அந்த சர்வேச்வரன் என்னமா அவர் செஞ்சதையெல்லாம் தாங்கிண்டார்னு நினைக்கறச்சே, அவருக்கு பொறந்தவர், அதுவும் நேரடியா அவரோட நெற்றிக்கண்ணுலேர்ந்து பொறந்த இந்த கந்தஸ்வாமி இப்படி அருட்கடாக்ஷம் பண்றதுல என்ன ஆச்சரியம்! நாம் மட்டும் அவரை எப்பவும் ஸ்தோத்ரம் பண்ணிண்டு இருந்தா எல்லா மங்களத்தையும் அவர் நடத்திக் கொடுப்பார்னு சொல்லணுமோ!' என்றார் சாஸ்திரிகள்!

'நல்லா சொன்னே சாமி' என்று சிலாகித்தான் மயிலை மன்னார்.


நாயரின் 'ஓம் சரவணபவ' தொடர்ந்து கொண்டிருந்தது!
***************
முருகனருள் முன்னிற்கும்!

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP