Wednesday, December 21, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 40 [முதல் பகுதி]

                                                                         உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 40 [முதல் பகுதி]
39.

இன்னைக்குச் சொல்லப்போற பாட்டு ரொம்பவே ஒசத்தியானது! படிக்க ரொம்பவே சுளுவா இருக்கும். ஆனாக்காண்டிக்கு, இதுக்குள்ள ரொம்பப் பெரிய விசயம் க்கீது! அதனால, இதுக்குச் சொல்றப்ப, நம்ம சாமியும் அப்பப்ப வந்து சொல்லணும்னு கேட்டுக்கறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான் மயிலை மன்னார்!

'என்னடா சொல்றே! நீ சொல்றதுக்கு மேலே நான் என்ன சொல்லப் போறேன்? சரி, என்னமோ சொல்றே! விஷயம் இல்லாமலா சொல்லுவே? பார்க்கலாம்' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!

'இன்னா முளி[ழி]க்கறே? போவப் போவப் புரியும்! நீ பாட்டைப் படி! அதானே ஒனக்கான வேலை' என என்னைப் பார்த்தான் மன்னார்.

பதிலொன்றும் பேசாமல், ஒரு ஆவலுடன் அடுத்த பாடலைப் படித்தேன்.

மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவே டணையென் றுமுடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங் கரதே சிகனே.


[மாவேழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே.]

'மாவேழ் சனனம் கெட மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ?'

'மாவேழ் சனனம்'னு ஒரு வார்த்தை போட்டிருக்காரு.
அதென்ன மாவேள்[ழ்] சனனம்?

ஏளு[ழு] சென்மம்னு கேள்விப்பட்டிருக்கோம்!
மா....வேளு[ழு]?

'மா'ன்னா பெருசுன்னு சொல்லுவாங்க!
அப்ப, இது பெரிய ஏளு[ழு]ன்னு அர்த்தமாவுது.

அப்படீன்னா இன்னா?
ஏளும் ஏளும் பதினாலா?
இல்லைன்னா, ஏளேளு நாப்பத்தொம்பதா?
இன்னா ஐயரே? இன்னா சொல்றீங்க? என சாஸ்திரிகளைப் பார்த்தான் மன்னார்.

'நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான் மன்னார்! இந்த ஏழுங்கறது ரொம்பவே பெரிய விஷயம்! ரிக் வேதத்துல இது பத்தி ரொம்பவே ஒசத்தியா சொல்லியிருக்கு.

பூமில ஏழு [1:22:16], ஏழு நாக்கு தீக்கு [1:58:7], ஏழு நதிகள் [1:32:12], ஏழு ஸ்வரங்கள், பாடகர்கள் [1:62: 4], ஏழு கோட்டைங்க [1:63: 7], ஏழு விதமான வெள்ளம் [1:72:8], ஏழு கதிர்கள் [1:105:9], ஏழு சகோதரிகள் [ 1:164:3], ன்னு.. இந்த ஏழு ரொம்பப் பெரிய சமாச்சாரம்.

அதே மாதிரிதான் இந்த ஏழு பிறவிங்கறதும்!

இது ஏழா, ஈரேழா, இல்லைன்னா ஏழேழு நாப்பத்தொம்பதான்னு நீ கேக்கறமாதிரியே ஒரு கேள்வி வரும்.


எல்லாமே சரின்னாலும் இதுக்கெல்லாம் தெளிவா ஒரு விடையை நம்ம மாணிக்கவாசகர் கொடுத்திருக்கார்!

இந்தப் பிறவின்னா என்ன? அது எத்தனை வகைப்படும்னு ரொம்ப அழகா, எளிசா சொல்லியிருக்கார்!
திருவாசகத்துல ஒரு வரி இப்படி வருது.

"புல்லாகி,பூடாய்,புழுவாய்,மரமாகி,பல் விருகமாகி,பறவையாய்,பாம்பாகி,
கல்லாய்,மனிதராய்,பேயாய்,கணங்களாய்,வல்லசுராகி,முனிவராய்,தேவராய்,செல்லா நின்ற இப்பிறப்பில்எல்லாப் பிறப்பும் பிறந்துஇளைத்தேன் எம்பெருமான்!"

ஒண்ணொண்னா கூட்டிப் பாரு! மொத்தம் பதினாலு வரும்! இதான் ஏழேழு!
இதுல மீனைப் பத்திச் சொல்லலியேன்னு ஒரு சந்தேகம் வரும். பல் விருகம்னு சொல்றப்பவே இதெல்லாமும் வந்துடும்னு சொல்லாம சொல்லியிருக்கார் அந்த மஹா ப்ரபு!

இந்த ஈரேழைத்தாம் நாம மாறி மாறிப் பிறந்து இளைச்சுப் போறோம்!
அந்தந்தப் பிறவில பண்றதை வைச்சு, எதுவா வேணும்னாலும் பிறந்து, எப்பவோ முக்தி அடையறோம்.
எத்தனையோ கோடிப் பிறவிக்கு அப்புறம்!

நம்ப சம்பந்தர் இருக்காறே, அவர் இன்னும் ஒரு படி மேலே போய், இந்த ஏழு பிறவிகளுக்குள்ளியும் நிறைய யோனி பேதங்கள் இருக்குன்னு சொல்றார்.

'உரை சேரு எண்பத்து நான்கு
நூறாயிரமாம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்த வற்றின்
உயிர்க்கு யிராய் அங்கங்கே நின்றான்'னு ஒரு பாட்டு பாடறார்.


இதுலேர்ந்து என்ன தெரியறதுன்னா, இந்தப் பிறவிகள் எத்தனை, அதுக்குள்ளே எத்தனை பிரிவுன்னு யாராலயும் சொல்லவே முடியாது. இதான் நான் சொல்ல வர்றது' என்றார் சாஸ்திரிகள்.

சட்டென்று உற்சாகமானான் மன்னார்!

'நல்லாச் சொன்னீங்க சாமி! இதையேதான் நம்ம ஐயனும் சொல்லியிருக்காரு!

62, 107, 398, 835 இது எல்லாத்திலியும் ஐயனும் இதைத்தான் சொல்லி இருக்காரு!

'எழு பிறப்பும் தீயவை வேண்டா'
'எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்'
'எழுமையும் ஏமாப்புடைத்து'
'எழுமையும் நான் புக்கழுத்தும் அன்று' ன்னு இந்தப் பொறப்புங்களப் பத்திச் சொல்றாரு.

ஆக மொத்தம் எப்பிடிப் பாத்தாலும், இந்த ஏளோ[ழோ]ட கூட்டணி நம்மள ரொம்பவே படுத்துதுன்னு புரியுதில்ல. அவ்ளோ கொடுமை இந்தப் பொறப்புன்றது!

இந்தச் செனனந்தான் ஒளி[ழி]யணும்னு கேக்கறாரு மொதல் வார்த்தையுல !

அடுத்தாப்பல வர்றது இன்னும் பெருசு! அதுக்கும் சாமிதான் தயவு பண்ணணும்' எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தான் மன்னார்.

'மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ?'

மூ வேடணை'ன்னா இன்னான்னு பாப்பம் மொதல்ல!

நேரடியா தமிள்[ழ்]ல பாத்தா, ஒருவேளை வேதனைன்றதைத்தான், அப்பப்ப மாத்திப் போடறமாரி போட்டுட்டாரோன்னு தோணும்!

அப்பிடியே பாக்கலாம் இப்ப.
அதென்ன மூணு வேதனை?

ஒலகத்துல நம்மளைப் படுத்தறது இந்த மூணு விதமான ஆசைங்கதான்
மண்ணாசை, பொண்ணாசை, பொன்னாசைன்ற இந்த மூணுந்தான் இந்த வேதனைங்க!

இதெல்லாம் எதுனால வருது?
எல்லாம் ஒரு மாயைன்னு புரியாததால.

ஆசை வர்றதே ஒரு மாயையாலத்தானே? என்ன சாமி சொல்றீங்க' என சாஸ்திரிகளைத் தூண்டினான் மயிலை மன்னார்!

அதைப் புரிந்துகொண்ட சாம்பு சாஸ்திரிகளும் சற்றும் சளைக்காமல் பேசலானார்.

'நீ சொன்னதும் ஒருவிதத்துல சரின்னாலும், இதுல ஒண்ணும் தப்பா சொல்லலை அருணகிரியார்.

இப்போ, 'நஷ்டம்', 'கஷ்டம்'ங்கறதை 'நட்டம்', 'கட்டம்'னு சொல்றாளோன்னோ? அதேமாதிரிதான், 'ஏஷணா'ன்னு ஒரு சம்ஸ்க்ருத வார்த்தை, இங்கே 'ஏடணை'ன்னு கொஞ்சம் உருமாறி வந்திருக்கு.

ஏஷணான்னா ஆசைன்னு அர்த்தம்.

மத்தபடி நீ சொன்ன அந்த மூணு ஆசையும் அதேதான்!
ம்ம்ம்... மேலே நீயே சொல்லு!' என மௌனமானார் சாம்பு சாஸ்திரிகள்!

'இந்த சென்மன்றது முடியணும்னா, இந்த மூணு ஆசைங்களையும் நாம விடணும். அப்பத்தான் இது தொலையும்!

இல்லைன்னா ஏளு[ழு], ஏளேளு,ன்னு தொடர்ந்துக்கினே இருக்கும்!
இதெல்லாம் எப்போ முடியும் முருகான்னு கதர்றாரு.

இதை ஏன் முருகனைப் பார்த்துக் கேக்கறாருன்றதுக்குத்தான் அடுத்த ரெண்டு வரியும்!' என நிறுத்தினான் மன்னார்!

சரி, இது கொஞ்சம் நீளமாத்தான் போவப்போவுது' என நினைத்தபடியே நாயரைப் பார்த்தேன்.

'இது எனக்கு அப்பவே தெரியும்' என்பதுபோல், அவன் 'ஓம் சரவணபவ' மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான்!
******

[இன்னும் வரும்]
முருகனருள் முன்னிற்கும்!

2 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Thursday, December 22, 2011 4:29:00 AM  

எத்தனை பிறவி கொடுத்தாலும் உன் நினைப்பை மட்டும் என் மனத்தில்
நிலைத்திருக்கச்செய்துடுப்பா ,முருகா!ஒம்சரவணபவா!

VSK Thursday, December 22, 2011 7:35:00 AM  

ஆர் கையுல கேட்டா நிச்சியமாக் கிடைக்குமோ, அவரையே கேட்டுட்டீங்கம்மா! கிடைக்காமலா போயிறும்! முமு.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP