"சாதனையாளர் தர்மேந்த்ர குமார்" [உண்மைக்கதை]
"சாதனையாளர் தர்மேந்த்ர குமார்"
[உண்மைக்கதை]
ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான் தர்மேந்த்ர குமார்.
பீஹாரில் பிறந்த இவர், இளங்கலைப் பட்டம் [B.A.] பெற்று, மருந்தகப் படிப்பை[Diploma in Pharmacy]யும் முடித்தவர்.
வேலை தேடி அலையும்போது பல இடங்களுக்கும் சென்று வந்ததில்,
தன்னை விடவும் வசதி, வாய்ப்பு குறைந்தவர்கள் அநேகம் பேர் இருப்பதைப்
பார்த்து, இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்னும் ஆவலில் துடித்தவருக்கு, 'எய்ட்-இந்தியா'வின் அறிமுகம் தற்செயலாகக் கிடைத்தது.
தன்னிடமிருக்கும் படிப்பறிவு தனக்கு ஒரு வேலையைத் தேடித்தந்து,
தான் வசதியாய் வாழ்வதை விட, பிறர்க்கு இது பயன்பட்டால் நல்லதுதானே என நினைத்த இவர் இதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தனது மாவட்டத்தில் பல மையங்கள் திறக்க உதவியாயிருந்தார்.
இதற்காக இவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
எள்ளி நகையாடியவர்கள் ஏராளம்!
பிழைக்கத் தெரியாதவன் என ஏசியவர்கள் அநேகம்!
ஏற்கெனவே பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் அவற்றையெல்லாம் தன்னை மேலும் உற்சாகப்படுத்தும் ஒரு ஊட்ட மருந்தாகவே ஏற்றுக் கொண்டார்.
விழிப்புணர்வு வரவேண்டி பீஹாரிலிருந்து ஆந்திரவில் இருக்கும் ஹைதராபாது வரை ஒரு தொடர் மிதிவண்டி பயணம் [Bi-cycle rally] மேற்கொண்டதை ஒரு பெருமையாக நினைவு கூருகிறார்.
இதுபோல, பல யாத்திரைகளை இவர் நடத்தியிருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் இளம்பிள்ளைகளுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது, தன்னம்பிக்கையுடன் மற்றவர்க்குச் சமமாக கல்வியை எதிர்கொள்ளச் செய்ய வைப்பது என்னும் வைராக்கியத்துடன் இன்றளவும் செயல்படுகிறார்.
இன்று இவர் நடத்தும் மையங்களில் படிக்கும் பிள்ளைகள் மாநில அளவில் பேச்சு, கட்டுரை மற்றும் பல நிலைகளில் முதன்மையாக வருவதைப் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.
"நாங்கள் அனைவரும் இந்தியப் பிள்ளைகள்! எங்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கச் செய்வது ஒவ்வொரு இந்தியனின் கடமை!" எனும் முழக்கம் இவருடையது!
எலிகளைப் பிடித்துச் சாப்பிடும் குலத்தில் பிறந்த பிள்ளைகளும் இன்று நிமிர்ந்து நிற்பதில் இவர்க்குப் பெரும் பங்கு உண்டு.
இந்தியாவிலேயே மிகவும் பின் தங்கிய மாநிலம் பீஹார்.
மாலை ஆறு மணிக்கு மேல் இருளில் ஆழும் கிராமங்கள் அதிகமாய் இருக்கும் மாநிலம் இது!
மின்சார வசதி இன்னமும் பல கிராமங்களில் ஒட்டுமொத்தமாகக் கிடையாது என்பது வேதனையான செய்தி!
ஏற்றத்தாழ்வுகள் இன்னமும் சமன் செய்யப்படாத நிலையீலேயே பல கோடி மக்கள் வாழும் மாநிலம் இது!
சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் ஆகியும், இப்படியே வைத்திருக்கும் அரசியல்வாதிகளை நம்பாமல், இதுபோன்ற சமூக நல அமைப்புகள் எப்படிப்பட்ட இடையூறுகளை எல்லாம் சந்திக்கவேண்டியிருந்தது என்பதை இவர் உணர்ச்சிபூர்வமாக விவரித்தபோது நெஞ்சம் கனத்தது.
பீஹாரில் வெள்ளம்!
இமயத்தின் அடிவாரத்தில் அமைந்த மாநிலம் இது.
அங்கிருந்து உற்பத்தியாகிவரும் நதிகள் இன்னமும் மேட்டுப் பகுதியாகவே இருக்கும் வடக்கு பீஹாரில் தங்கள் விருப்பம் போல வழிகளை அமைத்துக் கொண்டு பாயுமாம்..... தனக்கென ஒரு பாதை இருக்கும் சமதளம்
வரும் வரைக்கும்!
இதனால் எந்தப் பகுதியில் வெள்ளம் வருமென பலருக்குத் தெரியாமலே போய்விடுவதால், இங்கு வாழும் மக்கள் இதனை ஒரு சாதாரண நிகழ்வாகவே பொதுவாக ஏற்று வாழ்கின்றனர்.
இந்த நதி நேப்பாளத்திற்கும் பாய்வதால், மழைக் காலங்களில், அங்கு தேங்கிவரும் நீரையும் அவர்கள் திறந்து விட்டு விடுவார்களாம்!
இரு ஆண்டுகளுக்கு முன் பீஹார் சந்தித்த வெள்ளக் கொடுமை இதுவரை எவரும் காணாத அவலம்.
கிட்டத்தட்ட மொத்த வடகிழக்கு பீஹார் மாநிலமே நீரில் மூழ்கி பல லட்சம் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை!
தெற்குப் பகுதியில் முகாம்களை அமைத்து, வந்தவரைக் குடியேற்றி, அவர்களுக்குத் தேவையான வசதிகளைத் தருவதோடு அரசு வேறொன்றும் செய்ய முடியாத நிலை.
இதைக் குறையாகச் சொல்லவில்லை அவர்!
தினசரி அங்கு வந்து சேரும் மக்களுக்கு உதவி செய்யவே அரசுக்கு நேரம் போதவில்லை.
இதனால் வடகிழக்கு பீஹாரில் இன்னமும் இருந்தவர்க்கு எந்தவித உதவிகளும் போய்ச் சேரவில்லை.
இந்த நிலையில் 'எய்ட்-இந்தியா' செய்த பேருதவியில் இவர் வகித்த பங்கு அதிசயிக்கத் தக்கது.
கிராமம் கிராமமாகச் சென்று, [படகிலும், சில சமயங்கலில் நீச்சலடித்தும் கூட!] ஏதோ ஒரு மேடான பகுதியில் கூடி நின்றவர்களைப் பாதுகாத்து, பத்திரமான இடத்துக்கு அவர்களை அனுப்பி வைத்து, கூடவே கால்நடைகளையும்
காப்பாற்றி, மருத்துவ, உணவு வசதிகள் அவர்களுக்குக் கிடைக்க இந்த நிறுவனம் உதவி செய்தது.
இவர்கள் மட்டும் தான் என்றில்லை!
மற்ற நிறுவனங்களும் செய்தன என்றாலும், தாங்களும் செய்ததில் ஒரு பெருமை இவருக்கு!
'இன்னும் செய்யணும்! செய்தது ஒரு துளிதான்!' என அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளும் இவரைப் பாராட்டி, இவரைப் போல இன்னும் பலரும் முன்வந்து பாரதத்தை ஒளிரச் செய்வோம் என வாழ்த்தி இந்தச் சாதனையாளர் தர்மேந்த்ர குமாரை வாழ்த்துகிறேன்!
*****************************
0 பின்னூட்டங்கள்:
Post a Comment