Wednesday, March 05, 2008

என் கதை சொல்லும் நேரமிது! [வலைச்சரத்துக்கு!]

என் கதை சொல்லும் நேரமிது!

நாம்பாட்டுக்கு நானுண்டு எம்பதிவுண்டுன்னு இருந்தேனுங்கோ!
அது பொறுக்கலை நம்ம பொன்ஸ் தாயிக்கு!
வலைச்சரம் எழுத வாடான்னூட்டாங்க!
ஊருக்குப் போறேம்மா, இப்ப வேணாமேன்னு டபாய்ச்சுப் பார்த்தேன்!
அதுக்கென்ன! தாராளமாப் போயிட்டு வந்து பொறவால எழுதுன்னுட்டாங்க!
தப்பிக்க வழியில்லை..... ஹிஹிஹிஹி.... உங்களைத்தான் சொல்றேன் சாமியோவ்!
இந்த ஒருவாரம் என்னிய நீங்கள்லாம் சகிச்சுகிட்டுத்தான் போகணும்!
என்ன ஒரே ஒரு நிம்மதி இதுலன்னா... ஒரு வாரம்தான்! சீக்கிரம் ஓடிப்போயிரும்!
முடிஞ்சா படிங்க! இல்லேன்னா அடுத்த வாரமா இந்தப் பக்கம் வாங்க!

சரி! இப்ப மேட்டருக்கு வருவோம்!

முதல் பதிவு என்னைப் பத்தி சொல்லணுமாம்!
என்னைப் பத்தி சொல்லிக்க அதிகமா ஒண்ணுமில்லீங்க!
தஞ்சையில் பிறந்து, தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் படித்து, சென்னையில் மருத்துவம் பயின்று, அங்கேயே மருத்துவப்பணியும் செய்து, இடையில் ஈராண்டு காலம் ஜாம்பியாவில் பணி புரிந்து, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இதைத் தொடரும் ஒரு சராசரி ஆள்தான் நான்.
தமிழில் எப்பொழுதுமே ஆர்வம் உண்டு.... படிக்க மட்டுமே!

வலைப்பதிவு என ஒன்று இருக்கிறது எனத் தெரிந்ததே 3 ஆண்டுகளுக்கு முன்புதான்!

பின்னூட்டத்தில் தொடங்கி ஒரு சிலரின் பார்வையில் பட்டு, அவர்களின் உந்துதலால், வலைப்பதிவு தொடங்கினேன்! [இவர்கள் யார் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!]

"நல்லன சொல்வதில் நடுக்கமில்லை! அல்லன அகற்றிடத் தயக்கமில்லை!" எனத்தொடங்கிய இந்த 'ஆத்திகம்' வலைப்பூவில், 250-க்கும் மேல் பதிவுகள் இதுவரையில் எழுதியிருக்கிறேன் என.... இன்றுதான் பார்த்தேன்!:))

தொடக்கத்தில், என்ன எழுதுவது என ஒரு நிலையில்லாமல், மனதுக்குப் பட்டதையெல்லாம் எழுதிய பொழுதில், நண்பர் குமரன் என்னைத் திருப்புகழ் எழுதுமாறு கேட்டுக் கொள்ள, என் வலைப்பூவின் தலைப்புக்கு ஏற்றவாறு இருக்கிறதே என்ற மகிழ்வுடன், திருப்புகழுக்கு விளக்கவுரை கவிதை வடிவில் எழுதத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருந்தது! இன்றும் இருக்கிறது.... சற்றே நான் "நீட்டி முழக்கினாலும்"!
அருணையாரின் பாடலுக்கு எழுத வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம்! அந்த வாய்ப்பில், தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வமே இந்த 'நீட்டி முழக்கியதின்' காரணம்! இதில் எனக்கு மகிழ்ச்சியே!

இப்படி தொடர்ந்து திருப்புகழே எழுதி வருகையில், நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு திருக்குறள் பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் என்னுள் ஒரு உந்தல் ஏற்பட்டு, உடனே உருவானான் மயிலை மன்னார்!
வலைப்பதிவு இவனையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டது என் அதிர்ஷ்டம் எனவே சொல்ல வேண்டும்! இன்னமும் தொடர்ந்து வருகிறான்! வாரம் ஒரு அதிகாரம் இவனைக் கொண்டு எழுத வேண்டும் என்பது என் அவா! வள்ளுவனும், முருகனும் அருள வேண்டும்!

இப்படி ஒரு நிலையில் எழுதி வரும்போது, 'திருவெம்பாவை' உரை விளக்கம் எழுத ஒரு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பேறு! 30 நாட்கள் அதைத் தொடர்ந்து எழுதியது மறக்க முடியாத ஒரு அனுபவம்!

'ஆல்கெமிஸ்ட்' என்கிற ஒரு அற்புதமான நாவலை நான் படித்தேன்! ஒரே மூச்சில் படித்து முடித்தேன் என்பதே உண்மை! என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், எனக்குப் பிடித்தது எல்லாம் என் மனைவிக்கும் பிடிக்க வேண்டும் என வற்புறுத்துவது! இந்தக் கதையை அவரையும் படிக்கச் சொல்லி அவரிடம் இந்தப் புத்தகத்தைத் திணித்தேன்! படித்தவுடன் அவர் என்னிடம் முதன்முறையாக கேட்டது இதுதான்! 'என்னமோ ப்ளாக்கெல்லாம் எழுதறீங்களே! இதை ஒட்டி ஒரு கதை எழுதுங்க! இல்லாட்டி எழுதறதை நிறுத்திடுங்க!' இதை ஒரு சவாலாக ஏற்று, 40 நாட்கள் வேறு பதிவு எதுவுமே எழுதாமல் 'சித்தர்-- கனவு மெய்ப்படும்!' என 42 அத்தியாயம் எழுதி வெளியிட்டேன்! இதையே எனது வலைப்பதிவின் நிறைவாகக் கருதுகிறேன்!

நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 'கசடற' என்னும் வலைப்பூ தொடங்கி, பாலியல், இதயம் பற்றி எழுதிய இரு தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையும் இங்கு குறிக்கிறேன்.

அவ்ளோதாங்க! நேரம் கிடைக்கும் போது ஒரு நடை நம்ம பக்கம் வந்திட்டுப் போங்க!

நன்றி!

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP