"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 34
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 34
முந்தைய பதிவு இங்கே!
32.
"ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. " [725]
'நகராதீங்க! அப்படியே நில்லுங்க!' ஒருவன் கத்தினான்.
"நாங்க சாமி பாக்கறதுக்காக கால்நடையா போறவங்க! எங்களை ஏன் தடுக்கறீங்க" என்றான் கந்தன்.
'அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது! இந்தப் பக்கம யார் வந்தாலும் சோதனை பண்ணச் சொல்லி எங்களுக்கு உத்தரவு. தீவிரவாதிங்க எந்த வேஷத்துலியும் வரலாம்.'
வந்த போலீஸ்காரர்கள் அவர்களைச் சோதனை செய்தனர்!
'உன்கிட்ட ஏது இவ்ளோ பணம்? யாருக்குக் கொடுக்கறதுக்காக எடுத்துக்கிட்டு போறே?' கந்தன் பையைப் பரிசோதித்த போலீஸ் கேட்டது.
'நான் உழைச்சுச் சம்பாதிச்ச பணம் அது. சென்னையில செலவெல்லாம் அதிகமா ஆகும்னு சொன்னாங்களே' என அப்பாவியாகச் சொன்னான் கந்தன்.
'இதென்ன குப்பியில மருந்து? இதென்ன கல்லு?' சித்தரை மிரட்டலாகக் கேட்டார் அடுத்த போலீஸ்காரர்.
'ஓ அதுவா! அதுதான் மாயக்கல்லு! அதை வைச்சு எவ்வளவோ கிலோ தங்கம் பண்ணலாம். அந்த மருந்தைக் குடிச்சா ஒரு நோயும் அண்டாது!'
நாலு காவல்காரர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு வாய் விட்டு சிரிக்கத் தொடங்கினர்! சித்தரும் கூடவே பெரிதாகச் சிரித்தார். அவரிடம் அவைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, 'போங்க! இப்படி சொல்லிகிட்டு ரொம்பப்பேரு திரியறாங்க! நீங்களும் அது போல ஆளுங்கதானா! நாங்க என்னவோன்னு நினைச்சிட்டோம். உங்ககிட்டேயும் வேற சந்தேகப்படும்படியா ஒண்ணும் இல்லை. பத்திரமாப் போங்க! நீங்க போற வழியில நிறைய தீவிரவாதிங்க சுத்தறதாத் தகவல். ஜாக்கிரதை!' என எச்சரித்து அனுப்பினர்.
'என்னங்க! இப்படி அவங்க கிட்ட உண்மையைப் பட்டுன்னு போட்டு உடைச்சுட்டீங்க!' என சற்று கோபத்துடன் கேட்டான் கந்தன்.
'இந்த உலகவாழ்க்கையோட ஒரு அடிப்படை உண்மையை உனக்குப் புரிய வைக்கறதுக்காகத்தான்!' சித்தர் சிரித்துக் கொண்டே சொன்னார்!
'உன்கிட்ட ஒரு பெரிய ஐஸ்வர்யம் இருக்க்குன்னு வைச்சுக்க. அதைப் போயி அடுத்தவர்கிட்ட சொன்னியானா, உன்னை ஒரு பைத்தியமாத்தான் பார்ப்பாங்க! சுத்தமா நம்ப மாட்டாங்க!'
கந்தன் அவர் சொன்னதையே அசை போட்டுக் கொண்டு நடந்தான்.
இப்போதெல்லாம் அவன் மனசு ஒன்றுமே பேசுவதில்லை. அமைதியாக இருந்தது. எப்போதாவது பேசினாலும், அவனை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தது.
அவனிடம் இருக்கின்ற நல்ல குணங்களை எல்லாம் பட்டியல் போட்டுக் காண்பித்தது!
'ஆடுகளை எல்லாம் விற்றுவிட்டு எப்படி இப்போது ஒரு பெரிய லட்சியத்தைத் தேடிக்கொண்டு தைரியமாக இவ்வளவு தூரம் வந்திருக்கே! நிஜமாவே நீ ஒரு பெரிய ஆளுதான்!'னு அவனை சிலாகித்தது.
அது மட்டுமில்லாமல், எப்படி சில கெட்ட சமயங்களிலும் அவனுக்கு உதவியது எனவும் சொல்லியது!
ஒரு நாள் காலையில ஆடுங்களை மேய்ச்சுகிட்டு போறப்ப, வாந்தி எடுத்து அவன் மயக்கமா விழுந்தது தன்னாலதான் என ஒப்புக் கொண்டது.
'கொஞ்ச தூரம் தள்ளி ரெண்டு திருட்டுப்பயலுக உன்னை வெட்டிட்டு, உன் ஆடுங்களை அபேஸ் பண்ணக் காத்திருந்தாங்க. அதான் வழியில தெரிஞ்ச செடியிலேருந்து சில இலைகளை உன்னைத் திங்க வைச்சு அப்பிடி ஒரு வாந்தி!' எனச் சொல்லி 'ஹோ'வெனச் சிரித்தது.
கேட்கக் கேட்க கந்தனுக்கு ஆச்சரியம் மிகுந்தது.
'இப்படியெல்லாம் கூடச் செய்யுமா மனசு?' சித்தரிடம் கேட்டான்.
'எல்லாரோட மனசும் இப்படி செய்யும்னு சொல்ல முடியாது. ஆனா, சின்னப் புள்ளைங்க, வயசானவங்க, குடிகாரங்க இவங்களைப் பார்த்தா உனக்குப் புரியும்!
தவழ்ந்துகிட்டே கிடுகிடுன்னு ஒரு பள்ளத்துல விழற வரைக்கும் போயிரும் ஒரு குழந்தை! 'டக்'குன்னு நின்னு திரும்பிப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிக்கும்!
நல்லா குடிச்சிட்டு நிதானமே இல்லாம வண்டியை ஓட்டிகிட்டு வருவான்! எப்படியோ, வீட்டு வாசல் வரைக்கும் சரியா வந்து சேர்ந்திடுவான்!
'கண்ணு மங்கிப் போய், திண்ணையில உட்கார்ந்துகிட்டே, 'ஆரது? காமாட்சி பய கணேசனா போறது? சித்தே இங்கே வா!' என ஒரு பெரியவர் அழைத்து ஒரு உதவி கேட்கும்போது 'இவருக்கு எப்படி தெரிஞ்சுது?'ன்னு ஒரு வியப்பு வரும்!
இந்த மனசோட உதவியில்லாம இவங்களால அந்த சமயத்துல தப்பிச்சிருக்க முடியாது! கொஞ்சம் யோசிச்சியானா புரியும்!'
'அப்போ எனக்கு ஒரு ஆபத்தும் வராதுன்றீங்க!' என வினவினான்.
'மனசால ஒரு அளவுக்குத்தான் உதவ முடியும். அதை வைச்சு, அதைப் புரிஞ்சுகிட்டு, நிலைமையைச் சமாளிக்கறது அவங்க அவங்க சாமர்த்தியம்.'
'அதெல்லாம் இல்லை! என் மனசை வைச்சு நான் எல்லாத்தையும் சமாளிச்சிருவேன்! இதுவரைக்கும் அது என்னைக் கைவிட்டதில்லை!'
கந்தன் அலட்சியமாகச் சொன்னான்.
சித்தர் கோபமாக உறுமினார்!
' மனசைக் கேக்கத்தான் சொன்னேன். அப்படியே நம்பச் சொல்லலை. நீ இருக்கற இடத்தை எப்பவும் கவனத்துல வையி. இங்கே நடக்கறது ஒரு சண்டை. உனக்கு அதுல சம்பந்தம் இல்லாம இருக்கலாம். ஆனா, நீ இப்ப அந்த இடத்துல இருக்கே. அது நீயா விரும்பி, ஒரு புதையலைத் தேடி வந்ததால நடந்திருக்கு. அதைப் புரிஞ்சுக்கோ! உன்னோட இதயத்தின் மூலமா, இந்த உலக ஆத்மா இந்த சண்டையெல்லாம் வேணாமேன்னு கதறுவதைப் புரிஞ்சுக்கோ!'
சித்தர் சொன்னது உண்மையாயிற்று!
ஆயுதம், துப்பாக்கி தாங்கிய ஒரு கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
'இதுக்கு மேல நீங்க போகமுடியாது! இந்த வழியில உங்களை யாரு வரச் சொன்னது?' என்றான் அவர்களில் ஒருவன், மிரட்டலாக.
'நாங்க போக வேண்டிய தூரம் ரொம்ப இல்லை. இன்னும் கொஞ்சம் தான். எங்களைப் போகவிடு!' எனச் சொல்லியபடியே சித்தர் அவனை தீர்க்கமாகப் பார்த்தார்.
சிறிது நேரம் நான்கு விழிகளும் இமைக்காமல் சந்தித்தன.
தலைவன் தன் பார்வையைத் தளர்த்தினான்.
'சரி, சரி! பத்திரமாப் போங்க' என வழி விட்டான்.
'நீங்க பார்த்த பார்வையை நானும் பார்த்தேன். என்ன ஒரு தீட்சண்யம்!' என அவரிடம் சொன்னான், சிறிது தூரம் சென்றதும்.
'ஒருத்தரோட கண்ணுதான் அவங்களோட உள்பலத்தைக் காட்டுது' என அமைதியாகச் சொன்னார் சித்தர்.
அவர் சொன்னது உண்மைதான் எனக் கந்தன் எண்ணினான். ஏனெனில், இவர்கள் இருவரின் பார்வைகள் சந்தித்த போது, அந்தக் கூட்டத்தில் இருந்த வேறொருவரின் பார்வையை கந்தன் பார்க்க நேரிட்டது. அந்த ஆளின் முகம் சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால், அவர் இவ்விருவரையும் கவனித்ததை இவன் பார்த்தான்.
************
'சித்து வேலைன்னா என்ன?' பேச்சை மாற்றி கந்தன் கேட்டதும் சித்தர் அவனைப் பார்த்தார்.
'உலத்துக்குன்னு இருக்கற ஒரு ஆத்மாவைப் புரிஞ்சுகிட்டு, அது மூலமா, உனக்குன்னு விதிச்சிருக்கற புதையலை நீ தேடிக் கண்டுபிடிக்கறதுதான் சித்து வேலை!'
'இப்படி மழுப்ப வேண்டாம்! நான் அதைக் கேக்கலை! இந்த தங்கம் செய்யறது எப்படின்னு.....' என இழுத்தான்.
சித்தர் சற்று நேரம் மௌனமாயிருந்தார்.
'இந்த உலகத்துல இருக்கற எல்லாமே ஒண்ணொண்ணா வளர்ந்ததுன்னு உனக்கு சொன்னேன் முன்னாடி. அதோட கடைசி நிலைதான் இந்த தங்கம்ன்ற ஒண்ணு.
எப்படி ஏதுன்னு என்னைக் கேட்காதே. அப்படித்தான் பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதை நானும் நம்பறேன்.
ஆனா, இதை தவறா புரிஞ்சுகிட்ட மனுஷங்க, இதுதான் ஒவ்வொருத்தனும் வைச்சிருக்க வேண்டிய ஒண்ணுன்னு நம்பிகிட்டு, இதுக்காகவே சண்டை போடறாங்க.
இந்த உலகம் பல விஷயங்களை நமக்கு சொல்லிகிட்டே இருக்கு.
எப்படி, ஒரு நாய் குலைக்கறது யாரோ ஆளுங்க வர்றாங்கன்னு காட்டுதோ அது மாதிரி. அது குலைக்கற வரைக்கும் நமக்கு அது தெரியறதில்லை. ஆனா, குலைச்சதும் உடனே, 'ஆரது?'ன்னு ஒரு குரல் விடறோம். அப்படித்தான் இதுவும்.
இதைப் புரிஞ்சுக்காம, பெரிய பெரிய தவம் பண்ணினவங்க கூட இந்த தங்கத்தோட மோகத்தால அதல பாதாளத்துல விழுந்திருக்காங்க. அதை நானும் பார்த்திருக்கேன்.
சில பேரு புரியாம, ....... சில ஆளுங்க புரிஞ்சுகிட்ட பின்னாலும்!
சரி, அதை விடு! நீ வந்த வேலையைப் பாரு. இன்னும் அனேகமா ஒரு நாளுதான்!' என்றார் சித்தர்.
தன்னையுமறியாமல், ஏதோ ஒரு பரவசத்துடன், அவரை கை கூப்பி வணங்கினான் கந்தன்!
[தொடரும்.]
****************************
"ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. " [725]
அடுத்த அத்தியாயம்
30 பின்னூட்டங்கள்:
//'ஒருத்தரோட கண்ணுதான் அவங்களோட உள்பலத்தைக் காட்டுது' என அமைதியாகச் சொன்னார் சித்தர்.//
அகத்தின் அழகு முகத்தில்( அதிலுள்ள ரெண்டு கண்களில்) தெரியும் .
சொல்லிவச்சுட்டுப் போயிருக்காங்க.
//'உன்கிட்ட ஒரு பெரிய ஐஸ்வர்யம் இருக்க்குன்னு வைச்சுக்க. அதைப் போயி அடுத்தவர்கிட்ட சொன்னியானா, உன்னை ஒரு பைத்தியமாத்தான் பார்ப்பாங்க! சுத்தமா நம்ப மாட்டாங்க!' //
:-)
நாம் எதை நம்ப விரும்புகிறோமோ அதத்தான் நம்புகிறோம். ஆப்ஜெக்டிவாக பார்ப்பவர் சிலரே.
திவா
நானும் கை கூப்பி வணங்கிக்கறேங்க. நாளைக்கு வரேன்.
பின்னூட்டம் இட்டு விட்டு குளிக்கப்போனா உள்ளேயிருக்கறவன் கொஞ்சம் ரவுஸு பண்ணான். என்னடான்னேன். என்ன இப்படி முட்டாத்தனமா காமண்ட் எழுதறேன்னான். என்ன சொல்றே ன்னேன். நாம எதிர்பார்கறததான் நம்புவோம். விரும்பறத இல்ல. நீ பயந்துண்டே இருக்கற சமாசாரம் கெட்டதா - விருப்பமிலாத இருந்தாலும் உடனே நம்பற இல்ல அப்படீன்னான். சரிதான், அப்போ கரக்ஷன் போடறேன் ன்னேன். உள்ளு, கரக்ஷன் போட்டாச்சு!
திவா
பின்னூட்டம் இட்டு விட்டு குளிக்கப்போனா உள்ளேயிருக்கறவன் கொஞ்சம் ரவுஸு பண்ணான். என்னடான்னேன். என்ன இப்படி முட்டாத்தனமா காமண்ட் எழுதறேன்னான். என்ன சொல்றே ன்னேன். நாம எதிர்பார்கறததான் நம்புவோம். விரும்பறத இல்ல. நீ பயந்துண்டே இருக்கற சமாசாரம் கெட்டதா - விருப்பமிலாத இருந்தாலும் உடனே நம்பற இல்ல அப்படீன்னான். சரிதான், அப்போ கரக்ஷன் போடறேன் ன்னேன். உள்ளு, கரக்ஷன் போட்டாச்சு!
திவா
டீச்சர் சொன்னா தப்பாப் போகுமா!
:)
நாளைக்கும் வாங்க, கொத்ஸ்!
//நாம் எதை நம்ப விரும்புகிறோமோ அதத்தான் நம்புகிறோம். ஆப்ஜெக்டிவாக //
இதில் நான் சொல்ல நினைத்தது,
நம் திறமையை நாமே பீற்றிக் கொண்டால், அடுத்தவர் பொறாமை, வெறுப்பு, இயலாமை, ஆத்திரம் போன்ற பல காரணங்களால் அதை நம்ப மறுப்பார்கள் என்பதை.
// நீ பயந்துண்டே இருக்கற சமாசாரம் கெட்டதா - விருப்பமிலாத இருந்தாலும் உடனே நம்பற இல்ல அப்படீன்னான். //
இது பெரும்பாலும் சரிதான், திரு.திவா.
இதையே சித்தர், வெடிகுண்டு தயாரிக்கற பொருள்னு சொல்லியிருந்தார்னா, காவல்காரங்க நெட்டியில கை வைச்சு தள்ளிகிட்டுப் போயிருப்பாங்க!
:))
//இப்போதெல்லாம் அவன் மனசு ஒன்றுமே பேசுவதில்லை. அமைதியாக இருந்தது//
இந்த வரிகள் பிடித்திருந்தன. நிறைகுடங்கள் தளும்பிடாநிலையின் அமைதியும் நிசபதமும் நெஞ்சில் நிழலாடியதால்!
கூடவே ஒரு ஆதங்கம், பதிவில் நிறைய விஷயங்களை சொல்லாமல் ஒன்றை மட்டும் ஒரு சமயத்தில் சொல்லாதோ என்று.
அப்படிப்பார்த்தால், தொடர் மெகா சீரியல் போன்றாகிவிடும் என்றும் தெர்கிறது இருந்தாலும்....:-)
கண்கள் மனிதனின் முக்கிய உறுப்பு. பேசும் போது எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசுக என்பது மேலாண்மை வகுப்பின் பால பாடம். மனதின் கட்டுப்பாட்டுக்கு நல்ல உவமைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. பள்ளத்தில் விழாமல் சிரிக்கும் மழலை, வீட்டிற்கு சரியாக வரும் குடிகாரன், கண் தெரியாத வயதான பெரியவர் - அருமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்.
//
'உன்கிட்ட ஒரு பெரிய ஐஸ்வர்யம் இருக்க்குன்னு வைச்சுக்க. அதைப் போயி அடுத்தவர்கிட்ட சொன்னியானா, உன்னை ஒரு பைத்தியமாத்தான் பார்ப்பாங்க! சுத்தமா நம்ப மாட்டாங்க!' //
சத்தியமான உண்மை.
//சில பேரு புரியாம, ....... சில ஆளுங்க புரிஞ்சுகிட்ட பின்னாலும்!//
பல நேரங்களில் நன்கு தெரிந்தும் தவறு செய்கிறோமே - ஏன் - காரணம் ஆயிரம் சொன்னாலும் சரியான காரணம் செய்பவனுக்கே தெரியாது.
கந்தனை நல்வழிப்படுத்தும் சித்தர் வாழ்க
.உங்க ஆதங்கம் எனக்கும் உண்டு, திரு. ஜீவா.
தொடர் ஆரம்பித்த போதே, சிலர் வந்து என்ன மெகா சீரியல் மாதிரி இழுக்கப்போறீங்களான்னுல்லாம் கேட்டாங்க தெரியுமா!
இதில் பல விஷயங்கள் சொல்லப் பட்டிருந்தாலும், எல்லாமே ஒரு தடவைக்கும் மேலேயே படித்துணர வேண்டியன என்பது என் தாழ்மையான கருத்து.
பின்னூட்டம் வருவதை விட, படிப்பவர்கள் இதைப் பற்றி சிந்தித்து, தங்களை ஒரு திறனாய்வு செய்து கொண்டாலே இதை எழுதியதின் வெற்றி எனக் கருதுவேன்.
நன்றி.
//மனதின் கட்டுப்பாட்டுக்கு நல்ல உவமைகள் சொல்லப் பட்டிருக்கின்றன.//
எழுதும் போது தடயின்ரி வந்த இந்நிகழ்வுகள் பற்றி ஒருவராவது குறிப்பிட வேண்டும் என எண்ணினேன்![அகம்!!]
மிக்க நன்றி, திரு. சீனா!
//சரியான காரணம் செய்பவனுக்கே தெரியாது.//
இதில் எனக்கு சற்று மாறுபட்ட கருத்து இருக்கிறது.
நிலை பிறழ்ன்ற நேரங்களைத் தவிர, காரணம் தெரிந்தே ஒவ்வொரு செயலும் நிகழ்கிறது.
Present
சீனா எழுதியது: //பல நேரங்களில் நன்கு தெரிந்தும் தவறு செய்கிறோமே - ஏன் - காரணம் ஆயிரம் சொன்னாலும் சரியான காரணம் செய்பவனுக்கே தெரியாது.//
ஊழ்வினை வந்து உறுத்துது போல இருக்கு. இது அடிக்கடி எனக்கு ஏற்படுது.
//நாம் எதை நம்ப விரும்புகிறோமோ அதத்தான் நம்புகிறோம். ஆப்ஜெக்டிவாக //
இதில் நான் சொல்ல நினைத்தது,
நம் திறமையை நாமே பீற்றிக் கொண்டால், அடுத்தவர் பொறாமை, வெறுப்பு, இயலாமை, ஆத்திரம் போன்ற பல காரணங்களால் அதை நம்ப மறுப்பார்கள் என்பதை. //
அஹா! இதுவரை அப்படி யோசித்ததில்லை.
மற்றவர் நம்புவது நம்பாதது நாம் சொல்லும் முறையிலும் இருக்கலாம்
திவா
"marked"
:)
//ஊழ்வினை வந்து உறுத்துது போல இருக்கு. இது அடிக்கடி எனக்கு ஏற்படுது.//
என் கருத்தும் அதுவே!
ஊழ்வினை வந்து உறுத்தும்; வருத்தாது!
:)
//அஹா! இதுவரை அப்படி யோசித்ததில்லை.
மற்றவர் நம்புவது நம்பாதது நாம் சொல்லும் முறையிலும் இருக்கலாம்
திவா//
அதுவும் சரியே!
அதைத் தவிரவும், கேட்பவரின் தேவையினைப் பொருத்தும் நம் சொற்கள் அம்பலம் ஏறுவதும் நிகழும்.
சரிதானே, திரு. திவா?
'ஒருத்தரோட கண்ணுதான் அவங்களோட உள்பலத்தைக் காட்டுது' என அமைதியாகச் சொன்னார் சித்தர்.
நூற்றுக்கு நூற்று பத்து உண்மையான வார்த்தை.பின்னூட்டம் வருவதை விட, படிப்பவர்கள் இதைப் பற்றி சிந்தித்து, தங்களை ஒரு திறனாய்வு செய்து கொண்டாலே இதை எழுதியதின் வெற்றி எனக் கருதுவேன்.
நன்றி.
உண்மையைச்சொல்லவேண்டுமானால் ஒவ்வொரு பதிவையும் இரு தடவைபடிக்கிறேன் அப்பொழுதுதான் சிலவரிகள் புரிக்கின்றது
//உண்மையைச்சொல்லவேண்டுமானால் ஒவ்வொரு பதிவையும் இரு தடவைபடிக்கிறேன் அப்பொழுதுதான் சிலவரிகள் புரிக்கின்றது //
தங்களைப் போன்ற அனுபவசாலிகள் இப்படிச் சொல்வது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது ஐயா!
நன்ரி.
//அஹா! இதுவரை அப்படி யோசித்ததில்லை.
மற்றவர் நம்புவது நம்பாதது நாம் சொல்லும் முறையிலும் இருக்கலாம்
திவா//
அதுவும் சரியே!
அதைத் தவிரவும், கேட்பவரின் தேவையினைப் பொருத்தும் நம் சொற்கள் அம்பலம் ஏறுவதும் நிகழும்.
சரிதானே, திரு. திவா?
------
சரிதான். கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில் உண்மையை "ஒரு மாதிரி" சொல்லி கேட்பவர் நம்பாதபடி செய்து பின்னர் சத்தியம் எல்லாம் செய்து ரகளை விடுவோம். நம்பவே மாட்டார்கள்.
ம்ம்ம்ம்.. அந்தக்காலம்!
திவா
நண்பரே !!
//சரியான காரணம் செய்பவனுக்கே தெரியாது.//
//இதில் எனக்கு சற்று மாறுபட்ட கருத்து இருக்கிறது.
நிலை பிறழ்ன்ற நேரங்களைத் தவிர, காரணம் தெரிந்தே ஒவ்வொரு செயலும் நிகழ்கிறது.//
உடன்பட மனம் மறுக்கிறது நண்பரே.
நிலை பிறழாத நேரத்திலும் செய்யும் செயல்களுக்கு காரணம் தெரியாத நிலை இன்றுமுண்டு. ஒரு செயலைச் செய்து விட்டு ஏன் செய்தோம் என வருந்துபவர்கள் இன்றுமிருக்கிறார்களே
பின்விளைவுகளைக் கண்டு பின்னால் வருந்தினாலும், ஒன்றைச் செய்யும் போது அதைச் செய்கிறோம், ஏன் செய்கிறோம் எனத் தெரிந்தே பொதுவாகச் செய்கிறார்கள், திரு. சீனா.
கண்ணுதான் வாசல். அந்த வாசல் தொறக்காம ஒடம்புல எந்த வாசல் தொறந்தும் பயனில்லை. அதத்தான் சித்தரு சொல்லீருக்காரு.
//கண்ணுதான் வாசல். அந்த வாசல் தொறக்காம ஒடம்புல எந்த வாசல் தொறந்தும் பயனில்லை. அதத்தான் சித்தரு சொல்லீருக்காரு.//
இந்த வார்த்தைக்கு மேல்வார்த்தை இல்லீங்கோ!
:)
இங்கன கை கூப்ப வச்சுட்டு அடுத்த பகுதியில் சித்து வேலை காட்டீங்க... நீங்களே ஒரு பெரிய சித்தரா இருப்பீங்க போல இருக்கே எஸ்.கே.
//
'மனசால ஒரு அளவுக்குத்தான் உதவ முடியும். அதை வைச்சு, அதைப் புரிஞ்சுகிட்டு, நிலைமையைச் சமாளிக்கறது அவங்க அவங்க சாமர்த்தியம்.'
//
சூப்பர்
அருமையா போய்கிட்டிருக்கு லேட்டா வந்திட்டேன் அடுத்த பாகத்துக்கு போறேன்
//பின்னூட்டம் வருவதை விட, படிப்பவர்கள் இதைப் பற்றி சிந்தித்து, தங்களை ஒரு திறனாய்வு செய்து கொண்டாலே இதை எழுதியதின் வெற்றி எனக் கருதுவேன்.//
சரி. செய்கிறேன்.
வேண்டிக் கொண்டபடி குறட்பாவை இடுகையில் இறுதியிலும் வைத்ததற்கு நன்றி எஸ்.கே.
Post a Comment