Thursday, February 09, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 46”

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 46”




42. [இரண்டாம் பகுதி] [அருள்கூர்ந்து முதல் பகுதியைப் படித்தபின்னர் இதனைப் படிக்கவும். வணக்கம்.]


குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையுமற் றதுவே.


குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

"செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே."

மொதல் ரெண்டு வரிக்கும், அடுத்த ரெண்டு வரிக்கும் ஒரு சம்பந்தத்தை வைச்சே பாடினவரு இதுலியும் அத்தயேதான் பண்ணியிருக்காரு..... இன்னா ... கொஞ்சம் மாறுதலா! அவ்ளோதான்!

இதுவரைக்கும் சொன்னது அல்லாத்தியுமே நெனைச்சுப் பார்த்தியானா, அப்பப்ப நடுவுல நடுவுல இதுக்கான 'குறி'யைக் கொடுத்துக்கினே வந்திருக்காருன்றது புரியும்! அது இன்னான்னு சொல்றேன் கேளு!

'செறிவு'ன்னா இன்னா?
அது 'அத்து'ப்போறதுன்னா இன்னா?

'செறிவு'ன்னா கலப்பு.

இது ரொம்பவே பெரிய விசயம்.
சைவ சித்தாந்தத்துல இதுக்கு ஒரு பெரிய வெளக்கமே க்கீது!

இந்த உடம்புல உசிரு வந்து கலந்தவொடனியே, மனசுன்னு ஒண்ணு வந்திருது.

அதுனால வர்றது வாக்கு!

ஒடம்புன்னா காயம்!

இந்த மனசு, வாக்கு, காயம் இதெல்லாமே ஒரு மாயையால உசிரை... ஆத்மாவை.... வந்து பிடிச்சுக்குது!

இத்தப் பாரு, கேளு, ரசின்னு மனசு சொல்லுது.
அதுக்கு வாக்கு கொஞ்சம் தூபம் போடுது.
இத்தக் கேட்டு இந்த ஒடம்பு..காயம்.. கண்டபடிக்கும் ஆடுது!
இத்தயெல்லாம் மாயைன்ற ஒண்ணுதான் ஆட்டிவைச்சு நம்மளை அல்லாட வைக்குது.
இந்த மூணோட கலப்புனாலத்தான் நாம இத்தனை ஆட்டம் போடறோம்.

இதான் செறிவுன்றது!

இப்பிடி, மனசு, வாக்கு, காயம்,ன்னு நமக்கு, ... இந்த ஒடம்புக்கு.... இருக்கற கலப்பைப் புரிஞ்சுக்கினு, அதெல்லாமே இல்லாமப் போறதுதான்,
'செறிவத்து'ன்னு அருணகிரியாரு சொல்றாரு.

அத்தினிக் கலப்பும் அத்துப் போயிருச்சாம்!... முருகனைப் பாத்ததுமே!

அடுத்தாப்பல வர்றது, 'உலகோடு உரை சிந்தையும் அற்று'.

இந்த ஒடம்போட இருக்கற சிந்தனை இல்லாமப் போச்சுன்னா, நீ ஆரு, நான் ஆருன்றதே இல்லாமப் போயிறும். ஒடம்பைப் பத்தின சிந்தனை இல்லைன்னா, இந்த ஒலகத்தப் பத்தின சிந்தனையுந்தானே இல்லாமப் போயிறும்?


நான் இருக்கேன்றது தெரியுது.

ஆனாக்காண்டிக்கு, நான் எங்கே இருக்கேன்ற நெனைப்பே இல்லாமப் போயிருச்சாம் அருணகிரியாருக்கு, இந்த முருகனோட காலைப் பிடிச்சு, அவருகிட்டேர்ந்து அந்த அநுபூதி கெடைச்சதும்!


அதத்தான் இந்த 'உலகோடு உரை சிந்தையும் அற்று'ன்றதுல சொல்லிக் காட்றாரு.

சரி, இதெல்லாம் இந்த உடலுக்குன்னு வந்தது.

உடலு மட்டும் இன்னா பண்ண முடியும்?
அதுக்குள்ள உசிருன்னு ஒண்ணு வந்ததாலத்தானே இத்தினியும் நடக்குது!

அந்த உசிருக்குன்னு ஒரு ரெண்டு கொணம் க்கீது!

அறிவு, அறியாமைன்னு!
அதத்தான் அடுத்த வார்த்தை சொல்லுது!

"அறிவற்று அறியாமையும் அற்றதுவே"

இதான் இதுன்னு தெரிய வைக்கறது அறிவு.
இதான் இதுன்னு தெரிய வைக்காம நம்மளை மயங்க வைக்கறது அறியாமை!

ஒரு ஒதாரணம் சொல்றேன் கேளு!

சாமிதான்... ஒன்னோட முருகந்தான்... சத்தியமான பொருளுன்னு ஒனக்குத் தெரியும்.
இது அறிவு!
அதே சமயத்துல கண்டதையும் பார்த்து மயங்கிப்போயி, அவங்க சொல்ற ஆசை வார்த்தையுல மயங்கி, அவங்க பின்னாடி சுத்தி, அவங்க காரியம் ஆனவொடனே ஒன்னியக் கள[ழ]ட்டி வுட்டுட்டு, நீ, 'நாம இன்னா பண்ணினோம்னு இப்பிடி ஆயிருச்சு'ன்னு மயங்கறது ஒன்னோட அறியாமை.

சரி, போ, நாம செய்ய வேண்டியத, செய்யவேண்டிய நேரத்துல செய்யவேண்டியவங்களுக்கு சரியா செஞ்சோம்னு நெனைச்சு, நீ மேல நடந்தியானா அது அறிவு!
அதில்லாம, ஏன் இப்பிடி எனக்கு ஆச்சுன்னு அவங்க பின்னாடியே போயி அலைஞ்சியானா அது அறியாமை!
சரியா?

இந்த அநுபூதி நெலை வந்ததுமே, அருணகிரியாருக்கு இந்த ரெண்டுமே இல்லாமப் போயிருச்சாம்! முருகன் ஒர்த்தனே கதின்னு அவனைக் கெட்டியாப் பிடிச்சுக்கினாரு. அதுனால அநுபூதி கெடைச்சதும், இந்த அறிவு, அறியாமை ரெண்டுமே தொலைஞ்சிருச்சு அவருக்கு!

ஒண்ணைப் புரிஞ்சுக்கணும் நீ தெளிவா!
அவரு பண்ணின புண்யத்துனால, இன்னான்னமோ தப்பு பண்ணியிருந்தாலும், அருணகிரியாரைத் தாங்கிப் பிடிச்சான் முருகன்!
அப்போ அநுபூதி கொடுக்கலை அந்த முருகன்!

'முத்தைத்தரு'ன்னு ஒரு வார்த்தையைக் குடுத்து, 'இத்த வைச்சுக்கினு என்னியப் பத்திப் பாடு'ன்னு சொல்லிட்டுப் பூட்டான் அவன்!

அதுக்கப்புறமா, இவரு ஊரூராத் திரிஞ்சு, அல்லாக் கோவிலுக்கும் போயி, முருகன்மேல ஆயிரமாயிரமாப் பாட்டுப் பாடி, அதுக்கப்பறந்தான் இவருக்கே அநுபூதி கெடைச்சதுன்னு கதை சொல்லுது!

இதுலேர்ந்து இன்னா தெரியுது?

ஒரு குரு வந்து ஒங்கிட்ட ஒண்ணைச் சொன்னாருன்னா அத்தக் 'கப்'புன்னு புடிச்சுக்கினு அப்பிடியே பண்ண ஆரம்பிக்கணும்!

அப்பிடிப் பண்ணினியான்னா, ஒனக்கு மேலே மேலே நல்லதே நடக்கும்!
அதுக்கு நடுவுல நீ இன்னான்னமோ தப்புத்தண்டால்லாம் கூடப் பண்ணுவே!

ஆனா, அதையே நெனைச்சு மருகாம, அதுவா ஒன்னிய வுட்டு வெலகறப்ப, நீ அதும்பின்னாடியே போயி அலையாம, சரி, இது இத்தோட வுட்டுதுன்ற மனசாந்தியோட, ஒன்னோட வளி[ழி]யுலியே....ஒனக்குன்னு வந்து சொன்ன குரு காட்டின நெறியுலியே நடந்தியானா,... ஒனக்கும் ஒரு நல்லத்த அந்த முருகனே வந்து நடத்திக் குடுப்பான்றதத்தான் இதுல சொல்லாம சொல்லிக் காட்டியிருக்காரு அருணகிரியாரு.

அப்பிடி வர்ற அந்த அநுபூதி நெலை எப்பிடி இருக்குன்றதியும் சொல்லிட்டாரு.

இதுக்கும்மேல புரிஞ்சுக்கறதும், அதும்படிக்கா நடக்கறதும் அவங்கவங்க விதிப்படி நடக்கும். அவ்ளோதான் நான் சொல்லுவேன்' எனச் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்.

கண்களை மூடியபடியே அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த சாம்பு சாஸ்திரிகள்,

'இதே மாதிரி ஒரு 'சித்தியார்' பாட்டை எப்பவோ படிச்சிருக்கேன். இப்பவும் நெனைப்புல இருக்கு. அதைச் சொல்றேன் கேளு' எனப் பாடினார்.

'அறியாமை அறிவு அகற்றி அறிவினுள்ளே
அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து

குறியாதே குறித்து அந்தக் கரணங்களோடும்
கூடாதே வாடாதே குழைந்து இருப்பையாகில்

பிரியாத சிவன் தானே பிரிந்து தோன்றிப்
பிரபஞ்ச பேதமெல்லாம் தானாய்த் தோன்றி

நெறியாலே இவையெல்லாம் அல்லன் ஆகி
நின்று என்றும் தோன்றிடுவன் நிராதரனாயே'

'அப்பிடியே சொல்லிட்டீங்களே சாமி! இங்க சிவன், அங்கே அருணையாருக்கு முருகன்! இன்னோர்த்தருக்கு பெருமாளு!
சாமிங்கள்ல பேதமில்லை! எத்தப் பத்திக்கிறியோ, அதுவே ஒனக்கு ஒரு வளி[ழி] காட்டும்! அதான் முக்கியம்' என்றான் மயிலை மன்னார்!

நாயர் தீவிரமாக தனது 'ஓம் சரவணபவ' மந்திர உச்சாடனத்தைத் தொடர ஆரம்பித்தான்!

குறியைக் குறியாது குறித்து அறியும்


நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்


செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவற்று அறியாமையும் அற்றதுவே. [42]


********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, February 06, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 45”

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 45”


42. [முதல் பகுதி]


சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில் மீண்டும் சபை நிறைந்திருந்தது.
மயிலை மன்னார் பேசத் தொடங்கினான்.

'போன பாட்டுல அநுபூதின்ற ஒண்ணு வந்துச்சுன்னா இன்னா நெலைக்கு போவோம்ன்றதைக் கோடி காமிச்சவரு இந்தப் பாட்டுல, அத்தயே இன்னும் வெலாவாரியா சொல்ல வராரு.

கந்தனோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினா, அநுபூதி நெலை தானா வந்திரும்னு சொன்னவரு, அந்த நெலையுல இன்னான்னால்லாம் நடக்கும்ன்றத வெளக்கமாச் சொல்றாரு. பாட்டைப் படி' என்றான்.

குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையுமற் றதுவே.


குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

'ரொம்பவுமே கஸ்டமான பாட்டு இது! ஒர்த்தொர்த்தருக்கு ஒவ்வொருமாரி புரியும். அதும்படிக்கா அவங்க வெளக்கம் சொல்லுவாங்க. அவங்கவங்க நெலைக்கு தக்கமாரி அது இருக்கும். அல்லாமே சரிதான். அதுனால, அதுவா, இதுவான்ற ஆராய்ச்சியை வுட்டுட்டு, இப்ப சொல்றதக் கவனி. கொஞ்சம் புரியறமாரி,.... எனக்குப் புரிஞ்சமாரின்னும் வைச்சுக்கோயேன்....சொல்லப் பாக்கறேன் சரியா கெவனமாக் கேளு.

'குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்'

இதான் மொத ரெண்டு வரி.
அதென்னாது ''குறியைக் குறியாது குறித்து அறியும் நெறி'?


மொதல்ல 'குறி'ன்னா இன்னா?
அத்த எப்பிடி குறியாத குறிக்கறது?
எப்பிடி அத்த அறியறது?
இதெல்லாம் புரிஞ்சாத்தான் அந்த 'நெறி'ன்னா இன்னன்னு புரியும்.
ஒண்ணொண்ணாப் பாப்பம்!


இப்ப முருகன் மேல பக்தி பண்ணணும்னு ஒனக்கு ஆசை வந்திருக்குன்னு வைச்சுக்க!
அதுக்கு மொத வேலையா இன்னா பண்ணுவே?
முருகன்னா ஆரு? அவரு எப்பிடி இருப்பாரு? அவரோட வடிவை எப்பிடிக் காட்டிச் சொல்லிக்கீறங்கன்னு மனசு தேடும்.


அப்பிடி ஒரு உருவத்த, அள[ழ]கா, செவப்பா, ஒரு சின்னப் பையனா, கையுல வேலோட, காலுல சலங்கையோட, நல்லா பளபளன்னு ஒரு வேட்டி கட்டிக்கினு, தலையுல கிரீடம் வைச்சுக்கினு, மயிலு ஒண்ணு பக்கத்துல 'ரெடி'யா எப்பவும் நிக்கறமாரி ஒரு காட்சியை மனசுல பதிச்சுக்கினு, இவரையே 'குறி'யா வைச்சுக்கினு நீ, பாட்டு படிக்கறது, அவரைப் பத்தி நெனைக்கறது, பூஜை பண்றதுன்னு ஆரம்பிப்பே!


அது இல்லேன்னா, ஆண்டியாவோ, இல்லைன்னா வள்ளி தெய்வானையோடவோக் கூட இருக்கறமாரி, ஏதோ ஒண்ணைப் பிடிச்சுக்குவே. சரியா?
இப்பிடி மொதமொதலா ஒரு உருவத்த குறியா வைச்சு தொடங்கறதுக்குத்தான் 'குறி'ன்னு பேரு.


அடுத்தாப்புல, 'குறியைக் குறியாது குறித்து'ன்னா இன்னான்னு பாப்பம்.


இந்த 'குறி'...அடையாளம்... ஒரு உருவம்... இப்ப கிடைச்சிருச்சு. அது ஒரு படமாவோ, சிலையாவோ, வீட்டுலியோ, இல்லாட்டி கோவில்லியோ ஒனக்குத் தெரியும். அது ஃப்ரேம் போட்டு மாட்டியோ, இல்லாட்டி ஒரு பீடத்துல நிக்கவைச்சோ இருக்கலாம். மண்ணாலியோ, இல்லாட்டிக் கல்லாலியோ, இல்லேன்னா எதுனாச்சும் உலோகத்தாலியோ செஞ்சிருக்கலாம்.

ஆனாங்காட்டிக்கு, ஒனக்கு அத்த எப்பிடிப் பார்த்தாலும், அது இன்னான்னு புரியும்? ஒன்னோட முருகனே அங்க நேரா ஒம்முன்னாடி நிக்கறமாரித்தானே இருக்கும்? சாமியாப் பாக்கறச்சே, ஒனக்கு இந்த கல்லு, மண்ணு, பொம்மை, சிலைன்ற நெனைப்பே வராது! இதுவரைக்கும் புரிஞ்சுதா?


இதான் இந்தக் குறியை அது இன்னான்னு குறிக்காம, ஆனாக்காண்டிக்கு அதே நேரத்துல நீ நெனைச்ச சாமியைக் கும்பிடற ஞானம்! குறியைக் குறியாது குறித்து! வெளங்கிச்சா.?


இப்ப ஒரு சின்னச் சமாச்சாரம் சொல்றேன். உன்னிப்பாக் கேளு!


இதேமாரி ஒலகத்துல க்கீற ஏதோ ஒரு பொருளைக் கூட நீ ஆசையா நெனைக்க முடியும். எவ்ளோ வயசானாலும் பொண்டாட்டி எளமையா க்கீறமாரி நெனைச்சுக்கினு அலையலாம். இல்லேன்னா, ஒனக்கு சமமா வளந்தப்பறமுங் கூட,  புள்ளைங்களை நீ சின்ன வயசுல பாத்த அதே நெலையுல வைச்சுக்கினு, அவங்களைக் குடையலாம். இதேமாரி பலதும் சொல்லலாம். ஆன, இதெல்லாம் ஒனக்கு வேதனையைத்தான், கஸ்டத்தைத்தான் கொடுக்குமே தவிர, மனசுக்கு அமைதியைக் கொடுக்காது!


அத்தக் கொடுக்கற ஒரே ஆளு ஒன்னோட முருகந்தான்!


இத்தப் புரிஞ்சுக்கினு, அவன் ஒர்த்தந்தான் மெய்யி; மத்ததெல்லாம் பொய்யின்றதப் புரிஞ்சுக்கினியானா, அதான் ஞானம்!
மத்ததெல்லாம் அஞ்ஞானந்தான்!


'காயமே இது பொய்யடா! வெறும் காத்தடைச்ச பையடா'ன்னு ஒரு சித்தரு பாடினாரே, அத்தப் புரிஞ்சுக்கினு, அப்பப்ப மாறிப்போற, மாறிப்பேசற இந்த ஒலகத்து ஆளுங்க மேல க்கீற ஆசையை வுட்டுட்டு, அந்தப் பரம்பொருளு ஒண்ணுத்த மட்டுமே மெய்யா நம்பிப் புடிச்சுக்கறதுதான் 'குறியைக் குறியாது குறித்தறியும்' ஞானம்!


இது, இந்த ஞானம் வர்றதுன்றது, அப்பிடி ஒண்ணும் சுளுவில்லை! ரொம்பப் பாடுபடணும் இதுக்காவ! சரியான வளி[ழி]யைக் காமிக்கறதுக்குன்னு ஒரு குரு வந்து சொல்லுவாரு. எப்ப? நீ அதுக்குன்னே காத்துக் கெடக்கறப்ப!


எப்ப்டி காத்துக் கெடக்கறது?
அதுக்குன்னு ஒருசில முறை இருக்குன்னு பெரியவங்க சொல்லிக்கீறாங்க!


நீகூட சொல்லுவியே அடிக்கடி நீ கும்புடற அந்தப் பெரியவரு சொன்னாருன்னு, அதும்போல, தெனம் ஒரு பத்து நிமிசம் காலைலியும், ராத்திரியும் தியானம் பண்ணி, "அப்பனே முருகா! நான் பார்க்கலைன்னாலும், நீ இருக்கேன்றத நான் நிச்சியமா நம்பறேன். ஏன்னா நான் மதிக்கற, கும்புடற பெரியவங்க அப்பிடிச் சொல்லிக்கீறாங்க. அத்த நான் நம்பறதால நானும் ஒன்னிய நிச்சியமா நம்பறேன். நான் பண்ற அல்லாக் காரியத்துக்கும் நீதான் தொணையா இருந்து நடத்திக் கொடுக்கணும் கந்தப்பா'ன்னு வேண்டணும். இது மொத வளி[ழி]. ரொம்ப ரொம்ப சுளுவான வளி[ழி]யுங்கூட!


இத்தப் பண்ண ஆரம்பிச்சியானா, அடுத்தடுத்து ஒனக்கு நல்லதே நடக்கும்.


இதும்மாரிப் பண்றதத்தான் 'நெறி'ன்னு சொல்றாரு அருணகிரியாரு.


இதுக்கும் மேல இன்னான்றத ஒன்னோட குரு ஒனக்கு சொல்லித் தருவாரு. அது ஒர்த்தொர்த்தருக்கும் வெவ்வேறயா இருக்கும்ன்றதால அத்தப் பத்தி இப்பப் பேசவேணாம்.
ஆனா, அந்த மொதப் படியை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்கோ' என நிறுத்தினான்.

'அந்தப் பாட்டை இன்னொருதரம் சொல்லுடாப்பா' என சாஸ்திரிகள் கேட்க, மகிழ்வுடன் பாடிக் காட்டினேன்.


'இறையவன் உண்டு கண்டவர் சொன்னார்
மறைநூற் பொருளின் சாரம் இதுவே
நம்பிடும் நல்லவர் சொல்லிய சொல்லால்
நானும் நம்பினேன் நீவரு வாயென.

இன்றையப் பொழுதின் செயல்கள் யாவினும்
நின்னரு ளோங்கி நித்தமும் துலங்க
இறையவா நீயே என்னுடனிருக்கும்
ஒருவரம் கேட்பேன் உடனே யருள்வாய்!'


'திவ்யமா இருக்குடா!' எனச் சிலாகித்தார் சாஸ்திரிகள்.
மன்னார் மேலே தொடர்ந்தான்.

இந்த 'நெறி'யத்தான் எப்பிடி, ஆரு வந்து காமிச்சாருன்றத அடுத்த வார்த்தையாப் போட்டிருக்காரு....."தனி வேலை நிகழ்த்திடலும்'னு!


அதென்னா 'தனி வேலை'?
எதுனாச்சும் ஸ்பெசல் வேலையா?
அப்பிடி அர்த்தம் பண்ணிக்கக் கூடாது.


"தனி வேல் ஐ"ன்னு பிரிச்சுப் பார்க்கணும்.


தனி வேலுன்னா, இதுக்கு நிகரு எதுவுமே இல்லாத வேலுன்னு அர்த்தம்.
அத்தக் கையுல வைச்சிருக்கற சாமிதான் முருகன்!
'ஐ'ன்னா தெய்வம், சாமின்னு பொருளு.


இதும்மாரி ஒரு தனிவேலைக் கையுல வைச்சுக்கினு முருகனே வந்து இவருக்கு நடத்திக் காட்டினாராம் அந்த நெறியை!


இந்த வரியுலியே இன்னொண்ணும் சொல்லாமச் சொல்லிருக்காரு அருணையாரு.
வந்தவன் தனி ஆளாத்தான் வந்தான். கையுல வேலோட வந்தான்னு ஒரு சங்கதியும் சொல்றாரு!


ஆரோ ஒரு குரு வரலை! அந்தக் கந்தனே நேரா வந்து தானே குருவா நின்னு இவருக்கு ஒரு நெறியைக் காட்டினாருன்ற சமாச்சாரம் இதுலேர்ந்து வெளங்குதா?' என்றான் மயிலை மன்னார்.

புரிந்ததுபோலத் தலையாட்டினேன். நாயர் மௌனமாகவே இருந்தான். சாம்பு சாஸ்திரிகள் கன்னத்தில் போட்டுக் கொண்டார்!

இதும்மாரி ஆனதுனால இவருக்குள்ளாற இன்னான்னால்லாம் நடந்திச்சுன்றதத்தான், அடுத்த ரெண்டுவரி சொல்லுது' என நிறுத்தினான் மயிலை மன்னார்.

'ஓம் சரவணபவ!'
********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Wednesday, February 01, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 44

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 44”


41.

அடுத்த பாட்டைக் கேட்பதற்காக் கூடியிருந்தோம். மன்னார் என்ன சொல்லப் போகிறான் என எல்லாருக்குள்ளும் ஒரு ஆவல்!


அந்த நேரத்தில் வேக வேகமாக ஒருவன் ஓடிவந்து நேரே மன்னாரின் கால்களில் விழுந்தான்!
அனைவரும் பதறிப் போனோம்.


இன்னாடா கேசவா? இன்னாச் சமாச்சாரம்? ' என அவனை அன்புடன் தூக்கி நிறுத்தினான்.

'அண்ணே, நீதாண்ணே என்னியக் காப்பாத்தணும்! நொச்சிக்குப்பம் ஆளுங்க ரவுண்டு கட்டி அடிக்க வர்றாங்கண்ணே! இத்தினிக்கும் நான் ஒண்ணுமே பண்ணலை! நம்ம ராசுப் பயலுக்கு 'எல்ப்' பண்ணப்போயி இப்பிடி ஒரு தாவு வந்திரிச்சுண்ணே!' என அழத் துவங்கினான் கேசவன்.

'சரி, சரி, அளு[ழு]வாத! அதான் எங்கையுல வந்து சொல்லிட்டல்ல! இன்னா ஏதுன்னு வெசாரிக்கறேன். நொச்சிக்குப்பம் பீட்டரு நம்மகிட்ட இருந்தவந்தான்1 ஒண்ணும் கவலைப்படாதே! பொட்டப் புள்ளமாரி அளறான் பாரு!' என்று அவனைத் தேற்றினான் மயிலை மன்னார்!

எங்களைப் பார்த்து, "இப்ப இந்தக் கேசவன் வந்தானே, அதேம்மாரித்தான் இப்ப சொல்லப்போற பாட்டும். அதுக்குன்றமாரியே இப்ப இங்கியும் ஒரு சீன் ஆயிப்போச்சு' எனச் சிரித்தபடியே என்னைப் பார்க்க, உடனே அடுத்த பாடலைப் படித்துக் காட்டினேன்!

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னோபதே சிகனே

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செயும் நாள்
வாகா முருகா மயில்வாகனனே
யோகா சிவஞான உபதேசிகனே

இதுக்கு முன்னாடியே ஒரு ரெண்டு மூணு பாட்டுல இதே போலச் சொல்லியிருக்காரு அருணையாரு. இந்தப் பாட்டை எப்பிடிப் படிக்கணும்னா,

"நமனார் கலகம் செயும் நாள் சாகாது எனையே சரணங்களிலே கா கா!"

நமன்னா எமன்! அவரைக் கொஞ்சம் மரியாதையா, நமனார்னு சொல்றாரு!
மாமன், மாமனார் மாரின்னு வைச்சுக்கோயேன்.

இவரோட வேலை இன்னான்னு நமக்கல்லாம் நல்லாவே தெரியும்.

எப்ப நம்ம டைம் முடியப்போறதுன்னு இவரு ஒரு கணக்கு வைச்சுக்கினு, கரீட்டா போயி நின்னுடுவாரு காவு வாங்கறதுக்கு!

அதுவும் சும்மால்லாம் போவ மாட்டாரு.
பெரிய கடாமீசையைத் திருகிக்கினு, எருமைக்கெடா மேல குந்திக்கினு கையுல ஒரு கவுத்த வீசிக்கினே ஒரு தோரணையோடதான் வருவாரு இந்தாளு!

'ம்ம்..கெளம்பு, கெளம்பு நேரமாச்சு'ன்னு அதட்டுவாராம்!
அதைத்தான் கலகம் பண்றதுன்னு கொஞ்சம் பயத்தோடயே சொல்லிக் காட்றாரு.

முந்தி ஒரு பாட்டுல சொன்னேனே, பெரிய மந்திரி வந்தா, மத்த மந்திரிங்கள்லாம் எளு[ழு]ந்து நிப்பாங்கன்னு!

அதப்போல, இந்த எமனார் பண்ற கலாட்டாவை எப்பிடி நிறுத்தறதுன்னு கொஞ்சம் யோசிக்கறாரு. ஆருகிட்ட போனா, நாம தப்பிக்கலாம்னு நெனைச்சுப் பாக்கறாரு.

இருக்கறதுலியே ரொம்பப் பெரிய ஆளா இருக்கணும். அவருக்கு மேல பெரிய சாமியே கெடையாதுன்றமாரி இருக்கணும். அப்பிடியாப்பட்ட சாமிகிட்ட போயி, அவரோட காலைப் பிடிச்சுக் கதறினா, அவரு கருணை பண்ணுவாருன்னு ஒரு ஐடியா வருது!

ஒடனேயே, அது ஆருன்னும் புரிஞ்சிருது!

'முருகா! நீதான் கதி! ஒன்னோட பாதமே எனக்கு சரணாகதி! நீதான் காப்பாத்தணும்! ஒடனே வந்து நான் செத்துப் போவாம காப்பாத்துப்பா'ன்னு கதர்றாரு.

இந்த விசயம் கொஞ்சம் லேசா ஒதைக்கும்!

அதெப்பிடி சாவாம காப்பாத்த முடியும்னு ஒரு 'டவுட்டு' கெளம்பும்!

அதுலதான் இந்த அனுபூதி சமாச்சாரம் ஒளிஞ்சுக்கினு க்கீது!

சாதாரணமா ஒர்த்தர் செத்துப்போனாக்க, எமன் வந்து உசிரை எடுத்துக்கினுபோயி, அவரோட பாவ, புண்ணியக் கணக்கைப் பாத்து, எங்க போவணுமோ அங்க அனுப்பி வைச்சு, அந்தக் காலம் முடிஞ்சதும், சொர்க்கமோ, நரகமோ, அங்கேருந்து மறுபடியும் இன்னொரு பொறவி கொடுத்து கீளே[ழே] பூமிக்கு வந்திர்றதுதான் வள[ழ]க்கமா நடக்கற சமாச்சாரம்.

ஆனாக்காண்டிக்கு, முருகனோட காலுல போயி விளுந்துட்டா, அவரோட கருணை கெடைச்சிருச்சுன்னா,...அதுக்கப்புறமா, இந்த சாவுன்றதே கெடையாது! எப்பவும் அவர்கூடவே தன்னை வைச்சிக்கிருவாராம்!
அது தெரிஞ்சதாலத்தான், கா, கான்னு ரெண்டு தபா தன்னைக் காப்பாத்தச் சொல்லிக் கேக்கறாரு அருணகிரியாரு. அவ்ளோ அவசரம்!

சரி, சரி, புரியுது, இப்ப இன்னா கேக்கப்போறேன்னு!
இதுக்கும் அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்பந்தம்னுதானே ஆர்வமா காத்துக்கினு க்கீறே?

இருக்கறதுலியே பெரியா சாமியாப் பாத்துத் தேடினாருன்னு சொன்னேன்ல?
அதத்தான் இந்த ரெண்டு வரியுலியும் சொல்லிக் காட்றாரு!

"வாகா முருகா மயில்வாகனனே யோகா சிவஞான உபதேசிகனே!"ன்னு!

'வாகா'ன்னு மொத வார்த்தை!
இதுக்கு பலமாதிரியா அர்த்தம் சொல்லலாம்!

'சீக்கிரமா வாப்பா, வந்து காப்பாத்துப்பா'ன்னு ஒரு பொருளு.

வாகான்னா, அள[ழ]கான வாகனத்துல வர்றவனேன்னும் சொல்லலாம்.

வாகுன்னா அள[ழ]குன்னே ஒரு அர்த்தமும் க்கீது! அதும்படிக்காப் பாத்தா, ரொம்ப அளகானவனேன்னும் புரியும்.

அடுத்தாப்பல 'முருகா'!
இதுக்கு அர்த்தம் நான் சொல்லவே வேணாம்.
பேரை கேட்டதுமே ஒடம்புல்லாம் அப்பிடியே புல்லரிச்சிரும்! அப்பிடி ஒரு சொல்லு இந்த முருகான்றது!

எமன் வர்ற அந்த சங்கடமான நேரத்துல ஒடனே வர்ற சாமியாவும் இருக்கணுமே!
அதுக்குத்தான் அடுத்ததா, 'மயில் வாகனனே'ன்னு செல்லமாக் கூப்பிட்டு, முருகனுக்கே அத்த நெனைப்புல குடுக்கறாரு!

பெருச்சாளி, மாடு அது இதுன்னு மெதுவா வர்ற சாமிங்களை விட, இந்த மயில் மேல வர்ற சாமி கொஞ்சம் ஒசத்தியாப் படுது இவருக்கு!

பள[ழ]ம் வேணும்னு ஒலகத்தயே ஒரு செகண்ட்ல சுத்தி வந்த பறவை ஆச்சே!
அதுனால இத்தப் புடிச்சுக்கினாரு!

கெருடன் மேல வர்ற சாமிகூட, ஆனை வந்து 'ஆதிமூலமே'ன்னு கத்தினப்ப, அந்தக் கெருடனை விட்டுட்டு அவரே நேரா வந்தாருன்னு ஒரு கதை படிச்சிருக்காரு!
அதுனால, இந்த மயிலை செலெக்ட் பண்ணிட்டாரு!

'யோகா'! இந்த யோக சக்திங்கல்லாம் க்கீதே, இத்த நல்லாவே தெரிஞ்சு வைச்சுக்கினு, அல்லாருக்கும் குடுக்கற சாமியும் முருகந்தான்னு நெனைச்சு, யோகான்னு கூப்புடறாரு.

இப்பத்தான் கொஞ்சம் கொள[ழ]ப்பமாப் பூடுது அருணகிரியாருக்கு!
இவரே இத்தினி ஒசத்தின்னா, இவரோட நயினா, அதான் நம்ம கபாலி,... அவரு இவரை விடவும் பெரிய ஆளு இல்லியான்னு!

இவரு கையுல க்கீற அத்தினி சமாச்சாரமும் அவரு கையுலியும் க்கீது!
அப்ப ஆரைக் கூப்புடறதுன்னு யோசனை பண்றாரு!

ஏன்னா, எமனை கெலிக்கறதுக்கு வர்ற சாமி ரொம்பவே ஒசந்ததா இருக்கணும்ல!
அதான்!

அப்பத்தான், 'டக்'குன்னு நெத்திப் பொட்டுல பட்டமாரி ஒரு விசயம் நெனைப்புல வருது!

அட! அந்த பரமசிவனே இவருகிட்ட மண்டி போட்டு பாடம் கேட்டவராச்சே!
அப்போ, ஆரு ஒசத்தியா இருக்க முடியும்!

மெய்யாலுமே, நம்ம முருகன் தான்னு முடிவு பண்ணிட்டு, 'சிவஞான ஒ[உ]பதேசிகனே'ன்னு அடக்கவொடுக்கமா, பயபக்தியா, கையைக் கட்டிக்கினு கெஞ்சிக் கேக்கறாரு!

நீ மட்டும் வந்து ஒன்னோட ரெண்டு காலையும் காட்டி, எனக்கு கருணை பண்ணினேன்னா, நான் அதுக்கப்பால, சாவே இல்லாத ஒரு நெலைக்குப் போயிருவேனே! ஒடனே வந்து காப்பாத்துப்பான்னு இந்தப் பாட்டுல சொல்றாரு!

அனுபூதின்ற ஒண்ணு வந்திருச்சுன்னா, இன்னா நெலைக்கு நாம போவோம்ன்றத சொல்லாம சொல்லி ஒனக்கும், எனக்கும் புரிய வைக்கறாரு அருணகிரிநாதரு!' எனச் சொல்லிவிட்டு,

'சரி, நீ வா கேசவா! இன்னா சமாச்சாரம்னு விசாரிப்போம்' என அவனை அழைத்துக்கொண்டு அந்தப் பக்கமாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறிக் கிளம்பினான் மயிலை மன்னார்!

'ஓம் சரவணபவ!'
********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, January 26, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 43. 40.[இரண்டாம் பகுதி]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 43
40.[இரண்டாம் பகுதி]

'இன்னா கேட்டீங்க சாமி? அடுத்த ரெண்டு வரியா?

இந்தப் பாட்டுல ஒரு விசேசம் இன்னான்னு கெவனிச்சீங்களா?
ஓரோரு வரியிலியும் ஒரு 'ஓடு' வருது!
வினையோடு, மனையோடு, சுனையோடு, தினையோடுன்னு!

'ஓடு'ன்னா ஓடறது இல்ல!
எ[இ]லக்கணத்துல சொல்லிக்கீற 'ஓடு'!
ஏளா[ழா]ம் வேத்துமை உருபுன்னு சொல்வாங்களே, அதான் இது!

அல்லாம் எப்பவோ சின்ன வயசுல படிச்சது! இன்னா சாமி? நான் சொல்றது சர்த்தானே?' என சாஸ்திரிகளை மன்னார் பார்க்க, தன் தலையை ஆட்டியபடியே அதை ஆமோதித்தார் சாஸ்திரிகளும்!


'சரி, அத்த வுடுவோம்! இப்ப பாட்டுக்குள்ளாற போலாம்!
மொத ரெண்டு வரியுல சொன்னதுக்கும், இந்த ரெண்டு வரிக்கும் ஒரு சம்மந்தம் க்கீது!
அது இன்னான்னு எனக்குத் தெரிஞ்சவரைக்குமா சொல்றேன்.
இதான் அதுன்னு நா சொல்ல வரல!
ஆனாக்காண்டிக்கு, இப்பிடியும் சொல்லியிருப்பாரோன்னு எனக்குப் பட்டதத்தான் இப்ப சொல்லப் போறேன். சரியா?' என்ற பீடிகையுடன் தொடர்ந்தான் மயிலை மன்னார்.

"சுனையோடு அருவித் துறையோடு பசுந்தினையோடு இதணோடு திரிந்தவனே."

ஒரு அள[ழ]கான காதல் கதையை ஒரு 'பெயிண்டிங்'மாரி கோடு போட்டுக் காட்டறாரு இங்க!

வள்ளியக் கண்ணாலம் பண்ணிக்கோன்னு நாரதர் வந்து திருத்தணியுல முருகன் கையுல சொன்னதும், தேவானையம்மா சம்மதத்தோட முருகன் கெளம்பி வராரு.

ஏன்னா, தேவானையம்மாவுக்கு முன்னாடியே தெரியும், அங்க க்கீறது நம்ம தங்கச்சிதான்னு!

அம்ருதவல்லி, சுந்தரவல்லின்னு ரெண்டு பொண்னுங்க, பிரம்மாவுக்கு!
அவங்க ரெண்டு பேருமே, முருகந்தான் எங்களுக்குப் புருசனா வரணும்னு தவம் பண்றச்சே, கந்தசாமி அவங்க முன்னாடி வந்து, 'அப்பிடியே ஆவட்டும். னு சொல்லி வரம் தந்ததால, ஒருத்தங்க இந்திரனுக்கு மவளா ஆனை வள[ர்]த்த தேவானையாவும், இன்னொருத்தங்க வேடக்கொலத்துப் பொண்ணா, நம்பிராசனுக்கு மவளா, வள்ளியம்மாவாவும் பொறந்த கதை இவங்களுக்குத் தெரியும்!


இப்ப, முருகன் கெளம்பி வராரு.


இந்தம்மா, வள்ளியம்மா, காட்டுல வள[ர்]ந்து, தெனைப்புனத்தைக் காவல் காக்கறதுக்காவ, ஆலோலம் பாடிக்கினு க்கீறாங்க!

இப்ப நீ ஒண்ணப் புரிஞ்சுக்கணும் நல்லா!
தேவானையம்மா கிரியா சக்தி!
வள்ளியம்மா இச்சா சக்தி!
கிரியா சக்தி தூண்டுதலால, இச்சா சக்தியைத் தேடிக்கினு முருகன் வராரு!


ஏன்னா, இச்சா சக்தியாலத்தான் இந்த ஒலகமே நடக்குது!
அவங்க தொ[து]ணை இல்லாம எதுவுமே நடக்க ஏலாது!

தானே அல்லாத்தியும் பண்ண முடியும்னு நடத்திக் காட்டின முருகன், இப்ப இந்த இச்சா சக்தியைத் தேடிக்கினு வராரு!
எதுக்காவன்னா, ஒலகம் நல்லபடியா நடக்க, ஒரு பொண்ணோட தொணை எப்பவுமே வேணும்ன்றதக் காட்றதுக்காவத்தான்!


ஒரு ஆம்பளை ஒதவியோடத்தான் ஒரு பொண்ணு கெர்ப்பம் அடைஞ்சாலும், அத்தப் பொத்திக் காப்பாத்தி, பத்து மாசம் தன்னோட வவுத்துல வள[ர்]த்து, அந்த உசிரை உருவாக்கி, அத்த வெளியே கொணாந்து, அதுக்கு மொத மொதலாப் பாலைக் குடுக்கறது ஒரு பொண்ணுதான்!


இந்தத் தாய்மைன்ற ஒரு பெரிய விசயத்த மதிக்கறதக் காட்டறதுக்காவத்தான், முருகன் வள்ளியத் தேடிக்கினு போறாரு.
அதுக்காவ, எத்தினி எத்தினி கஸ்டம்லாம் படறாருன்றதத்தான் இந்த ரெண்டு வரி சொல்லுது.


கெள[ழ]வனா ஒரு வேசம் போட்டுக்கினு, அந்தம்மா கையப் புடிச்சுக்கினு, தண்ணி குடிக்கறதுக்காவ, ஒரு சொ[சு]னையாண்ட போறாரு.

அங்க ஒரு அருவி கொட்டிக்கினு க்கீது!
அது வளி[ழி]ஞ்சு தேங்கிக் கெடக்கற சொனையிலேர்ந்து தண்ணி குடிக்கறாரு!
அதான், 'சொ[சு]னையோடு, அருவித் துறையோடு'

அதுக்கும் முன்னாடி அவர் பட்ட பாட்டைச் சொல்றதுதான், 'பசுந்தினையோடு, இதணோடு'ன்ற வார்த்தைங்க!

முன்னாடியே சொன்னேனே, இந்தம்மா தெ[தி]னைப்புனத்தக் காவல் காக்கறாங்கனு.
அதுக்காவ, ஒரு பெரிய பரணு கட்டி, அதும்மேல இந்தம்மா நின்னுக்கினு, போற வர்ற காக்கா, குருவிங்களையெல்லாம் 'சோ' 'சோ'ன்னு கவண்கல்ல வீசித் தொறத்தறாங்க!

'இதண்''னா பரணுன்னு அர்த்தம்!

அங்கியும் வந்து கந்தன் பாடாப் படறாரு!


'நீ ஆரு'ன்னு அந்தம்மா கேக்க, 'நான் ஒரு வேடன்'னு இவரு சொல்ல,
'எதுக்காவ இங்க வந்தே'ன்னு அவங்க கேக்க,
'ஒரு மானைத் தேடிக்கினு வந்தேன்'ன்னு இவர் பதில் சொல்ல,
'அப்பிடி ஒரு மானும் இங்க தெம்படலியே'ன்னு வள்ளியம்மா எடக்கா பதில் சொல்றாங்க!


இவரு சும்மா இருப்பாரா?


'அது காயாத மான், தேயாத மான்'னு ஒரு பெரிய பாட்டாப் படிச்சு வள்ளியம்மாவக் கட்டிப் பிடிச்சுக்கறாரு.

அதுக்கு அந்தம்மா கோவிச்சுக்கினு, 'இரு, இரு! என்னோட அண்ணம்மாரக் கூப்புடறேன்'ன்னு அவங்க கூப்பாடு போட, அவங்களும் ஓடி வர்றாங்க!

ஒடனே நம்மாளு இன்னா பண்றாருன்னா, ஒரு மரமாத் தன்னை மாத்திக்கினு இந்தம்மாவைக் கட்டின கையோட நிக்கறாரு!

வந்த அண்னம்மாருங்க, 'எங்கேடா, இங்க ஒர்த்தரியும் காணுமே'ன்னு சொல்லிட்டுப் பூடறாங்க!

இப்பிடில்லாம் கஸ்டப்பட்டுத்தான் வள்ளியம்மாவை கண்ணாலம் பண்ணிக்கறாரு கந்தன்!

எதுக்காவ?
இந்த ஒலகத்துல நம்மளை நம்பியிருக்கற அடியாருங்களக் காப்பாத்த, இச்சா சக்தியான இந்தம்மாவும் கூட வேணும்ன்றதுக்காவ!
அதுக்குத்தான் இப்பிடில்லாம் திரியுறாரு!

அப்பிடித்தான் நாமளும் நம்ம பொஞ்சாதிங்கள மதிச்சு, அவங்க ஒதவியோட மத்தவங்களுக்கு எதுனாச்சும் நல்லது பண்ண முடியுமான்னு பாக்கணுமே தவிர, அவங்ககிட்ட மயங்கிப் போயி வாள்[ழ்]க்கையத் தொலைச்சுறக் கூடாதுன்றத இந்தப் பாட்டு மூலமா நமக்கெல்லாம் சொல்லிக் காட்டறாருன்றதப் புரிஞ்சுக்கணும்' எனச் சொல்லிவிட்டு,
'இன்னா சாமி! நீங்க எதுனாச்சும் சொல்லணுமா' என சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்.

'இவ்வளவு விஸ்தாரமா நீ சொன்னதுக்கப்புறமா, நான் சொல்ல என்ன இருக்கு! கந்த புராணத்துல கச்சியப்ப சிவாச்சாரியாரும் இதையேதான் சொல்றார். அதை நீயும் சொல்லிட்டே! மனைவின்றவ ஒரு சுமை இல்லை. அதை ஒரு படகாப் பயன்படுத்திண்டு, பகவான் ராமகிருஷ்ணர் - மாதா சாரதாதேவி ரெண்டு பேரும் வாழ்ந்துகாட்டினதுமாதிரி, இந்த சம்ஸார ஸாகரத்தைக் கடந்து, பரப்ரும்மத்தை அடையற வழியைத்தான் நாம தேடணும்ன்றதை இந்தப் பாட்டும் மூலமா ரொம்ப திவ்யமாச் சொல்லிட்டார் அந்த மஹானுபாவர்! அந்த முருகனை எப்பவும் தியானிச்சுண்டே இருந்தா இதையெல்லாம் சுலபமாக்கிடுவன் அவன்!' என்றார் சாஸ்திரிகள்!


இதைக் கேட்ட மறுகணமே, நாயரின் 'ஓம் சரவணபவ' ஜபம் தொடரலாயிற்று!

வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன்
மனையோ டுதியங் கிமயங் கிடவோ
சுனையோ டருவித் துறையோ டுபசுந்
தினையோ டிதணோ டுதிரிந் தவனே.
*********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, January 23, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 42 [40-முதல் பகுதி]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 42 [முதல் பகுதி]
40.

ஓடி, ஓடிப் போனாலும், ஒன்னோட நிலையை நீ மறக்கக் கூடாது. எவ்ளோதான் நீ ஓடினாலும், ஒன்னோட நோக்கம் மாறக் கூடாது! இதைத்தான் இப்ப வரப்போற பாட்டு சொல்லப் போவுது! மொதல்ல பாட்டைப் படி' என்றான் அமர்த்தலாக மயிலை மன்னார்!


நாயர் கண்மூடி ஜெபித்துக் கொண்டிருக்க, ஏதோ ஒன்று நமக்குக் கிடைக்கப் போகிறது எனும் ஆர்வத்துடன் சாம்பு சாஸ்திரிகள் என்னைப் பார்த்துக் கண்ஜாடை காட்டவும், வேறொன்றும் பேசாமல் நான் பாடலைப் படிக்கலானேன்!

வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன்
மனையோ டுதியங் கிமயங் கிடவோ
சுனையோ டருவித் துறையோ டுபசுந்
தினையோ டிதணோ டுதிரிந் தவனே.


வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

'நாலாம் பாட்டுல ஒரு விசயம் வந்தது, நெனைப்பிருக்கா?!' என மன்னார் கேட்க, அவசர அவசரமாக பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன்.


'வளை பட்ட கைமாதொடு மக்களெனும்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ'
எனப் படித்தவுடன், தன் கையைக் காட்டி எனை நிறுத்திவிட்டுப் பேசலானான் மயிலை மன்னார்!


'இந்தப் பாட்டுக்கு ஒனக்குத் தெரிஞ்ச ஒர்த்தர் வந்து இன்னா சொன்னாருன்னு நெனைப்பிருக்கா?' என என்னைப் பார்க்க நான் எப்போதும் போல விழித்தேன்.


உடனே, என் உதவிக்கு வருவதுபோல சாம்பு சாஸ்திரிகள் வந்து, 'என்னடா சங்கர்! ஒனக்கு ஞாபகம் இல்லையா? தாரேஷணை, புத்திரேஷணைன்னு சொன்னாரே!' என்றதும், சட்டென நினைவுக்கு வர, 'ஆமாம், அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?' எனப் பரிதாபமாகக் கேட்டேன்!


இரக்கத்துடன் என்னைப் பார்த்த மன்னார், சாஸ்திரிகளைப் பார்த்து, 'ஐயரே! இவனுக்கு இன்னும் புரியல! நீங்க கொஞ்சம் வெவரமாச் சொல்லுங்க' என்றான்.


'ரெண்டு பாட்டுக்கு முன்னாடிதானே சொன்னேன், 'ஏஷணா'ன்னா, ஆசைன்னு. அப்போ, தார ஏஷணான்னா, பொண்டாட்டி மேலே இருக்கற ஆசைன்னு அர்த்தம். அதேபோலத்தான் புத்திர ஏஷணாவும்' எனச் சொல்லிவிட்டுத் தன் தலையில் அடித்துக் கொண்டார் சாஸ்திரிகள்!

'அதுக்குத்தான் இதுல பதில் சொல்றாரு அருணகிரியாரு. எப்பிடி இந்த மாயையிலேர்ந்து வெளியே வரமுடியும்னு ஒரு வளி[ழி] சொல்லித் தர்றாரு அந்தப் பெரியவரு. அதான் இந்தப் பாட்டு!' எனத் தொடர்ந்தான் மன்னார்!

"வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்"

எனக்குன்னு இருக்கற, என்னால வந்த, நான் கொண்டு வந்த அல்லா வெ[வி]னையுமே முருகனோட கையுல க்கீற வேல் பட்டா 'பட்'டுன்னு தீ[ர்]ந்து பூடும்னு எனக்குத் தெரியறதால அந்த வேல நான் என்னிக்குமே மறக்க மாட்டேன்னு மொதல் வரியுல சொல்றாரு.


வூடு, புள்ளகுட்டிங்க, சொத்து சொகம், சோகம் இன்னும் அல்லாமே, என்னோட வெனையால வந்தது.
இந்த வெனையையெல்லாம் என்னால எத்தினி சென்மம் எடுத்தாலும் தீ[ர்]க்க முடியாது!
ஆனாக்காண்டிக்கு, கந்தன் கையுல வைச்சிருக்கற வேலு இத்தயெல்லாம் ஒரு நொடியுல 'பொட்'டுன்னு தீ[ர்]த்துரும்.
அதுனால, எப்பவும் அந்த வேலையே நான் மறக்காமப் பாடிக்கினே இருப்பேன்னு சொல்றாரு.' என்றான் மன்னார்.

'கந்தரலங்காரத்துல ஒரு அற்புதமான பாட்டு இதையே சொல்றது! ' என்ற சாம்பு சாஸ்திரிகள் அதைப் பாடியும் காட்டினார்.


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விலங்கல் வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப்போது மறவாதவர்க்கு ஒரு தாழ்விலையே'


இதைக் கேட்டதும் சட்டென்று எனக்கு ஒரு வரி நினைவில் வர, ''அப்போ, ஔவையார்,
'சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை'
ன்னு சொன்னதும் இதைத்தானே!' என்றதும்,
மூவரும் எதோ ஒர் அதிசயத்தைப் பார்ப்பது போல, என்னைப் பார்த்தனர்!


மேலொன்றும் பேசாமல் மன்னார் தொடர்ந்தான்.

"மனையோடு தியங்கி மயங்கிடவோ"

இதுல. இப்பச் சொன்ன சொத்து, சொகம் சோகம் புள்ளைகுட்டிங்க, இது அல்லாத்துலியுமே, ஏதோ ஒரு வகையுல ஒன்னோட சம்பந்தப்பட்டவங்க ஒன்னோட பொண்டாட்டி!
இது அல்லாமே போனாக்கூட, அவங்க மட்டும் ஒங்கூட இருந்தாங்கன்னா, இது அத்தினியுமே ஒன்னால திரும்ப அடையமுடியும்!


ஏன்னா, அவங்க அத்தினி ஒசத்தி!


அல்லாத்தியுமே கொடுக்கற காமதேனுதான் பொண்டாட்டி!


இந்த ஒலகத்துல ஒனக்கு வேணும்ன்றதயெல்லாம் அவங்க தொ[து]ணையோட ஒன்னால சம்பாதிச்சிற முடியும்ன்றதுதான் உண்மை!
ஆனா, இதானா ஒனக்கு இப்ப முக்கியம்?
இந்த மயக்கத்துல சிக்கிக்கினு, இதான் சதம்னு நம்பி, இப்பிடியே ஒன்னோட
வாள்[ழ்]க்கையை நீ தொலைச்சுறப் போறியா?


அவங்க தொ[து]ணை ஒனக்கு இதுக்கும் மேலியும் ஒ[உ]தவி பண்ணும்!


நீபாட்டுக்கு, 'ஆகா! நமக்காக்காண்டி இப்ப்டி ஒரு பொண்டாட்டி வந்துட்டாளேன்னு, தலை தெறிக்க ஆடி, அவங்க பின்னாடியே சுத்தி, 'இதான் ஒலகம்! இதுக்காவத்தான் நான் பொறந்திருக்கேன், இத்தோட என் 'சென்மசாபல்யம்' ஆயிருச்சுன்னு மயங்கிராம, இவங்களோட 'இயங்கி'யே, இந்த ஒலகத்து மாயையுல சிக்கிக்காம, இவங்கள வைச்சுக்கினே, நீ தேடுற அனுபூதியை அடையப் பா[ர்]க்கணும்!னு ஒனக்கு சொல்லித் தர்றாரு அருணகிரியாரு.'என்று நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

மந்தஹாஸமாய்ச் சிரித்தபடியே, 'அப்போ, இதுக்கும், அடுத்தாப்பல வர்ற ரெண்டு வரிக்கும் என்ன சம்பந்ம்னும் சொல்லேன் மன்னார்!' எனக் கேட்டார் சாம்பு சாஸ்திரிகள்!


'அதே ஞானும் விளிக்கு' என்றான் நாயர், சற்றே தன் கண்களைத் திறந்தபடி!


வழக்கம் போல நான் மன்னார் முகத்தையே பார்த்தேன்.
**************************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, December 22, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 41 [இரண்டாம் பகுதி]

                                                                     உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 41 [இரண்டாம் பகுதி]
39.
[முதல் பகுதியையும் படிக்கவும்!]

 
மாவேழ் சனனங் கெடமா யைவிடா



மூவே டணையென் றுமுடிந் திடுமோ


கோவே குறமின் கொடிதோள் புணரும்


தேவே சிவசங் கரதே சிகனே.


அடுத்த இரு வரிகளுக்கு மன்னார் என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆவலில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். நாயரும் கண்களைத் திறந்து பார்த்தான். சாஸ்திரிகள் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது. மயிலை மன்னார் சொல்லத் தொடங்கினான்.

'இப்ப ஒனக்கு கொஞ்சம் துட்டு வேணும்னு வையி. நீ ஆருகிட்ட போவே? துட்டு இருக்கறவங்கிட்ட போவே! ஆனாக்காண்டிக்கு, துட்டு வைச்சுக்கினு க்கீறவன்லாம் குடுத்துருவானா?


இன்னா, ஏதுன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டு, அப்பறமா வா, பாக்கலாம்னு சொல்லிருவான் மனசில்லாதவன். அவங்கையுல துட்டு இருந்தும் ஒண்ணும் 'யூஸ்' இல்ல!


அதுனால நீ இன்னா பண்ணுவே? துட்டு மட்டும் வைச்சிருந்தாப் போறாது. குடுக்கற மனசும் க்கீறவனாப் பாத்து போவே.


அதுவும் பத்தாம, அவனோட கொணம் தெரிஞ்சு அந்த டயத்துக்காப் போவணும்! அப்பத்தான் காரியம் கெலிக்கும். இன்னா? சர்த்தானே நான் சொல்றது.' என்றான்.


நான் ஆமாம், ஆமாம் என்பதுபோலத் தலையாட்டினேன்.


வெறும் துட்டு சமாச்சாரத்துக்கே இத்தினி பாக்கணும்னா, இப்ப அருணகிரியாரு கேக்கற சமாச்சாரத்துக்கு இன்னால்லாம் தோணும் அவருக்கு!


பொறவியே இனிமே கூடாதாம்! இந்த மூணு விதமான ஆசையும் தொலையணுமாம்!


இத்தக் கேக்கப் போறச்சே, ஆரு இதுக்குத் தோதானா ஆளுன்னு பாக்கறாரு.


சரி, பொறவிதானே வேணாம்னு சொன்னே. அதுக்கென்ன இனிமே நீ பூமியுல பொறக்கமாட்டே! அதுக்குப் பதிலா என்னோட ஒலகத்துக்கு வந்து குந்திக்கன்னு சொல்ற சாமியை இவர் தேடலை!

எந்த சாமிக்கு எல்லா ஒலகமும் கட்டுப்படுதுன்னு சுத்துமுத்தும் பாக்கறாரு.


எதுத்தாப்புல வந்து நிக்கறான் முருகன்!

'ஆகா! இவர்தானே அல்லா ஒலகத்துக்கும் தலைவன்'னு புரியுது!

கைலாஸம், வைகுண்டம், சத்தியலோகம், சக்திபீடம்னு நாலு ஊருங்க இருக்கு. அததுக்கு ஒரு சாமி தெய்வமா நின்னு அந்தந்த ஊருங்களைப் பாதுகாக்குது.

ஆனாக்க, இந்த முருகனோட பெருமையே தனி!


ஒனக்குக் கூட நெனைப்பிருக்குமே! ஓம்முன்ற வார்த்தைக்குப் பொருள் தெரியலைன்னு, பிரம்மாவைத் தூக்கி ஜெயில்ல போட்டுட்டு இவரு இன்னா பண்ணினாருன்னு!

அல்லாத் தொளி[ழி]லையும் இவர் ஒர்த்தரே பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, அப்பிடியே செஞ்சும் காட்டினாரு!

இதெல்லாம் நெனைப்புல வரவும், மொதல் வார்த்தையைப் போட்டுக் கூப்பிடறாரு!

'கோவே'ன்னு!


'கோ'ன்ன ரொம்பப் பெரிய ராசான்னு அர்த்தம். இல்லியா சாமி?' என சாஸ்திரிகளைப் பார்த்ததும், உடனே புரிந்த சாம்பு சாஸ்திரிகள்,


'இதைப்பத்தி, 'திருமுருகாற்றுப்படை'ங்கற அற்புதமான நூலுல நக்கீரர் ரொம்ப அழகாச் சொல்றார்.


" நால் பெரு தெய்வத்து நல் நகர் நிலை இய
உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கை" ன்னு.


கிட்டத்தட்ட இப்ப நீ சொன்ன அதே குணத்தைத்தான் கந்தஸ்வாமிக்குச் சொல்லி அழகு பார்க்கறார் நக்கீரர்' என்றார்.

ஒரு திருப்தி கலந்த சந்தோஷத்துடன் அவரைப் பார்த்துவிட்டு மேலே தொடங்கலானான் மன்னார்.


'ஆச்சா? இப்ப மொத வார்த்தை கிடைச்சாச்சு! அல்லா ஒலகமும் இவருக்கு வசப்படுதுன்னு புரிஞ்சுபோச்சு!

இப்ப நேரம் எப்பிடின்னு கொஞ்சம் யோசிக்கறாரு அருணகிரி.
எப்பவுமே ஒர்த்தர் ரொம்ப சந்தோஷமா க்கீற நேரத்துல போய்க் கேட்டா, அநேகமா அந்தக் காரியம் பள[ழ]மாயிரும்.

அப்பிடி இந்தக் குமரனுக்கு எந்த நேரம் நல்ல நேரம்னு நெனைச்சுப் பாக்கறாரு.
அடுத்த வரி பொறக்குது!

'குறமின் கொடி தோள் புணரும் தேவே'ன்னு கூப்பிடறாரு.


வள்ளியம்மாவோட இடுப்பு ரொம்பச் சின்னதா ஒரு மின்னல்கொடி போல இருக்குமாம். அந்த அம்மாவோட இவரு க்கீற நேரமெல்லாமே சந்தோசமான நேரந்தான். அதுனால, இந்த வார்த்தையைச் சொன்னதும், அந்தக் 'கோ'வுக்கு, 'தே'வுக்கு... ரொம்பவே சந்தோசமாப் பூடுது!


கடசியா, ஒரு சொல்லு வைக்கறாரு 'சிவசங்கர தேசிகனே'ன்னு!

முன்னாடி சொன்ன பிரம்மா கதையோட முடிவு ஒனக்குத் தெரியுந்தானே! அவரை விட்டுருப்பான்னு நைனா கபாலி வந்து கேக்கக்கொள்ள, அப்பிடீன்னா அதுக்கு பொருள் சொல்லு நைனான்னு இவரு பர்த்திக்குக் கேக்க, 'ஒனக்குத் தெரிஞ்சா நீயே சொல்லுன்னு கபாலி கேக்க, 'ஆங்! அதெல்லாம் ஒளுங்கா ஒரு வாத்தியார்கிட்டக் கேக்கறமாரி பணிவாக் கேக்கணும்'னு முருகன் சொல்ல, அப்பிடிச் சொன்னதுதான் அந்த ஒபதேசம்!


அதுனாலத்தான் இவரு சிவசங்கர தேசிகன்.
தேசிகன்னா குருன்னு அர்த்தம்.


இந்த வார்த்தை எதுக்காவப் போட்டருன்னா, ஆருக்குமே தெரியாததுல்லாம் ஒனக்கு மட்டுந்தான் தெரியும் முருகா! அதுனால, இந்த பொறப்பும், மூணு ஆசைங்களும் எப்ப முடியும்ன்றதையும் கொஞ்சம் பாத்துச் சொல்லு கண்ணு'ன்னு நைஸாக் கேக்கறாரு!


நான் மொதல்லியே சொன்னமாரி, ஆரு கையுல அல்லாமே க்கீதோ, ஆருக்கு குடுக்கற மனசு க்கீதோ, அவர்கையுல நேரம் பாத்துக் கேட்டா, கேட்டதுக்கு மேலியே கிடைச்சிரும்!


இந்த மூணு ஆசைங்களுக்கும் கீளே சொன்ன மூணு பேருங்களுக்கும்ங்கூட ஒரு பொருத்தம் க்கீது!


அல்லா ஒலகத்துக்கும் ராசா... மண்ணு
வள்ளியம்மாவைக் கண்ணாலம் கட்டிக்கினவரு....பொண்ணு
ரொம்பவே மதிப்பான தங்கத்தைப் போல, ரொம்பப் பெரிய விசயத்தைத் தெரிஞ்சு வைச்சிருக்கவரு,... பொன்னு!


இப்பிடியும் அர்த்தம் பண்ணிக்கினு இந்தப் பாட்டை ரொம்பவே ரசிக்கலாம்.

ஆகக்கூடி, நேரம் காலம் பாக்காம, எப்பவும் இவனோட பேரைச் சொல்லிக்கினே இரு! அதான் இதுக்கெல்லாம் ஒரே வளி[ழி]ன்னு இந்தப் பாட்டு மூலமா, அருணையாரு நமக்கெல்லாம் அருள் பண்றாரு' எனச் சொல்லிவிட்டு, எழுந்து நின்று ஒரு சோம்பல் முறித்தான் மயிலை மன்னார்!

மீண்டும் இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தேன்!


மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவே டணையென் றுமுடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங் கரதே சிகனே.


'ஓம் சரவணபவ' தொடரலாயிற்று!

**************************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Wednesday, December 21, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 40 [முதல் பகுதி]

                                                                         உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 40 [முதல் பகுதி]
39.

இன்னைக்குச் சொல்லப்போற பாட்டு ரொம்பவே ஒசத்தியானது! படிக்க ரொம்பவே சுளுவா இருக்கும். ஆனாக்காண்டிக்கு, இதுக்குள்ள ரொம்பப் பெரிய விசயம் க்கீது! அதனால, இதுக்குச் சொல்றப்ப, நம்ம சாமியும் அப்பப்ப வந்து சொல்லணும்னு கேட்டுக்கறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான் மயிலை மன்னார்!

'என்னடா சொல்றே! நீ சொல்றதுக்கு மேலே நான் என்ன சொல்லப் போறேன்? சரி, என்னமோ சொல்றே! விஷயம் இல்லாமலா சொல்லுவே? பார்க்கலாம்' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!

'இன்னா முளி[ழி]க்கறே? போவப் போவப் புரியும்! நீ பாட்டைப் படி! அதானே ஒனக்கான வேலை' என என்னைப் பார்த்தான் மன்னார்.

பதிலொன்றும் பேசாமல், ஒரு ஆவலுடன் அடுத்த பாடலைப் படித்தேன்.

மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவே டணையென் றுமுடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங் கரதே சிகனே.


[மாவேழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே.]

'மாவேழ் சனனம் கெட மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ?'

'மாவேழ் சனனம்'னு ஒரு வார்த்தை போட்டிருக்காரு.
அதென்ன மாவேள்[ழ்] சனனம்?

ஏளு[ழு] சென்மம்னு கேள்விப்பட்டிருக்கோம்!
மா....வேளு[ழு]?

'மா'ன்னா பெருசுன்னு சொல்லுவாங்க!
அப்ப, இது பெரிய ஏளு[ழு]ன்னு அர்த்தமாவுது.

அப்படீன்னா இன்னா?
ஏளும் ஏளும் பதினாலா?
இல்லைன்னா, ஏளேளு நாப்பத்தொம்பதா?
இன்னா ஐயரே? இன்னா சொல்றீங்க? என சாஸ்திரிகளைப் பார்த்தான் மன்னார்.

'நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான் மன்னார்! இந்த ஏழுங்கறது ரொம்பவே பெரிய விஷயம்! ரிக் வேதத்துல இது பத்தி ரொம்பவே ஒசத்தியா சொல்லியிருக்கு.

பூமில ஏழு [1:22:16], ஏழு நாக்கு தீக்கு [1:58:7], ஏழு நதிகள் [1:32:12], ஏழு ஸ்வரங்கள், பாடகர்கள் [1:62: 4], ஏழு கோட்டைங்க [1:63: 7], ஏழு விதமான வெள்ளம் [1:72:8], ஏழு கதிர்கள் [1:105:9], ஏழு சகோதரிகள் [ 1:164:3], ன்னு.. இந்த ஏழு ரொம்பப் பெரிய சமாச்சாரம்.

அதே மாதிரிதான் இந்த ஏழு பிறவிங்கறதும்!

இது ஏழா, ஈரேழா, இல்லைன்னா ஏழேழு நாப்பத்தொம்பதான்னு நீ கேக்கறமாதிரியே ஒரு கேள்வி வரும்.


எல்லாமே சரின்னாலும் இதுக்கெல்லாம் தெளிவா ஒரு விடையை நம்ம மாணிக்கவாசகர் கொடுத்திருக்கார்!

இந்தப் பிறவின்னா என்ன? அது எத்தனை வகைப்படும்னு ரொம்ப அழகா, எளிசா சொல்லியிருக்கார்!
திருவாசகத்துல ஒரு வரி இப்படி வருது.

"புல்லாகி,பூடாய்,புழுவாய்,மரமாகி,பல் விருகமாகி,பறவையாய்,பாம்பாகி,
கல்லாய்,மனிதராய்,பேயாய்,கணங்களாய்,வல்லசுராகி,முனிவராய்,தேவராய்,செல்லா நின்ற இப்பிறப்பில்எல்லாப் பிறப்பும் பிறந்துஇளைத்தேன் எம்பெருமான்!"

ஒண்ணொண்னா கூட்டிப் பாரு! மொத்தம் பதினாலு வரும்! இதான் ஏழேழு!
இதுல மீனைப் பத்திச் சொல்லலியேன்னு ஒரு சந்தேகம் வரும். பல் விருகம்னு சொல்றப்பவே இதெல்லாமும் வந்துடும்னு சொல்லாம சொல்லியிருக்கார் அந்த மஹா ப்ரபு!

இந்த ஈரேழைத்தாம் நாம மாறி மாறிப் பிறந்து இளைச்சுப் போறோம்!
அந்தந்தப் பிறவில பண்றதை வைச்சு, எதுவா வேணும்னாலும் பிறந்து, எப்பவோ முக்தி அடையறோம்.
எத்தனையோ கோடிப் பிறவிக்கு அப்புறம்!

நம்ப சம்பந்தர் இருக்காறே, அவர் இன்னும் ஒரு படி மேலே போய், இந்த ஏழு பிறவிகளுக்குள்ளியும் நிறைய யோனி பேதங்கள் இருக்குன்னு சொல்றார்.

'உரை சேரு எண்பத்து நான்கு
நூறாயிரமாம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்த வற்றின்
உயிர்க்கு யிராய் அங்கங்கே நின்றான்'னு ஒரு பாட்டு பாடறார்.


இதுலேர்ந்து என்ன தெரியறதுன்னா, இந்தப் பிறவிகள் எத்தனை, அதுக்குள்ளே எத்தனை பிரிவுன்னு யாராலயும் சொல்லவே முடியாது. இதான் நான் சொல்ல வர்றது' என்றார் சாஸ்திரிகள்.

சட்டென்று உற்சாகமானான் மன்னார்!

'நல்லாச் சொன்னீங்க சாமி! இதையேதான் நம்ம ஐயனும் சொல்லியிருக்காரு!

62, 107, 398, 835 இது எல்லாத்திலியும் ஐயனும் இதைத்தான் சொல்லி இருக்காரு!

'எழு பிறப்பும் தீயவை வேண்டா'
'எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்'
'எழுமையும் ஏமாப்புடைத்து'
'எழுமையும் நான் புக்கழுத்தும் அன்று' ன்னு இந்தப் பொறப்புங்களப் பத்திச் சொல்றாரு.

ஆக மொத்தம் எப்பிடிப் பாத்தாலும், இந்த ஏளோ[ழோ]ட கூட்டணி நம்மள ரொம்பவே படுத்துதுன்னு புரியுதில்ல. அவ்ளோ கொடுமை இந்தப் பொறப்புன்றது!

இந்தச் செனனந்தான் ஒளி[ழி]யணும்னு கேக்கறாரு மொதல் வார்த்தையுல !

அடுத்தாப்பல வர்றது இன்னும் பெருசு! அதுக்கும் சாமிதான் தயவு பண்ணணும்' எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தான் மன்னார்.

'மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ?'

மூ வேடணை'ன்னா இன்னான்னு பாப்பம் மொதல்ல!

நேரடியா தமிள்[ழ்]ல பாத்தா, ஒருவேளை வேதனைன்றதைத்தான், அப்பப்ப மாத்திப் போடறமாரி போட்டுட்டாரோன்னு தோணும்!

அப்பிடியே பாக்கலாம் இப்ப.
அதென்ன மூணு வேதனை?

ஒலகத்துல நம்மளைப் படுத்தறது இந்த மூணு விதமான ஆசைங்கதான்
மண்ணாசை, பொண்ணாசை, பொன்னாசைன்ற இந்த மூணுந்தான் இந்த வேதனைங்க!

இதெல்லாம் எதுனால வருது?
எல்லாம் ஒரு மாயைன்னு புரியாததால.

ஆசை வர்றதே ஒரு மாயையாலத்தானே? என்ன சாமி சொல்றீங்க' என சாஸ்திரிகளைத் தூண்டினான் மயிலை மன்னார்!

அதைப் புரிந்துகொண்ட சாம்பு சாஸ்திரிகளும் சற்றும் சளைக்காமல் பேசலானார்.

'நீ சொன்னதும் ஒருவிதத்துல சரின்னாலும், இதுல ஒண்ணும் தப்பா சொல்லலை அருணகிரியார்.

இப்போ, 'நஷ்டம்', 'கஷ்டம்'ங்கறதை 'நட்டம்', 'கட்டம்'னு சொல்றாளோன்னோ? அதேமாதிரிதான், 'ஏஷணா'ன்னு ஒரு சம்ஸ்க்ருத வார்த்தை, இங்கே 'ஏடணை'ன்னு கொஞ்சம் உருமாறி வந்திருக்கு.

ஏஷணான்னா ஆசைன்னு அர்த்தம்.

மத்தபடி நீ சொன்ன அந்த மூணு ஆசையும் அதேதான்!
ம்ம்ம்... மேலே நீயே சொல்லு!' என மௌனமானார் சாம்பு சாஸ்திரிகள்!

'இந்த சென்மன்றது முடியணும்னா, இந்த மூணு ஆசைங்களையும் நாம விடணும். அப்பத்தான் இது தொலையும்!

இல்லைன்னா ஏளு[ழு], ஏளேளு,ன்னு தொடர்ந்துக்கினே இருக்கும்!
இதெல்லாம் எப்போ முடியும் முருகான்னு கதர்றாரு.

இதை ஏன் முருகனைப் பார்த்துக் கேக்கறாருன்றதுக்குத்தான் அடுத்த ரெண்டு வரியும்!' என நிறுத்தினான் மன்னார்!

சரி, இது கொஞ்சம் நீளமாத்தான் போவப்போவுது' என நினைத்தபடியே நாயரைப் பார்த்தேன்.

'இது எனக்கு அப்பவே தெரியும்' என்பதுபோல், அவன் 'ஓம் சரவணபவ' மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான்!
******

[இன்னும் வரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, December 15, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 39

                                                                உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 39
38.
[சென்ற பதிவில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது. பாடல் வரிசையை மாற்றிப் போட்டுவிட்டேன். எனவே 38-ம் பதிவைப் படித்துவிட்டு, இந்த 39-ஐப் படிக்கவும். சிரமத்துக்கு மன்னிக்கவும். முமு!]

 
வழக்கமாக அமரும் ஐயர் வீட்டுத் திண்ணையில் இன்று புதிதாக இன்னுமொருவன் அமர்ந்திருந்தான். மயிலை மன்னார் சஹஜமாக அவனது தோளின் மேல் கைபோட்டிருந்தான்!


எனக்கும், நாயருக்கும் அவனை முன்னமேயே தெரியுமென்பதால், ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். சாம்பு சாஸ்திரிகள் மட்டும் ஒன்றும் புரியாமல் எங்களைப் பார்த்தார்.


அவரது ஆவலைப் புரிந்த நான், மேலும் அவரை வருத்தவிடாமல், 'என்ன மன்னார்! நம்ம கோபாலையும் இன்னைக்குக் கூட்டிட்டு வந்திருக்கே போல!' எனச் சிரித்தபடியே கேட்டேன்.


சட்டென்று விஷயம் புரிந்து சாஸ்திரிகளின் முகமும் மலர்ந்தது!


'அட! பின்ன இன்னாபா! நம்ம தோஸ்த்துன்னா அப்பிடியே விட்டுருவோமா? இன்னா தப்பு பண்னினாலும் அதுக்குன்னு சீ, போடான்னு தள்ளிருவோமா இன்னா?நம்மாளு என்னிக்குமே நம்மாளுதான்! அதுக்குத்தான் இன்னைக்கு இங்கன அவனையும் இட்டாந்தேன். அது மட்டுமில்ல! இன்னைக்கு சொல்லப்போற பாட்டை அவனும் கேக்கணுன்னுந்தான்! எங்க? பாட்டைப் படி!' என என்னைப் பார்க்க, நான் படிக்கலானேன்.

ஆதா ளியையொன் றறியே னையறத்
தீதா ளியையாண் டதுசெப் புமதோ
கூதா ளகிரா தகுலிக் கிறைவா
வேதா ளகணம் புகழ்வே லவனே.

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

' ஒரு பெரிய சமாச்சாரத்தை அப்பிடியே அசால்ட்டாச் சொல்லிடறாரு இந்த மொத ரெண்டு வரியுல!

'ஆதாளியை ஒன்று அறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ'ன்னு அளு[ழு]து பொலம்பறாரு.

'ஆதாளி'ன்னா இன்னா?


மனக்கலக்கம் ஜாஸ்தியா இருக்கறவனுக்கு இந்தப் பேரு.


எதுனால மனக்கலக்கம் வருது?


இப்ப ஒரு பிரச்சினை ஒண்ணு ஒர்த்தனுக்கு வருதுன்னு வையி! இன்னா பண்றதுன்னு ஒண்ணுமே தெரியலைன்ற வெவரம் அவனோட அடிவயித்தப் பெசையறப்ப, 'அடடா! இன்னாடா இது வம்பாப் போச்சு! நமக்கு ஒண்ணுமே தெரியலியே! எப்பிடி இப்ப சமாளிக்கப்போறோம்ன்ற நெனைப்பு வர்றப்ப வர்றதுதான் இந்த மயக்கம். அதான் ஆதாளி.


ஆச்சா? இப்ப ஆதாளி, ஒன்று அறியேன்னு தன்னை ரெண்டு விதமாச் சொல்லிட்டாரு.


அப்பாலிக்கா, அறத் தீதாளின்னு வேற சொல்லிக்கறாரு.


ஆதாளி ஒனக்குப் புரிஞ்சுதுனால, இந்தத் 'தீதாளி'ன்னா இன்னான்னு ஒருமாரி குன்ஸாப் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.


' தீதாளி'ன்னா கெட்டது பண்றவன்னு அர்த்தம்.

சாதாரணமா கெட்டது பண்ணினாக்கூட, சரி, இது அவன் கொணம்னு பொறுத்துக்கலாம்.


ஆனாக்காண்டிக்கு, நல்ல விசயத்துக்கு, தர்மத்துக்கு கெடுதி பண்றவன் க்கீறானே, அவன் ரொம்பவே மோசமானவன்.


அதைத்தான் 'அறத் தீதாளி'ன்னு சேர்த்து சொல்றாரு.


இப்பியாப்பட்ட என்னை 'நீ பண்ணினதெல்லாம் போறும்'னு கருணை பண்ணி ஒன்னோட சேர்த்துக்கினியே முருகா! இத்த நான் இன்னான்னு சொல்லிப் பாடறதுன்னு கண்ணால தண்னி வுடறாரு அருணகிரியாரு.
இதுக்கு அப்பால ஒரு ரெண்டு வரி போட்டிருக்காரு பாரு,... அதான் ரொம்பவே பிரமாதம்!

கூதாள கிராத குலிக்கு இறைவா; வேதாள கணம் புகழ் வேலவனே.

'கூதாள' ப்பூன்னு ஒரு பூ க்கீது. சாதாரணமா காட்டுல ஆருமே பாக்காத இடத்துல இது பூத்திருக்கும். வாசனையும் ஒண்ணும் அப்பிடி ரொம்பவும் கிடையாது!


இந்தப் பூவை எடுத்து தலையுல வைச்சுக்கற கூட்டம் ஒண்ணு க்கீது!
அவங்கதான் அந்தக் காட்டுலியே வேட்டையாடுற வேடருங்க!


கொன்னு குவிக்கறதே இவங்க தொளி[ழி]லுன்றதால, இவங்களுக்கு 'கிராதர்'னும் ஒரு பேரு உண்டு.


அந்தக் கொலத்துல பொறந்த வள்ளியம்மையைக் கட்டிக்கிட்டதால அந்தக் கூட்டத்துக்கே இவரு தலீவராகிப் போறாரு.


அதான் 'கூதாள கிராத குலத்துக்கு இறைவன்'... நம்ம கந்தன்!


இவருக்குன்னு ஒரு பெரிய படை க்கீது!
அதுல ஆராருடா சிப்பாயிங்கன்னு பார்த்தியான ஒரே வேடிக்கையா இருக்கும்!
இந்தப் பேய்க் கூட்டங்கதான் இதுல பெரிய பெரிய சிப்பாயிங்க!
அவங்களைத்தான் 'வேதாள கணம்'னு சொல்றாரு.


இவங்கள்லாம் புகளு[ழு]ற வேலவனேன்னு கொண்டாடறாரு!


இங்கதான் கொஞ்சம் கவனிக்கணும்!
எதுக்காவ இவங்களையெல்லாம் இந்த இடத்துல கொணாந்து வைச்சுப் பாடறாரு?
இவங்கள்லாம் ஆரு?


கொஞ்சங்கூட மதிப்பே இல்லாத காட்டுப் பூவை எடுத்து வைச்சுக்கினு கண்டவங்களைக் கொல்றவங்க ஒரு பக்கம்!
அவங்களுக்கு இவரு சாமி!


செத்துப் போனதுக்கப்பறமும் போவ[க]வேண்டிய இடத்துக்குப் போவாம, இன்னமும் பேயா அலையுற கூட்டந்தான் இவருக்கு 'ஆர்மி'!
இவங்கள்லாம் இவரைக் கொண்டாடறாங்க!




இதுலேர்ந்து இன்னா வெளங்குது ஒனக்கு?


நீ இன்னாத்தான் கெட்டவனாயிருந்தாக்காண்டியும், தன்னோட ஆளுங்கன்னு முருகன் நெனைச்சுட்டான்னா, அவங்களைக் கைவிடவே மாட்டான் அந்தக் கருணைக் கடலு! அதான் அவன் கொணம்!

திட்டினவங்களைக் கூட நல்லா வாள[ழ] வைக்கற தெய்வம் அவன்!

இதும்மாரிப் பண்ணினவங்களைக் கூட நீ நல்லா நடத்தினப்ப, என்னைப் போல, ஒண்ணுமறியா ஆதாளியை, அறத் தீதாளியை நீ பெரிய மனசு பண்ணி, ஒனக்கு அடிமையா வைச்சுக்கினியே முருகா! இத்த நான் இன்னான்னு சொல்றது!'ன்னு மெய்சிலிர்க்கறாரு அருணையாரு!' என்று சொல்லி நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தன் சகா கோவா[பா]லை அன்புடன் பார்த்தான்!

'அண்ணே!' எனச் சொல்லி மேலே வார்த்தை வராமல் தழுதழுத்தான் கோபால்.


இந்தக் காட்சியைப் பாத்து, தன் மேல் துண்டால் தன் கண்களைத் துடைத்தபடியே, சாம்பு சாஸ்திரிகள், 'இதைக் கேட்டதும் எனக்கு ஒரு ரெண்டு வரி சொல்லணும்னு தோணறது' என ஆரம்பித்தார்.

இந்த 'ஆண்டது செப்புமதோ'ன்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கென்னமோ சட்டுன்னு திருவாசகத்துல மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் பாடினதுதான் ஞாபகத்துக்கு வந்தது!


'திருக்கோத்தும்பி'ல ஒரு வரி வரும்!


'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி'ன்னு!


இதுல வர்ற கண்ணப்ப ஸ்வாமிகளும் ஒரு வேடந்தான்! ஆனாலும் அவரோட அன்புக்குக் கட்டுப்பட்டு அந்த சர்வேச்வரன் என்னமா அவர் செஞ்சதையெல்லாம் தாங்கிண்டார்னு நினைக்கறச்சே, அவருக்கு பொறந்தவர், அதுவும் நேரடியா அவரோட நெற்றிக்கண்ணுலேர்ந்து பொறந்த இந்த கந்தஸ்வாமி இப்படி அருட்கடாக்ஷம் பண்றதுல என்ன ஆச்சரியம்! நாம் மட்டும் அவரை எப்பவும் ஸ்தோத்ரம் பண்ணிண்டு இருந்தா எல்லா மங்களத்தையும் அவர் நடத்திக் கொடுப்பார்னு சொல்லணுமோ!' என்றார் சாஸ்திரிகள்!

'நல்லா சொன்னே சாமி' என்று சிலாகித்தான் மயிலை மன்னார்.


நாயரின் 'ஓம் சரவணபவ' தொடர்ந்து கொண்டிருந்தது!
***************
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- – 38

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- – 38
37.

'ஒரு கூட்டத்துல ஒர்த்தனா இருக்கணும்னா, மொதல்ல அடக்க ஒடுக்கமா இருக்கத் தெரியணும். அது இல்லேன்னா எந்தப் பிரயோசனமும் இல்லை' என உரக்கக் கூறியபடியே ஆட்டோவிலிருந்து இறங்கினான் மயிலை மன்னார்.



'இப்ப என்ன ஆயிடுத்துன்னு நீ இந்தக் கூப்பாடு போடறே?' என உரிமையுடன் அதட்டினார் சாம்பு சாஸ்திரிகள்.



இந்தக் கோவாலுப் பயலைத்தான் சொல்றேன். நம்ம கூட்டத்துலதான் இருந்தான். தாயா புள்ளையாப் பள[ழ]கினோம். இப்ப இன்னாடான்னா, தெனாவெட்டாப் பேசறான். கையுல நாலு காசு பார்த்துட்டான்னா, அதுக்காவ மரியாதையில்லாமப் பேசறதா இன்னா? அகங்காரம் தொலைஞ்சாத்தான் உருப்புடுவான். அதான் ரெண்டு தட்டு தட்டிட்டு வந்தேன். இப்ப வர்ற பாட்டு கூட அத்தத்தான் சொல்லப் போவுது. என்றான் மன்னார்.


பதிலொன்றும் சொல்லாமல் பாட்டைப் படித்தேன்.

கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியோ டுமகந் தையையே


கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே


" மனனே! கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய்!"

'மனசைப் பாத்து ஒரு கோரிக்கை வைக்கறாரு.


இதுவரைக்கும் நீ இன்னான்னாமோல்லாம் பண்ணிட்டே! அதுனால ஒனக்கும் எனக்கும் படா பேஜாராகித்தான் போயிருக்கு. உருப்படியா ஒண்ணும் நடக்கலை. தொந்தரவு மேலத் தொந்தரவா வந்து இப்பிடி சிரிப்பா சிரிக்கறோம். நீ பண்ணின காரியத்தால,.... சரி, சரி... நானுந்தான் சேர்ந்து செஞ்சேன்....இல்லேங்கலை.... நாம பண்னின காரியத்தால, நமக்குன்னு சொல்லிக்க ஒரு நாலு பேரு கூட இல்லை இப்ப!


நான் ஒண்ணே ஒண்ணு சொல்றேன் கேக்கறியா? இனிமேங்காட்டிக்கும், நமக்குன்னு நல்லவங்க கூட்டம் வேணும். அதுக்கு நாம போயி முருகனோட அடியாருங்க கூட்டத்துல இருக்கறவங்க காலடியுல விள[ழ]ணும்.

ஆரு இந்த முருகன்னு கேக்கறியா?


அது மாயக் குகை, மந்திர மலை, கொஞ்சம் பாத்து கவனமாப் போங்கப்பான்னு, படிச்சு, படிச்சு சொன்னவருதான் இந்த முருகன்.


ஆருக்கு சொன்னாரா?


சூரனோட சண்டைக்குப் போகங்காட்டி, அவனோட தம்பி தாரகன்னு ஒரு ராட்சசன். ஒரு பெரிய மலையாத் தன்னை மாத்திக்கினு, அதுக்குள்ளாற போறவங்களைல்லாம், மனசு மயங்கப் பண்ணி, மயக்கம் போட வைச்சிருவான்.


அவனைக் கொல்றேன் பேர்வளி[ழி]ன்னு வீரவாகுத் தேவரு கெளம்பறாரு. அவரு பின்னாடியே இந்த பூதங்கல்லாம் கூட கும்மாளம் போட்டுக்கினு பொறப்பதுங்க! அப்பத்தான், முருகன் தேவரைப் பார்த்து சொல்றாரு,' கெவனமாப் போங்கப்பா'ன்னு.


அத்தெல்லாம் நான் பார்த்துகறேன்னு சொல்லிட்டு, அல்லாரோடியும் போயி, மலைக்குள்ள மாட்டிக்கினு, இப்ப அல்லாரும் மயங்கிக் கெடக்கறாங்க!


அல்லாம் தெரிஞ்ச கந்தன், சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சுக்கினே, தன்னோட வேலை எடுத்து வுடறாரு. அது நேராப் போயி, அந்த கிரவுஞ்ச மலையோட வாயைக் கிளி[ழி]ச்சுக்கினு, அந்த மலையையே சுக்கு நூறாக்கிருது.

தம் பேச்சைக் கேக்கலைன்னாலும், தன்னோட ஆளுங்கன்றதால, கருணை பண்ணின முருகனோட அடியாருங்களுக்கு அத்தினிப் பெருமை க்கீது!


இப்ப நாம இன்னா பண்றோம்னா, நேரா அவங்களோட காலுல போயி விளணும். விளுந்து, என்னியயும் உங்க கூட்டத்துல ஒரு வேலைக்காரனாவவாது சேத்துக்கோங்க சாமிங்களான்னு கெஞ்சிக் கதறணும்.


இப்ப இன்னாத்துக்கு அத்தப் போயி ஒங்கையுல வந்து கேக்கறேன்னு பாக்கிறியா?


நீ மனசு வைச்சாத்தான் அந்தக் காரியமே நடக்கும்! நீதானே என்னோட மனசு? அதுனால நீதான் ஒதவி பண்ணணும்.'னு மனசுக் கையுல போயிக் கெஞ்சறாரு.

" பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே"

[பொறையாம் அறிவால் அடியோடும் அகந்தையையே அரிவாய்]

'இந்த மனசைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்காரு அருணகிரியாரு! இன்னாதான் கெஞ்சினாலும், திமிரு நெறைய க்கீற இந்த மனசு அத்தயெல்லாம் கேக்காதுன்னும் தெரியும்! அதுக்காவ, ஒரு ஐடியா குடுக்கறாரு மனசுக்கு!


இது கஸ்டந்தான்; ஒன்னால அவ்வளோ சுளுவா இந்த அகங்காரத்தயெல்லாம் விட்டுத் தொலைச்சிட்டு அடியாருங்க காலுல போயி விள[ழ]றது முடியாதுன்னு எனக்குத் தெரியும்.


அதுனால, நீ இன்னா பண்ணணும்னா, ஆண்டவன் ஒனக்குக் கொடுத்த புத்தியை கொஞ்சம் 'யூஸ்' பண்ணணும். அதுலியும், கன்னா பின்னான்னு திரியுற அறிவைப் பத்தி நான் சொல்லலை. பொறுமையா இருக்கணும்னா அதுக்கு அறிவு ரொம்பவே வோணும். 'தாட்-பூட்'டுன்னு எகிர்றதுக்கு அறிவே தாவ[தேவை]யில்ல. அத்த ஆர் வோணும்னாலௌம் செஞ்சிறலாம். ஆனாக்காண்டிக்கு, பொறுமையா க்கீறதுக்குத்தான் புத்தி அவசியம்.


இந்தப் பொறுமை வரணும்னா, அதுக்கு மொதல்ல நீ ஒண்ணை கண்டிப்பாப் பண்ணியே தீரணும்!


ஒனக்குள்ள [மனசுக்குள்ள] ஒளிஞ்சுக்கினு க்கீதே இந்த ஆணவம்,.. அகந்தை,... அகங்காரம்,... அத்த சுத்தமா, வெட்டிச் சாய்ச்சிறணும். அத்த வெட்றதுன்றது அவ்ளோ 'ஈஸி'யான சமாச்சாரம் இல்லை! அங்கதான் நீ பொறுமைன்ற அறிவை வைச்சு, ஆணவத்தை வெட்டணும்... அரிஞ்சு தள்ளணும்.


அதும் மட்டும் நீ பண்ணிட்டியானா, அப்பாலிக்கா, ஒனக்கே அல்லாமும் புரிஞ்சிரும். அப்பத்தான், நாம ரெண்டு பேருமாப் போயி, அவங்க பாதத்துல சரணடைய முடியும்'னு சொல்லிக் குடுக்கறாரு. போன பாட்டுல அடக்கமா இருக்கணும்னு சொன்னவரு, அதுக்கு மொதல்ல ஆணவத்தை வெட்டணும்னு இந்தப் பாட்டுல சொல்லிக் குடுக்கறாரு.


இப்பப் புரியுதா? நான் இன்னாத்துக்காவ அப்பிடிப் பேசினேன்னு' என என்னைப் பார்த்தான்.


பொறுமையைத் தரும் அறிவைத் தேட 'ஓம் சரவண பவ' என்னும் திருமந்திரத்தை நானும் சொல்லத் தொடங்கினேன்!


முருகனருள் முன்னிற்கும்!

[தவறுதலாக போன வாரம் 37-ம் பாடலை இடாமல், 38-ஐ இட்டுவிட்டேன். அருள்கூர்ந்து இந்தப் பதிவைப் படிக்கவும். முமு!]

Read more...

Friday, December 02, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 37

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 37
36.

'இப்ப ஒரு விசயம் ஒனக்குத் தெரியணும்னு வைச்சுக்க! அது பலான பலான ஆளுகிட்டதான் இருக்குன்னும் தெரியுதுன்னு வைச்சுக்க! அத்தக் கேக்க நீ போறப்ப இன்னாமாரி கேக்கணும்ன்றதுக்கு ஒரு வளி[ழி] காமிச்சுத் தர்றதுதான் அடுத்த பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு.' என்றவாறே என்னைப் பார்க்க, நானும் உடனே அடுத்த பாடலைப் படித்தேன்.


நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோதி யதெப் பொருடான்
வேதா முதல்விண் ணவர்சூ டுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே


நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் எனவோதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே

'அரனார், "நாதா குமரா நம" என்று ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?'

'இன்னான்னமோ வளி[ழி]யுல 'நைஸ்' பண்ணிப் பாக்கறாரு அருணகிரியாரு. ஒண்ணும் நடக்கலை! முருகன் ஒண்ணும் இவருக்கு சொல்றமாரித் தெரியல.

சரின்னுட்டு, இப்ப இன்னொரு ரூட்டுக்கா வராரு!

'ஆமா, நீ இன்னாமோ ஒங்க நைனா கையுல ஏதோ சமாச்சாரம் சொன்னியாமே? நீ கூட இன்னாமோ ரொம்ப முறுக்கிக்கினு, 'இப்பிடில்லாம் கேட்டாக்க நான் சொல்ல மாட்டேன். அடக்க ஒடுக்கமா வந்து எங்கையுல குந்திக்கினு பதவிசா கேட்டாத்தான் சொல்வேன்'னு சொல்லக்காண்டி, அவரும் வேற வளியில்லாம, 'என்னப்பனே, முருகா! ஞான பண்டிதா, என் ராசா! நாதமா க்கீறவனே! ஒனக்குக் கோடி புண்ணியமாப் போவட்டும். 'அத்த' எனக்குந்தான் கொஞ்சம் சொல்லு ராசா!'ன்னு கேக்கக்கொள்ள, நீயும் இன்னாமோ அவர் காதுல ஓதினியாமே! அது இன்னான்னு எங்கையுலியும் கொஞ்சம் சொல்லக்கூடாதாப்பா'ன்னு கெஞ்சறாரு.

அது இன்னான்னும் இவர் சொல்லிக் கேக்கலை! .... தெரிஞ்சுக்கினமாரியும் காட்டிக்கலை! கொஞ்சம் 'ஐஸ்' வைச்சுக் குளிப்பாட்டிப் பாக்கறாரு.

ஆனாக்காண்டிக்கு, கொஞ்சம் சூசகமா தனக்கும் இத்தப் பத்தித் தெரியுமின்னு கோடி காட்டறாரு!
அதுக்குத்தான் 'நாதா'ன்னு ஒரு வார்த்தையைப் போட்டிருக்காரு!

'நாதம்'னா இன்னா?

சத்தம்! ஓசை!

ஒலகத்துலியே மொத மொதலா வந்த நாதம் இன்னாது?

ஓம்!

'நாதா'ன்னா தலைவான்னும் ஒரு அர்த்தம் க்கீது.

அப்பிடிக் கூப்படறமாரிக் கூப்ட்டுட்டு, கூடவே, அந்தப் பிரணவத்துக்குத்தான் கந்தன் பொருள் சொன்னாருன்றது தனக்கும் தெரியும்னு சொல்லாம சொல்லி வெள்ளாடறாரு அருணகிரியாரு.

"வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே"

'இப்ப முருகனைக் கொஞ்சம் தானும் தூக்கி ஒசத்திக் கொண்டாடணுமேன்னு நெனைக்கறாரு! ஏன்னா, அவங்க நைனாவே அப்பிடிப் பண்ணதுக்கு அப்பாலதான் அவருக்கே பொருள் சொன்னாரு முருகன்! அதுனால, இவரும் எதுனாச்சும் சொல்லணுமேன்னு நெனைச்சுப் பாக்கறாரு!

இவுரு மனசுல ஒரு 'ஸீன்' ஓடுது! சிரிப்பு வந்துருது இவுருக்கு!

அது இன்னான்னா, இந்த ஓம்'முன்ற வார்த்தைக்குப் பொருள் தெரியாம ஜெயில்ல கிடந்தாரே,....அவர் ஞாபகம் வருது!

 அந்த பிரம்மாலேர்ந்து ஊருல ஒலகத்துல க்கீற அல்லாரும், இவரோட காலைப் புடிச்சுக்கினு அவங்க தலை மேல வைச்சுக் கொண்டாடிக்கினு க்கீறாங்க!

இவரு இன்னா பண்றாருன்னா, நம்ம வள்ளியம்மாவோட காலடியுல விளு[ழு]ந்து கெடக்கறாரு! அந்தம்மாவோட பாதத்தை எடுத்து தன்னோட தலை மேல பூமாரி வைச்சு அள[ழ]கு பாத்துக்கினு க்கீறாராம்!

'வேதா'ன்னா பிரம்மா.
'சேகரன்'ன்னா தலையுல வைச்சு சூடிக்கறவன்னு அர்த்தம்.

இப்ப 'சந்திர சேகரன்'னா நெலாவை எடுத்து தன்னோட தலையுல வைச்சுக்கற சிவன்ற மாரி, இவரு 'குறமின் பத சேகரன்'!!

'கொறக்குலத்துல பொறந்தாக்கூட மின்னல்மாரி ஜொலிக்குதாம் வள்ளியம்மாவோட ஒடம்பு!

இதுல இன்னா விசேசம்னா, இந்த அகில ஒலகத்துலியும் க்கீற நாதமே அந்தம்மாவோட, அந்த இச்சா சக்தியோட பாதத்துலேர்ந்துதான் பொறக்குதுன்னு முருகன் காட்டறமாரி இவருக்குத் தோணுது. அந்தம்மா பராசக்தியோட அம்சம்! அப்பிடீன்னா, அந்த சக்திலேர்ந்துதான் இந்த ஆதி நாதமே கெளம்புதுன்றதை சொல்லாம சொல்லி விளக்கறாரு அருணகிரியாரு!

இது அல்லாத்தியும் தாண்டி, இன்னொரு சமாச்சாரமும் இந்தப் பாட்டுல க்கீது! அதான் ரொம்ப ரொம்ப முக்கியமா கவனிக்கணும் நீ!

ஒண்ணு வேணும்னு ஆசைப்படறப்ப, அதுவும் அந்த 'ஒண்ணு' ஒலகத்துலியே ரொம்ப ரொம்பப் பெரிய விசயமா இருக்கக்கொள்ள, அத்தக் கேக்கறப்ப ஒடம்புலியும், மனசுலியும் ரொம்பவே பணிவு வேணும்!
சிவனாரு எப்பிடிக் கேட்டாரு தம் புள்ள கையுல? 'நாதா, குமரா நம'ன்னு குனிஞ்சு காதைக் கொடுத்துக் கேக்கறாரு.

பிரம்மாவும், தேவருங்களும் முருகனோட காலை எடுத்துத் தலைமேல வைச்சுக் கொண்டாடிக் கேக்கறாங்க!

அந்த முருகனே கூட இப்ப இன்னா பண்றாரு பாரு! இத்தினிக்கும் காரணமான வள்ளியம்மாவோட பாதத்தை எடுத்து தலையுல வைச்சுக்கறாரு.

அதுனால... பெரியவங்க ஒரு சமாச்சாரம் சொல்றப்ப அடக்கமா, பணிவாக் கேட்டுக்கணும்! அசால்ட்டா கெடந்துறக் கூடாது! நாம பண்ணின புண்ணியந்தான், இதும்மாரி விசயம்லாம் நம்ம காதுல விள[ழ]ப் பண்ணியிருக்கு. அத்தப் புரிஞ்சுக்கினு, பணிவை எப்பவும் வளர்த்துக்கணும். இன்னா வெளங்கிச்சா?' எனக் கேட்டபடியே அவசர அவசரமாக எங்கோ கிளம்பினான் மயிலை மன்னார்!

'ஓம் சரவண பவ' எனம் நாதம் தொடர்ந்து நாயரிடமிருந்து பிறந்துகொண்டிருந்தது!
**************
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, November 28, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 36

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 36
35.

'என்ன? அடுத்த பாட்டுக்குப் போலாமா?' என்றவாறே வந்தமர்ந்தான் மயிலை மன்னார்.

'இதுக்குக் கேள்வி என்ன? அதுக்குத்தானே வந்து ஒக்காண்டிருக்கோம்' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்கணும்ன்றத இந்தப் பாட்டு சொல்லுது. ஊருக்கு உபதேசம் பண்றவன், தான் எப்படி நடந்து காட்டணும்ன்றத சொல்ற பாட்டு இது. மொதல்ல பாட்டைப் படி' என்றான் மன்னார்.

35.
விதிகா ணுமுடம் பைவிடா வினையேன்
கதிகா ணமலர்க் கழலென் றருள்வாய்
மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூபதியே

'ஒரு சின்ன சொல்வெளையாட்டு இந்த மொதல் வரியுல நடத்தியிருக்காரு அருணகிரி.

"விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்"

'விதி காணும் ஒடம்பு'ன்னா இன்னா?

இந்த ஒலகத்துல பொறந்த அல்லாரையுமே விதிதான் ஆட்டி வைக்குதுன்னு நமக்கெல்லாம் தெரியும். அப்பிடின்னா இன்னா அர்த்தம்? நாம செய்யற அல்லாத்தியும் இந்த விதின்றது பார்த்துக்கினு க்கீதுன்னு ஒரு அர்த்தம்.

அதே சமயத்துல, இங்க இந்த 'விதி'ன்றத வேற விதமாவும் பாக்கலாம்.
விதிப்படி ஒர்த்தொர்த்தரையும் படைக்கற பிரம்மா, எப்பவும் நாம பண்ற அல்லாத்தியுமே பார்த்துக்கினே க்கீறாருன்னும் புரிஞ்சுக்கலாம்.

அதாவது, ஆரு பாக்கலைன்னாலும், நம்மைப் படைச்ச அந்த பிரம்மா எப்பவுமே பார்த்துக்கினே க்கீறாருன்னாலும், அததுக்குத் தகுந்தமாரி, நம்மை ஆட்டிப் படைப்பாருன்னாலும், நாமள்லாம் இன்னா பண்றோம்?

இந்த ஒடம்பு மேல இருக்கற அபிமானத்தை விடாம, இன்னாமோ இதுதான் சாசுவதம்னு நெனைச்சுக்கினு ஆட்டம் போடறோம். மேல மேல வெனையை சேர்த்துக்கினே போறோம். அதைத்தான் 'வினையேன்'னு சொல்லிப் பொலம்பறாரு.

இந்தக் கொரங்கைப் பார்த்திருக்கியா? ஒரு கிளையிலேர்ந்து அடுத்ததுக்குத் தாவறச்ச, எந்த ஒரு கவலையுமில்லாம, 'டக்'குன்னு பிடியை விட்டிரும். ஒரே பாய்ச்சல்தான்; அடுத்த கிளையைப் பிடிச்சிக்கிரும்.

அதும்மாரி, இந்த ஒடம்பு மேல க்கீற பிடிப்பை எப்ப விடறோமோ, அப்பத்தான் இதுக்கும் மேலானதா க்கீற முருகனோட காலடி நமக்குக் கிடைக்கும்.

ஒண்ணை விட்டாத்தான் அடுத்தது கிடைக்கும்!

ஆனாக்காண்டிக்கு, நாம இத்தயும் விடாம, அது வேணும்ன்னு அவங்கிட்டியே போய் மொறை வைக்கறோம்.

இத்தத்தான் அருணகிரியாரும் சொல்றாரு.
'எனக்கு இன்னும் இந்த பாளா[ழா]ப்போன ஒடம்பு மேல க்கீற அபிமானம் தீரலியே! அதுனால, விடாம வினையை சேர்த்துக்கினே போறேனே. இது ஒங்கண்ணுக்குத் தெரியலியா? பார்த்துக்கினு ஏன் சும்மா க்கீறே? ஒன்னோட பூப்போல க்கீற திருவடியை எனக்கு சீக்கிரமாக் கொடுத்து அருள் பண்ணுப்பா'ன்னு கந்தங்கிட்ட கதற்ராரு, இந்த மொத ரெண்டு வரியுல.

'ம்ம்ம்' என நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடுத்த ரெண்டு வரிக்கு என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆவலுடன்!

'ஆரைப் பார்த்து இப்பிடி அருணகிரியாரு சொல்றாரோ அவரு இன்னா பண்ணிக்கினு க்கீறதா இந்த அடுத்த ரெண்டு வரியுல சொல்றாருன்னு பாப்பம்!

"மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா சுரபூபதியே"

'நல்லா ஒளி வீசற நிலாவைப்போல, வாள் போல வளைஞ்சு அள[ழ]கா க்கீற நெத்தியுடைய வள்ளியம்மாவைத் தவர வேற ஆரையும் பெருமை பண்ணித் துதி பண்ணாத முருகா'ன்னு கூப்பிட்டுக் கேக்கறாரு!

இப்பிடி வள்ளியம்மாவைத் துதிக்கறதை ஒரு விரதம் மாரி பண்றவனேன்னு சொல்றாரு!

இந்திரலோகத்துக்கே ராசாவா க்கீறவனேன்னும் சொல்லிப் பாடறாரு!

கொஞ்சம் கொய[ழ]ப்பம் வரத்தான் செய்யும்.... இத்தக் கேட்டா!

அம்மாம் பெரிய ராசாவா க்கீறவரு எதுக்காக இப்ப கொறஜாதிப் பொண்ணாண வள்ளியம்மாவோட காலடில விளு[ழு]ந்து கெடக்கணும்?

அத்தயும் எதுக்கு ஒரு விரதம் மாரி பண்ணணும்னு கேக்கத் தோணும்!

சூரனை அளி[ழி]ச்சதும், அந்த தேவேந்திரன் தன்னோட ராஜ்ஜியத்துக்கே இவரை ராசாவாக்கி, கூடவே பத்துமோ, பத்தாதோன்னு தன்னோட பொண்ணான தெய்வானையம்மாவையும் கண்ணாலம் கட்டி வைச்சாரு.

இந்த தெய்வானையம்மா கிரியா சக்தி! அதாவது, ஒரு காரியத்தைச் செஞ்சு முடிக்கறதுக்கு தூண்டுகோலா இருக்கறவங்க! இவரு வந்த காரியம் சூரனை அளி[ழி]க்கறது! அதுக்கு இந்தம்மாதான் தூண்டுகோலு!

இனிமே இவரோட வேலை தன்னோட பக்தருங்களைக் காப்பாத்தறது. ஆனாக்காண்டிக்கு, இந்த பக்தருங்க அல்லாரும் இன்னா பண்ணிக்கினு க்கீறாங்கன்னா, இந்த ஒடம்பைப் பிடிச்சுக்கினு, அதும்மேல வினையா சேர்த்துக்கினே க்கீறாங்க. எதுனாலன்னா, ஒடம்ப்பு மேல க்கீற ஆசையினால. ஆசைன்னா இச்சை. அந்த இச்சைக்குல்லாம் காரணமா க்கீறவங்க வள்ளியம்மா! வள்ளியம்மாதான் இச்சா சக்தி!

அதுனால இவரு இன்னா பண்றாருன்னா, அந்த இச்சா சக்தி கிட்டயே போயி, அவளையே சரணடைஞ்சிடறாரு! 'இந்த ஒலகம், ஒடம்பு மேலெல்லாம் க்கீற ஆசையை விட்டுட்டு, என்னோட பக்தருங்க அல்லாரையும் என்னையே நெனைக்கறமாரி பண்ணு'ன்னு அவளைக் கொஞ்சிக் கேட்டுக்கறாராம்!

இத்தத்தான் ஒரு விரதம் மாரி பண்னிக்கினு க்கீறாராம்!

நம்மளையெல்லாம் காப்பாத்தறதுக்கு வேண்டி, இவரு விரதம் இருக்காரு!
அப்பிடீன்னா இவருக்கு நம்ம மேலெல்லாம் எத்தினி அன்பும், அக்கறையும் க்கீதுன்னு புரிஞ்சுக்கோ!

இதான் குருவா வர்ற ஒர்த்தர் பண்ற காரியம். தன்னோட அடியாருங்க நல்லாருக்கணுமேன்ற ஒரே ஒரு கவலைதான் அவருக்கு எப்பவும்! அதுக்காவ இன்னா வோணும்னாலும் செய்வாரு.

இப்ப நாம இன்னா பண்ணணும்?

இந்தத் தலைவன் வளி[ழி] காட்டித் தர்றமாரி, நாமளும், சதா சர்வகாலமும், 'முருகா முருகான்னு, அவரையே சரணடையணும்னு சொல்லிக் காமிக்கறாரு' என முடித்தான் மயிலை மன்னார்.

நாயரின் 'ஓம் சரவணபவ' ஜபம் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
*************
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP