Tuesday, March 06, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 53 [48]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 53


48.

'என்னடா இது கஷ்டகாலம்? இந்தப் 'பவர்-கட்'டுக்கு ஒரு விடிவே வராதா? இப்பிடி இருளோன்னு இருக்கே!' என அலுத்தபடி வந்து உட்கார்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்.

'அதுனாலென்ன சாமி? கொறையே படாதீங்க. அப்பிடியே அந்த அரிக்கேன் லைட்டை இப்பிடி நடுவுல கொணாந்து வையுங்க. இருளெல்லாம் ஓடியேப் பூடும். வெளிச்சந்தானே நமக்கு வேணும். வெட்ட வேண்டியத மட்டும் வெட்டிட்டு, இந்தப் 'பவரை' நாம 'கட்' பண்ணாம இருந்தாப் போறும்' எனச் சொல்லி என்னைப் பார்க்க, அவன் முகத்தில் தோன்றிய குறும்புச் சிரிப்பைக் கவனித்த நான், உடனே அடுத்த பாடலைப் படித்தேன்.

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென் றவரோ டுறுவே லவனே.

அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவொன்று அறவந்து இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

மொத வரியுலியே ரொம்ப அசால்ட்டா சொல்லிக் காட்றாரு நம்ம அருணையாரு.

அறிவு…. இதான் நாம அறிஞ்ச அறிவுன்னு நெனைக்கற ஒண்ணை,.... இந்த ஒலகுல நமக்குன்னு வந்த ஒறவுகளை…. இனிமே இதெல்லாம் வேணாம்னு புரிஞ்சுக்கற நெலை வர்றது ரொம்பவே கஸ்டமான சமாச்சாரம்.

இதெல்லாம் ஒரு பொய்யான மாயை…. இந்த ஒலகம், அத்தால வந்த அம்மா, அப்பா, பொண்ணு, புள்ளை, பொண்டாட்டி, சொத்து, சொகம், …. இதுங்கல்லாம் குடுக்கற கஸ்ட நஸ்டம், ஆனந்தம் ……. அல்லாமே நமக்கு சொந்தமானதில்ல… இதெல்லாம் வெறும் பொய்யிதான்னு புரிஞ்சுக்கறதுக்கு வர்ற நெலையுலியும்கூட, அப்பப்ப, சில சங்கதிங்க வந்து ஒரு கொடைச்சல் குடுக்கும். அப்பவும் கலங்காம நிக்கறதுக்கு ஒரு அசாத்தியமான தெம்பு வரணும். அப்பிடி இருக்கறவங்க ரொம்பவே கம்மி.

திரும்பத் திரும்ப இந்தப் பாட்டுங்கள்ல அருணகிரியாரு சொல்ற சமாச்சாரம் ஒண்ணே ஒண்ணுதான்!

கும்புடற சாமியோட அருளில்லாம, இதெல்லாம் நடக்கறதுக்கு ‘சான்ஸே’ இல்லைன்றதத்தான் கண்டிசனா சொல்லிக் காட்றாரு.


அதான் இந்த மொத ரெண்டு வரியும் சொல்லுது.

"அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ?"

அறிவுன்ற ஒண்ணு அத்துப் போயிறணும்ன்ற அறிஞ்சுக்கற அறிவாளிங்களுக்குத் தொணையா பிரியாம எப்பவும் கூட நிக்கற பெரிய சாமி நீதானேய்யான்னு கெஞ்சிக் கதற்ராரு இதுல!

எப்ப தொணையா நிப்பாரு தெரியுமா?

‘நான் ‘என்னுது’ன்’ற அகம்பாவம் அத்துப் போவணும். அல்லாமே நீதான் சாமின்ற தெளிவு வரணும்.
அதத்தான் அடுத்த வரியுல இன்னும் தெளிவா சொல்றாரு.

"செறிவொன்று அறவந்து இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே!"

‘செறிவு’ன்னா இன்னா?
 
பந்தபாசத்தால, இந்த ஒலகத்துல வந்து சேர்ற ஒறவுங்க.
இவங்களால வர்ற ஒரு ஆணவம் க்கீதே, அதுதான், ஒரு பெரிய இருட்டா வந்து மறைக்குது.

இந்த இருட்டு வெலகணும்னா, அதுக்கு ஒரு மூணு முக்கியமான சாமாச்சாரத்த வுடணும்.

காமம், கோவம், மயக்கம்னு மூணு!

ஒரு பொருளு மேல ஆசை வருது. அது கிடைக்கணுமேன்னு கோவம் கெளம்புது. கெடைச்சதும், அதும்மேல ஒரு மயக்கம்.

இப்பிடி மூணும் ச்சும்மா சுத்திச் சுத்தி அடிக்குதுங்க…….வெளிச்சத்தப் பாக்கவுடாம.

அப்பிடி இந்த மூணையும் ஜெயிச்சவங்கதான் ஞானிங்க!

‘ஆமாண்டா. சீவபோதம் நீங்கினா, சிவபோதம் வந்து ஒக்காரும்னு சொல்லுவாளே, அதாண்டா இது. அத்வைதம்!!!’ எனப் பரவசமாய்ச் சொன்னார் சாம்பு சாஸ்திரிகள்.

‘அதேதாங்க. அப்பிடி சிவபோதமா வந்து நிக்கறவந்தான் கந்தன். அந்தக் கந்தனைத்தான் ‘பிறிவொண்ணு அற நின்ன பிரான் நீதானே’......."வேற எதுவுமே வேணாம். என்னியக் கெட்டியாப் பிடிச்சுக்கோ. அதுவே போறும்னு, ....இந்த அரிக்கேன் லைட்டு மாரி...... வந்து நின்ன என் தெய்வமே!" ன்னு கொண்டாடறாரு அருணையாரு’ எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

ஓம் சரவணபவ.
**************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP