Sunday, October 14, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 16

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 16

முந்தைய பதிவு இங்கே!

14.


"இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி


மாசறு காட்சி யவர்க்கு." [352]







எங்கேயோ பார்த்த முகமா இருக்கே என ஒரு கணம் நினைத்தான்.

அதற்குள் அந்த ஆள் இவனைக் கடந்து சென்றான்.

சிறிது தூரம் சென்றவன், சட்டென ஒரு பொறி தட்டினாற்போல் திரும்பினான்!

இவன் மீது மோதியவன் தூரத்தில் இருந்து இவனைப் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்தபடியே மறைந்தான்.

'அவனேதான்!' அன்று இவன் பணத்தை ரெயில்வே ஸ்டேஷனில் பறித்துச் சென்ற அதே இளைஞன்!

சட்டென கால் சட்டைப்பைக்குள் கையை விட்டான்!

கற்கள் தட்டுப் பட்டன!

'இது ஒரு சகுனம்!

எனக்கு இந்த நேரத்தில் நான் செய்ய வேண்டியது என்னவெனச் சுட்டிக்காட்டும் தருணம்!

இல்லையென்றால், இத்தனை நாளாய் இல்லாமல், இன்று அவன் என் கண்ணில் படுவானேன்?

எந்த ஒரு கனவைத் தொடர்ந்து நான் இங்கே வந்தேனோ, அந்தக் கனவு கனவாகவே இதுவரை போனதற்குக் காரணமானவன்!

இன்று, அதைவிட, அதிகமாகப் பணம் என்னிடம் இருப்பதற்கு இவனே காரணம்!

அன்னிக்கு எனக்கு ஒலகம் தெரியாது.

ஆனா, இன்னிக்கு, அண்ணாச்சி தயவால, கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிஞ்சிருக்கு!

எதையும் சமாளிக்கலாம்னு ஒரு தைரியம் வந்திருக்கு.

ஒருவேளை இதெல்லாம் வரணும்னுதான் அன்னிக்கு இவன் பணத்தை அடிச்சுகிட்டுப் போனானோ?

அப்படீன்னா இவனும் எனக்கு உதவிதான் பண்ணியிருக்கான்.

அப்படிப் பார்த்தா, நான் திரும்பவும் ஊருக்குத் போய், ஆடு மேய்க்கப் போறதுல என்ன லாபம்?

ஒன்னோட கனவை நீ தொடருன்னு சொல்றதுக்காகவே இப்ப இவன் வந்து எம்மேல மோதிட்டுப் போறானோ?'


திடீரென ஒரு புத்துணர்ச்சி பிறந்தது கந்தனுக்குள்!

மனசு சந்தோஷமாகி, லேசாத் துள்ளியது!

'நான் எப்ப வேணும்னாலும் திரும்பவும் ஆடு மேய்க்கப் போலாம். இல்லேன்னா ஒரு ஓட்டல் கூட நடத்த முடியும்! ஆனாக்க,
என்னியப் பர்த்து ஒரு ராசா, மார்ல தங்க மாலை போட்ட ராசா, உனக்குப் புதையல் கிடைக்கும்னு சொல்லியிருக்காரு.
இது எல்லாருக்கும் நடக்கற ஒண்ணு இல்லை. எனக்கு நடந்திருக்கு. இப்ப நான், அத்த வுட்டுட்டு, திரும்பவும் ஊரைப் பாக்கப்
போனேன்னா, இதுக்கெல்லம் அர்த்தமே இல்லாமப் போயிரும்.'

ஒரு புது வேகத்துடன் கந்தன் நடை போட்டான்.

'மஹாபலிபுரம் போவணும்.

அதுக்கு முன்னாடி, வாத்தியார் சொன்ன மாரி, பார்க்க வேண்டிய ஊரையெல்லாம் பார்க்கணும்.

இப்பக் கிடைச்ச மாரி, இன்னும் எத்தினியோ அனுபவம் எனக்குக் கிடைக்கும்.

இனிமே அதான் நான் செய்ய வேண்டியது'
என முடிவு செய்தான்.

பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்!

கண்ணில் பட்ட முதல் பேருந்தில் ஏறினான்.

'தம்பிக்கு எந்த ஊருக்கு டிக்கட்டு?' கண்டக்டர் கேட்டார்.

இந்த பஸ்ஸு எங்கே போவுதோ, அங்கே!' என்றான்.

அவனை வினோதமாகப் பார்த்துக் கொண்டே, சேலத்துக்கு ஒரு டிக்கட் கிழித்தார்.

ஜன்னல் வழியே,' அண்ணே, அண்ணே! எட்டு பிஞ்சு 2 ரூவாண்ணே! வாங்கிக்கங்கண்ணே!' எனக் கூவினான் ஒரு சிறுவன்!


'இவனுக்கு என்ன கனவோ? எதை சாதிக்க வேண்டி, இப்படியெல்லாம் கூவி விற்கிறானோ?' என ஒரு நினைப்பு மனதில் ஓட,
ரெண்டு கட்டு வாங்கிக் கொண்டு ஒரு ஐந்து ரூபாய்த்தாளை அவனிடம் கொடுத்து, 'மிச்சத்த நீயே வெச்சுக்கோ' என்றான்.

சிறுவன் மகிழ்ச்சியுடன் சிரித்தான்.

'நீங்க நல்லா இருக்கணும்ண்ணே!' என வாழ்த்தினான்.

பஸ் கிளம்பும் போது, அவசர அவசரமாக ஒரு வெள்ளைக்காரன் ஏறினான்.

முதுகில் மாட்டியிருந்த தன் பையை மேலே வைத்துவிட்டு, இவன் அருகில் உட்கார்ந்தான்.

'சேலம்தானே போவுது?' என அரைகுறைத் தமிழில் வினவினான்.

கந்தன் அவனை அதிசயமாகப் பார்த்தபடியே, 'ஆம்!' என்றான்.

பஸ் புறப்பட்டது.

[தொடரும்]
*****************************



அடுத்த அத்தியாயம்

22 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் Tuesday, October 16, 2007 10:07:00 PM  

அந்த ஆளைப் பார்த்ததும் இவன் கொடுக்கும் இண்டர்பிரடேஷன் ரொம்ப வித்தியாசமா இருக்கு!! ரொம்ப அருமையா இருக்கு. அடுத்த சகுனம் வெள்ளைக்கார சாமியா!! இருக்கட்டும். :)

VSK Tuesday, October 16, 2007 10:41:00 PM  

பின்னூட்ட நயகன் கையால தொடக்கமா இந்தப் பதிவுக்கு?

இதுவும் அருமையாத்தான் இருக்கு.

எந்த நிலையிலும், உன்னைச் சுத்தி இருக்கறதைக் கவனமாப் பாருன்னு சொன்னாரே அந்தப் பெரியவர், அதைத்தான் செய்யறான் கந்தன்னு நினைக்கறேன், கொத்ஸ்!

துளசி கோபால் Wednesday, October 17, 2007 12:02:00 AM  

//எந்த நிலையிலும், உன்னைச் சுத்தி இருக்கறதைக் கவனமாப் பாருன்னு சொன்னாரே அந்தப் பெரியவர்,//

அதைத்தான் நாங்களும் செஞ்சுக்கிட்டு இருக்கோம் :-)))))

நாகை சிவா Wednesday, October 17, 2007 2:32:00 AM  

உலகத்தில் இருக்கும் எல்லா விதமான மனிதர்களும் இந்த ஆட்டத்தில் வருவார்கள் போல் உள்ளதே....

மங்களூர் சிவா Wednesday, October 17, 2007 10:17:00 AM  

//
எந்த ஒரு கனவைத் தொடர்ந்து நான் இங்கே வந்தேனோ, அந்தக் கனவு கனவாகவே இதுவரை போனதற்குக் காரணமானவன்!
//
//
ஒருவேளை இதெல்லாம் வரணும்னுதான் அன்னிக்கு இவன் பணத்தை அடிச்சுகிட்டுப் போனானோ?
//
கண்டிப்பாக. இல்லைனா கந்தனுக்கு இவ்வளவு அனுபவம் வந்திருக்காது. ஆனால் சில அனுபவங்களை பெற நாம் கொடுக்கும் விலை சற்று அதிகம்தான்

கதை மிக நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.

MSATHIA Wednesday, October 17, 2007 11:12:00 AM  

2 நாள் கழிச்சு இங்க வந்தா கதை வேகமா ஓடிப்போச்சு.

இங்க அனானி ஒருத்தர் பிரச்ன்ட் சொல்றதும் அதுக்கு வாத்தியார் மாதிரி 'மார்க்' பண்ணறதும் காமடியாத்தான் இருக்கு.;-)

\\இவன் பணத்தை ரெயில்வே ஸ்டேஷனில் பறித்துச் சென்ற அதே இளைஞன\\
நானா இருந்தா ரண்டு அறை விட்டு விட்ட காசை வாங்கியிருப்போம்ல. கந்தன் வித்தியாசமான ஆள்தான்.
ம்.. அதுனால தான் இன்னும் 'புதையல்' இருக்கற சங்கதியே தெரியாம சுத்திட்டு இருக்கேனோ?

VSK Wednesday, October 17, 2007 12:15:00 PM  

//அதைத்தான் நாங்களும் செஞ்சுக்கிட்டு இருக்கோம் :-)))))//


அதை வல்லமையா செய்யறவங்கதான் நீங்கன்னு எங்களுக்கும் தெரியுமே டீச்சர்!

என்னமா சுத்தி இருக்கற மனுஷங்களைப் பத்தி, அற்புதமாக எழுதறீங்க!

படிக்கறோம்ல!

VSK Wednesday, October 17, 2007 12:16:00 PM  

//உலகத்தில் இருக்கும் எல்லா விதமான மனிதர்களும் இந்த ஆட்டத்தில் வருவார்கள் போல் உள்ளதே....//

இன்னும் யார் யாரெல்லாம் வராங்கன்னு பாப்பம், நாகைப்புயலே!
:))

VSK Wednesday, October 17, 2007 12:18:00 PM  

// சில அனுபவங்களை பெற நாம் கொடுக்கும் விலை சற்று அதிகம்தான்//


விலை என்பதை நிர்ணயிப்பது யார், திரு. ம. சிவா?

எல்லாம் அவரவர் பார்வையில்தான்.

கற்கும் பாடம் சரியாக இருந்தால், விலை கவனத்துக்கு வராது.

VSK Wednesday, October 17, 2007 12:21:00 PM  

//நானா இருந்தா ரண்டு அறை விட்டு விட்ட காசை வாங்கியிருப்போம்ல.//
அவன் தான் ஓடிட்டான்ல! அப்புறம் எங்கே பிடிக்கறது.?
மாறாக அதிலும் ஒரு பாடம் கற்கிறான் இவன்!

//காமடியாத்தான் இருக்கு.;-)//


இதுல காமெடி என்னங்க இருக்கு சத்தியா!

வந்தேன்னு சொல்றாரு. அவரை மதிச்சு ஒரு வார்த்தை சொன்னேன். அவ்வளவுதானே!
:)))

நாமக்கல் சிபி Thursday, October 18, 2007 11:31:00 AM  

ம்ஹூம்!

2001 லே என்னை ஏமாத்தி 1500 ரூவா வாங்கிட்டுப் போன என் ஃபிரஃண்டு போன மாசம் அவனா கூப்பிட்டு 2000 ரூவாய் கொடுத்தான். வேணாம்னு சொன்னாலும் விடாம பாக்கெட்ல திணிச்சிட்டான்!

அதை நான் எப்படிப்பட்ட சகுணமா எடுத்துக்குறது?

:(

நாமக்கல் சிபி Thursday, October 18, 2007 11:32:00 AM  

சேலத்துக்கு வராரா கந்தன்!

நான் கூட போன சனிக்கிழமை சேலம்தான் போனேன்!

பஸ் ஸ்டாண்டுல கைல ரெண்டு கல்லு வெச்சிகிட்டு ஒரு அப்பாவி புள்ளை நின்னுகிட்டிருந்ததே! அதுதான் கந்தனா?

G.Ragavan Saturday, October 20, 2007 4:39:00 AM  

அதென்னவோ உண்மைதான். ஒவ்வொரு நல்லதுலயும் கெட்டதுலயும் அனுபவந்தான். அதுவும் நல்லதுக்குதான். நல்லதே நடக்கும். சேலத்துல நல்ல மாம்பழம் கெடைக்கும். சீசன் நல்லாருந்தா ஒரு டசன் வாங்கச் சொல்லுங்க.

cheena (சீனா) Saturday, October 20, 2007 4:52:00 AM  

சென்னைக்குச் செல்ல வேண்டிய கந்தன் பாரத யாத்திரை கிளம்பி விட்டான். சேலத்தில் என்ன நடக்க்கிறதென்று பார்க்கலாம். எதிர்பார்ப்பை - இதயத்துடிப்பை அதிகரிக்கிறது கதை செல்லும் போக்கு.

VSK Saturday, October 20, 2007 5:43:00 PM  

//அதை நான் எப்படிப்பட்ட சகுணமா எடுத்துக்குறது?//

நல்ல சகுனம் தான், சிபியாரே!

போனது குட்டி போட்டு திரும்புதே!
:))

VSK Saturday, October 20, 2007 5:45:00 PM  

//பஸ் ஸ்டாண்டுல கைல ரெண்டு கல்லு வெச்சிகிட்டு ஒரு அப்பாவி புள்ளை நின்னுகிட்டிருந்ததே! அதுதான் கந்தனா?//

அது வேற யாராவது நந்தனா இருக்கும் சிபியாரே!

இவன் தான் இன்னும் சேலத்துகுப் போவலியே!
:)0

VSK Saturday, October 20, 2007 5:46:00 PM  

//அதென்னவோ உண்மைதான். ஒவ்வொரு நல்லதுலயும் கெட்டதுலயும் அனுபவந்தான். அதுவும் நல்லதுக்குதான். நல்லதே நடக்கும். சேலத்துல நல்ல மாம்பழம் கெடைக்கும். சீசன் நல்லாருந்தா ஒரு டசன் வாங்கச் சொல்லுங்க.//

சேலத்துக்குப் போனா வாங்கி வரச் சொல்கிறேன் ஜி.ரா! :))

நல்லது நடக்கும் என நம்புவோம்!

VSK Saturday, October 20, 2007 5:47:00 PM  

//சென்னைக்குச் செல்ல வேண்டிய கந்தன் பாரத யாத்திரை கிளம்பி விட்டான். சேலத்தில் என்ன நடக்க்கிறதென்று பார்க்கலாம். எதிர்பார்ப்பை - இதயத்துடிப்பை அதிகரிக்கிறது கதை செல்லும் போக்கு.//

மதுரையை விட்டுக் கிளம்பியிருக்கான்... அவ்வளவுதான், திரு. சீனா!

எக்கே செல்லும் இவன் பாதை?!!

குமரன் (Kumaran) Monday, November 12, 2007 5:31:00 PM  

இப்ப எல்லாம் கொஞ்சம் நின்னு கடந்த நாலைஞ்சு வருடமா என்ன என்ன நடந்தது, எங்க எங்க போயிருக்கோம்ன்னு பாத்து இப்படி நடந்த நல்லது கெட்டதுகளைக் கவனிக்கிற மனசு வந்திருக்கு. நடக்கிறப்ப கெட்டதா தெரிஞ்சது பின்னாடி நல்லதா மாறியிருக்கிறதும் தெரியுது. நெருங்கிய நண்பர்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதுகளையும் கவனிக்க முடியுது. ஆனா இந்த கந்தனை மாதிரி 'கெட்டது' செஞ்சவனை நேருக்கு நேரா பாக்குறப்ப 'கெட்டது' நினைவுக்கு வராம 'அதனால வந்த நல்லது' நெனைவுக்கு வர்ற மனசு இன்னும் வரலிங்க. கந்தன் இடத்துல நான் இருந்திருந்தேன்னா இன்னேரம் அந்த மோதுன திருட்டுப்பய மேல நல்லா கோவம் வந்திருக்கும் - அது கொஞ்சம் அடங்குன பின்னாடி தான் 'நடந்த நல்லது' நெனைவுக்கு வந்திருக்கும்.

ஒரு வேண்டுகோள். இந்த குறட்பாவை கடைசியில போடுங்களேன். அப்படி போட்டா கதையோட அந்தப் பகுதியைப் படிச்ச பின்னாடி இந்த குறள் எப்படி இந்த இடுகைக்குப் பொருந்துதுன்னு ஒரு பார்வை பாப்போம்ல?! அது அந்தக் குறளை மனசுல நிப்பாட்டுறதுக்கும் வாய்ப்பிருக்கு.

VSK Monday, November 12, 2007 5:50:00 PM  

//இந்த குறட்பாவை கடைசியில போடுங்களேன்.//

இதை நீங்க சொல்லும் போது தொடரின் 33-ல் நிற்கிறேன்.

இனி வரும் பதிவுகளில் அப்படியே செய்கிறேன், குமரன்.

இதுக்குத்தான், உங்களைப் போன்றவர்கள் உடனேயே படிக்கணும்ன்றது!
:))

மோசம் பண்ணினவனைப் பார்க்கையில் வருவதாகச் சொன்ன உங்கள் கருத்து, மிகவ்ம் சரியானதே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP