Tuesday, October 20, 2009

"அறுபடைக் குமரன் அருட்டிருமாலை" [கந்தர் சஷ்டிப் பதிவு]

"அறுபடைக் குமரன் அருட்டிரு மாலை" [கந்தர் சஷ்டிப் பதிவு]


காப்பு


அறுபடைக் குமரனின் அருட்டிருத் துதிகளை
குருவடிப் பணிந்து குற்றமின்றி யான்பாட

அருகம்புல் தலைக்கணி ஐங்கரன் கணபதி
திருத்தாள் என்றுமென் காப்பு.

1. திருப்பரங்குன்றம் [முதல் படைவீடு]

அரனவன் அளித்த அருமறைக் கொழுந்து

நரனிவன் எனக்கவன் அருமறை மருந்து
பரனவன் அமரும் பரங்குன்றைத் தொழுவோ
ம்
மறமெலாம் ஒழித்து மங்களம் அருள்வான்!

2. திருச்செந்தூர்[திருச்சீரலைவாய்] [இரண்டாம் படைவீடு]

மலையைப் பிளந்து மாமரத்தைப் பிளந்து

வேலை விடுத்து அவுணரை அழித்து

அலையும் தேவரின் துயரம் தீர்த்த

அலைவாய் அழகன் தாளடி பணிவோம்.

3. பழநி [மூன்றாம் படைவீடு]

பழத்தினை வேண்டிப் பாரெலாம் திரிந்து
வேழன் பறித்திடக் கோபம் கொண்டு
முழத்துணி யுடுத்தித் தண்டம் தாங்கிய

பழநி யாண்டியின் பதமலர் பணிவோம்.

4. சுவாமிமலை[திரு வேரகம்] [நான்காம் படைவீடு]

உருவெனத் திகழ்ந்தது பிரமனைக் கடிந்தது
கருவெனும் வேதப் பொருளது வினவிய
பெருமகன் தனக்குப் பிரணவம் சொன்னது
குருவென அமர்ந்தது ஏரகப் பதியினில்.

5. திருத்தணி [குன்று தோறாடல்] [ஐந்தாம் படைவீடு]

அன்றோர்நாள் சூரனை வேல்கொண்டு அழித்ததுவும்
குன்றத்தில் சினந்தீர வேல்கொண்டு நின்
றதுவும்
மன்றாடி வள்ளிபதம் பிடித்தங்கு கொஞ்சியதுவும்
குன்றுதோ றாடிவரும் குமரவனிவன் கருணையன்றோ.

6. பழமுதிர் சோலை [ஆறாம் படைவீடு]

விழுந்தவர் எழுந்திட வேல்கொண்டு காப்பான்
எழுந்தவர் பணிந்திட மயிலினில் வருவான்
தொழுதவர் அடியவர் துயர்களைத் தீர்ப்பான்
பழமுதிர்ச் சோலைப் பரமனடி பணிவோம்.

நூற்பயன்
அருட்டிருமாலை அனுதினமோதிட
இருட்டறுச்செய்து இன்னல்கள் மாய்த்து
பொருட்டிருவடிவினில் ஒன்றிடவைத்து

விரட்டிடுவினைகளை ஒழிந்திடச்செய்வான்.

வாழ்க சீர் அடியாரெல்லாம்!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
**********************************

5 பின்னூட்டங்கள்:

VSK Wednesday, October 21, 2009 12:10:00 AM  

முருகனருள் முன்னிற்கும்!!

Anonymous,  Wednesday, October 21, 2009 3:31:00 PM  

அறுபடை வேலனின் அருளை அரைநொடியில் அகமெல்லாம்
நிறைத்திடும் "அறுபடைக் குமரன் அருட்டிரு மாலை"
அருளியமைக்கு மிக்க நன்றி.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

VSK Wednesday, October 21, 2009 3:35:00 PM  

பார்த்தவர் அநேகரிருந்தும், பரிவுடன் ஒரு வார்த்தை வந்து சொல்லிய தங்களுக்கு என் முருகன் அருள் வேண்டி நன்றி சொல்கிறேன் ஐயா!

குறும்பன் Thursday, October 29, 2009 3:27:00 PM  

ஓர் ஐயம்.
திருவாவினங்குடி தானே அறுபடை வீட்டில் ஒன்று. பழனி மலையின் அடிவாரத்தில் இருக்கும் குழந்தை வேலாயுத சாமி கோயில் தானே அது. மலை மீதிருக்கும் கோவணான்டி அல்லவே?

VSK Friday, October 30, 2009 9:53:00 AM  

நீங்கள் சொல்வது சரியே திரு. குறும்பன்.
இருப்பினும் பழநியாண்டியையும், இதே பெயரில் அருணையார் முதல் பலரும் பல நிகழ்வுகளைச் சொல்லித் துதித்திருப்பதால், அப்படி அமைத்தேன்! நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP