Tuesday, January 27, 2009

"உந்தீ பற!” - 4

"உந்தீ பற!” - 4

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



[முந்தைய பதிவு]

கருத்தனுக் காக்குநிட் காமிய கன்மங்

கருத்தைத் திருத்தியஃ துந்தீபற

கதிவழி காண்பிக்கு முந்தீபற. [3]

கருத்தனுக்கு ஆக்கு[ம்] நிட்காமிய கன்மம்
கருத்தைத் திருத்தி அஃது உந்தீபற
கதிவழி காண்பிக்கு முந்தீபற.


பலனை வேண்டிச் செய்திடும் கருமம்
ஏதுபலன் தருமென எவரும் அறியார்

வேண்டிய பலனும் வந்திடின் வரலாம்
கூடவோ குறைந்தோ அதுவும் வரலாம்

முற்றிலும் வேறாய் பயனும் தரலாம்
இவ்வகை செய்பலன் நால்வகை ஆகும்

பயனெதும் கருதா செய்வினை செய்யின்
கருத்தைத் திருத்திக் கதிவழி காட்டும்

என்பதை உணரும் அறவழி மாந்தர்
அவ்விதம் செய்து பயனை விரும்பார்.


முதல் பாடல் கருத்தில் சொன்னதுபோல 'நால்வகைப் பயன்கள்' ஒரு செயலால் விளையும் என்பதை நன்கு உணர்ந்தவர், பயன் என்ன என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், செய்யவேண்டிய செய்கையினை மட்டுமே
செய்வதே ‘நிஷ்காமிய கன்மம்’ என தங்களது கருத்தைத் திருத்திக்கொண்டு அதுவே முக்திக்கு வழியென நடப்பார்கள்.

திடமிது பூசை செபமுந் தியான
முடல்வாக் குளத்தொழி லுந்தீபற

வுயர்வாகு மொன்றிலொன் றுந்தீபற. [4]


திடம் இது பூசை செபமும் தியானம்
உடல் வாக்கு உளத்தொழில் உந்தீ பற
உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீபற.


இறைவனை எண்ணி ஆராதித்தலும்
அதனையே உன்னி நாமம் செபித்தலும்

மனதில் எண்ணி தியானம் செய்தலும்
உடல்வாக்கு உள்ளம்செய்யும் மூவகைத்தொழிலாம்

உடல்வழி செய்வது பூசை ஆகும்
அதனினும் சிறந்தது வாக்கினில் செபமும்

உளத்தில் ஒடுங்கிடும் தியானம் மிகவேவுயர்வே
இவ்வகையாய்ச் செய்திடல் எதனிலும் சிறப்பு.


‘காயேனவாசாமனஸா’ என உடல் வாக்கு மனம் என மூன்று வகையில் திடமாகப் பூசை செய்ய இயலும்.

உடலை வருத்தி பூசனை செய்வதைக் காட்டிலும், வாயால் செபித்து பூசை செய்வது சிறந்தது.

அதைவிடவும் சிறந்தது, மனதில் இறையை எண்ணி தியானம் செய்வது.

******************
[தொடரும்]

4 பின்னூட்டங்கள்:

S.Muruganandam Wednesday, January 28, 2009 3:23:00 AM  

//உடலை வருத்தி பூசனை செய்வதைக் காட்டிலும், வாயால் செபித்து பூசை செய்வது சிறந்தது.

அதைவிடவும் சிறந்தது, மனதில் இறையை எண்ணி தியானம் செய்வது.//

அருமை அருமை

VSK Wednesday, January 28, 2009 8:13:00 PM  

அருமையெல்லாம் அருணாசலனுக்கே!
நன்றி திரு. கைலாஷி.

குமரன் (Kumaran) Monday, February 02, 2009 8:36:00 PM  

//கதிவழி காண்பிக்கு முந்தீபற.//

நிஷ்காமிய கருமம் (சாத்வீக தியாகம்) சித்த சுத்தி கொடுத்து முக்திக்கு வழி எது என்பதைக் காண்பிக்கும் என்று சொல்கிறாரோ என்று தோன்றுகிறது. நிஷ்காமிய கன்மமே முக்திக்கு வழி என்று சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது.

VSK Monday, February 02, 2009 9:30:00 PM  

//நிஷ்காமிய கன்மமே முக்திக்கு வழி என்று சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது.//

நானும் அப்படிச் சொல்லவில்லை குமரன்.

//பயனெதும் கருதா செய்வினை செய்யின்
கருத்தைத் திருத்திக் கதிவழி காட்டும்//

கதிக்கு வழி காட்டும் என்னும் பொருளிலேயே சொல்லியிருந்தேன்.

எட்டுவரிகளுக்குள் சொல்ல நினைத்ததால், அப்படி உங்களுக்குப் பட்டிருக்கலாம்.

நன்றி, குமரன்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP