மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 3
மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 3 [முதல் பகுதி]
[இந்தப் பாடலுக்கான மன்னாரின் விளக்கம் இரண்டு பகுதிகளாக அடுத்தடுத்து வரும்! அருள்கூர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கவும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!]
உல்லா சநிரா குலயோ கவிதச்
சல்லா பவிநோ தனுநீ யலையோ
எல்லா மறவென் னையிழந் தநலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.
உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனு[ம்] நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.
மேலும் கேட்கும் ஆவலில் மூன்றாம் பாடலைப் படித்தேன்.
மன்னாரின் முகத்தில் ஒரு புதிய உற்சாகம் தெரிந்தது!
கண்களை மூடிக்கொண்டு பாடலை இரண்டு, மூன்று தரம் படிக்கச் சொல்லிக் கேட்டான்!
ஏதோ தியானத்தில் ஆழ்ந்தவன் போல் அவன் முகம் இருந்தது.
முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது!
'என்னோடு வா! இந்தச் சந்தடி இனிமே நமக்கு வேண்டாம்! நாயர்! நீயும் சீக்கிரமாக் கெளம்பி ஐயரு வூட்டாண்ட வா!' எனச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கலானான்! நானும் நாயரும் கூடவே நடந்தோம்.
'ஹோட்டல் சங்கீதா' தாண்டி தெற்கு வீதியில் திரும்பியதும், என் தோளில் கை போட்டுக்கொண்டு மயிலை மன்னார் பேசலானான்!
'இந்தப் பாட்டு ரொம்பவே ஒசத்தியானுது! சொல்றவங்க சொன்னா அப்பிடியே சொல்லிக்கினே போலாம்! அவ்ளோ மேட்டர் க்கீது இதுக்குள்ள!
இந்தப் பாட்டை புரிஞ்சுக்கறதுக்கு, எப்பிடிப் படிக்கணும்னு சொல்றேன் கேட்டுக்கோ! மிச்சத்த அப்பாலிக்கா ஐயரு வூட்ல வந்து சொல்றேன்!
கடசி வரிலேர்ந்து அப்பிடியே படிப்படியா மேல போயிப் பார்க்கணும் இத்த!
சுரபூபதியே! முருகா! நலம் சொல்லாய்!
இன்னா நலம்?
என்னை இள[ழ]ந்த நலம்!
என்னை இள[ழ]க்கணும்னா இன்னாத்தயெல்லாம் தொலைக்கணும்?
இது அதுன்னு எதுவுமே இல்லாம, எல்லாம் அற என்னை இள[ழ]ந்த நலம்!
இப்ப மொத ரெண்டுவரியையிம் சேர்த்துப் படிக்கணும்!
உல்லாசலேர்ந்து ஆரம்பிச்சு, நீயலையோ வரைக்கும்!
எங்கே நான் சொன்னமாரி சொல்லிக் காட்டு, பார்க்கலாம்' என்றான்
வரிகளைப் பார்த்துக்கொண்டே நானும் சொன்னேன்.
சுரபூபதியே! முருகா! எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்!
உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!
'சரிதான்!' என்பதுபோல நாயர் தலையாட்டினான்! சந்தோஷமாகச் சிரித்தான் மன்னார்.
பேசிக்கொண்டே சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையை அடைந்தோம். ஆளரவம் கேட்டு அவரும் வந்து மௌனமாக உட்கார்ந்தார்!
மன்னார் தொடங்கினான்!
'சுர பூபதி'ன்னு சொல்றாரு!
சுரர்னா ஆரு? நீதான் கொஞ்சம் திருப்புகள்[ழ்]லாம் படிச்சிருக்கியே! அதுல நெறைய வரும் இந்த வார்த்தை! 'சுரர்'னா தேவருங்க! 'பதி'ன்னா ராசா! 'பூ'ன்னா பூமி! ஒலகம்! 'பூபதி'ன்னா ஒலகத்துக்கே ராசா! எந்த ஒலகத்துக்கு? தேவருங்களோட ஒலகத்துக்கே ராசாவேன்றாரு!
இப்ப ஒனக்கு ஒரு டவுட்டு வரும்!
தேவருங்களுக்கெல்லாம் இந்திரந்தானே ராசா! இவுரு எப்பிடி ராசாவாக முடியும்னு!
சூரங்கிட்டேர்ந்து அல்லாரையும் வெளில கொணாந்து, இந்திரனுக்கு மறுபடியும் பட்டம் கட்ட வராரு நம்ம முருகன்!
அப்ப, அவன், 'எனக்கு இதெல்லாம் வோணாம் முருகா! நீயே ராசாவா இரு!'ன்னு சொல்லி, பொண்ணையும் கட்டிக் குடுத்திட்டு ஒக்கார வைச்சுடறான்!
அப்பாலிகா, இவுரு 'நம்ம வேலை நெறைய க்கீது! நம்மளோட அடியாருங்கல்லாம் காத்துக்கினு க்கீறாங்க! அதுனால, இங்க நமக்குத் தோதுப்படாது! நீயே ராசாவா இருப்பா!'ன்னு இந்திரன் கையுல சொல்லிட்டு கெளம்பிடறாரு!
அதான் இவுரு சுர பூபதி!
இப்ப ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க!
ஒரு மந்திரி இருக்காரு.
அவரு முன்னால அல்லாரும் சலாம் போட்டுக்கினு நிக்கறாங்க.
இப்ப முதல்மந்திரி அங்க வராரு.
அப்போ இன்னா ஆவும்?
இந்த மந்திரியே எளு[ழு]ந்திரிச்சு அவரு முன்னாடி கைகட்டிக்கினு, வாய் பொத்திக்கினு, பயபக்தியா நிப்பாரு!
முதல் மந்திரியும் அமத்தலா இந்தாளோட சேர்ல போயி குந்திக்குவாரு!
அதும்மாரித்தான் இதுவும்!
இவுரு எப்ப தேவலோகத்துக்கு வந்தாலும் தேவேந்திரன் எளுந்து தன்னோட நாக்காலியக் குடுத்திருவான்!
அதுனால... இவுரு சுரபூபதி!
ஆச்சா! இப்ப 'முருகா'ன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும்! 'அள[ழ]கு'ன்னு சொல்லலாம்! 'சின்ன வயசு'ன்னு சொல்லலாம்! எப்பிடிச் சொன்னாலும் முன்னே வந்து நிப்பான் முருகன்!
இதுக்கு முந்தின வார்த்தையப் பாரு!
'சொல்லாய்'னு வருது!
ரொம்பவும் இஸ்டமானவங்களத்தான் இப்பிடிக் கூப்புடுவோம்!
அதுலியும் முக்கியமா சின்னக் கொளந்தையா இருந்தா, 'சொல்லும்மா, எங்கண்ணுல்ல, சொல்லுவியாம்'னு இன்னான்னாமோ சொல்லிக் கொஞ்சுவோம்!
அதான் இந்தச் "சொல்லாய்"!
இன்னா சொல்லச் சொல்றாரு அருணகிரியாரு?
எல்லாமற என்னை இள[ழ]ந்த நலத்தை எனக்கு சொல்லித்தாப்பான்னு கொஞ்சிக் கொஞ்சிக் கேக்கறாரு!
இவுரே ஒரு கிளி! அதான் இதுவும் கொஞ்சுது!
'எல்லாம்'னா இன்னா?
சைவசித்தாந்தத்துல இந்த பஞ்ச பூதத்தப் பத்தியும், அதுனால வர்ற மத்த சமாச்சாரமும் அன்னிக்கு சொன்னேன்ல,
அந்த இருவதும் [ஐம்பூதங்கள்[5] ஐம்புலன்கள்[5],ஞானேந்திரியங்கள்[5], கன்மேந்திரியங்கள்[5]] வெளியே தெரியுது! மனம், புத்தி, சித்தம், அகங்காரம்னு உள்ளார க்கீற நாலும் சேர்ந்ததுதான் இந்த 'எல்லாம்'!
இதெல்லாம் அத்துப் போச்சுன்னாலும்,' நானு'ன்ற ஆணவமலம் மட்டும் வுடாம தொத்திக்கினே இருக்கும்! அத்தயும் தொலைச்சுட்டு, ஒரு தனி நெலைல இருக்கற அந்த சொகமான அனுபவத்த நீ எனக்கு சொல்லுன்னு கொஞ்சறாரு!
அந்த நெலையுல இன்னா ஆவும்னா, கண்ணு எத்தயோ பார்க்கும்! ஆனா பார்த்ததே தெரியாது! காது கேக்கும்! ஆனா கேக்குதுன்னு தெரியாது! புத்தி இருக்குன்னு புரியும்! ஆனா, அதுவா ஒண்ணுத்தியும் முடிவு பண்ணாது! இப்பிடி சொல்லிக்கினே போலாம்! அதும்மாரி ஒரு ஆளரவமே இல்லாத நெலையாம் அது! அதைச் சொல்லித் தாப்பான்னு முருகங்கிட்ட கொஞ்சிக் கேக்கறாரு!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.
****************
[தொடரும்]
2 பின்னூட்டங்கள்:
'kannu eththaiyo paarkkum;........
........oru aalaravame ilaatha nelaiyaam athu'.ithaippadiththathum naan paramaachcharyaalai[mahaswamiyai ]
athe nilaiyil kadaisiyaaga tharisanam seithathu ninaivukku vanthu mei silirththen .mannarukku en manamaarntha nanrigal.
//ithaippadiththathum naan paramaachcharyaalai[mahaswamiyai ]
athe nilaiyil kadaisiyaaga tharisanam seithathu ninaivukku vanthu mei silirththen //
ஆஹா! மிக அருமையான ஒப்புவமை திரு மிட்டல்!!
நானும் இந்த அற்புத அனுபவத்தைப் பருகியிருக்கிறேன்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!
Post a Comment