Sunday, March 15, 2009

"உந்தீ பற!” - 32

"உந்தீ பற!” - 32

‘பகவான் ரமணர் அருளிய திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

தனாதியல் யாதெனத் தான்றெரி கிற்பின்
னனாதி யனந்தசத் துந்தீபற
வகண்ட சிதானந்த முந்தீபற. [28]

தன் ஆதி இயல் யாது எனத் தான் தெரிகில் பின்
அனாதி அனந்த சத் உந்தீ பற
அகண்ட சிதானந்தம் உந்தீ பற.

‘நான்’ யார் எனத் தேடிடும் யோகியர்
’நானே நான்’ எனப் புரிந்திடும்போது

‘அழிவிலாத பிறப்பே இலாத
நிரந்தரமான அறிவுறும் இன்பமே’

‘நான்’ எனப் புரிந்திடும் யோகியர்
அனைத்தும் கடந்த அனாதி ஆனந்தம்

சத்தியமாக ஒளிர்ந்திடும் நிலையினில்
எல்லையில்லப் பேரானந்தத்தில் திளைப்பர்.


“தன் நிலை உணர்தல்”

இவ்வுலகில் பிறந்த அனைவரும் துன்பங்களில் இருந்து எப்படி விலகுவது என்னும் ஒன்றையே காலை முதல் மாலை வரையிலும் அன்றாடம் சிந்தித்து அதற்கெனவே பாடு படுகிறோம்.

ஆனால், நீடித்த இன்பம் என்னும் ஒன்று கைக்கெட்டாத தூரத்திலேயே எட்டிப் போகிறது என்பதே நாம் உணரும் உண்மை!

இது புரிந்தவர் தான் யார் எனச் சிந்திக்கத் தொடங்கி முறையான ஒரு குருவின் துணையால், பயிற்சியில் ஈடுபட்டு, இதுவரை சொன்னது போன்ற ஒரு நிலையை அடைகின்றனர்.

இந்த நிலையில் விளைவது ஒரு எல்லையில்லா ஆனந்தம்!

இது எப்படி என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.

தான் விரும்பும் பொருளை அடைவதால் மகிழ்ச்சி வரும் என மனம் நம்மை அலைக்கழிக்க, அதனைத் தேடியே நம் வாழ்க்கை அமைகிறது.

ஒரு பொருள் கிட்டியதும் அல்லது கிட்டாமல் போகும்போதும் விளைகின்ற சந்தோஷம்/ஏமாற்றம் வெகு விரைவிலேயே நம்மை விட்டு விலகி அடுத்த பொருளின் மீது நம் கவனம் திரும்புகிறது.

இரண்டாம் பாடலில் சொன்னது போல, வினை மேலும் வினைகளைச் செய்யத் தூண்டி, நம்மை மேலும் வினைக்கடலில் ஆழ்த்துகிறது.

இதனால் விளையும் சுகமோ, துக்கமோ அதிக நாள் நீடிப்பதில்லை என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

அப்படியானால், எப்போதும் சுகம் என்ற ஒன்றையே நம் மனம் நாடுகிறது; அதையொட்டியே நம் செயல்பாடுகளும் அமைகின்றன எனபதும் புரிய வரும்.

துக்கம் நாடாத நம் இயல்பு சுகம் என்னும் ஒன்றைத் தேடி அலைகிறது.

ஆனால், இவ்வுலகில் கிடைக்கும் சுகங்கள் நமக்கு நீடித்த மகிழ்வைக் கொடுப்பதில்லை என்பதும் புரிகிறது.

இந்த நீடித்த சுகம் என்ற ஒன்றைத் தேட விழையாமல், சுகம், துக்கம் என்ற இரண்டுக்குள்ளேயே நம் வாழ்வு பெரும்பாலும் அடங்கிப் போய் விடுகிறது....

புலன்களாலும், புத்தியாலும் கிடைக்கும் சுகம் நீடித்த இன்பத்தைத் தருவதில்லை எனப் புரியும் சிலர், இது எங்கே கிடைக்கும் என்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஒரு தகுந்த குருவின் அருளால், முறையான பயிற்சியில் ஈடுபட்டு, படிப்படியாக உயர்ந்து, தான் யார் என்கிற அறிவு கிடைக்கப் பெறுகிறார்.

இந்த அறிவின் விளைவால் தெரியவரும் ஒளிவெள்ளத்தில் இதுவரை அதனை மூடியிருந்த அழுக்குகளெல்லாம் மறைந்து, தன்னை உணரும் நிலை கை கூடி வரும்.

இதுவரையிலும் தனது நிலையே இந்த மகிழ்வுதான் என்பது புரிய வரும் போது, இனிப்பான தானே ஏன் இனிப்பு எனக் கருதிய மற்ற பொருட்களின் மீது படிந்து இனிப்பை உணரச் செய்தது ஏனோ என்னும் தெளிவு பிறக்கிறது!

அறியாமை விலகும் போது இது தானாக நிகழ்கிறது!

இதுவே தன்னை உணருதல்!

எந்த ஒரு பொருளும் தன் நிலையிலிருந்து மாறுவதில்லை.

இனிப்பு இனிப்புதான், காரம் காரம் தான்! கசப்பு கசப்புதான்!

அதுபோல, ‘நான்’ என்பதும் நீடித்த நிலைத்த இன்பமே!

இதன் இயல்பு என்ன?

1. அவ்யயம்= அழிவற்றது, கெட்டுப் போகாதது.
2. அபவம்= பிறப்பு இறப்பு என்னும் விதிக்கு உட்படாதது.
3. ஆபூர்ணம்= காலம், நேரம், பொருள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. முழுமையானது. முடிவானது. எல்லையற்றது.
4. சித்= பரிபூரண அறிவு
5. சுகம்= முழுமையான உணர்வு அளிக்கும் பேரானந்தம். எதிலும் குறைவற்ற சுகம்.

இதுவே ‘நான்’!

நிலையில்லாத, அழிந்துபோகக் கூடிய பொருட்களினால் வரும் ஆனந்தம் தாற்காலிகமானது.
நிலைத்த, நீடித்த, அழிவில்லாத, முழுமையான அறிவினால் விளையும் உணர்வே தன்னை உணரச் செய்து, எல்லையில்லாப் பேரானந்தம்
கொடுக்கிறது எனப் பகவான் விளக்குகிறார்.


இந்தப் பேரானந்தம் மட்டுமே போதுமா?
இதுதான் விடுதலையா?

அடுத்த பாடல் இதற்கு விளக்கம் சொல்லும்!

குருவருள் அனைவர்க்கும் சித்திக்கட்டும்!
****************************
[தொடரும்]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP