Sunday, February 15, 2009

"உந்தீ பற” -- 19

"உந்தீ பற” -- 19

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

மனத்தினுருவை மறவா துசாவ
மனமென வொன்றிலை யுந்தீபற
மார்க்கநே ரார்க்குமி துந்தீபற. [17]



மனத்தின் உருவை மறவாது சாவ
மனம் என ஒன்று இ[ல்]லை உந்தீ பற
மார்க்க[ம்] நேர் ஆர்க்கும்[யார்க்கும்] இது உந்தீ பற.


மனத்தினில் பிறந்திடும் உருவது எழுந்திட
குணத்தினில் பிறந்திடும் எண்ணங்கள் ஒழிந்திட


கணத்தினில் அதனை மறந்திடல் வேண்டும்
மனமென எதுவென உணர்ந்திடும் போது

மனமென ஒன்று இல்லை என்னும்
தெளிவே பிறந்திடும் என்பதை அறிந்திடும்

யோகியர் மேலும் இவ்வழி செல்லும்
வகையினை அறிந்திடும் நேர்வழி செல்வார்.

கர்மயோகம், பக்தியோகம், அஷ்டாங்க யோகம் என்னும் வழிகளைப் பற்றிச் சொல்லியபின்னர்,ஞானயோகம் பற்றிய முன்னுரையாக இப்பாடல் அமைகிறது.

எப்படி மனத்தை அமைதிப்படுத்தி, உள்ளில் ஒடுங்கச் செய்வது என்னும் கேள்விகளையும் தாண்டி, இப்போது, இந்த ‘மனம்’ என்பது என்ன?என ஆராயத் தொடங்குகின்றார்.

உள்ளில் எழும் அனைத்துப் பிரச்சினைகளும் எங்கிருந்து எழுகின்றன எனத் தீவிரமாக ஆராய்ந்தால்,இதன் மூலம் நம் எண்ணங்களின் விளைவினாலேயே எனப் புரிய, மனம் என்னும் ஒன்றே இல்லாமல் செய்ய முடியும் எனத் தெளிகிறார்.

அப்படி இல்லாமலேயே செய்துவிடின், பின்பு, பிரச்சினைகளும் கிடையாது, தீர்க்க வேண்டிய அவசியமும் இல்லாது போகிறது.

எல்லா வேதாந்த விளக்கங்களிலும், அநேகமாகக் கையாளப்படும், ‘கயிறு-பாம்பு’ உதாரணம் இங்கு பொருந்தி, இதை இன்னும் சற்று தெளிவாக்கலாம்.

ஒரு பிரச்சினை நிஜமாகவே இருக்கிறதா? இல்லை நிஜமாகவே இல்லையா? அல்லது நம்மால் மட்டுமே பிரச்சினையாக உருவகப் படுத்தப் படுகிறதா ?

இருளில் திடீரெனத் தெரியும் ஒரு கயிறு, அதைப் பாம்பு என எண்ணவைத்து, பயத்தை உண்டாக்குகிறது. விளக்கை அதன் மீது செலுத்திப் பார்க்கும் போது, அது கயிறு எனத் தெளிந்து, அமைதியாகிறான்.

இப்போது, கயிற்றைப் பாம்பாக நினைத்ததும் நிஜம்! அது பாம்பு இல்லை என்பதும் நிஜம்!
அந்த சில நொடிகளில், அதைப் பாம்பு என உணர்ந்ததும் நிஜம்!
இதில் எது உண்மை?

‘உண்மை’ என்பது என்ன?

எந்த ஒரு பொருள், ‘நேற்று, இன்று, நாளை’ என்னும் மூன்று நிலைகளிலும் ஒரே பொருளாக இருக்கிறதோ, அது ஒன்றே நிஜம். உண்மை!

மற்ற எல்லாப் பொருட்களுமே, இல்லாமலோ அல்லது இருக்கிறது என உணரப்படும் ஒன்றோ தான்.

அப்படி உணரவைப்பதுதான் நம் மனம்!

இந்த மனம் தான் ஒரே பொருளை இருப்பதாகவும், இல்லாததாகவும் உணரவைத்து நம்மை அலைக்கழிக்கிறது! கோபம், வெறுப்பு, ஆசை, ஆத்திரம் எனப் பல உணர்வுகளினால் தூண்டப்பட்டு, மாறிக்கொண்டே இருக்கிறது.

இப்படி அடிக்கடி மாறுகின்ற மனம், அதனால் வரும் மாற்றங்கள் எல்லாமே ‘உண்மை’ இல்லை, இது ஒரு ‘மாயை’ எனத் தெளிந்து, இப்போது இந்த மனம் இல்லாமல் போகிறது.

கயிறு பற்றிய தெளிவு இல்லாமல் போனதாலேயே, அது பாம்பு என மாயையாக உணரப்பட்டது.
இப்படி, மாயையாக உணரப்பட்ட பாம்பு தோன்றக் காரணம் அந்தக் கயிறு.

கயிறு என்ற ஒன்றே நிஜம்; மற்ற எல்லா எண்ணங்களும், அதனைத் தொடர்ந்து வரும் அனைத்து எண்ணங்களுமே ‘நிஜத்தில் இல்லாத ஒன்று’ எனப் புரியும் நிலையில், இவற்றையெல்லாம் ஏற்படுத்திய ‘மனத்தை இல்லாமல் செய்வதே’ நேர்வழிக்குச் செலுத்தும் எனப் புரியத் துவங்குகிறது யோகிக்கு.

ஆம்! ‘சாதகன்’ என்ற நிலையிலிருந்து, இப்போது ஒரு ‘யோகி’யாக இவரது பயணம் தொடங்குகிறது!
-------------
[தொடரும்]

1 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Wednesday, February 18, 2009 11:36:00 PM  

எல்லாமே மாயை என்று உணர்தல் தான் மனதின் எண்ணங்களின் உச்சகட்டமா?

மனம் என்னும் ஒன்றே இல்லாமல் செய்ய முடியும்

இது ஞானிகளின் உச்சகட்ட நிலமை?

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP