Wednesday, February 11, 2009

”உந்தீ பற!” - 17

"உந்தீ பற!” - 17

"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

"கற்றது கைம்மண்ணளவு!"

இனிவரும் பாடல்கள் சாதகனை ஒரு அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் விதமாக அமைந்தவை.

அவற்றைப் பார்க்கத் தொடங்கும் முன், இதுவரை பகவான் ரமணர் சொன்னது என்ன என, ஒரு சுருக்கமான விளக்கம் காண இங்கு முயலலாம்.

என் சிற்றறிவுக்கு எட்டியதை ஒட்டியே இந்த விளக்கம் அமைந்திருக்கும். இதை எனக்குச் சொன்னவர்கள் மீது குற்றமில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதினாறு பாடல்கள் இதுவரையில் படித்துப் பொருள் கண்டோம்.

முதல் மூன்று பாடல்கள் கர்மயோகம் என்பது என்ன? அதனால் விளையும் பயன் எத்தன்மையது? அதை அளிப்பது யார்/எது? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதைச் சொல்லின.

4 - 10 முதலான பாடல்கள், பக்தி யோகத்தை விளக்கமாகச் சொல்ல வந்த பாடல்கள்!
பக்தி என்றால் என்ன? பூசனை, ஜபம், தியானம் இவற்றை எப்படிச் செய்வது? இவற்றுல் எது மிகவும் சிறந்தது? இதன் மூலம் ஒரு சாதகன் எதனை அடைய வேண்டுகிறான்? உருவை உள்ளில் நிறுத்தி, உருவை அகற்றி உருவே தானாகி, எந்த ஒரு உருவும் இலாத பரம்பொருளே 'நான்' என உணர்ந்து அதனில் ஒன்றுவதே எப்படி? என்னும் கேள்விகளுக்கு விடையாக அமைந்தது இந்தப் பகுதி.

இதனைத் தாண்டி மேலும் செல்ல விழையும் சாதகன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? அதன் வகைகள் என்னென்ன? அவற்றை எப்படிச் செய்வது முறையானது ? இதனால் விளையும் பயன் என்ன என்பதைச் சொல்லி, 'ஞான யோகம்' வருவதற்கு முதல் 'யோக ஞானம்' யோகத்தைப் பற்றிய முறையான ஞானம் வருதல் வேண்டும் என்னும் விளக்கத்தை 11 முதல் 16 வரையிலான பாடல்கள் விளக்கின.

" யோகஞானம்” பற்றி பல விளக்கங்கள் இருந்தலும், பொதுவாக அனைவராலும் பின்பற்றப்படும் பதஞ்சலி முனிவரின் 'அஷ்டாங்க யோகம்' பற்றிய ஒரு எளிய விளக்கம், இப்போது இதனை மேலும் அறிய உதவும்.

'புற, அக நிலைபாடுகள்', 'எப்படி அமர்வது?', 'முறையான மூச்சடக்கல் எப்படிச் செய்வது?', 'புலனடக்கம் என்றால் என்ன?' 'மனதை ஒருநிலைப் படுத்துதல்' சமாதி நிலை' என்னும் எட்டு நிலைகள் முறையே 'யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், த்யானம், சமாதி' என வழங்கப்படும்.

முறையான குருவின் துணையோடு கற்றுக்கொண்டு செய்யப்படும் பிராணாயாமம்,

வலைக்குள் அகப்படும் பறவைகள் போல், எப்படி எண்ன ஓட்டங்களை அமிழ்த்தி,

உண்மைப் பொருளைக் உணரச் செய்து,

இருவித நிலைப்பாடுகள் கொண்ட மனத்தை ஒடுக்கியும், அழித்தும் நிகழும் பயனால்,

செயல் என்ற ஒன்றும் செய்யாமலேயே, அல்லது, அப்படிச் செய்தாலும் அது பயன் கருதாச் செயலாகவும், உலக நன்மைக்காகவும் செய்யப்படும் ஆனந்த நிலையை ஒரு யோகி எனப்படுபவர் எவ்வாறு அடைகிறார் என்பதைச் சொல்லி,

இந்த 'ஆனந்தம்' எவ்வாறாக 'தன்னை உணர்தல்' என்கின்ற 'தத்துவ தரிசனத்தைக் காட்டுகிறது என்பதை,

11 முதல் 16 வரையிலான பாடல்கள் கோடிட்டுக் காட்டின.

இந்த நிலையை அடைந்த யோகி இனிச் செய்வது எல்லாமே
'ஞான யோகமே'!

இந்த 'ஞான யோகம்’ என்றால் என்ன என ஒரு சிறு விளக்கம் நாளை காணலாம்! அதன் பிறகு, மீதிப் பாடல்களைப் பார்ப்போம்!

முடிந்தால் இந்த 16 பாடல்களையும் மீண்டும் ஒருமுறை படித்துத்தான் பாருங்களேன்!

”தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்!”
**********

[தொடரும்]

2 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Wednesday, February 11, 2009 11:39:00 PM  

ஞானயோகத்துக்காக காத்திருக்கேன்...நாளை வரை.

VSK Thursday, February 12, 2009 10:46:00 PM  

காத்திருக்காமல், இப்போதே போட்டு விட்டேன்!

தொடர்ந்து இப்படி ஒரு பதிவு வருவதைத் தமிழ்மணத்தின் முகப்புக்குக் கொண்டுவர உதவிய உங்களது பின்னூட்டத்துக்கு மிகவுமே நன்றி திரு. குமார்

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP