Thursday, March 19, 2009

"உந்தீ பற! “ -- 34

"உந்தீ பற! “ -- 34
‘பகவான் ரமணர் அருளிய திருவுந்தியார்’


யானற் றியல்வது தேரி னெதுவது
தானற் றவமென்றா னுந்தீபற
தானாம் ரமணேச னுந்தீபற. [30]

யான் அற்று இயல்வது தேரின் எது அது
தான் அற்ற தவம் என்றான் உந்தீ பற
தானாம் ரமணேசன் உந்தீ பற.


தானெனும் ஒன்றினைத் தானே உணர்ந்து
தானும் இல்லா உணர்வினை அடைந்து

எல்லையில்லாப் பெருமகிழ்வதனில்
தானும் ஒன்றாய் இரண்டறக் கலந்து

எல்லாம் எங்கும் எதுவும் இன்பம்
என்னும் நிலையினில் திளைக்கும்

அனுபவம் எதுவென உணர்ந்தவன் சொன்னான்
அவனே ரமணன் எனும் நிலை அறிக.


'திருவுந்தியாரின்' நிறைவுப் பாடலைப் பார்க்கும் முன், இதுவரை அறிந்ததைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போமா?

முதல் மூன்று பாடல்கள் கர்ம யோகம் என்றால் என்ன, அதனை எப்படிச் செய்தல் நலம் என விவரித்தது.

4 முதல் 9 வரையில் பக்தி யோகம் முறையாகப் பயில்வது எப்படி எனச் சொன்னார் பகவான்.

யோகம் செய்வதன் பலனை, பயனை பத்தாவது பாடல் விளக்கியது.

11 முதல் 16 வரையிலான பாடல்கள் அஷ்டாங்க யோகம் பற்றி விரித்துச் சொல்லின.


17 தொடங்கி 29 வரையிலும், ஞான யோகம், ஒரு முறையான பயிற்சியின் மூலம் எப்படி ஒரு தகுந்த குருவின் துணையால் தெளியவரும் என பாடல்களின் மூலம் தெளிவித்தார் பகவான்.


இந்த நிறைவுப் பாடலில், இந்த' சுய தேடல்' எவ்வளவு உயர்வான ஒன்று என்பதனை பகவான் ரமணர் சொல்கிறார்!

--------

இவ்வுலக இன்பங்களை நாம் அடைய வேண்டுமானால், அதற்காக நிறையச் செயல்கள் செய்தாக வேண்டும்.

அதிகப் பயன் வேண்டுமானால், அதிகம் முயற்சி செய்ய வேண்டும் என்பது கண்கூடு.

இதே அளவுகோலை வைத்துத்தான், நாமெல்லாம், பயந்து ஒதுங்குகிறோம்.... இந்தச் சுயதேடலைக் கண்டு!

நீடித்த இன்பம் தரவிருப்பதை அடைய, நீடித்த உழைப்பு தேவையாகிப் போகும் என!

நான் மிகவும் மதிக்கும் அந்தப் பெரியவர் அடிக்கடி ஒன்று சொல்வார்! ....

"மலையளவு நூலறிவு வேண்டாம்! கடுகளவு பயிற்சி செய்தால் போதும்! உண்மை உனக்குக் கிட்டும்!"

தன்னைப் பற்றிய தவறான புரிதலே மேலும், மேலும் நம்முள் அறியாமையை வளர்த்து, ஆணவத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

எந்தச் செயலாலும் இந்த அறியாமையைப் போக்கவே முடியாது!

உண்மை இன்பம் வேண்டுமெனின், நமது இயல்பு எதுவெனச் சரியாக நாம் அறிய வேண்டும்.

இந்தச் 'சுய தேடலில்’ கிடைக்கும் அறிவு ஒரு பெரிய தவம் எனச் சொல்கிறார் ரமணர்.

'தவம்' என்றால் என்ன?

புராணங்களிலும், இதிஹாசங்களிலும் நாம் படித்த, கடுமையாக உடல் வருத்தி, முனிவர்கள் பல்லாண்டுகளாகச் செய்த ஒன்றா?

அரை நொடியில் அவர்களது தவமெல்லாம் ஆணவத்தால், அழிந்து போனதையும் படித்திருக்கிறோமே!

கடுமையான தவத்தால் இது கிட்டியது என்பதை மறந்து, ‘தான்’ எனும் நினைவில் இதையெல்லாம் தொலைத்த முனிவர்கள் பலர்!

அப்படியானால் அது ’தவம்’ அல்ல!

இந்தத் 'தவம்' உள்ளில் நிகழும் ஒன்று! உடல் வருந்தச் செய்யும் ஒன்றல்ல!

ஒருமித்த மனத்துடன், 'எது எனக்கு நீடித்த மகிழ்ச்சியைத் தருகிறது?' என்னும் கேள்விக்கு விடை தேடிச் செல்லும் இந்த உள்ளில் செய்யும் உடல் வருத்திச் செய்யும் தவத்தை விடவும் மிகவும் சிறந்தது!

”இதுவல்ல நான், இதுவல்ல நான்!” என ஒவ்வொன்றாக நம் சட்டைகள் உரியும்போது, நம் ஆணவம் நம்மை விட்டு விலகுகிறது. அறியாமை அகலுகிறது!

உள்ளொளி தெரியத் தொடங்குகிறது!

இதனை நன்கு உணர்ந்தவர் சொல்லும் போது, இதன் வலிமை நமக்குப் புரிய வருகிறது!

அவர்தாம் பகவான் ரமண மஹரிஷி!

தான் அறிந்த ஒளியை நமக்கெல்லாமும் தர அருள்கொண்டு, இந்த அற்புதமான பாடல் தொகுப்பை அளித்துப் பறக்க விட்டிருக்கிறார்!

எளிதில் படித்துப் பொருள் காணமுடியாத உபனிஷத்துகளின் சாரத்தை அழகு தமிழில் நமக்கெல்லாம் தந்து ஒளிவீசப் பறக்கச் செய்திருக்கிறார்!

அந்த மஹானின் பாத கமலங்களில் விழுந்து பணிந்து நமக்கும் இந்த உண்மை புரியச் செய்ய அவரை வேண்டி, நம் தேடலைத் தொடங்குவோம்!

இந்த 'திருவுந்தியாருக்கு' முகப்புப் பாடல்களை அளித்த திரு. முருகனார், நிறைவாகவும் சில பாடல்களை வைத்திருக்கிறார்!

அவற்றை நாளை பார்த்து, இதனை நிறைவு செய்யலாம்.

நன்றி வணக்கம்!


"எத்தனை எத்தனை மஹான்கள் உண்டோ, அத்தனை அருளாளருக்கும் எனது பணிவான வணக்கங்கள்!"

"உந்தீ பற! உந்தீ பற! உள்ளொளி ஒளிர்ந்திட உந்தீ பற!""
******************
[நாளை நிறைவுறும்!]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP