Thursday, February 26, 2009

"உந்தீ பற!" -- 24

"உந்தீ பற!" -- 24



பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

நானென்னுஞ் சொற்பொரு ளாமது நாளுமே
நானற்ற தூக்கத்து முந்தீபற
நமதின்மை நீக்கத்தா லுந்தீபற. [21]


நான் என்னும் சொற்பொருளாம் அது நாளுமே
நான் அற்றது ஊக்கத்தும் உந்தீ பற
நமதின்மை நீக்கத்தால் உந்தீ பற.


தன்னிலை சார்ந்த 'நான்'எனும் பொருள்
தன்னில் மட்டுமே மகிழ்வினைத் தேடும்

சுற்றம் சார்ந்த 'நான்'எனும் சொல்லோ
சற்று விரிந்து மற்றதைக் கொள்ளும்

இரண்டு சொற்களின் எல்லையும் சிறிதே
அனைத்தும் 'நான்'என உணர்வதே பெரிதே

எனதிலை என்னும் நிலையங்கு வந்திட
எல்லாம் 'நானாய்' ஆகுதல் காணலாம்.



இந்தப் பாடலின் பொருளை முற்றுமாக உணர இந்த 'நான்' என்பது என்ன என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆணவத்தின் காரணமாக உணரப்படும் 'நான்' என்னும் சொல், தன்னைப் பற்றியே சிந்தித்திருக்கும்.


இதுவே இன்னும் சற்று விரிந்து தன் உடைமைகள், சுற்றம், நட்பு, நாடு, மொழி என விரிந்து இவற்றையும் இந்த நானுக்குள் சேர்த்து மகிழும்/துன்பப்படும்.
இந்த நிலையிலும், இந்த 'நான்' ஒரு உலகளாவிய பார்வையைக் கொள்வதில்லை.

அவ்வப்போது அப்படிக் கொண்டாலும், வெகுவிரைவாக, தன்னைச் சார்ந்த நானுக்குள் சுருங்கி, அதையும் மீறி, தனக்குள்ளேயே மீண்டும் சுருங்கி வித்தை காட்டும்.

இப்படி மாறி மாறி நிகழ்கின்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்படும் 'நான்' ஒரு நிலயான சொல் அல்ல.

அப்படியென்றால் எது உண்மையான 'நான்'?

இயற்கையுடன்/ஈசுவரனுடன் ஒன்றி, எதுவுமே எனது இல்லை என்கின்ற நிலையில் வரும் ஞானத்தால், அஞ்ஞானமாகிய ஆணவம் என்னும் 'நான்' அழிந்து/அழிக்கப்பட்டு, உண்மையான 'நான்' ஒளிரத் தொடங்குகிறது.

உடல், உணர்வு இவற்றால் நிலைபெற்ற உயிர், [ஜீவன்] எப்போதும் இவ்விரண்டைச் சுற்றியே தன் காலத்தைப் போக்குகிறது.
அக்கம் பக்கத்தில் தன்னைப் போன்ற ஜீவன்கள் பல வகைகளிலும் இருப்பதைக் கண்டு தானும், அவையும் ஒன்றே என உணர்வதற்குப் பதிலாக, தன்னை அவற்றிலிருந்து எப்படி வேறுபடுத்திக் காண்பிப்பது என்னும் சிந்தனையிலேயே அவதிப்படுகிறது.

கடலிலிருந்து எழும் அலைகள் யாவும், தாம் கடலிலிருந்துதான் எழும்புகிறோம் என்னும் உணர்வில்லாமல், ஒன்றை விட அடுத்தது பெரியது/சிறியது; வேகம் அதிகம்/குறைவு என எண்ணினால் எப்படி இருக்கும்!
தாம் அனைத்தும் மீண்டும் அந்தக் கடலுக்குள்ளேயே திரும்பவும் சென்று, மீண்டும் எழத்தான் போகிறோம் என்பது புரியாமல் இவை நடத்தும் ஆட்டங்கள்தான் எத்தனை?

இருந்ததும் கடலே எழுந்ததும் கடலே, அலைந்ததும் கடலே, மீண்டும் திரும்புவதும் அந்த அழிவில்லாக் கடலே!

அந்தக் கடலும் நீர் என்னும் ஒரு பொதுப்பொருளின் ஒரு நிலையே!

அலைகளுக்கு, கடலுக்கு காலநேரக் கணக்குகள் உண்டு. நீருக்கு அவை கிடையாது.

அலை, கடல் என உணர்ந்ததெல்லாம் 'நீர்' என்ற ஒன்றில் அடங்கும் எனப் புரிந்தவுடன், இந்த அலை, கடல் என்கின்ற சொற்கள் பொருளற்றுப் போகின்றன. இந்தப் பெயர்களெல்லாம் வெறும் பெயர்கள் மட்டுமே, எல்லாமே நீரின் மாறுபட்ட வடிவங்களே என்னும் பூன்றம், பூரணம் புரிந்து போகிறது!

இந்தப் பூரணம்தான் சென்ற பாடலிலே சொல்லப்பட்டது!

அப்படிப்பட்ட பூரணத்துவத்தை அடைந்தவர், 'நான்' என்ற சொல்லின் பொருள் இன்னதென நன்கு தெளிந்து, எதுவுமே எனதில்லை என்னும் உணர்வே பூரணமான 'நான்' எனப் புரிவார்.

வேதாந்தத்தில் மிக முக்கியமாகக் கேட்கப்படும் 'நான் யார்?' எனும் கேள்விக்கான விடை நாளைய பாடலில்!

"தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்”
*********
[தொடரும்]

2 பின்னூட்டங்கள்:

Anonymous,  Friday, February 27, 2009 4:37:00 AM  

"நான் யார்"!
என்பதை கண்டு கொள்ள ஆர்வமுடனுள்ளேன்.!!!

VSK Friday, February 27, 2009 9:07:00 AM  

//"நான் யார்"!
என்பதை கண்டு கொள்ள ஆர்வமுடனுள்ளேன்.!!!//

வாங்க! எல்லாரும் சேர்ந்து கற்போம்.
தனித்தனியே அவரவர் புரிதலில் தெளிவோம்!
நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP