Wednesday, December 12, 2007

நிஜமான நிழல்கள்!

நிஜமான நிழல்கள் !

'என்னங்க! இன்னிக்காவது சீக்கிரமா வீட்டுக்கு வந்திருவீங்கல்ல?' என்ற ஷோபாவை எரிச்சலுடன் பார்த்தான், கிரீஷ்.

'இதென்ன கேள்வி தினத்துக்கும்? எப்பவும் போல ஆஃபீஸ் முடிஞ்சதும் வெளியில போயிட்டு லேட்டாத்தான் வருவேன். ஏன்? இன்னிக்கு என்ன திடீர் விசேஷம்?' என்று உறுமினான்.

'அதுக்கில்லீங்க! எங்க அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்கு மேல ஊரிலேருந்து வரேன்னு டெலிஃபோன் பண்ணினாரு. எப்படியும் வர்றதுக்கு ஒன்பது மணிக்கு மேல ஆயிடும். இன்னிக்காவது கொஞ்சம் சீக்கிரமா வந்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும். அதுக்குத்தான்......' எனத் தயங்கியபடியே சொன்னாள் ஷோபா.

'ஆமா! பெருசா அள்ளிக் கொண்டு வரப் போறாரு பாரு உங்க அப்பா! இதோ பாரு! யாருக்காகவும் என் வழக்கத்தை என்னால மாத்திக்க முடியாது! இன்னிக்கு என் ஃப்ரெண்ட் குணாவுக்கு பர்த்டே! ஒரு பார்ட்டி கொடுக்கறான் எங்களுக்கெல்லாம். வர்றதுக்கு 11 க்கு மேலியே ஆகும்! எல்லாம் அவரை நாளைக்குப் பார்த்துக்கலாம். நீ சீக்கிரமா ஆஃபீஸ்லேர்ந்து வந்து உங்கப்பாவைக் கவனிச்சுக்கோ!' என்றபடியே கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு காரைக் கிளப்பினான் கிரீஷ்.

அவன் போவதை ஒரு அலுப்புடன் பார்த்துக் கொண்டே, கிளம்பத் தயாரானாள் ஷோபா.
************
கல்யாணமாகி 4 வருடங்கள் ஆகின்றன கிரீஷ்-ஷோபா தம்பதியினர்க்கு. ஆரம்பத்தில் ரொம்பவே அன்பாகத் தான் இருந்தான் கிரீஷ். இப்பவும் வார இறுதியில் வெளியில் செல்வது எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அலுவல் நாட்களில், இப்போதெல்லாம், கடந்த 2 வருடங்களாக தினமும் வெளியில் நண்பர்களுடன் பாருக்குச் சென்று குடித்துவிட்டு, 10-11 மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறான். பெரிய கம்பனியில் நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். ஷோபாவும் ஒரு நல்ல வேலையில்தான் இருக்கிறாள். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. ஒருவேளை அதுதான் இதற்கெல்லாம் காரணமோ?

ஷோபாவும் முதலில் இது பற்றிக் கேட்டுப் பார்த்துவிட்டு, 'சரி, போ! குடிக்கறது வீட்டுல வேணாம்னு வெளியில குடிக்கிறார்' என விட்டுவிட்டாள்.
********************
'என்ன மாப்ளே! இன்னிக்கு எங்கே பார்ட்டி?' என அலைபேசியில் விசாரித்தான் கிரீஷ்.

'ரம்பாவுக்கு வந்திரு மச்சி! அங்கே உனக்கு ஒரு புதுவித அனுபவம் கிடைக்கப் போகுது! நாம இதுவரைக்கும் போகாத இடம்! அப்பிடியே வர்றப்போ, ராஜுவையும், செழியனையும் பிக்கப் பண்னிகிட்டு வந்திரு! சரியா? ' என மறுமுனையில் குஷியாகச் சொன்னான் குணா.

'அதுக்கென்ன! அப்படியே செஞ்சிடறேன். ரம்பாவா? எங்கேப்பா இருக்கு அது?' என வழியை விசாரித்து வைத்துக் கொண்டான்.

மாலை ஆனதும் நண்பர்களை சேர்த்துக் கொண்டு, அந்த ஹோட்டலை அடைந்தான். சாப்பிடும் இடம், வசதியான தங்கு அறைகள் இவற்றுடன் ஒரு தனி பாரும் சேர்ந்த ஹோட்டல் அது! இதற்குள் செல்ல மட்டும் தனியே டிக்கட் வாங்க வேண்டும்! குணா எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தான். நகரின் எல்லையைத் தாண்டி, அமைந்திருக்கிறது.

அடுத்தவர் முகம் கூடத் தெரியாத அளவுக்கு மங்கலான விளக்கொளியில், ஒரே இரைச்சலாக இருந்தது அந்த பார். புகை மண்டலம் வேறு! நல்ல கூட்டம்! குடித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல ஜோடிகள் இருந்தார்கள்.

குடிப்பானே தவிர... அதுவும் நண்பர்களுடன் சேர்ந்து மட்டுமே.. .... கிரீஷுக்கு இது போன்ற இடத்துக்கு வருவது இதுவே முதல் தடவை. கொஞ்சம் வியப்பாகவும், அச்சமாகவும் இருந்தது.


'என்னடா குணா! இங்க கூட்டிகிட்டு வந்திட்டே!' எனக் கடிந்து கொண்டான், விஸ்கியைச் ருசித்தபடியே!!

'அட! சும்மா குடிச்சுகிட்டே இருந்தா மட்டும் போதுமா? இங்க வந்தா பலானது பலானதுல்லாம் கூட கிடைக்குமாம்! ஏன்! உனக்கே மச்சம் இருந்தா, உன்னைக் கூட யாராச்சும் வந்து கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க!' எனக் கண்ணடித்தான் குணா!

'ரொம்ப நல்லாருக்கு போ! எனக்கு வேணாம்ப்பா அதுல்லாம்! நமக்கு வீட்டுல ஆளு இருக்கு! நீங்க நடத்துங்க!' என்றபடியே பார்வையைப் படர விட்டான்.

செழியனும், ராஜுவும் உற்சாகமாக யாருடனோ ஆடிக் கொண்டிருந்தனர். அதேபோல் இன்னும் பலரும்!. முகம் தெரியாத சில ஜோடிகள் ஆடிக் கொண்டே ஒரு பக்கக் கதவைத் திறந்து , அறைகள் இருந்த பக்கமாகச் செல்வதையும் பார்த்தான்!

'என்ன பாக்கற! இதுக்கெல்லாம் கூட உடனே ரூம் செட் பண்ணிக் கொடுத்திருவாங்க இங்க!' என்று அவனிடம் வந்து சொல்லிவிட்டு, ஒரு பெண்ணுடன் நகர்ந்தான் குணா!

கிரீஷுக்கு வெறுப்பாய் இருந்தது. மணியைப் பார்த்தான். 8.30.
சட்டென காலையில் ஷோபா சொன்னது நினைவுக்கு வரவே, குணாவைத் தேடிக் கண்டு பிடித்து, அவனிடம் விடை பெற்றான் கிரீஷ்!

'டஃப் லக்!' என குணா கத்தியது அவன் காதுகளில் விழுந்தது.

ஒருமணி நேரம் கழித்து, வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மாமனார் வந்த அசதியில் அடுத்த அறையில் படுத்திருந்தது தெரிந்தது. ஷோபா உள்ளே சமையலறையில் இருக்கும் சத்தம் கேட்டது.

நடந்ததை நினைத்துக் கொண்டே வெறுப்புடன் தன் கைப்பெட்டியை பக்கத்தில் இருந்த முக்காலியில் வீசினான்... குடிபோதையில்! ஷோபாவின் கைப்பை மேல் பட்டு அது கீழே விழுந்து சிதறியது.

அதை எடுத்து வைக்கக் குனிந்தான்.

உள்ளிருந்து 'என்னங்க சீக்கிரமே வந்துட்டீங்களா?' எனக் கேட்டவாறே கையில் கரண்டியுடன் வந்த ஷோபா திக்கித்து நின்றாள்!



கிரீஷ் கையிலிருந்த ஷோபாவின் கைப்பையில் இருந்து இரண்டு 'ரம்பா' டிக்கட்டுகள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன!
**********************


[சர்வேசனின் 'ந.ஒ.க. போட்டிக்கு]

12 பின்னூட்டங்கள்:

VSK Wednesday, December 12, 2007 9:57:00 PM  

நன்றாக குரு வாழ்க!
:))

இலவசக்கொத்தனார் Wednesday, December 12, 2007 10:03:00 PM  

இவனை மாதிரி அவங்களும் வேடிக்கை பார்த்துட்டு வந்துட்டாங்களா இருக்கும். ஆமாம் சொல்லிடுங்க இல்லை ஈயப் படை வந்து தாக்குதல் நடத்தும். :))

ஆனா இதைப் படிக்கும் போது ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வருது. (இன்னிக்கு குட்டிக்கதை நாள் போல, பெனாத்தல் பதிவில் வேற ஒண்ணு சொல்லி இருக்கேன்.)

ஒரு குடிகாரன் வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து படுத்திருந்தான். காலை எழுந்து பார்த்தால் பெட் அருகில் ஒரு ப்ளாஸ்கில் காப்பி இருக்கிறது. தலைவலி மாத்திரைகள் இரண்டும் இருக்கிறது. கூடவே ஒரு கடிதம். அடுப்படியில் சாப்படு தயாராக இருக்கிறது, குளியலறையில் வென்னீர் ரெடியாக இருக்கிறது, துணிமணி எல்லாம் இஸ்திரி போட்டு வைத்திருக்கிறேன். ஷூ பாலிஷ் போடப்பட்டு வாயிலருகில் இருக்கிறது.

இவனுக்கு ஒரே குழப்பம். என்னடா வழக்கம் போல குடித்துவிட்டுதானே வந்தோம். இன்றைக்கு என்ன இப்படி உபச்சாரம் நடக்கிறது என் யோசித்துக் கொண்டு பையனைப் பார்த்து என்னடா விஷயம் என்றான்.

பையன் "அப்பா, நேத்து கொஞ்சம் ஓவரா போயிடுச்சா? வீட்டுக்கு வந்து ஒரே வாந்தியா எடுத்துட்டியே. ஆனா ஒண்ணுப்பா, உன் துணியை மாத்த அம்மா முயற்சி செஞ்ச போது. ஏய் என் துணியை எல்லாம் அவுக்காதே. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சு. என் பொண்டாட்டி வீட்டில் இருக்கா அப்படின்னு கத்தி கழட்ட விடாம ஆர்பாட்டம் பண்ணினியேப்பா" என்றான். அப்போதான் ராஜோபசாரத்திற்கு காரணம் புரிஞ்சுது.

ஏன்னு தெரியலை ஆனா இதுதான் ஞாபகத்திற்கு வந்தது.

இலவசக்கொத்தனார் Wednesday, December 12, 2007 10:04:00 PM  

உங்களுக்குமா மொத பின்னூட்டம் போட்டுக்கிற வியாதி. அடக்கடவுளே!! இப்போதான் அந்த ரீச்சரைக் கேட்டேன், அடுத்தது நீங்களா? யாருதான் இதை எல்லாம் சொல்லித்தராங்களோ.....

VSK Wednesday, December 12, 2007 10:12:00 PM  

'நச்'சோட நம்ம வேலை முடிஞ்சுது சாமி!

ம்மத்ததெல்லாம் வாசிக்கறவங்க ஊகத்துக்கு விட்டுடறேன்!

சந்தடி சாக்குல ஒரு குட்டி 'நச்' கதை நீங்க சொன்னது நல்லாவே இருக்கு!

கதை எப்படின்னு ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சு போயிடுவீங்களா, கொத்ஸ்!
:))

சூப்பர் ஸ்டார் ரேஞ்ஜுக்கு பிலிம் காட்டறீங்களே!
[கதை கூட அவர் 'டச்'ல....!!
:))

VSK Wednesday, December 12, 2007 10:18:00 PM  

//யாருதான் இதை எல்லாம் சொல்லித்தராங்களோ.....//

கொஞ்சம் இருங்க!
சொல்லிக் கொடுத்த குருநாதரைக் கேட்டு வந்து சொல்றேன்!
:))

SurveySan Thursday, December 13, 2007 1:13:00 AM  

இந்த 'நச்' அருமை! :)

கொத்ஸின், மினி-நச்சும் அருமை! :)

நாகை சிவா Thursday, December 13, 2007 2:13:00 AM  

:))

கொத்தனார் செம் பாம்ல் இருக்கீங்க போல..

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, December 13, 2007 7:17:00 PM  

"நச்"-குள்ள இன்னொரு "நச்"-சா?
SK, கொத்ஸ் - பின்னிட்டீங்க! :-)

துளசி கோபால் Thursday, December 13, 2007 9:07:00 PM  

இப்படி ஆளாளுக்கு 'நச்'சுனா குடும்பம் வெளங்கிரும்.

VSK Thursday, December 13, 2007 9:39:00 PM  

திட்டறீங்களா டீச்சர்!

சென்ற ஆண்டு சென்னை சென்றிருந்தபோது நான் தற்செயலாக பெட்ரோல் பங்கில் பார்க்க நேரிட்ட ஒரு காட்சியின் தாக்கமே இந்தக் கதை டீச்சர்!

துளசி கோபால் Thursday, December 13, 2007 9:43:00 PM  

ஆமா...திட்டறேந்தான்.

ஆனா உங்களையில்லீங்க. அந்தக் கதா பாத்திரங்களை....

பெட்ரோல் பங்க்?

இப்படியெல்லாம் வேற நடக்குதா....

என்னவோ போங்க. காலம் ரொம்பக் கெட்டுக்கிடக்கு.

VSK Thursday, December 13, 2007 10:14:00 PM  

என்னைத் திட்டலேன்ற வரைக்கும் ரொம்ப நன்றிங்க டீச்சர்!

இப்பத்தான் மூச்சு வந்தது!
:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP