Sunday, June 12, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19

18.

ரொம்ப அருமையா முருகனோட பெருமையைச் சொல்ற இந்தப் பாட்டை சொல்றதுக்கு நான் ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும்! எனக்கு இதுக்கு அருகதை இருக்கான்னுகூடத் தெரியாம மன்னார் என்னைச் சொல்லச் சொல்லிட்டான்! இருந்தாலும் சொல்றதுக்கு முயற்சி பண்றேன். பாட்டைப் படிடாப்பா' என ஆரம்பித்தார் சாம்பு சாஸ்திரிகள்.

உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
வதிகா வலசூ ரபயங் கரனே.

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதி காவல சூர பயங் கரனே.


"உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா"

இன்னாரோட புத்ரன்னா தானா ஒரு பெருமை வந்து ஒட்டிக்கும் இல்லியா? காந்தியோட புள்ளை; நேருவோட பொண்ணுன்னாலே தனியா ஒரு மரியாதை வரும். அதுமாரித்தான் இந்தப் பாட்டோட மொதல் ரெண்டு வரில முருகனோட தோப்பனார் பெருமையைப் பத்திச் சொல்லியிருக்கார் அந்த மஹானுபாவன்!

உதியா, மரியான்னு மொதல் ரெண்டு வார்த்தை.


இதுவரைக்கும் ஜனனம்னோ, மரணம்னோ இல்லாத ஒர்த்தர் ஆருன்னா அந்த சாக்ஷாத் சிவபெருமான் மட்டுந்தான். இதுவரைக்கும் உதிச்சதில்லை; மரிச்சதுமில்லை! 'ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி'தான் இந்த உதியா, மரியா!


அடுத்ததா, உணரா, மறவான்னு ஒரு ரெண்டு !


லோகத்துல இருக்கறவாளுக்கு இந்த ரெண்டும் இருக்கும். உணரத் தெரியும்; மறக்கத் தெரியும்! சிலபேருக்கு உணர மட்டுந்தான் தெரியும்; மறக்க முடியாம அல்லல்படுவா!
சிலபேருக்கு இந்த உணர்ச்சின்றதே இருக்காது; ஏன்னா, எல்லாத்தியும் மறந்துடுவா!


ஆனா, இந்த மறந்துணர்தலும், உணர்ந்து மறத்தலும் இல்லாத ஒரே தெய்வம் அந்தப் பரமேஸ்வரன் தான்! அன்னைக்கு ஒருநாள் வந்தாரே, அந்த சிவசிவாவைக் கேட்டியானா, வரிசையா தேவாரப் பாடலா எடுத்து விடுவார் இதுக்கு!


ஜடம் மாரி உணர்ச்சியே இல்லாம இருக்கார்னு நெனைச்சுண்டாலும், இல்லைன்னா, என்னை மறந்துட்டாரேன்னு நெனைச்சுண்டாலும், அவர் செய்ய வேண்டிய கார்யங்களைச் செஞ்சுண்டுதான் இருப்பர்! அதான் சிவனோட விசேஷ குணம்!


அடுத்தாப்பல சொல்லியிருக்கறது நம்ம எல்லாருக்குமே நன்னாத் தெரிஞ்ச அந்த அண்ணாமலையான் ஸ்தலபுராணம்! 'விதி மால் அறியா'ன்னா, ப்ரஹ்மாவும், மஹாவிஷ்ணுவும் அடிமுடி தேடிப் போனாளோன்னோ, அந்தக் கதை! அவா ரெண்டு பேராலியும் கூட அறிஞ்சுக்க முடியாத பரஞ்சோதியேன்னு சொல்றார்.


இதையெல்லாம் சொல்றது ஆரைப் பத்தின்னா மின்னாடியே சொன்னமாரி, அந்தப் பரமேஸ்வரனைப் பத்தித்தான்! அவர்தான் 'விமலன்'! எந்தவிதமான மலங்களும் இல்லாதவர்! பரிசுத்தமானவர்!


அவரோட 'புதல்வா'ன்னு, புத்ரனேன்னு ஸுப்ரமண்ய ஸ்வாமியைக் கூப்பிடறார்.


இந்த வரியுல ரெண்டு விசேஷம் இருக்கு!


'உதியா, மரியா, உணரா, மறவா'ன்னு ஒரு நாலு வர்றதோன்னோ! அந்த நாலையும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்னு தமிழ் இலக்கணத்துல சொல்லுவா! அந்த நாலும் இந்தப் புதல்வான்னு ஒரு பேர்ல முடிஞ்சு இவருக்கு அடைமொழியா அமையறது ஒண்ணு.


ரெண்டாவதா, நடுவுல 'விதி மால் அறிய விமலன்'ன்னு சொன்னதால, இது எல்லாமே சிவனுக்கானதுதான்னும் தெளிவாச் சொல்லிடறார். இப்பிடியாப்பட்ட தோப்பனோரோட புள்ளைன்னு சொல்றப்பவே ஒரு தனி கெர்வம் வர்றதோன்னோ! அதான் இதோட விசேஷம்! அப்பிடிச் சொல்றப்பவே, இவருக்கும் அதே அளவுக்கு குணங்கள் இருக்குன்னும் சொல்லாமச் சொல்லி ஒசத்தி வைக்கறார் முருகனை!

"அதிகா அநகா அபயா அமராவதி காவல சூர பயங் கரனே"

இனிமே வர்றதுல்லாம் குமரனைச் சிலாகிச்சு சொல்றது! இன்னாரோட புள்ளைன்னு ஒரு மதிப்பு வந்தலும், இவர் எப்படி தன்னைக் காட்டிண்டார்? என்னென்ன கல்யாண குணங்கள்லாம் இவருக்கு இருந்ததுன்னும் சொன்னாத்தானே இவருக்குப் பெருமை? அதுக்காக!


'அதிகா'ன்னா, தலைவனேன்னு அர்த்தம். இவருக்கும் மேலான தெய்வம் வேற ஆருமில்லைன்னு கொண்டாடறார் அருணகிரியார். இவரை மதிக்காம நடந்துண்ட சூரனாகட்டும், சின்னப்பையன் நீன்னு சொன்ன ஔவையாராகட்டும், அவாவாளுக்குத் தகுந்தமாரி பாடம் புகட்டினவர் முருகப் பெருமான்.
சூரனோடையும் விளையாட்டாவே யுத்தம் பண்ணி, ஜெயிச்சுக் காட்டினார்! ஔவையாருக்கும் மரத்தை உலுக்கி எலந்தப்பழத்தைப் போட்டு 'சுட்ட பழம் எது; சுடாத பழம் எது'ன்னு காண்பிச்சார்! அப்படிப்பட்ட பெரிய நேதா, தலைவன் தான் இந்த அதிகன்!


'அநகன்' இது அடுத்தாப்ல சொல்ற வார்த்தை! 'அநகன்'ன்னா ஒரு குறையோ, பாவமோ இல்லாதவன்னு சொல்லுவா! ஸர்வோத்தமனான ஸுப்ரஹ்மண்யன்கிட்ட எந்தவிதமான குறையும் கிடையாது! ஏன்னா, இவர்தான் அந்த விமலனோட புள்ளையாச்சே1 இவர்கிட்ட எப்படி குத்தமோ, பாபமோ இருக்கமுடியும்?


தேவலோகத்தோட தலைநகருக்கு அமராவதிப் பட்டணம். தேவர்கள்லாம் வசிக்கற இடம் அமராவதி. அந்த பட்டணத்தை மீட்டு, திரும்பவும் இந்திரனுக்கும் தேவாளுக்கும் காப்பாத்திக் கொடுத்ததுனால 'அமராவதி காவல'ன்னு புகழ்றார்.


'சூர பயங்கரன்'.... பயங்கரமான ஆளு சூரபத்மன்! தேவாளையும், மனுஷ்யாளையும் ரொம்பவே பயமுறுத்தி ஹிம்ஸை பண்ணினான். எதுத்துக் கேட்டவாளையெல்லாம் தூக்கி காராக்ருஹத்துல போட்டான். 'தன்னை எதுக்கறதுக்கு வேற ஆருமே கிடைக்கலியோ? இந்தச் சின்னப் பயலா என்னோட சண்டைக்கு வர்றது?'ன்னு முருகப்பெருமானை அலக்ஷ்யம் பண்ணினான். அவனுக்கு அடிச்சுது பாரு 'லக்கி ப்ரைஸ்!' முருகன் தன்னோட விஸ்வரூபத்தை அவனுக்குக் காண்பிச்சார்! ஆனானப்பட்ட சூரனே பயந்து நடுங்கிட்டான்! அப்பிடியாப்பட்ட சூரனுக்கே பயங்கரனா வந்தவரேன்னு சொல்லி ஸ்தோத்ரம் பண்ற வார்த்தைதான் இந்த 'சூர பயங்கரனே!' எனச் சொல்லி நிறுத்தினார் சாம்பு சாஸ்திரிகள்!


'தன்னோட மனசைப் பாத்து அநுபூதின்னா இன்னான்னு சொல்லிக்கினே வந்தவரு திடீர்னு நடுவுல இப்பிடி ஒரு பாட்டை... அதுவும் முளு[ழு]க்க முளு[ழு]க்க முருகனோட பெருமையைப் பத்தி ஏன் சொல்லணும்னுதானே 'டவுட்டு]ப்படறே' என்றான் மயிலை மன்னார், என்னைப் பார்த்து!


'ஆம்' என்பதுபோல் அவனைப் பார்த்தேன்!


'இன்னாரைப் பர்த்தேன்; அவரு எனக்கு இன்னின்னது....காரு, பங்களா, ஒரு கோடி ரூபா.... குடுத்தாரு'ன்னு நான் சொல்லிக் காட்டினா, மொதல்ல ஒம்மனசுல இன்னா நெனைப்பு வரும்? ஆர்றா இவனுக்கு இத்தயெல்லாம் குடுத்ததுன்னுதானே! இவன் ஏதோ உதார் வுடறான்னுதானே நெனைப்பே? அதுவே இத்தயெல்லாம் எனக்குக் குடுத்தது அம்பானிப்பா சொல்லி ஆளையும் காமிச்சா, ஒனக்கும் ஒரு தெம்பு.... ஒரு நம்பிக்கை வரும்! நாமளும் இவன்மாரியே பண்ணினா, நமக்கும் கிடைக்குமேன்னு ஒரு ஆசையும் வரும்! சர்த்தானே நா சொல்றது?


இப்ப, தனக்குக் கிடைச்ச அநுபூதி அனுபவத்தைப் பத்தி வெலாவாரியா சொல்லிக்கினே வந்தாரு அருணகிரியாரு. அதுக்கு நடுவுல முருகன், கந்தன்னு பேரு அடிபட்டுக்கினே வந்திச்சில்ல? அந்த முருகன் ஆரு, அவரோட தகுதி இன்னான்னு இந்தப்பாட்டுல வெவரமாச் சொல்லி...ஓ! இப்பேர்ப்பட்ட ஆளா அவுரு? அப்போ இவர் சொல்றது உண்மையாத்தான் இருக்குமின்னு நமக்கெல்லாம் ஒரு தெம்பைக் குடுக்கத்தான் இந்தப் பாட்டுல முருகனோட அப்பாவோட பெருமையைச் சொல்லி, இவுரும் ஒண்ணும் அவுருக்குக் கொறைஞ்ச ஆளில்லைன்னு சொல்லிக் காட்றாரு!' எனச் சிரித்தான் மன்னார்! சாஸ்திரிகளும் கூடச் சேர்ந்து மந்தஹாஸமாகச் சிரித்தார்!


கபாலி கோவில் மணியோசையும் கூடவே ஒலித்துச் சிரித்தது!
*************

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************

4 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Sunday, June 12, 2011 10:45:00 PM  

visaaganukku 'udhiththa naal'
vaazhththukkal!

VSK Sunday, June 12, 2011 11:19:00 PM  

அனகா! அதிபா!
விசாகா! முருகா!

VSK Tuesday, July 05, 2011 12:09:00 PM  

//தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..//

நன்றியுடன் வணங்கிக்கொள்கிறேன் அம்மா. சற்று வேறு வேலையில் இருந்ததால் இங்கு சில நாட்களாக வரவில்லை. இப்போதுதான் பார்த்தேன். பார்த்துவிட்டுக் கருத்தளிக்கிறேன். வணக்கம்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP