Thursday, March 05, 2009

”உந்தீ பற!” -- 28

”உந்தீ பற!” -- 28

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’



தன்னை யுபாதிவிட் டோர்வது தானீசன்
றன்னை யுணர்வதா முந்தீபற
தானா யொளிர்வதா லுந்தீபற. [25]


தன்னை உபாதி விட்டு ஓர்வது தான்
ஈசன் தன்னை உணர்வதாம் உந்தீ பற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற.


இதுதான் ’நான்’ என இதுவரை எம்மை
ஆட்டிப்படைத்த பிடிப்புகள் தளர்ந்திட


உபாதை என்னும் காட்டுகள் அவிழ்ந்திட
தான் என யார் என புரிந்திடல் நிகழும்


தன்னை உணர்வதே 'நானைக்' காட்டிட
தானே ஈசன் என்பதும் விளங்கும்


'நான் கடவுள்' என்பதன் தரிசனம்
தானே நிகழ்வதும் தன்னால் புரியும்.


ஈசனும், ஜீவனும் ஒரே பொருளின் வெவ்வேறு வடிவங்கள் எனச் சென்ற பாடலில் சொல்லியிருந்தார் ரமணர்.


தான் அலை என உணராத அறியாமையினால், அலைகள் ஆர்ப்பரித்து அடங்கி, மடங்கி, மீண்டும், மீண்டும் எழுகின்றன என்பதையும் பார்த்தோம்.


இந்த அறியாமையை விடுபவனுக்கு ஆத்ம தரிசனம் கிடைக்கிறது.


இந்த 'அலை - கடல்- நீர்' உதாரணத்தைக் கூட ஒருவிதத் தயக்கத்துடனேயே சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏனெனில், நம்மைப் போல் உணரும் தன்மை கொண்டவை அல்ல இவை.
அலைக்குத் தெரியாது தான் கடலின் ஒரு அங்கம் என.
கடலுக்குத் தெரியாது தானும் நீர் என்பதன் திரிபே என!


ஆனால், முறையான பயிற்சியினை மேற்கொண்டிருக்கும் சாதகனுக்கு [இப்போது யோகி எனும் நிலைக்கு உயர்ந்திருப்பவருக்கு] இது அப்படியே பொருந்தாது.


அலை அடங்குவதில்லை; கடல் ஓய்வதில்லை; நீர் விலகுவதில்லை.
ஆனால் மனிதனால் இதெல்லாமும் முடியும்!


அப்படியென்றால் என்ன செய்யணும் இவர்?


உடலால், மனத்தால் ஏற்படும் உபாதிகளை அறுத்தெறிவது என்றால், உடலை விட்டு விடுவதா? மனத்தை எப்படி அழிப்பது?


இதுபோன்ற கேள்விகள் நமக்கு எழலாம்.... எழும்!


இப்படித்தான் செய்யணும் என வேதாந்தம் சொல்லுவதே இல்லை.


உடலை அழிக்காதே! உடல் தான் நீ என்னும் அறியாமையை அழி!
மனத்தை அழிக்காதே! மனம் கொடுக்கின்ற போதையில் மயங்கித் திரியாதே!
இதுவே அறியாமையை அகற்றும் வழி!


இப்படிச் செய்கையில், இதுவரை நம்மைக் கட்டியிருந்த பந்தங்கள், சொந்தங்கள் எல்லாம் கட்டுத் தெறித்து ஓடும்!


தெளிந்த மனத்தில் ஈசன் மலர்வான்... ஒளியாக!


இது தானே, தன்னிச்சையாய் நிகழும்!


இதுவா... இந்த ஒளியா கடவுள்?


நானென்னவோ கடவுள் என்றால் கையில் வேலோடு அல்லது ஒரு புல்லாங்குழலோடு, முருகனாக, கண்ணனாக, இன்ன பிற தெய்வங்களாக நினைத்தேனே?
அந்த உரு எனக்குக் கிட்டாதா எனக் கேட்டால்... அதுவும் கிட்டும்..... இறையருளால்!


ஆனால், அப்படிக் கிடைக்கின்ற காட்சியை வைத்து, அதுதான் கடவுள் என மயங்காமல், 'நம்மிடம் இருக்கும் உண்மை நிலையத் தெரிந்து கொள்வதே ஆத்ம தரிசனம்.


அழியாத, எங்கும் நிறைந்த, எல்லாவற்றிலும் கலந்த, அறியாமை நீங்கிய அறிவின் தன்னிலைத் தெளிவே ஒளிமயமாக நம்முள் தெரியும் கடவுள்!


ஆம்! "நான் கடவுள்!"


"அஹம் ப்ரஹ்மாஸ்மி!"


இதை இன்னும் சற்று விரிவாக விளக்குகிறார் பகவான், அடுத்த பாடலில்!
திங்களன்று தொடரலாம்!
நாளை.... இதுவரை பார்த்ததின் ஒரு சிறிய விளக்கம்!


நன்றாக குரு வாழ்க!
***************************

[தொடரும்]

4 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, March 05, 2009 6:50:00 PM  

//இப்படித்தான் செய்யணும் என வேதாந்தம் சொல்லுவதே இல்லை//

அருமை!
அதான் வேதாந்தத்தின் பெருமை!

//உடலை அழிக்காதே! உடல் தான் நீ என்னும் அறியாமையை அழி!//

சரீராபகாரம்-ன்னு சொல்வாய்ங்க! உடலை அபகரிக்காதே என்று!

உடல் நீ அல்ல! எனது உடல்-ன்னு தானே சொல்றோம்! நான் உடல்-ன்னா சொல்றோம்? :)

//அதுதான் கடவுள் என மயங்காமல், 'நம்மிடம் இருக்கும் உண்மை நிலையத் தெரிந்து கொள்வதே ஆத்ம தரிசனம்.//

நல்லா விளக்கி இருக்கீங்க SK!
உந்தீ பற, ஜோராகப் பறக்கிறது!

Anonymous,  Friday, March 06, 2009 2:45:00 AM  

//தெளிந்த மனத்தில் ஈசன் மலர்வான்... ஒளியாக!

இது தானே, தன்னிச்சையாய் நிகழும்!//

காலம் கனியும் வரை காத்திருப்பதல்லாமல்
நாமொன்றும் அறியோம் பரா பரமே!
போற்றி!! போற்றி!!!

VSK Friday, March 06, 2009 1:38:00 PM  

வேதாந்த வழி சென்றால் வாழ்வு வளமாகும் என என் குரு அடிக்கடி சொல்லுவார்.

நன்றி ரவி.

VSK Friday, March 06, 2009 1:39:00 PM  

//காலம் கனியும் வரை காத்திருப்பதல்லாமல்
நாமொன்றும் அறியோம் பரா பரமே!
போற்றி!! போற்றி!!!//

அது ஒன்றுதான் நாம் செய்யக்கூடியது அனானியாரே!

அதேசமயத்தில், முறையான பயிற்சி இந்தத் தேடலை விரைவாக்கும் என ஆன்றோர் சொல்கின்றனர்.
நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP