Saturday, February 07, 2009

"மயிலே! கொணர்தி உன் இறைவனையே!"

"மயிலே! கொணர்தி உன் இறைவனையே!"




பாம்பன் சுவாமிகள்! நம் காலத்தில் வாழ்ந்த அருணகிரிநாதர் இவர்! பல பதிகங்களை முருகன் மீது இவர் இயற்றியிருக்கிறார். ஒவ்வொன்றுமே முத்துகள்தான்! நான் முன்னம் ஒருமுறை சொல்லியிருந்த வேற்குழவி வேட்கை" என்னும் பதிகத்தைப் பக்தியுடன் ஓதி, இரட்டை குழந்தைகளிப் பெற்ற நிகழ்வு உங்களில் சிலருக்கு நினைவிருக்கும்! இவரது சமாதி ஆலயம் திருவான்மியூரில் இருக்கிறது.


"பகை கடிதல்" என்னும் ஒரு அற்புதப் பதிகம்! "இந்தத் திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திருமயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர்."என பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது!


படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். "ஏ! மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டுவா!" என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது!

தைப்பூச நன்நாளில் இப்பதிகத்தை அனைவரும் ஓதி, இலங்கையில் அல்லலுறும் நம் தமிழர்க்கு மயில் வாகனன் விரைவில் அருள அழைக்குமாறு வேண்டுகிறேன். சக்தி வாய்ந்த இப்பதிகம் அனைவர்க்கும் நல்லது அருளட்டும்!


[”முருகனருள்” வலைப்பூவில் இதைப் போட வந்தேன். அங்கு நண்பர் ரவி ஒன்று இப்போதுதான் பதிந்திருக்கிறார். நண்பர் தி.ரா.ச. இன்னொரு பதிவை போடுவதற்காக வைத்திருக்கிறார். எனவே இது இங்கு இடப்படுகிறது! பகவான் ரமணரின் உபதேச உந்தியார் திங்களன்று தொடரும்!!]

"பகை கடிதல்"

திருவளர் சுடருருவே சிவைகர மமருருவே
அருமறை புகழுருவே யறவர்க டொழுமுருவே
இருடபு மொளியுருவே யெனநினை யெனதெதிரே
குருகுகண் முதன்மயிலே கொணர்தியு னிறைவனையே. [1]

மறைபுக ழிறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முகவுருவே யெனநினை யெனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியு னிறைவனையே. [2]

இதரர்கள் பலர்பொரவே யிவணுறை யெனதெதிரே
மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையெனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொருமயிலே கொணர்தியு னிறைவனையே. [3]

பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே. [4]

அழகுறு மலர்முகனே யமரர்கள் பணிகுகனே
மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே
இழவில ரிறையவனே யெனநினை யெனதெதிரே
குழகது மிளிர்மயிலே கொணர்தியு னிறைவனையே. [5]

இணையறு மறுமுகனே யிதசசி மருமகனே
இணரணி புரள்புயனே யெனநினை யெனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற வெழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியு னிறைவனையே. [6]

எளியவ னிறைவகுகா வெனநினை யெனதெதிரே
வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான்
பலபல வெனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியு னிறைவனையே. [7]

இலகயின் மயின்முருகா வெனநினை யெனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கலவெனமா கவினொடு வருமயிலே
குலவிடு சிகைமயிலே கொணர்தியு னிறைவனையே. [8]

இகலறு சிவகுமரா வெனநினை யெனதெதிரே
சுகமுனி வரரெழிலார் சுரர்பலர் புகழ்செயவே
தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே
குகபதி யமர்மயிலே கொணர்தியு னிறைவனையே. [9]

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே
மருமல ரணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியு னிறைவனையே. [10]



மயில் வாகனனே போற்றி!
முருகனருள் முன்னிற்கும்!

***********************************

5 பின்னூட்டங்கள்:

ஹரி ஓம் Wednesday, February 11, 2009 8:37:00 AM  

ஐயா,முதல்முதலாக உங்களது வலைப்பதிவிற்கு வருகிறேன்.மிகவும் அருமை.உங்களது வலைமுகப்பில் உள்ள பழனிமலை படம் எங்கிருந்து கிடைத்தது எனக்கூற முடியுமா?நன்றி.
ஸ்ரீநிவாஸ்
onruparamporul@gmail.com

VSK Wednesday, February 11, 2009 10:40:00 PM  

வருகைக்கு மிக்க நன்றி திரு. ஹரி ஓம்!

அந்தப் படம் என் நண்பர் தந்தது. அவரைக் கேட்டு, விசாரித்து அனுப்புகிறேன்.

நன்றி.

கோவி.கண்ணன் Tuesday, February 17, 2009 10:36:00 PM  

//VSK said...
வருகைக்கு மிக்க நன்றி திரு. ஹரி ஓம்!

அந்தப் படம் என் நண்பர் தந்தது. அவரைக் கேட்டு, விசாரித்து அனுப்புகிறேன்.

நன்றி.
//
அந்த படம் இங்கே இருந்து எடுத்தது தான்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் Sreemath Pamban Swamigal -- chaarvi Sunday, March 20, 2011 10:02:00 PM  

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் பகைகடிதல் பாடலை பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.
மேலும் சுவாமிகளின் முக்கிய பாடல்களுக்கு கீழ்க்கண்ட வலைப்பதிவில்
காணுங்கள்
http://mscherweroyar.blogspot.com
என்றென்றும் அன்புடன்
எம் எஸ் சேர்வராயர்

VSK Monday, March 21, 2011 3:28:00 PM  

தங்களது வலைத்தளத்தைப் படித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன் ஐயா! ஒருமுறை தங்களது திருச்சி விலாசத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்! :))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP