Saturday, October 11, 2008

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"


அன்புள்ள ஜெயலலிதா அம்மா!

தமிழகத்தின் முதலமைச்சராக இருமுறை இருந்தவர் நீங்கள்!

இப்போதும் ஒரு வலுவான எதிர்க் கட்சியாக இருப்பவரும் நீங்கள்!

தமிழகத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் உங்கள் கருத்தைத் தமிழகம் ஆவலுடன் எதிபார்க்கிறது.

உங்களுக்கும், கலைஞருக்கும் இருக்கும் பகைமை உணர்வு அனைவரும் அறிந்ததே!

அவர் எடுக்கும் அனைத்தையுமே எதிர்ப்பதுதான் ஒரு எதிர்க் கட்சித் தலைமையின் அழகு என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், இப்போது நிகழ்வது அதுவல்ல!

ஈழம் பற்றி எரிகிறது அம்மா!

கண்ணில் கண்ட தமிழரெல்லாம் புலிகள் எனச் சுட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப் படுகின்றார்கள்!

பெண்கள் மானபங்கப் படுத்தப் படுகிறார்கள்.

சிறு குழந்தைகள் அழிக்கப் படுகின்றார்கள்.

எங்கேயோ ஒரு அயல்நாட்டில் இருக்கும் எனக்குத் தெரிந்த இந்தச் செய்திகள் உங்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.

இப்போது கலைஞர்... தமிழக முதல்வர் ....... ஒரு சர்வ கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதைக் கூட்டாமலேயே, மத்திய அரசில் தன் பலத்தைக் காட்டியே அவர் ஒரு தீர்வு கண்டிருக்கலாம் என்னும் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

ஆனால், இது ஒன்றைக் காரணம் காட்டி. இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் உங்கள் முடிவை முழுதுமாக எதிர்க்கிறேன்.

நீயா நானா எனப் பலப்பரிட்சை செய்யும் நேரம் இது அல்ல!

ஒட்டு மொத்தமாக ஒரு இனம் முறையாக அழிக்கப் படுகிறது உங்கள் கண்ணில் படவில்லையா!

கலைஞர் உங்கள் எதிரி!

தெரியும் எனக்கு!

ஆனால், அவர் தான் இப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் ஒரு முதல்வர்!

அவர் விடுக்கும் அழைப்பைப் புறக்கணிப்பதின் மூலம் ஒரு பெரும் தவறு செய்கிறீர்கள் நீங்கள்!

நம் தமிழர் படும் அவலத்தை உணர்ந்து, உடனடியாக உங்கள் முடிவை மாற்றி, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, நீங்களும் ஒரு தமிழர் தான் என நிரூபியுங்கள்!

தமிழர் நலனைக் காப்பதுதான் என் தலைமை என தரணிக்குச் சொல்லுங்கள்!

வரலாறு உங்களைப் பேசும்!

******************

நாளை "அன்னை"க்குஒரு கடிதம்!

2 பின்னூட்டங்கள்:

Anonymous,  Saturday, October 11, 2008 6:04:00 PM  

உங்கள் வேண்டுகோள் வெற்றிகரமாக நிறைவேற

எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

VSK Saturday, October 11, 2008 8:41:00 PM  

ஊர் கூடித் தேர் இழுப்பது எனச் சொல்வார்கள்!

அதுபோல, நம் எல்லாரின் பிரார்த்தனையும் சேர ஒரு விடிவு விரைவில் வருவது நிச்சயம்.

நன்றி ஐயா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP