"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9
முந்தைய பதிவு இங்கே!

7. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். [666]
"ஓ! இவர் நிஜமாவே ராஜாதான்! திருடரிடமிருந்து தப்பவே இவர் இதையெல்லாம் மறைத்திருக்கிறார்! " என்று எண்ணினான் கந்தன்.
சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார் அந்தப் பெரியவர்.
"இந்தா! இதை வெச்சுக்கோ!" என இரண்டு கற்களை அவனிடம் தந்தார்.
ஒரு வெள்ளைக் கல், ஒரு கருப்புக் கல்!
"கருப்பு, 'சரி' வெள்ளை, 'சரி இல்லை'! எப்பல்லாம் உனக்கு சந்தேகம் வருதோ, அடையாளத்தை புரிஞ்சுக்க முடியலியோ, அப்போ,
இந்தக் கல்லுங்க உதவும்.
கேக்கறதைச் சரியாக் கேளு.
ஆனா, அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு. புதையல் இருக்கறது மஹாபலிபுரத்துல. அது உனக்கு முந்தியே தெரியும்.
இருந்தாலும், நான் உனக்கு அதுல உதவி செஞ்சேன். அதுக்குத்தான் 3 ஆடு கேட்டேன்.
இப்போ ஒரு 3 விஷயம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோ!
ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணு. பலதையும் போட்டு குழப்பிக்காதே!
கண்ணு முன்னால தெரியுற சகுனங்களைக் கவனிக்காம விட்டுறாதே!
எந்த ஒரு காரியம் தொடங்கினாலும், முடிக்காம விடாதே!
இப்போ கிளம்பு!
அதுக்கு முன்னால ஒரு கதை சொல்றேன், கேளு.
ஒரு ஊர்ல, ஒரு அப்பா, மகன்.
ஒருநாளைக்கு, அப்பா, மகனைப் பாத்து, ' சந்தோஷத்துகான ரகசியம் என்னன்னு சில அறிவாளிங்களைப் பாத்து கேட்டு வான்னு
பையனை அனுப்பி வெச்சான்.
பையனும் ஊரு ஊரா சுத்தினான்.
எவனுக்கும் தெரியலை!
கடைசியில, ஒரு பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.
இங்கேயும், அங்கேயுமா, ஆளுங்க விறுவிறுன்னு அலையறாங்க.
அந்த வீட்டோட முதலாளியைப் பாக்க வரிசையா ஆளுங்க நிக்கறாங்க.
ரெண்டு மணி நேரம் ஆச்சு இவனுக்கு அந்த ஆளைப் பார்க்க.
என்னா விசயமா வந்தேன்னு அவன் கேட்டான்.
சந்தோசத்துக்கான ரகசியம் என்னன்னு இவன் கேக்கறான்.
அந்தாளு சிரிக்கறான்.
'அது கிடக்கட்டும்! அப்புறமாச் சொல்றேன். இப்ப நீ போயி இந்த மாளிகையைச் சுத்திப் பாத்துட்டு வா! அதுக்கு முன்னாடி, இந்தா!
இந்தக் கரண்டியில இருக்கற எண்னை சிந்தாம, கையில வெச்சுகிட்டே போ" என அனுப்பி வைத்தான்.
அப்படியே கவனமா, எண்ணை கொஞ்சம் கூட சிந்தாம, இந்தப் பையனும் மாளிகை முழுக்க சுத்திப் பாத்து வந்தான்!
"என்ன? எல்லாம் பார்த்தியா? சலவைக்கல்லு ராமரைப் பார்த்தியா? மேலே தொங்கின விளக்கைப் பார்த்தியா? தங்க மீனெல்லாம் பார்த்தியா?"
என அடுக்கிக் கொண்டே போனான் முதலாளி!
பையனுக்கோ ஒரே வெட்கம்!
'இல்லீங்க! எண்ணை சிந்தாமப் பாத்துகிட்டே வந்ததுல, அதையெல்லாம் கவனிக்கலை!' என அசடு வழிந்தான்.
இந்த வீட்டுல என்ன இருக்குன்னு தெரியாம இருக்கறவனோட நான் பேச முடியாது! நீ போயி, மறுபடியும் எல்லாத்தையும் பார்த்திட்டு வா!'
என மீண்டும் அனுப்பி வைத்தான்!
இப்போ, அந்தப் பையன், நின்னு நிதானமா, வீடு முழுக்க ஒழுங்கா சுத்திப் பார்த்துவிட்டு வந்தான், கையில் கரண்டியோடுதான்!
'எல்லாம் பாத்துட்டேங்க!' என்றான்.
'நான் கொடுத்த எண்ணை எங்கே?' என்றான் முதலாளி!
அப்போத்தான் கவனிச்சான் பையன்... எண்ணையெல்லாம் கொட்டிப் போனதை!
'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல? இப்போ சொல்றேன் கேளு!உலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்!
அதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும்! அவ்ளோதான்!'
கந்தனுக்குப் புரிந்தது!
புதையலைத் தேடி பயணம் செய்யவும் வேண்டும்.
அதே சமயம், தான் ஆடு மேய்ப்பவன் என்பதையும் மறந்துவிடக் கூடாது!
கிழவர் எழுந்தார்!கந்தனின் தலைக்கு மேல் தன் கைகளால் ஏதோ சில சைகைகள் செய்தார்.
அவன் தலை மீது கை வைத்து ஆசீர்வதித்தார்!
ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றார்!
*************************
'கூஊஊஊஉ' எனக் கத்தியவாறே ரயில் அந்த ஸ்டேஷனில் நின்றது.
ஒரு பெஞ்சில் உட்கார்ந்தபடி கிழவர் அந்த ரயிலைப் பார்த்தார்.
அதோ! அந்த இரண்டாம் பெட்டியில் ஜன்னலோரமாகக் கந்தன்.
'இனிமே நான் உன்னைப் பாக்க மாட்டேன். எங்கே இருந்தாலும் நல்லா இரு! என் ஆசீர்வாதம் எப்பவும் உன் கூட இருக்கும்!' கிழவரின் வாய் முணுமுணுத்தது!
ரயில் கிளம்பியது.
தன் இரு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்தார் கிழவர்.
'அடுத்தாப்பல, செல்லிகிட்ட போயி இவன் நெனைப்பை மறக்கடிக்கணும்' என நடந்தார், ஒரு புன்னகையுடன்!
*******************
[தொடரும்]
அடுத்த அத்தியாயம்












