Tuesday, February 24, 2009

"உந்தீ பற!" -- 23

"உந்தீ பற!" -- 23


பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

நானொன்று தானத்து நானானென் றொன்றது
தானாகத் தோன்றுமே யுந்தீபற
தானது பூன்றமா முந்தீபற. [20]

நான் ஒன்று தான் அத்து நான் நான் என்ற ஒன்று அது
தானாகத் தோன்றுமே உந்தீ பற
தான் அது பூன்றமாம் உந்தீ பற.


'நான்'எனும் ஆணவம் அழித்திட முனைந்து
உள்ளில் தேடி அதனை அழித்திட

உள்ளில் ஒளிரும் ஓரொளி தானாய்
அதுவாய் எழுந்து அங்கே ஒளிரும்

இதுவே உயரிய உள்ளொளி என்பதை
அதுவே தானாய்த் தெரிதலை உணர்வாய்

'நான் - நான்' என பூரணப் பொருளாய்
ஒளிரும் இதுவே முழுப்பொருள் ஆகும்.


பூன்றம் pūṉṟam
, n. <>

"ஆணவம் அழித்தல் எப்படி?' என்பதை ரமணர் இப்பாடலில் விளக்குகிறார்.

சென்ற பாடலில் சொல்லிய 'நான்' எனும் ஒன்று நாம் அன்றாட வாழ்க்கையில் உணருகின்ற ஒரு ஆணவம்.
'நான் ஒல்லியாக/குண்டாக இருக்கிறேன்' 'நான் ஒரு முட்டாள்/அறிவாளி', 'நான் ஒரு ஏழை/பணக்காரன்' எனப் பலவகையிலும் நம்மை அலைக்கழிக்கும் இந்த 'நான்' நம்மை நேர்வழியில் செல்லவிடாது தடுக்கிறது.

எண்ணங்களாலும், உணர்வுகளாலும் வளர்க்கப்படும் இந்த 'நான்' என்னும் ஆணவத்தைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கச் சொல்கிறார் பகவான்.

'எந்தவொரு எண்ணமும், உணர்வும் என்னைப் பாதிக்காத நிலை வந்துவிட்டால், பிறகு எனக்கும் மற்ற ஜடப் பொருட்களுக்கும் என்ன வேறுபாடு?' எனும் நியாயமான சந்தேகம் எழக்கூடும்.

'அப்படியென்றால், நான் இழந்த 'நான்' அடையாளமற்றுப் போய்விடுவேனே' என்னும் ஒரு சந்தேகமும் எழலாம்!

ஆனால், இங்கேயே ரமணர் அதற்கான விடையையும் வைத்திருக்கிறார்!

”நான் இழந்த 'நான்' அடையாளமற்றுப் போகாது!”



அழுக்கு நீங்கிய பொன் ஒளிர்வதுபோல்!!


இதுவரையில் எண்ண, உணர்வு அழுக்குகளால் மூடி மறைக்கப்பட்ட 'உண்மையான "நான்"' தானாகப் பிரகாசிக்கத் தொடங்குகிறது!

களிம்பேறிய செப்புப் பாத்திரத்தைப் புளிகொண்டு தேய்த்தாலே போதும்! தானாக செம்பின் ஒளி இயல்பாகவே வெளிப்படும்!

அதே போலத்தான் இதுவும்!

ஆணவம் அழித்ததும், முழுமையான, பூரணமான, பூன்றமான நான் அதுவாகவே இதயத்தில் ஒளிரத் தொடங்கும் என நமக்கெல்லாம் தெம்பூட்டுகிறார் பகவான்!

நிலையில்லாத இந்த பெருமை/சிறுமைகளைத் தருகின்ற ஆணவத்தைத் தருகின்ற 'நான்' என்பதை அழித்தால், நிஜமான, நிலையான 'நான்' உனக்குத் தெரியும் எனச் சொன்னால், எவராது வேண்டாமென மறுப்பார்களோ!

பூரணமான இந்த 'நானே' மெய்யான 'நான்'! காலங்களைக் கடந்தது இது!

ஆனால், இதுவே போதுமா?


இனி வரும் பாடல்கள் இதற்கான விடை பகரும்!

"தெளிவு குருவின் திருமேனி காண்டல்"
****************************************
[தொடரும்]


Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP