Wednesday, August 30, 2006

அ.அ. திருப்புகழ் -- 8 "வங்கம் பெறு கடலெங்கும்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 8 "வங்கம் பெறு கடலெங்கும்"
----------------------------------------------------------------

சென்ற பாடல் பார்த்து குமரன் கேட்டிருந்தார், 'நாயகன் - நாயகி பாவத்தை அருணையார் பாடிக் கேட்டதில்லை இதுவரையில்' என!

இதோ அதே கருத்தில் இன்னுமொரு எளிய பாடல்!

இதன் உள்ளின்று கவனித்தால், அருணையார் மற்றவர்களைப் போல, தன்னை நாயகி பாவத்தில் வைத்துப் பாடவில்லை என்பது புலனாகும்!

அவர்தான் அனுபூதி பெற்றவராயிற்றே!

அவர் நமக்காக, நம் மீது கருணை கொன்டு, நம் நலம் நாடி வேண்டுகிறார்!
என்னே அவர் கருணைத் திறம்!

நாடு பார்த்ததுண்டா?
இது போன்ற நல்லவரை!
------------------------------------------------------------

...........பாடல்............

[தந்தந் தன தந்தந் தனதன

தந்தந் தன தனதான]


வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை

வந்துந் தியதிரு மதனாலே

வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு மதனாலே

பங்கம் படுமென தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு கொடியான

பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை நினையாயோ

தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி லதனூடே

தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு மயிலாடப்

பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைக
ளென்றும் புகழ்பெற மலரீனும்

பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல பெருமாளே.
______________________________________________________________

.......பொருள் விளக்கம்.........

"தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள்

சென்று ஒன்றிய பொழில் அதனூடே

தெந்தெந் தெனதென என்று அண்டு உற அளி

நின்றும் திகழ்வொடு மயில் ஆட

பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள்

என்றும் புகழ்பெற மலர் ஈனும்

பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழுபுவி

என்றும் செயவல பெருமாளே."

நீண்டு வளர்ந்ததோர் சோலை !
அதன் நீடெங்கும் நிறைந்து நிற்கும்
தென்னை மரங்களும் வாழை மரங்களும்!
இருக்க இடமின்றி அடர்ந்திருக்கும் அச்சோலையுள்
தெந்தெந்தெனவென ரீங்காரம் செய்தவண்ணம்
அமர இடமின்றி போட்டிபோடும் வண்டினங்கள்
அடுத்தவரை விரட்ட எண்ணி அழகிசை பாடவும்,

அவ்விசை கேட்டு அதற்கேற்ப மயிலினங்கள்
தம்தோகை விரித்தங்கு அழகு நடம் ஆடிடவும்,

சோலை செழித்திடக் காரணமாய் பொங்கி நிறைந்து
வழிந்தோடுகின்ற நீர்ச்சுனைகள் முழுதினிலும்
குவளைமலர்க் கூட்டம் இவைகண்டு கண் மலரவும்,

இதுபோன்ற அழகுக் காட்சிகள் அத்தனையும்
நிறைந்திருக்கும் பெருமை பெற்ற தலமதுவாம்
திருத்தணிகை மலையதனின் மீதமர்ந்து
தன் செயல்கள் யாவையும் முடித்து விட்டு இனி
ஏழுலகும் படைத்தழித்துக் காக்கவென
வீற்றிருக்கும் பெருமை கொண்ட முருகோனே!

"வங்கம் பெறுகடல் எங்கும் பொருதிரை
வந்து உந்தி அதிரும் அதனாலே"

ஒரு சேர அலை அடித்தால் ஒலியங்கு இனித்திருக்கும் !
பல வேறு கப்பல்கள் தொடர்ந்தங்கு செல்வதனால்
அலைகளின் ஓட்டமங்கு மாறி மாறி வேறுபட்டு
கரையதினில் சேர்கையிலே தடதடவெனவே
அதிர்ந்தங்கு ஒலிப்பதனால் உளத்தினிலே எழுகின்ற
வேட்கையதின் தாக்கம் இவளை வருத்துவதாலும்,

"வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழல் உற
அஞ்சு அம்பு அதும் விடும் அதனாலே பங்கம் படும்"

தான் நினைக்கும் நேரம் பார்த்து
ஆசையென்னும் தீ மூட்டி,
அவர் மீது மலர்க்கணை தொடுத்து,
அடங்காத மனத்தினரையும்,
அம்பு விட்டு அவர் உள்ளம்
தளரச் செய்யும் மன்மதனால்
நாணம் என்னும் பண்பு மறந்து
காதல்வயத்தால் அவமானம்
அடைந்திங்கு வாடுகின்ற,

"எனது அங்கம் தனில் உதி
பண்பு ஒன்றிய ஒரு கொடியான
பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல்
பொன்றும் தனிமையை நினையாயோ"

என் உடலினில் இருந்து பிறந்தவள்;
நற்பண்புகள் பொருந்தியவள்;
கொடி போலும் மெல்லிய உடலை உடையவள்;
பஞ்சு போலும் மென்மையுடையவள்;
மயில் போலும் சாயல் ஒத்தவள்;
இன்று உம் மீது கொண்ட காதல் தீயை
உள்ளத்தில் பொருத்தி உழலுகின்றாள்!
அதனால் இறந்து படுகின்ற
நிலைமையில் இன்றவள் நிற்கின்றாள்!

பெண்ணென்றால் பேயும் இரங்கிடுமே!
முருகா! இவள் துயர் பார்த்து
நீவிர் திருவுளம் இரங்கிடக் கூடாதோ!
இவளது தனிமை கருதி இப்போதே
இனிமை செய்திடல் வேண்டும், பெருமானே!
_____________________________________________________________________________

அருஞ்சொற்பொருள்:

திரை
= அலை
அழல்= நெருப்பு
பங்கம்= அவமானம்
நெஞ்சொன்றிய அழல்= காமத்தீ
தெங்கம்= தென்னை
கதலி= வாழை
அண்டு உற = நெருக்கமாக நின்று
அளி= வண்டு
திகழ்வொடு= விளக்கமாக
-----------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !

___________________________________________________________________

Read more...

Tuesday, August 29, 2006

"பாலியல் கல்வி - பெற்றோருக்கு" [3]

"பாலியல் கல்வி" - பெற்றோருக்கு [3]


கோவி கண்ணன் 'கோவி'ப்பதால், இனி நேரடியாக கல்வி புகட்ட ஆரம்பிப்போம்!சரியா!
என்ன, எல்லாரும் சிலேட்டு, பலப்பம்லாம் எடுத்துகிட்டு வந்துட்டீங்கதானே!

'அடுத்தது, 3 வயதுக் குழந்தையின் பெற்றோர் அறிய வேண்டியது' எனப் போட்டவுடன் கோவியார் சிங்கையிலிருந்து தொலை பேசினார்!
"விட்டா எதை எழுதறதுன்னு ஒண்ணும் கிடையாதா? மூணு வயசுக் குழந்தைக்கு என்னங்க தெரியும்? அப்ப ஏங்க நாம கவலைப்படணும்? அப்பவே போய் எதுனாச்சும் சொன்னோம்னா, தப்பா போயிறாதா?" என்று!

இது போன்ற 3 வயதுக் குழந்தையின் தாய் ஒருவர், ஒருமுறை என்னிடம் வந்து கேட்டார்கள், "டாக்டர்! என் பையன் என்னை விட்டு நகர மாட்டேன் என்கிறான்.
தனி ரூம், பெட் எல்லாம் போட்டு அவனைத் தூங்கச் செய்துவிட்டு வந்தாலும், ஒரு அரை மணி நேரத்தில் அங்கிருந்து எழுந்து என்னிடம் ஓடி வந்து கட்டிபிடித்துத் தூங்கினால்தான் அவனுக்கு நிம்மதி!
அதுக்கப்புறம் போகவே மாட்டான்!
எங்க பெட்லதான் மீதி ராத்திரி முழுவதும்!
இதனால், எனக்கும் என் கணவருக்குமிடையே பிரச்சினை வருகிறது!
நீ சரியாக வளர்ப்பதில்லை எனத் திட்டுகிறார். என்ன செய்வது?" என்று.

குழந்தைகள் வளரும் காலத்தில் பல நிகழ்வுகள்!
அவற்றை அப்படியே தேக்கி வைத்து மூளையின் ஒரு பகுதியில் போட்டு வைத்து சமயம் வரும் போது உபயோகப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு.
இன்று நாம் காட்டும் ஆசை, பாசம், அன்பு, கோபம், வெறுப்பு, விருப்பு, பொறாமை போன்ற பல்வேறு குணங்கள் ஏதோ திடீரென வருவதில்லை.
சிறுவயது முதலே, பார்த்து, உணர்ந்து, பழகிய நிகழ்வுகளின் விளைவே இவையெல்லாம்!

பிறக்கும் போதே அத்தனை மொட்டுக்களையும் வைத்துத்தான் பிறப்பிக்கிறோம்!
அந்தந்த நேரங்களில் அவை மலர்கின்றன!
[நம்ம பொன்ஸ் சொன்ன மாதிரி!]

சரி, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும்?

அன்பின் அரவணைப்பு எப்படி இருக்கும் எனத் தெரியும்!
பால் குடித்த இடத்தின் சுவை தெரியும்!
பெண்ணென்றால் ரோஸ் நிறம்[pink]. ஆணென்றால், நீல நிறம்[blue] எனத் தெரியும்!
பொம்மை வைத்து விளையாடுவதா, இல்லை கார், ட்ரக் போன்ற விளையாட்டுப் பொருளா எனத் தெரியும்!
சொப்பு, டீ கோப்பைகளும், சமையலறை சாதனங்களும் வைத்து விளையாட பெண் குழந்தைகளுக்குத் தெரியும்!
கூடைப்பந்து, கிரிக்கட் போன்ற விளையாட்டுகள் ஆண் குழந்தைகளுக்குத் தெரியும்!
கூட இருக்கும் அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, தமக்கையோ ஒரே தொட்டியில் அமர்ந்து, குளித்து, நீரிறைத்து விளையாடும் போது ஆண், பெண் இருவருக்குமிடையே இருக்கும் உறுப்பு வேறுபாடுகள் தெரியும்.
தாய், வீட்டில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லையென்பதால், குழந்தையை முன்னே விட்டு, தான் குளிக்கும் போது,.... பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் இடையே உள்ள உருவ வேறுபாடுகள் தெரியும்!
படுக்கையறையில் சில பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து, ஒன்றும் புரியாமல், ஆனால் அதே நேரம் அதை நினைவின் ஒரு மூலையில் போட்டு வைக்கத் தெரியும்!

ஆச்சரியமாக இருக்கிறதா?
இதுதான் உண்மை!
மருத்துவ வல்லுநர்கள், உளநிலை வித்தகர்கள் கண்டறிந்து சொல்லும் உண்மைகள்!

நான் சொன்னது பாலியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே!
இன்னும், அப்பா அம்மா சண்டை போடுவது, அடுத்த குழந்தை பிறந்தவுடன், தன்னை விட்டு, அதை கொஞ்சுவதைக் கவனிப்பது போன்ற நிகழ்வுகளைச் சொல்லப் போனால், பதிவின் நீளம் அதிகமாகி, நோக்கம் சுருங்கி விடும் அபாயம் இருப்பதால் சொல்லாமல் விடுகிறேன்!

மேற்சொன்னவைகளை வைத்து தவறாக எண்ண வேண்டாம்!

இவற்றின் தீவிரமும், பொருளும் புரியாத வயதுதான் இது!

ஆனால், மனதில் நிறுத்திக் கொள்ளப்படுபவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!

இந்த வயதுக் குழந்தைகள் சாதாரணமாகக் கேட்கும் கேள்விதான் நான் பதிவின் தலைப்பாய்ச் சொன்னது!

"அம்மா! நான் எங்கேருந்து வந்தேன்?"

எப்போது இது வரும் என எதிர்பாராததால், எதை வைத்து இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால், பெரும்பாலான பெற்றோர்களின் பதில் இப்படித்தான் இருக்கும்!

"அதுவா கண்ணு! நீ சாமிகிட்டேர்ந்து வந்தே!"
"இதெல்லாம் உனக்கெதுக்கு இப்போ?"
"ஒரு பூதம் கொண்டு வந்து ஒரு நாளு உன்னைய இங்க போட்டுது!"
"ஏய்! குழந்தை கேக்குது! என்னா சொல்லப் போற?, நான் சொல்லட்டுமா?"
போன்ற பொறுப்பற்ற பதில்களே!

மாறாக என்ன சொல்லலாம்?
" நீ என் வயித்துக்குள்ளே ஒரு ஸ்பெஷல் இடத்துல வளர்ந்தே! இதோ பாரு, அதோட வரிகள்!"
"நானும் அப்பாவும் நீ வேணுமின்னு சொல்லி உன்னிய இங்கு கொண்டாந்தோம்"
இது போன்ற தெளிவான, எளிமையான பதில்களால் குழந்தை அந்த வயதில் மேற்கொண்டு கேளாமல் திருப்தியடைந்துவிடும்!
உங்கள் மேல் இன்னும் பாசம் கொள்ளும்!
அது வளர, வளர, மேற்கொண்டு சொல்லிக்கலாம்!

பதிவு நீள்கிறது!
இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்!
அடுத்த பதிவில் தொடர்வோம், அவர்கள் பாலியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன இந்த வயதில் என்பது பற்றி!

*************************************************************************************

Read more...

Saturday, August 26, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" - 2

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" - 2

வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

முன்னுரையைத் தொடர்ந்து இன்னும் கொஞ்சம், பெற்றோர்களைப் பற்றி சொல்லிவிட்டு மேலே போகலாம் எனக் கருதுகிறேன்.

ஆசையின் தேக்கமெல்லாம் அள்ளிக் கொணர்ந்து தமக்கென ஒரு பிள்ளையைப் பெறுகின்ற பெற்றோர்கள் தாம் பெற்றது இன்னவென பெரும்பாலும் அறிவதில்லை.

தன் வாரிசு என ஒருவனை, ஒருத்தியைக் காட்டிக் கொள்வதிலும், தன் சந்ததி மேலும் வளர்கிறது எனும் அளவிலேயே தன் குழந்தையைப் பார்க்கிறார்கள்.

தான் கற்ற, கற்க மறந்த சில பாடங்களின் அளவுகோலையே கொண்டு தம் அளவிலேயே அக்குழந்தையை சீராட்டி, பாராட்டி வளர்க்க முற்படுகின்றனர்.

தன்னை மீறியும் இவ்வுலகம் வளர்கிறது; அதில்தான் இப்பிள்ளை வளரந்து ஒரு பேர் சொல்லப் போகிறது என்பதனை அறிந்தோ, அறியாமலோ, தன் மரபு அளவுகோள்களை [hereditory values] அதன் மீது திணித்து, அதற்கு ஒரு தாழ்வு மனப்பானமையையோ, அல்லது ஒரு மெத்தனத்தையோதான் பெற்றோர்கள் "பெரும்பாலும்" கொடுத்து வளர்க்கிறார்கள்!

இல்லையென மறுத்தாலும், இதுதான் நாம் காணும் உண்மை நிகழ்வு!

அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன்.

நிறைய வசதிகளைக் கொடுப்பதின் மூலம், ஒரு நல்ல பரம்பரையை உருவாக்கிடலாம் எனவே பெருமளவில் தாய்-தந்தையர் கணக்கு போடுகின்றனர்.

"வழக்கத்தை மாற்றுவானேன்?"[Why change the tradition?] என்ற மனப்பான்மையே இங்கு அதிகம் காண்கிறோம்!

ஆங்கிலத்தில் மூன்று 'I'களைப் பற்றி ஒரு சொல்லாடல் உண்டு.

தகவல், [Information], பரிமாறல், [Interaction], செயலாக்கம், [Implementation] என்று.


இவை மூன்றும் ஒன்று அல்ல!

தகவலைச் சொல்ல வேண்டும்.
பரிமாறும் போது விருப்பு வெறுப்பில்லாமல், இருதரப்புக் கருத்துகளையும் கேட்க வேண்டும்.
செயலாக்கும்போது யார் இதனைச் செய்ய வேண்டுமென நாம் நினைக்கிறோமோ, அவர்களைச் செய்ய விட வேண்டும்.

ஆனால், நடைமுறையில் வரும்போது இம்மூன்றையும் கலந்தடித்து குழப்பி விடுகிறோம்.

தகவலைச் சொல்லி, பரிமாறலைத் தவிர்த்து, நம் கருத்தை மட்டுமே வலியுறுத்தி, இப்படித்தான் செய்ய வேன்டும் என நிர்பந்தித்து வளர விடாமல் செய்து விடுகிறோம்.

நாம் எது சரியென நினைக்கிறோமோ, அதைத் தாண்டி அவர்களை வளர விடுவது இல்லை என்பதே இங்கு நிஜமாகிப் போன நிதரிசனம்.

எவ்வளவுக்கெவ்வளவு வசதிகளைக் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களின் வளர்ச்சியில் நாம் குறுக்கிடுகிறோம் என்பதுதான் உண்மை.

நாம் புனிதமாகக் கருதும் இதிகாசங்கள் இதனைத்தான் நமக்கு உணர்த்துகின்றன!

அவை நிஜமோ, இல்லை வெறும் கதையோ, அதைப் பற்றி இங்கு பேச வேண்டாம்.

இராமாயணம் என்ன சொல்லுகிறது?

எனக்குத் தெரிந்ததெல்லாம் இது மட்டுமே!
"கடவுளே உனக்கு மகனாகப் பிறந்தாலும், உனக்கு நிம்மதி வராது;அவனே உன் சாவுக்கும் காரணமாயிருக்கக் கூடும்!"

இராமன் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்தான்.
பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தான்.
அதற்கு முன்னர், சுகபோகத்தில் திளைத்தான்.
வனவாசத்திலும், 13 ஆண்டுகள் மனைவி, தம்பியுடன் வாழ்ந்தான்.
அடுத்த ஆறு மாதங்கள் அவளைத் தேடி அலைந்தான்.
கடைசி ஆறு மாத காலம்தான் உண்மையிலேயே இராமாயணம்.
அதை விடுத்துப் பார்த்தால், மற்ற நிகழ்வுகளெல்லாம், வெறும் இடத்தை நிரப்பும் காட்சிகளே!

சரி, கண்ணன் கதைக்கு வருவோம்!
அதில் முக்கால்வாசி அவனது பாலபருவத்தின் கதைகளே!
பிறந்தவுடனேயே இட்ம் மாறினான்.
ஒரு சேரியில் வளர்ந்தான்.
அவன் செய்த விஷமங்கள்!
அவன் நடத்திய லீலைகள்!
அவன் காட்டிய தீரச் செயல்கள்!
அதனைக் கண்டும் காணாமலும், பாராட்டியும், அனைத்திலும் கூடவே இருந்த யசோதையும், நந்த கோபனும்!
அதை விட்டால், நேரே, கீதை உபதேசம்தான்!

இதிலிருந்து என்ன தெரிகிறது!
குழந்தைகளை அவர் போக்கில் விட்டால் அவர்கள் பேராற்றல் கொண்டு விளங்குவர் என்றே!

இதனால் மட்டுமே நான் அவ்விரு கதைகளையும் போற்றுகிறேன்!

சொலவதைச் சொல்லி, நல்லவிதமாய்ப் பகிர்ந்து கொண்டு, அவர்களை அவர் போக்கில் விட, பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

நம் செல்வம் என்று எதனையும் அவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென எனத் துடிப்பதை விட்டு, அவர்கள் நாளைய உலகின் நல்ல குடி மக்களாக வளர நாம் - பெற்றோராகிய நாம் - உறுதுணையாய் இருக்க வேண்டும்.

இதில் மற்ற எவரையும் விட, நான் முன்னர் சொல்லிய, ஆசிரியர், மற்றவர், நண்பர் இவர் எல்லாரையும் விட பெற்றவர்களே பெரும் பங்கு வகிக்க வேண்டும்.

இனி, பெற்றோராகிய நாம் அவர்களுக்கு எப்படி இருக்க வேண்டும், என்ன வகையில் அவர்களின் இப் பாலியல் அறிவில் உதவி புரிய வேண்டும் எனப் பார்ப்போம்!

அடுத்து.... நிச்சயமாக [!!] 3 வயதுக் குழந்தையின் கேள்வி!!

***அடுத்த வாரத்திலிருந்து, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியில் இப்பதிவு வரும்!***

*************************************************************************************

Read more...

Thursday, August 24, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!" --3

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!" -- 3

"இன்னாபா! கமல் கவிதயெல்லாம் ரசிச்சாங்க போலருக்கே!" என்று அட்டகாசமாகச் சிரித்தபடி வரவேற்றான், மயிலை மன்னார், என்னைப் பார்த்ததும்!

"ஆமாம், ஆமாம்! எல்லாரும் ரொம்பவே பாராட்டினார்கள்!" என்று சொன்னவாறே அவன் அருகில் சென்றேன்!

"ஆமா! இது ஆரு? புச்சா கூட ஒரு ஆள இட்டாந்திருக்க? புது ஃப்ரெண்டா?" என்று கொஞ்சம் பொறாமை கலந்த சந்தேகத்துடன் கேட்டான் மன்னார்.

"எனக்கே புதியவர்தான்! இப்போது தான் பழக்கமானார்! நீ தமிழ் சொல்லும் 'அழகை' பார்க்கணுமாம்! அதுக்கென்றே துபாயில் இருந்து வந்திருக்கிறார்! பெயர் சுல்தான்! சுல்தான் சார்! இவந்தான் நீங்க கேட்ட மயிலை மன்னார்!" என்று இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தேன்.

"வா சார்! இப்ப்டி வந்து குந்து சார்! வெளிநாட்டுலேந்தெல்லாம் நம்மளைப் பாக்கறதுக்கு பெர்ய பெர்ய மன்ஷாள்லாம் வர்றது நமக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார்! இன்னா சார் சாப்ட்றீங்க? மாஷ்டர்! இவுங்கல்லாம் நாம ஆளுங்க! சார் துபாய்லேந்து ஸ்பெசலா நம்மளப் பாக்கறதுக்கென்னே வந்துருக்காரு! நல்ல ஷ்ட்ராங்கா ரெண்டு டீ அப்புறம் ஒன்னோட ஸ்பெசல் மசால் வடன்னு ஏதோ சொல்வியெ அது ரெண்டு; சீக்கரம் கொண்டா" என்று தடபுடல் படுத்தினான்!

இருக்கட்டும், இருக்கட்டும்! நாம வரும் போதெல்லாம் வெறும் சிங்கில் டீயோட அனுப்பி விடுவான். இப்போ துபாய் ஆளுன்ன உடன் ஸ்பெஷல் டீ, ஸ்பெஷல் மசால்வடையா? உன்னைப் பிறகு கவனித்துக் கொள்கிறேன்' என்று மனதில் கறுவிக்கொண்டே, "சார் அதுக்கெல்லாம் வரவில்லை! நீ சொல்லும் குறள் விளக்கத்தைக் கேட்கணுமாம். எனவே சீக்கிரம் ஆரம்பி!" எனக் கத்தினேன்!

"இரு, இரு! இப்ப இன்ன ஆயிரிச்சி ஒனக்கு? ஏன் இப்டி கூவறே? இரு, சாரைக் கேப்போம். சார், சுல்தான் சார்! நீ சொல்லு சார்! இன்னா அதிகாரத்துக்கு பொருள் சொல்லட்டும் நா!" என்று அன்புடன் அவரைக் கேட்டான் மன்னார்.

சுல்தான் கொஞ்சம் சங்கோசப் பேர்வழி போலும்! இந்த வரவேற்பை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. முதல் முறையாக வாயைத் திறந்து. " நீங்க எது வேண்டுமானாலும் சொல்லுங்கள்! நான் கேட்கிறேன்." என்றார்!

ஐயய்யோ! இப்படிச் சொன்னால் வில்லங்கமாக ஏதாவது சொல்லிவிடுவானே என்றஞ்சி, நான், அவசர அவசரமாக, "வரும்போது பேசிக்கொன்டு வந்தோம். அப்போது "இல்வாழ்க்கை" என்னும் அதிகாரம் பற்றிச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று சொன்னார் எனச் சொல்லி சமாளித்தேன்!

"ஏன்? சாருக்கு கண்ணாலம் ஆவப்போவுதா? நல்ல தலப்பத்தான் கொடுத்துருக்காரு! சரி, பாட்டப் படி நீ!" என்று சீரியசானான் மன்னார்.

நான் பாடல் சொல்ல அவன் மடமடவெனச் சொல்லுவதை திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தார் சுல்தான்!

"இல்வாழ்க்கை"

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை." [41]


ஒலகத்துல நல்ல விசயம்னு நாலு சொல்லிருக்காங்க! ஒண்ணு, படிக்கறது. இன்னான்னா படிக்கணுமோ அத்தயெல்லாம் வேற நெனப்பில்லாம பட்சிக்கினே இருக்கறது.
ரெண்டாவது, வூட்டு சிந்தனையே இல்லாம இருக்கறது. சதா காலமும் வேல, வேல வேலதான்! ஊட்டக் கவனிக்க மாட்டான், பொண்டாட்டி புள்ளயக் கவனிக்க மாட்டான்; எதோ இவந்தான் இந்த ஒலகத்தயே தாங்கிப் புடிக்கிறவன் மாரி ரொம்ப பிஸியா இருப்பான். இத்த 'மனைதொறவு'ன்னு சொல்லுவாங்க!
மேல சொன்ன ரெண்டும் கிட்டத்தட்ட சன்யாசம் மாரித்தான்னு வெச்சுக்கியேன்!
இப்ப மூணாவது இன்னான்னு கேளு, அட, கேளு சுல்தான் சார்! என்றவுடன் திடுக்கிட்டு, என்ன? என்று அப்பாவியாய்க் கேட்டார் சுல்தான்!
ஆங்! இந்த மூணாவது தான் நெசமாலுமே சன்யாசம் வாங்கிக்கினு போயிடறது! சாமிய நெனச்சுக்கிட்டோ, இல்ல வூட்ல வெறுத்துப் போயியோ, தொறவு வாங்கிக்கறது.
நாலாவது, ஒன்னிய, என்னிய மாரி, கண்ணாலம் கட்டிக்கினு குடும்பத்தப் பாத்துக்கினு, ஒறவுசனத்தஎல்லாம் கெவனிச்சிக்கிட்டு ஒயுங்கா வாளறது.
நம்ம ஐயன் இன்னா சொல்ல வர்றாருன்னா, மத்த மூணு பேரும் ஒயுங்கா இருக்கறதுக்கு இந்த இல்லறத்துல இருக்கானே அவந்தான் ரொம்ப முக்கியம்னு! வெளங்கிச்சா? ம்ம் அட்த்தது" என்றான் மன்னார்.

"துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை." [42]


கண்ணாலம் கட்டிக்கினு, குடுமபத்துல இருக்கறவன், இந்த மேல சொன்ன மூணு விதமான துறவிங்களுக்கு மட்டுமில்ல; நம்மளப் போல ஏளை பாளைங்களுக்கும், ஆரும் தொண இல்லாம செத்துப் போறான் பாரு, அவனுவகளுக்கும் இவந்தான் ஒதவியா இருப்பான். துவ்வாதவன்னா ஒண்ணுமே இல்லாதவன்னு அர்த்தம்! மேல!" என்றான்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை." [43]


இதுதான் ரொம்ப முக்கியமான குறளு. ஆளாளுக்கு ஒருவிதமா சொல்லுவானுங்க! நான் சொல்றத கவனமாக் கேளு என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான் மன்னார்.

இப்ப குடும்ப வாள்க்கைல இருக்கேன்னா ஒன்னோட கடம இன்னான்னு தெரியுமா? ஒரு அஞ்சு பேரு இருக்காங்க! நீ ஆருக்கு இன்னா பண்றியோ, இல்லியோ, இந்த அஞ்சு பேர மட்டும் மறந்துறக் கூடவே கூடாது! ஆருன்னு கேக்கிறியா? இப்ப அல்லா ஊர்லியும் பாத்தேன்னா, தெக்கால ஒரு சனத்த ஒதுக்கி வெச்சுருப்பாங்க! ஊருக்குள்ள வராத, செருப்பு போடாதே, துண்ட இடுப்பில கட்டினியா, அப்டி இப்டின்னு ரவுசு பண்ணிருவாங்க இவங்கள! இவுங்களத்தான் ஐயன் மொதல்ல வெக்கறாரு! அப்பொறமா, நீ கும்புடற சாமி, அப்பால, ஒன்னியத் தேடிக்கினு வர்றவங்க, இப்ப நீ சுல்தான் சார இட்டாந்திருக்கியே அது மாரின்னு வெச்சுக்கியென், நாலாவதா ஒன் சாதிசனம், கட்சீல நீ, ஒன்னிய மறந்துறக் கூடாது! இந்த அஞ்சு பேரையும் எப்டி கவனிக்கணுமோ அப்டி கவனிக்கணும் நல்ல விதமா!
ஆனா, இன்னா ஆச்சு? ஐயன் சொன்னத ஆளாளுக்கு அவனவுனுக்கு புரியற மாரி பிரிஞ்சிக்கிட்டாங்க. ஐயனே சொல்லிட்டார்டான்னு சொல்லி, ஆளும், பாளும் பண்ணிட்டாங்க. இப்ப வர்ற சனங்களாவது இத்தையில்லாம் மொறையாப் புரிஞ்சு அல்லாரையும் நல்லவிதமா காப்பத்தணும்! இன்னா சார்! செய்வியா?" என்றவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் தலையாட்டினார் சுல்தான்!

"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். [44]


" ரெண்டே ரெண்டுதான்! பளிபாவத்துக்கு அஞ்சணும், நல்லமாரி சம்பாதிச்சு, அட்த்தவன மோசம் பண்ணாம துட்டு சேத்து, அத்த வேண்டப்பட்ட மன்ஷாளோட பங்கு போட்டு வாள்றது, இது ரெண்ட மட்டும் ஒர்த்தன் வுடாம செஞ்சுக்கிட்டு வந்தான்னு வையி, மவனே! அவன் மட்டும் இல்ல, அவன் வம்சமே ஒரு கொறயும் இல்லாம அமோகமா இருக்கும்.

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. [45
]

"இத்த நீ ரொம்ப எடத்துல கேட்ருப்பே! நம்ம அர்சியல் தலிவன்லாம் எந்தக் கண்ணாலத்துக்கு தலம தாங்கப் போனாலும் வுடாம சொல்லிக் காட்டிருவானுங்க! அட, இன்னா சார், அப்டி சிரிக்கிற நீ? நா சொல்றது சர்த்தானே!
இன்னா சொல்றாரு? புர்சன் பொஞ்சாதிக்குள்ல ஒர்த்தொருக்கொர்த்தர் அன்பா இருக்கணும்; தானதர்மம் பண்றது ரெண்டு பேரும்... இத்த முக்க்யமா மன்சுலவெச்சுக்கணும்.. ரெண்டு பேரும் சேந்தே பண்ணணும். அப்பத்தான் நீ வாள்ற குடும்ப வாள்க்கைக்கு ஒரு அர்த்தம், பிரயோசனம் இருக்கும். சரி, நேரமாவுது அட்த்தது?"

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன். [46]


நல்ல மாரி நடந்துக்கினு ஒன்னோட குடும்பத்த நீ நடத்துனியின்னா, அப்பால நீ வேற எந்த வளியிலியும் போவத் தாவில்ல! இதுலியே ஒனக்கு அல்லாம் கெட்சுரும்ன்றாரு ஐயன். இந்த பாட்டுல ஒரு தமாசு பாத்தியா? ரெண்டாவது அடில பாரு, அசால்டாப் பாத்தேன்னா ஒய்ஃப் ந்ற மாரி இருக்கும்! வள்ளுவர்க்கு அப்பவே இங்லீச்லாம் தெரியுமான்னு கேக்காத இன்னா! என்று சிரித்தவனைப் பார்த்து எழுதுவதை நிறுத்தி நானும், சுல்தான் சாரும் கடகடவெனச் சிரித்து விட்டோம்!

"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. [47]


மொத மொதலா சொன்னேனே ஒரு மூணு பேரு, அவங்கள்லாம் வேற ஏதோ ஒரு ஒலகத்தப்
புடிக்குறதுக்கு ஓடிக்கினே இருக்கறவங்க. ஆனா, ஒயுங்கா குடுத்தனம் பண்ணேன்னு வெச்சுக்கொ; அவுங்கள அல்லாம் வுட சீக்கரமா ஒனக்கு அது கெடச்சுருமாம்"

"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. [48]


இப்ப காட்ல ஒக்காந்துக்கினு, இல்ல எதுனாச்சும் மடத்துல இருந்து தவம் பண்றாங்க பாரு சாமியாருங்க, அவுங்க அல்லாரயும் வுட, அவர் அப்டி செய்றதுக்கு ஒதவி பண்றான் பாரு, இந்தமாரி ஒயுங்கான வளியில குடுத்தனம் பண்றவன், அவனோட தவசுக்கு வீரியம் சாஸ்தி!

"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று. [49
]

இத்தயும் நீ ஒரு ஆயிரம் வாட்டி கேட்டுருப்பே, இல்லியா? ரொம்ப சிம்பில்! இப்ப அறம், தருமம்னுல்லாம்சொல்றாங்களே, அது இன்னான்னா, கட்ன பொண்டாட்டியோட ஒயுங்கா குடுத்தனம் பண்றதுதான். அத்தையும் இன்னோர்த்தன் திட்றமாரி வெச்சுகலன்னா இது இன்னும் ஸ்பெசல் ஆயிடும்!

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [50]


இப்ப இதுவரைக்கும் சொன்னாமாரி நீ வாய்ந்தேன்னு வெச்சுக்க, மவனே! அப்பொறம் நீ இங்கே இல்ல; எங்கியோ போயிடுவே! எங்கேன்றியா? இப்ப நீ கும்புடுறியே சாமிங்க அதெல்லாம் ஒரு எடத்துல ஒசரத்துல இருக்கற மாரித்தானே நென்சுக்கினு இருக்கே! அங்க,.... டாப்புல கொண்டு போயி நிறுத்திறுமாம்! அதுக்காவ நீ செத்து கித்துப் பூடுவேன்னு நெனக்காத! "அதோ போறார் பாருடா! இன்னாமா குடும்பத்த தாங்கறார் தெரியுமா? மன்சன் இல்லடா அவரு!தெய்வம்டா!" அப்டீன்னு இங்கியே ஒன்னியக் கையெடுத்துக் கும்புடுவாங்க!

இன்னா சார் நல்லா கேட்டுக்கினியா? ஒன்னயும் அல்லாரும் சாமின்னு சொல்ற மாரி நடந்துக்கணும், செய்வியா சார்?" என்று சுல்தான் சாரின் தோளில் கை போட்டவாறு மயிலை மன்னார் கேட்டபோது, அல்லா மேல ஆணையா கண்டிப்பாக செய்வேன் மன்னார்!" என்று சொல்லிய சுல்தான் மன்னாரின் கையைப் பிடித்துக் குலுக்கினார். நிறைவாய் இருந்த அந்தக் காட்சியைப் பார்த்தவாறே, கையோடு கொண்டு சென்ற கணினியைத் தட்ட ஆரம்பித்தேன்!

மீண்டும் அடுத்த வாரம் பார்ப்போம்!

"முருகனருள் முன்னிற்கும்!"

Read more...

Wednesday, August 23, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [1]

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!"

முன்னுரை:


அதான் பெற்றாகிவிட்டதே! எங்களுக்கு எதுக்கு என்று கேட்காதீர்கள்! நான் சொன்னது குழந்தை பெற்றோருக்கு!

கடந்த சில நாட்களாக வலைத்தளத்தில் பல்வேறு பூக்கள் பாலியல் பற்றிய இதழ்களை விரித்திருந்தன! கை காட்டுதலும், அடுத்தவரைக் குறை சொல்லலாமோ என்ற எண்ணங்களும் அதில் மணம் வீசுவதைக் கண்டேன். நண்பர் கோவி. கண்ணனிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சில இதுபற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து இது குறித்து எழுதலாமோ என்றிருக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். ஆர்வ மிகுதியாலும், என் மேலுள்ள அன்பின் காரணத்தாலும் அவர் தன் பதிவில் இது பற்றிய அறிவிப்பை உடனே வெளியிட்டு விட்டார்! இப்போது உங்களுக்கு தப்பிக்க வேறு வழி இல்லை!

"பாலியல்" [Sexology] பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், 'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்னும் மனப்பான்மையே நம்மில் அதிகம் நிலவுகிறது என்ற உண்மையினை நாம் இங்கு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இது பற்றிப் பேச, கேட்க, பகிர்ந்து கொள்ள வெட்கமோ, அச்சமோ, அல்லது 'நம்மைத் தவறாக எண்ணி விடுவார்களோ?' என்னும் குற்ற உணர்வோ நம்மில் பலருக்கு ஏற்படுகிறது! அதனால், 'முயற்சித்துத் தவறுதல்' [Trial&Error], அல்லது 'தவறான இடத்தில் அறிவுரை கேட்டல்' [Seeking wrong advice] போன்ற வழிமுறைகளை நாடுகின்ற சோகம் நிகழ்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதைத் தவிர்ப்பதில் பெரும் பங்கு, பெற்றோர், ஆசிரியர், குடும்ப மருத்துவர், நண்பர்களுக்கு உண்டு. ஆனால், இந்த வரிசையில் அது நிகழ்வதில்லை! தலைகீழாகத்தான் நடக்கிறது! விளைவுகளும் தலைகீழாகத்தான் போகிறது!

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், ஒருமுறை என்னிடம் அவர்கள் 14 வயதுப் பையனை அவசரமாகக் கூட்டி வந்தனர். பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தப் போக்கு ஏற்படுவதாகத் தெரிவித்தனர். சிகிச்சை அளிக்கும் போது, முன் தோலின் அடிப்பாகம் [Frenum] அறுந்து ரத்தம் வருவதை உணர்ந்து சிகிச்சை அளித்தபின், என்னவென்று அந்தப் பையனிடம் கேட்டேன். தயங்கித் தயங்கி சொன்னான், 'இல்லை டாக்டர்! முன் தோல் [Foreskin] இருந்தால் கல்யாணம் ஆனபின் இன்பம் அனுபவிக்கக் கஷ்டமாயிருக்கும்' என என் நண்பன் ஒருவன் சொன்னான்; அதான்...கொஞ்சம் வேகமா ஆட்டிப் பாத்தேன்!' என்றான். இதை சொல்வதற்குள் அவனை வெட்கமும், அவமானமும் பிடுங்கித் தின்றது!

இதில் கவனிக்க வேண்டிய நிகழ்வு என்னவென்றால், தவறான ஆலோசனை வழங்கப் பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல! காதல், கல்யாணம் போன்ற நிகழ்வுகளை அவன் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறான், அதைப் பற்றி வீட்டிற்கு வெளியே பகிர்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் கூட!

இந்த எண்ணம் தவறா, சரியா என்பதற்கு பின்னர் வருவோம். அதற்கு முன், பாலியல் கல்வி [Sex Education] பற்றிய தேவையான அறிவு, புரிதல், நமக்கு இன்னும் வரவில்லை என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

நான் எழுத எண்ணியிருக்கும் இந்தத் தொடர், முக்கியமாகப் பெற்றோர்களைக் குறித்தே! அவர்கள் பங்கே இதில் பெரும்பான்மையானது! இது சிலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடும்! 'அது எப்படீங்க? நான் போய் என் மகன்கிட்ட , மகள்கிட்ட இதையெல்லாம் பற்றிப் பேச முடியும்? வாத்தியார் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கணும் இதையெல்லாம்! இல்லைன்னா, அரசப்பொரசலா தெரிஞ்சுக்க வேண்டியது தான்! நாங்கள்லாம் என்ன சொல்லிக்குடுத்தா வளந்தோம்? வந்துட்டாரு என்னமோ பெருசா! எதுக்கும் ஒரு முறை வேண்டாம்?' என்று பலர் சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன்.

'இணைய வசதிகளும், தேடல்களும் நிறைந்திருக்கும் இந்நாட்களில், இதற்கென்ன அவசியம்? வேணுமின்னா அங்கன போயித் தேடிக்கலாமே!' என்றும் சிலர் சொல்லக்கூடும்! ஒப்புக்கொள்கிறேன்! ஆனால், இணையத்தைப் போன்ற நண்பனும் இல்லை; அதைப் போன்ற விரோதியும் இல்லை என்பதே என் கருத்து! வளர்கின்ற பருவத்தில், எதைக் கொள்வது? எதனை விடுவது? எனத் தெரியாத மனநிலையில், அதில் நல்ல தகவல்களையும், கெட்ட தகவல்களையும், ஒரு சேரப் பெற்று குழம்பும் சிலருக்காகவே இத்தொடர்!

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, பெரும் பொறுப்பு வந்து விடுகிறது! எங்க அப்பா சொல்லுவார், 'மரம் வெச்சவன் தண்ணி வுடுவாண்டா' என்று. முதலில் சரி, சரி என்று கேட்டுவிட்டு, சற்று வளர்ந்த பின், கல்லூரி அப்ளிகேஷன் போடுவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது, அவர் இதைச் சொன்ன போது கேட்டேன், 'உங்களை சொல்றீங்களாப்பா?' என்று. என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், 'இப்பவாவது புரிந்து கொண்டாயே' என்பது போல! நான் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு அது! அது போல, குழந்தைகள் வளரும் போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்! எந்த வயதில் எதைச் சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியே இத்தொடர் அமையும். பெற்றவர்கள்தான் பாலியல் பற்றிய முறையான புரிதலைத் தர முடியும், வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்.

இதனைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்!

தயவு செய்து உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.... ஆரோக்கியமான முறையில். இதில் சில சமயம் வெளிப்படையான சில உண்மை நிகழ்ச்சிகளையும், கருத்துகளையும் சொல்ல வேண்டி வரும். அதன் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, அல்லது குற்றம் சாட்டுவதோ இல்லை என்னும் டிஸ்கியை இப்பவே போட்டுடறேன்! தொடரின் நோக்கம் திசை திரும்பினாலோ, திருப்பப்பட்டாலோ, உடனே நிறுத்தப்படும்! வாரம் இரு பதிவுகள் வரும்... வரணும்! பார்க்கலாம்... எப்படிப் போகுதுன்னு!

முருகனருள் முன்னிற்கும்!

இன்னிக்கு வெறும் முன்னுரை மட்டும்தான்! அடுத்ததாக.....

"நான் எங்கேருந்தும்மா வந்தேன்?" -- 3 வயதுக் குழந்தையின் கேள்வி!

Read more...

Sunday, August 20, 2006

"கிழுமத்தூராரின் தொடரும் [அன்புத்]தொல்லைகள்!"

"கிழுமத்தூராரின் தொடரும் [அன்புத்]தொல்லைகள்!"

"மருதநாயகம் என்று நீ கண்டுபிடித்துச் சொன்னதில், கிழுமத்தூராருக்கு ரொம்ப சந்தோஷம்!" என்று மயிலை மன்னார் வாங்கிக் கொடுத்த டீயை உறிஞ்சியவாறே சொன்னேன்!

"உட்டாலங்கடி விசயம் இது! அத்தான் நம்ம கையில அப்பவே கமல் ஸார் சொல்லிட்டாரே! இதெல்லாம் நம்க்கு ஜுஜுப்பீம்மா" என்று சிரித்தான், மன்னார்!

"ம்க்க்கூம்! இப்ப என்ன ஆயிற்று தெரியுமா?" என்று அவனைக் கோபத்துடன் பார்த்தேன்!

:"இன்னா? இன்னா ஆச்சு இப்ப? எவனாவுது உங்கிட்ட ராங் பண்றானா? சொல்லு! ரெண்டு தட்டு தட்டிறலாம்!" என்று பரிவுடனும், சற்றே வேகத்துடனும் கேட்டான், மன்னார்!

அவன் கோபப்பட்டால் என்ன ஆகும் என்று எனக்கு நன்கு தெரியுமாதலால், உடனே அவனை சமாதானப்படுத்தவெண்ணி, "சே! சே! அதெல்லாம் ஒன்றுமில்லை மன்னார்! நீ டென்ஷன் ஆகாதே! நம்ம கிழுமத்தூரார் இப்ப இன்னுமொரு கமல் கவிதையைப் போட்டு உன்னை டெஸ்ட் பண்ணுகிறார்! அவ்வளவுதான் விஷயம்!" என்றேன்.

"ப்பூ! இம்புட்டுத்தானா! நான் என்னவோ ஈதோன்னு நெனச்சுட்டேன்! இன்னா கவித அது! படி பாப்பம்" என்றான் மன்னார்.

கீழ்வரும் அக்கவிதையை.....

"அமலை அன்னை அவள் ஆரணாகாரி
அந்திப் போதனை யானுட னாடுவள்
உமையாள் உடையாள் உயிர்கிழத்தி
உரிமையுடன் தவங்கலைக்கும்
ஆட்டணத்தி மனங்கொணும் நேர்முலையாள்
தினங்காணக் கல்லாக வீற்றிருப்பள்
கனந்தாங்கும் களத்தியாய் கலவிசெய்கையிலென்
தடந்தோளைக் கடித்துச் சந்தோஷம்
சொல்லிடுவள் நாபிக்கொடி நறுக்கியெனை
நர மேட்டிலொரு லோபத்தெருவினிலே
மறுபடி எறிந்திடுவள் சப்பிடும்
வாய்கதற முலைபிடுங்கி யகற்றி
செப்பிடும் வார்த்தைகள் மெல்லத் தந்திடுவள்
நித்தமு மாறிடும் ஜீவ தாளத்தில்
என்னுடன் ஆடிடும் ஆசைநாயகி
காமுகி க்ராதகி
மாதவி கண்ணகி ஸ்நேகிதி"


.......நான் படித்ததும், ஒரு இரண்டு, மூன்று தடவை திருப்பிப் படிக்கச் சொன்னான்! ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டு சிறிது நேரம் நெற்றியைச் சுருக்கியவாறே நிதானமாக யோசித்தான்! திடீரெனப் பிரகாசமானான்!

"சும்ம ஸொல்லக்கூடாதுப்பு! நெசமாவே அந்த ஆளுக்கு மண்டை முளுக்க மூளைன்னு நான் ஸொன்னதுல தப்பில்லப்பா! ஆகா! ஆகா! இன்னாமா எளுதியிருக்கான் மனுசன்!" என்று ரொம்பவும் புகழ்ந்தான்!

சற்று பொறுமை இழந்த நான், "என்னதான் சொல்லியிருக்கிறார் என்று சொல்லிவிட்டு பிறகு உன் புகழ்ச்சியை வைத்துக் கொள்ளேன்!" என்று பொறாமையுடன் சொன்னேன்... எனக்குப் புரியாதது அவனுக்குப் புரிந்துவிட்டதே என்னும் ஆதங்கத்தில்!

"இந்தக் கவிதயை வரிக்கு வரி படிச்சேன்னா அர்த்தம் அனர்த்தமாத்தான் போயிடும்! ஏதோ பலான விசயத்த ஸொன்ன மாரித்தான் இருக்கும்! ஆனா, ரொம்பப் பெரிய விசயத்த இன்னா அசால்ட்டா ஸொல்லிருக்காரு தெரியுமா? நா மொத்தக் கருத்தயும் ஸொல்றேன்! அப்ப்டியே எளுதிக்கோ!" என்று ஆணையிட்டான், மன்னார்.

கீழே வருவது அவன் சொன்னது!

" இப்ப ஒனக்கு ஒன் சினேகிதனைப் புடிக்கும், என்னிய ஒனக்கு புடிக்குமே அதுமாரின்னு வெச்சுக்க! ஸரியா!
என்னியவுட ஒன் தங்கசிய ஒனக்கு ரொம்பப் புடிக்கும்; அத்த வுட ஒன் அம்மாவ ஒனக்கு ரொம்ப ரொம்பப் புடிக்கும், கரீட்டா!
இப்ப ஒன் பொஞ்சாதி வந்தவொடன, அவுங்களை ஒனக்கு ரொம்பப் புடிக்குது! இல்லியா!
அது ஒனக்கு ஒரு பொண்ணக் குடுத்துச்சு! நீ இப்ப இன்னா பண்ற? ஆகா! ஒலகத்துல, இத்த வுட, சந்தோசம் தர்றது வேற ஒண்ணுமில்லன்னு மயங்கற! வாஸ்தவமா இல்லியா?
ஆனா..... இதுக்கெல்லாம் மேல நீ எத்த ரொம்ப நேசிக்கற? தமிள, தமிள் மொளிய!

ஏன்னு கேளு!
ஏன்னா, அதுதான் ஒனக்கு அல்லாமாவும் இருக்கு! எப்ப்டீன்ன்றியா? அவர் ஸொன்ன மாதிரியே ஸொல்லிக் காட்றேன் பாரு! ஒனக்கு புரிஞ்சிடும்!

அஞ்சு ருவா கொடுத்து ஒரு பொஸ்தவத்த வாங்கிப் படிக்கற நீன்னு வெச்சுக்க, சந்தோசமா இருக்கு ஒனக்கு.
அத்தப் படிக்கறப்ப, அவ, ...அத்தான் தமிள், தமிள்மொளி... கூடவெ இருக்கா ஒன்னோட!
ஒனக்கு அம்மாவா, பொண்டாட்டியா, சில சமயம் வேசியாக் கூட இருப்பா அவ, நீ பாக்கற பார்வைல, படிக்கிற புக்குல!!
நல்ல பொஸ்தவத்த படிக்கிறப்போ, நல்ல பொண்ணு மாரி, கெட்ட சமாச்சாரத்தப் படிக்கிறப்பொ, ஒன்னியக் கெளப்பி வேடிக்கை பாக்கற வேசி மாரி, சே! இத்தெல்லாம் தப்பு; இனிமே நல்ல புக்குதான் படிக்கணும்றப்போ, ஒன்னைத் தூண்டறமாரி ஒரு புக்கைக் காமிச்சு ஒன் மனச மாத்துவா! ஆனாக்காண்டி,.... இத்தாலயெல்லாம், 'நீ ஒன் அறிவத்தான் வளத்துக்கறே'ன்னு ஸொல்லி, ஒன்னிய ஆசைகாட்டி மயக்குவா!

அவ பொல்லாதவ, ராட்சசி, வேசி, பத்தினி, ஒனக்குத் தோளியும் கூட! ஆனா, நீ அவளக் கண்டுக்கலையின்னா, கல்லு கணக்கா குந்திக்கினே இருப்பா! நாம தான் அவளத் தேடிப் போவணும்!

இதுமாரி ஆராச்சும் வருவாங்களா ஒன்கூட எப்பவும், அல்லாமாமும்?
வரமுடியாது!
அதான் நம்ம தமிள் மொளியோட அருமை, பெருமை!

இத்தத்தான் நம்ம ஒலகநாயகன் மறமொகமா ஸொல்றாரு! வெளங்கிச்சா?"


என்று சர்வ சாதாரணமாகச் சொன்னவனை 'ஆ'வென்று வாயைப் பிளந்தவாறு பார்த்துக் கொண்டே இருந்தேன்!

"ஸரி, ஸரி! டீ ஆறிப்போச்சு! மாஷ்டர்! நம்ம தம்பிக்கு இன்னோரு டீ ஷ்ட்ராங்கா போடு!" என்று மிதப்பாகச் சொன்னான் மயிலை மன்னார்!

"அது சரி, மன்னார்! மிக அழகாகச் சொல்லி விட்டாய்! எல்லாம் சரிதான்! ஆனால், ஏன் "அமலை அன்னை" என்று ஆரம்பித்திருக்கிறது இக்கவிதை?" எனக் கேட்டேன் நான்.

"அமலைன்னா ஆரு? நம்ம மதர் மேரி! அவுங்க ஆரு? கன்னி களியாத தாயி! தமிள்த்தாயும் அப்ப்டித்தான்! ஆரு அத இன்னாம்மாரி சீரளிச்சாலும், தன்னோட கன்னித்தம்மய இளக்காம, அப்டியே என்னிக்கும் புச்சா இருக்கறதனால, அமலைன்னு ஸொல்லியிருக்காரு கமல்!" என்றான் மயிலை மன்னார்!

மேற்கொண்டு அவனை எதுவும் கேட்க மனமின்றி, அவன் சொன்னதை அப்படியே உங்கள் முன் வைக்க கணினியைத் தேடி ஓடினேன், ..... டீயைக் குடித்தபின் தான்!!!

இல்லாவிட்டால் மயிலை மன்னார் விட மாட்டானே!

(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))



Read more...

Saturday, August 19, 2006

a.a.thiruppugazh -- 7 "allasaladai-ndha"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் [7] -- "அல்லசலடைந்த"

தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த தனதான

............பாடல்............

அல்லசல டைந்த வில்லடல/னங்கன்
அல்லிமல ரம்பு தனையேவ

அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமுது கிண்ட அணையூடே

சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று முனியாதே

துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு தரவேணும்

கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
கல்விகரை கண்ட புலவோனே

கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை யருள்வோனே

வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த மயில்வீரா

வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே.

********************************************************************


அகப்பொருள் துறையில் பாடப்பெற்ற அற்புதப் பாடல் இது.
நாயகனை விரும்பி, வேட்கை கொண்டு வாடி வருந்தும் தன் மகளைக் குறித்துத் தாய் இரங்கிப் பாடுகின்றாள் என்னும் வகையில் அமைந்துள்ளது.
துணையைப் பிரிந்தோ, அல்லது இணக்கமின்றியோ வருந்தும் ஒவ்வொருவரும் பாடி வேண்டக் கூடிய பாடல்.
இனி பொருளைப் பார்ப்போம்! பின் பாதி முதலில் கண்டு, முன் பாதி அடுத்து வரும்.

********************************************************************

"கல் அசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரைகண்ட புலவோனே"


அன்றொரு நாள் தேவரும், முனிவரும் கூடி
இன்றிங்கு வீற்றிருக்கும் புலவோரில்
முன்நின்று முதன்மை செய்யும்
நன்றான புலவர்க்கு விருதளித்து
சிறப்பொன்று செய்தல் வேண்டுமென
ஒன்றாக முடிவு செய்து,

நாமகளின் வடிவான ஔவைக்கே
பூமாலை சூட்டவெண்ணி
தாம்பூலம் பெற்று தயவு செய்கவென
வேண்டிக் கேட்டிடவே ஔவையும்,
"புலவரெனில் அது மற்றும்
தேவரையே குறித்தலாயின்
அவர்க்குத் தலைவனாம்
இந்திரனையே அது சாரும்
ஐந்திரமெனும் இலக்கண
நூலொன்று படைத்ததனால்"
எனப் புகல, அவ்வண்ணமே அவரும்
இந்திரனை நாடியே தாம்பூலம் நீட்ட,

இந்திரனும் நடு நடுங்கி
"ஒரு நூலைச் செய்ததினால்
நான் புலவன் ஆகமாட்டேன்!
பல நூலும் கற்றிட்ட
அகத்தியரையே இது சாரும்!
அவரிடமே தந்திடுக!" எனச் சொல்லி,

அகத்தியரிடம் நீட்டுங்கால்
அகத்தியரும் தான் நகைத்து,
"பலநூலைக் கற்றதினால்
நான் புலவன் ஆவேனோ?
எனக்கிதனைத் தந்தவளாம்
கலைவாணி அவர்க்கன்றோ
இவ்வருமை தரலாகும்!" என அனுப்ப,

வாணியோ தான் மறுத்து
"வேதத்தில் வல்லவராம்
என் கணவர்க்கே இது சேரும்" எனச் சொல்ல,
பிரமனோ மனம் கலங்கி,
"வாக்கிற்கும், அறிவிற்கும்
தலைவியாம் உமையவளே
இதைப் பெற்றிடும் தகைவுடையாள்!
அவரிடமே ஈந்திடுக! எனப் பணிக்க,

அவ்வாறே இவர்களும் உமையை நாடி வேண்ட,
வாகீச்வரியும் முறுவலித்து,
"நன்று, நன்று ! நான் இதற்கு
உரியவள் அன்று! என் குமரன்
ஞானஸ்கந்தன், ஞானபண்டிதன்
சிவகுருநாதன் குமரவேளே
இதற்குரியவன்!" என அருள,

"மூவர் முதல்வா! முத்தமிழ் வேளே!
வித்வத் தாம்பூலம் ஏற்றருள்க!" எனப் பணிய,
"நல்லது! அவ்வண்ணமே ஆகுக!" என
கந்தவேளும் தாம்பூலம் ஏற்றருளினார்!

இவ்வண்ணம் மலைமங்கை வரையில் போய்
அவ்வம்மையே "புலவன் என் குமரனே!"
எனச் சொன்னதனாலே 'புலவன்'
எனும் பெருமை படைத்த முருகோனே!

"கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று
கல்லல் அற ஒன்றை அருள்வோனே"


'நமசிவாய'வெனும் ஐந்தெழுத்தைக்
குறித்தாற்போல் ஐந்துஇதழ் கொண்டு
அதன் நடுவே வளைந்திருக்கும்
தோகையும் 'ஓம்'என்னும் பிரணவத்தைக்
காட்டுதல் போல் வடிவமைந்த

கொன்றையெனும் மலர் சூடி
அடியவர்க்கு அனைத்தையும் வழங்குதலால்
வள்ளலெனும் பெயர் கொண்ட
சிவன் பணிந்து கேட்டிடவே
அன்றவர்க்கு பிரணவத்தின் பொருள் சொல்லி
அவர் ஐயம் தீர்த்திட்ட அருள் மழையே!

"வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச
வல்லமை தெரிந்த மயில்வீரா"


பலம்கொண்ட அசுரர்படை அஞ்சி ஓட
நலமான விண்ணவரும் பிழைக்கும் வண்ணம்
திறம் காட்டிச் சமர் புரிந்த
மயில் மீதமர்ந்த பெருவீரனே!

"வள்ளி படர்கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே"


வள்ளிக்கொடி படர்கின்ற
வள்ளிமலை அடைந்து
வள்ளியெனும் குறமகளை
அள்ளி மணம் செய்த பெருமாளே!

"அல் அசல் அடைந்த வில் அடல் அனங்கன்
அல்லிமலர் அம்பு தனையேவ"


காரிருள் படரும் நள்ளிரவு வேளையினில்
வேறிடத்தினின்று வந்து வில்லேந்தி
அன்றங்கு சிவனால் உடல் எரிந்து போனதினால்
'அனங்கன்' எனும் பேர் படைத்த மன்மதனும்
தாமரை மலர்க்கணையைச் செலுத்தவும்,

"பிள்ளைமதி தென்றல் அள்ளி எரி சிந்த"

பிறை நிலவும், வீசு தென்றலும்
தன்நிலை மறந்து இயல்புக்கு மாறாய்
கொதிக்கின்ற நெருப்பினையே
அள்ளி வீசித் துயர் செய்யவும்,

"ஐயம் உது கிண்ட அணையூடே"

என் தலைவன் வருவானோ, வந்தருள் புரிவானோ
என்னுமொரு ஐயத்தை தன் மனதில் கொண்டு
மலர்ப்படுக்கையும் நொந்து போக

"சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று
தொல்லை வினை என்று முனியாதே"


தோழியர் சொல்லுகின்ற சொற்களால் மனம் வருந்தி
தாமரை மலர் வாழும் இலக்குமி போலும் இம்மங்கை
தனியே படுத்து தான் நோக உளம் வாடி
'யான் செய்த தீவினையால் இவ்வண்ணம் வாடுகிறேன்'
என வருந்தி, வெறுத்து, நொந்து போகா வண்ணம்,

"துய்யவரி வண்டு செய்ய மது உண்டு
துள்ளிய கடம்பு தரவேணும்"


சுத்தமான வரிகளைக் கொண்ட வண்டினங்கள்
உத்தமமான சிவந்த தேனை உன்டு
மதிமயங்கித் துள்ளிக் குதித்திடும்
கடம்ப மலர்களால் ஆன மாலையினை நீயிங்கு
நங்கையவள் துயர் தீரும் வண்ணம்
தந்தருளிக் காக்க வேணும்!
*****************************************************************************

அருஞ்சொற்பொருள்:

அல்
= இரவு
அசல் = அயல்= வேறிடம்
அனங்கன் = உடல் எரிந்து போனதால், உடல் இல்லாதவன் = மன்மதன், காமன்
எரி = தணல், நெருப்பு
உது கிண்ட = கலக்கம் வந்து வாட்ட
அரவிந்தவல்லி = தாமரை மலர் மேல் வாசம் செய்யும் இலக்குமி, அலர் மேல் வல்லி
முனியாதே = வெறுக்காமல்
துய்ய வரி வண்டு = தூய்மையான வரிகளைக் கோண்ட வண்டுகள்
கல் அசல மங்கை = மலை மேல் வாழும் மலைமகள்
வள்ளல் = அனைத்தையும் குறைவறத் தரும் சிவபெருமான்
கல்லல் அற = குழப்பம் நீங்குமாறு
ஒன்றை = முழு முதற் பொருளான ஓம் எனும் பிரணவம்
சுரர் = விண்ணவர்
விஞ்ச = பிழைக்குமாறு
******************************************************************

முருகன் அருள் முன்னிற்கும் !
வேலும் மயிலும் துணை !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !
**********************************************************************

Read more...

Friday, August 18, 2006

"கிழுமத்தூராரின் கமல் கவிதை!"

"கிழுமத்தூராரின் கமல் கவிதை!"


"வா! வா! வா! இன்னா? அட்த்த குறளு சொல்லணுமா?" என உற்சாகமாக வரவேற்றான், மயிலை மன்னார் என்னைப் பார்த்ததும்!

"அதில்லை....!" என்று இழுத்தவாறே கையோடு பதிவெடுத்துக் கொண்டு சென்றிருந்த தாளை அவனிடம் நீட்டினேன்.

"இன்னாஇது? குறள் மாரி இல்லியே? எவனோ கிறுக்கின மாரி இருக்கே? இன்னா விசயம் ?" என்று சற்று முறைத்தான் மன்னார்!

"நமக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தர் அவர் பதிவில் போட்ட கவிதை இது! உலகநாயகன் கமல் எழுதியதாம்! படித்து, முடிந்தால் உங்கள் மன்னாரைப் பொருள் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டிருக்கிறார்" என்று பயந்தவாறே சொன்னேன்!

ஏனெனில், மன்னாரிடம் திருக்குறளைத் தவிர வேறு எதற்கும் இதுவரையில் பொருள் கேட்டதில்லை! சொதப்பி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாய்!

"அடேடே! நம்ம ஆள்வார்ப்பேட்ட ஆண்டவரு! அவரு எளுதினதா இது? மனுசனுக்கு மண்டை முச்சூடும் மூளை! அபார அறிவு! படி! படி! ஒரு தபா கேப்போம், இன்னா சொல்லிருக்கார்னு" என்று அவன் உற்சாகமாய்க் குரல் கொடுக்கவே, தெம்புடன் கவிதையைப் படித்துக் காட்டினேன், ஒருமுறைக்கு இருமுறையாக!

http://mahendhiran.blogspot.com/2006/08/kamal-hassan.html

"மொத்தமா பொருல் சொல்ணுமா; இல்ல வரிக்கு வரி வோணுமா?" என்று ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே கேட்டான்!

"வரிக்கு வரி எழுதினால் கொஞ்சம் நீளமாகப் போய்விடும் எனவே மொத்தமாகவே சொல்!" என்றவுடன், "சரி! எனக்கு இன்னா வர்தோ அத்த ஸொல்றேன்! அப்ப்டியே ஒண்ணு வுடாம எளுதிக்கோ! இத்த ஸொன்னது ஆருன்னு கட்சீல சொல்றேன்!" என்று சொல்லலானான் மயிலை மன்னார்!

பின் வருவது அவன் சொன்னது!

"ஏதோங்காட்டியும் ஒன்ன சேர்ல குந்த வெச்சுட்டொம்ங்றதுக்காவ, நீதான் பெர்ய ஒசத்தி எங்கள வுடன்னு பெர்மைப்படாதே! அந்த கருமாந்தரமெல்லாம் வோணாமேன்னுதான் கம்முனு கீறோம்ன்றத மட்டும் மன்சுல வெச்சுக்க! சர்யா?

எங்காளுதான்,... எங்க மொளி பேசறவந்தான் வர்ணும்ன்ற சின்ன புத்தி எங்களுக்கெல்லாம் இல்லாத்தோண்டி, நீ எங்க கூட்டிக்கினு போவப்போரேன்னு கூடத் தெரியாமத்தேன், நீயே லீடரா இருந்துக்கோன்னு வுட்டு வெச்சிருக்கிறோம் நாங்க! புரிஞ்சுக்க!

இத்தோ! நீ பூட்டி வுட்ருக்கியே ஏதோ குதிரைக்கி போட்ற மாரி, கடிவாலம், சேனம் அல்லாம்!...... அத்தெல்லாம் நம்ம சைசுக்குப் பண்ணது இல்ல மாமோவ்! அது இந்த ஊர்ல செஞ்சதும் இல்ல! அசல் நாட்ல பண்ணது! இன்னோரு சாதிக் குதிரைங்களுக்கோசரம் தயார் பண்ணது!

எப்போ வோணும்னாலும் சும்மா 'அஜீஸ்' கணக்கா தலிய உருவிக்குனு போய்க்கினே இருப்போம்! வாய்ல பூட்டிக்கினு இருக்கோமேன்னு தப்புக்கணக்கு போட்றாத! நீ சோத்துக் கைபக்கால வலிச்சியின்னா, நாங்க பீச்சாங்கை பக்கமா திரும்பி போயிருவோம்! மக்கா!... ஒரு தலய ஒரு சிலுப்பு சிலுப்பினோம்னா, இந்த கண்ணுல போட்ருக்கற பட்டையெல்லாம் எகிறிப்போயிறும்! அப்போ வரும் பாரு புதுபுது ரூட்டல்லாம்! அப்பால அங்க நா யாரு, நீ யாருன்னு ஒர்த்தருக்கும் தெரியமவேப்பூடும்!

இப்பக்கூட, நீ குந்திக்கினு இருக்கியே ஒன் சீட்டு, இப்டியும், அப்டியுமா நெளிஞ்சுக்கினு,... அத்தக் கூட நாங்கதேன் அப்பிடி சேஞ்சோம் சாமி!

ஏன்னு கேக்கிறியா? ஆங்! அப்டிக்கேளு! எங்க நீ சொகமா ஒரு எடத்துல ஒக்காந்து, தூங்கிறக் கூடாதுன்னு ப்ளான் பண்ணி செஞ்சது அது!

ஒன்னைய அதுல ஏத்தறதுக்குக் காட்ன குஜால வுட, ங்கொக்கமக்கா, சாஸ்தியா இருக்கும் பாரு நாங்க ஒன்னிய கீளே கவுக்கும் போது!

பயந்து, பயந்து தனியா, முளிச்சுக்கினே இருக்கியே, அத்த வுடு! எங்களப்போல சோறு துண்ணாமலியும் இருக்க கத்துக்கோ!

நாட்டாமை ஒன்னுதா, எங்குளுதான்ற டவுட்டே ஒனக்கு வோணாம்! ஒங்கொப்புரான அது எங்குளுதுதான்! பீச்சாங்கை பக்கம் வலி! சோத்தாங்கைபக்கம் திரும்புவோம்!
இதென்னா, ஒங்கப்பன் வூட்டு ஆஸ்தின்னு நெனச்சுக்கினியா! இது ஒனக்கும் ஸரி; எங்களுக்கும் ஸரி; ஒண்ணும் பட்டா போட்டதில்ல!

ஏதாவது ஒரு ராங் நடக்கும்; இத்தெல்லாம் மாறிப்பூடும், மவனே! ஆமாம்!"

என்று சாமியாட ஆரம்பித்து விட்டான்.... மருதநாயகம்!மன்னிக்கவும்! மயிலை மன்னார்!


அவனை சமாதானப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது!

போகும் போது, "மறக்காம, இத்தக் கொடுத்த அந்த கிளுமத்தூர்க்காரருக்கு நான் டேங்ஸ் சொன்னேன்னு சொல்லிடுப்பா!" என மறக்காமல் கூறினன் மயிலை மன்னார் !!

Read more...

Tuesday, August 15, 2006

"கண்ணன் பிறந்தான்!"

"கண்ணன் பிறந்தான்!"


வெண்ணை உண்ட கண்ணன் அன்று

அன்னை அவளிடம் "இல்லை" என்றான்

"உன்னை நம்பி ஊழியம் இல்லை!

என்னை ஏய்க்கும் திறனும் வேண்டா!

எங்கே உந்தன் வாயைக் கொஞ்சம்

நன்கே சற்று விரித்துக் காட்டென"

அன்னையவளும் அதட்டும் வேளையில்,

"இன்னே பிறவும் உலகம் காண் பார்!" என

கண்ணன் அவனும் அகல விரித்தான்!

அன்னே! அங்கே அத்தனை உலகும் தெரிந்ததம்மா!

என்னே! இவன் புகழ்! என்னே! இவன் புகழெனவே

அன்னையும் மகிழ்ந்து போற்றி வணங்கினாள்!

பின்னே அவன் பெயர் சொல்லியே நாமும்

மன்னுபிறவியும் தொலைத்திடுவோமே!

கண்ணன் அவன் புகழ் சொல்லவும் போமோ!

கண்ணன் என்றும் நம்மைக் காப்பான்!


கோவிக்காத கண்ணன் பிறந்தான்!

கோவிக்காமல் என்றும் இருப்பான்!

கீதையோடு சேர்ந்து மகிழ்வான்!

கீதம் நமக்கு இசைத்து வைப்பான்!

கோடிக்கோடி வந்தனம் செய்வோம்!

ஆடிப்பாடி இன்று மகிழ்வோம்!

கண்ணன் அவன் புகழ் சொல்லவும் போமோ!

கண்ணன் என்றும் நம்மைக் காப்பான்!


[பெற்றெடுத்த துளசி தளத்துக்கு நன்றி!]

Read more...

Monday, August 14, 2006

"உறவுகள் ஒரு க[வி]தை!"

என் இனிய, புதிய நண்பர் கோவி. கண்ணனுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன கதை இது!
என்னையே எழுதச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார்.
என் கோணல் புத்தியின் காரணமாய், கதையை, கவிதை நடையில் வடித்திருக்கிறேன்!
போட்டிக்கு வேண்டாம் என்று நான் சொல்லியும், அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இதனையும் போட்டியின் ஆக்கங்களில் ஒன்றாய்ப் படைக்கிறேன்.... பாஸ்டன் பாலா திட்டினாலும்!
இதைப் படித்துப் பிடித்த அன்பர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்!

"கதையும், களமும் அவருடையது! ஆக்கம் மட்டுமே என்னது!இது தேர்வுக்குத் தகுதியென நீங்கள் நினைத்தால், முதல் ஓட்டை கோவி. கண்ணனுக்குப் போட்டு, விருப்பமிருந்தால் [கட்டாயமில்லை!] எனக்கும் அளிக்கவும்!
நன்றி!



"உறவுகள் ஒரு க[வி]தை!"

"சின்னம்மா! சாக்லெட் எடுத்துக்க!"
குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தேன்
"அவரையே" உரித்து வைத்த சிரிப்புடன்
ஆளுயர நின்றிருந்தான் இளமாறன்!

முகத்தில் மீசை மெதுவாக எட்டிப்பார்த்தது !
மழுமழுவென்ற முகத்தில் அங்கங்கே சில பருக்கள்!

ஆசைதீர அவனைப் பார்த்து நான் ,
'என்ன விசேஷம்' எனக் கேட்டேன்!
"பத்தாவது பரிட்சையில் முதல் ரேங்க்கில் பாஸ்!
முதல் ஸ்வீட் உனக்குத்தான்! எடுத்துக்கோ!"
எனச் சொல்லி நீட்டினான் பெட்டியை!

"சித்தப்பா இல்லையா?" எனக்கேட்டவாறே
எட்டி உள் வந்த ஓரகத்தி மகனை
ஆசையுடன் அணைத்து,
அவன் கைகளைப் பாசத்துடன் பற்றி
நெற்றியில் முத்தமிட்டேன்!
உள்ளம் சிலீரென்றது!
கண்ணில் கண்ணீர் துளித்தது!

"என்னங்க! இளா வந்திருக்கிறான்!
பரிட்சையில் பாஸாம்!"
எனச் சொல்லி முடிக்குமுன்னே
பாய்ந்து வந்த என் கணவர்
"ரொம்ப சந்தோசமா இருக்கு!"
என்றவாறே, இளாவின் கையைப்
பாசமுடன் பிடித்துக் குலுக்கினார்!

"வீட்டிலுள்ள அனைவரும்
நாளை போகிறோம் பழனிக்கு!
நான் இன்று பாஸானால்
தான் முடியிறக்கி வேண்டுவதாய்ப்
பிரார்த்தனையும் செய்தாராம் என் அம்மா!
வரச்சொன்னார் உங்களையும் குடும்பத்தோட"
என்று சொன்ன இளாவின் கைகளை,
விட்டுவிட மனமின்றி
அணைத்தவாறு அவனிடம் சொன்னேன்!

"வரத்தான் ஆசை! பழனி முருகனைப்
பார்த்திடவும் ஆசைதான்! கசக்குமா எனக்கு!
அண்ணியும் முடியிறக்கும் நேரத்தில்
நானும் இறக்கிடுவேன் எனச் சொல்லு!
காலையில் பார்த்திடலாம் !
என்றோ ஒருநாள் நான் செய்த வேண்டுதலும்
நாளையே நிறைவேறுதல் நினைத்து
நானும் மகிழ்கிறேன்!" எனச் சொல்லி
அனுப்பி வைத்தேன் அவனை!

இளவயது இளமாறன் இளமைத் துள்ளலுடன்
செல்கின்ற அழகினைப் பார்த்தவாறே
திரும்பியவளைப் பார்த்துச் சிரித்தவண்ணம்
நின்றிருந்தார் என் கணவர்!

"உன் மனதில் ஓடுவது என்னவெனத் தெரிகிறது!
நம் மகனே நமைப் பார்த்து சித்தி, சித்தப்பா
என அழைக்கும் வேதனையை தாங்க முடியாமலன்றோ
தாயின் மனம் தவிக்கிறது ! இல்லையா ?"
என்றவுடன் அழுதிட்டேன் அவர் மார்பில் முகம் புதைத்து!

"கலங்காதே என் கண்ணே! கவலையை விட்டிடு!
கள்ளமில்லா மனத்துடனே நீ செய்த தியாகம்
கலங்குவதால் குறைந்துவிடக் கூடாது!

குடும்பமே எதிர்த்திட்டு கைகழுவி விட்டபோது
கைகொடுத்து நமைக் காத்தார் என் அண்ணன், அண்ணி!"

"கர்ப்பிணியாய் நீ துடிக்க
கண்மலங்கி நான் நிற்க
பெற்றோரும் கை விரிக்க
உற்றாரும் ஒதுங்கி நிற்க
உறுதுணையாய் அன்றங்கு
உடன் வந்து தெய்வம் போல்
கை கொடுத்தாள் நம் அண்ணி
குழந்தையொன்று நீ பெற்றாய்!"

"தனக்கொரு மகவில்லையென
அண்ணியவள் குமைந்தபோது
உற்றாரும் சுற்றாரும் நாவில் நரம்பின்றி
கொட்டவொண்ணா கடுஞ்சொல்லால் கொட்டிய போது,
மலடியென அவளைத் தூற்றிய போது,
மனம்பொறுக்காமல் மாதரசி அவளும்
மரணத்தை தழுவிடவே
முயற்சித்த வேளையினில்,"

"அவள் துயரம் தீர்ந்திடவும்,- நம்
நன்றியினைத் தெரிவித்திடவும்
நல்லதொரு வாய்ப்பெனவே
நாமளித்தோம் நம் மகனை!
மகளொன்று நாம் பெற்றபின்!
நம் பிள்ளைகளும் அறியமாட்டார்
உண்மை இதுவெனவே!"

"இப்பொது நீ அழுதால் அத்தனையும் வீணாகும்!
அப்போது நீ செய்த செயலுக்கும் பொருளில்லை!
எப்போதும் அவனும் நம் மகன் தான்!
இல்லையென சொல்லப்போமோ எவருமிங்கு!"

"நாளை நீ செல்லும் காரணமும் நானறிவேன்
அண்ணியங்கே வேண்டுதலை நிறைவேற்றும் பொழுதினிலே
நீயுந்தான் உன்னுடைய அதே வேண்டுதலை
முருகனுக்கு செலுத்துகிறாய் நம் மகனுக்கென!"
என்று சொல்லித் தேற்றிட்ட என் கணவரைப்
பெருமையுடன் பார்த்து நின்றேன்!

இருவர் கண்களும் விரைந்து சென்றிடும்
இளமாறன் மேல் பாசத்தை பொழிந்தன!

...............
[இது நான் சேர்த்தது!]

முனைக்கோயில் முன்னின்ற முத்தான இளமாறன்
முருகனைப் பார்த்தவண்ணம் மனதுக்குள் வேண்டினான்!
"அவருக்கும் மகன் தான் நானென்ற உண்மையிங்கு
எனக்கொன்றும் தெரியாது என்று எண்ணி இவர்களும்
மனதுக்குள் மருகுகிறார்! மனம் திறக்க மறுக்கிறார்!
என் பெற்றோர் இவரெனவே ஏற்கெனவே தெரியுமெனக்கு!
அவர் வாழ்வும் குறைவின்றி நிறைந்திடவே
முருகா! நீ அருளவேண்டும்! நீயே துணை!"
...........................

ஆம்!
உறவுகள் ஒரு க[வி]தை தான்!
அவரவர் எண்ணங்களில்!

Read more...

Friday, August 11, 2006

"உறவுக்குக் கைகொடுப்போம்!" [தேன்கூடு போட்டிக்கல்ல!]

"உறவுக்குக் கைகொடுப்போம்!"

[தேன்கூடு போட்டிக்கல்ல!]


நல்லதைச் சொல்லுகிறேன்
நானறிந்ததைச் சொல்லுகிறேன்
நலமெனில் கொள்ளுங்கள்
நச்சுப் பேச்சுகள் வேண்டாம்!

நாசவேலைகள் நடத்தி
நாலாயிரம் பேரைக் கொல்வதென
நெஞ்சில் ஈரமில்லா வன்மத்துடன்
நயவஞ்சகத் திட்டம் தீட்டியதை
நேற்று இங்கு முறியடித்தனராம்!

செய்தியைப் படித்ததும் உறைந்து போனேன்
எய்தவன் எங்கோ இருக்க அம்பைக் கொல்வதா என!
ஒன்றுமறியா அப்பாவிகளை ஒரேயடியாய் கொல்வதா?
என்ன ஒரு வன்மம் இப்பாவிகள் நெஞ்சிலென்று!

மேலும் செய்தியைப் படிக்கலானேன்!
கண்கள் மகிழ்வாலும், வியப்பாலும் விரிந்தன!
பிடித்துக் கொடுக்க உதவியர் நம் அண்டை நாட்டவர்!
யாரை இங்கு வாய்க்கு வந்தபடி ஏசித் திரிகிறோமோ
யாரால் வன்முறை வளர்க்கப் படுகிறது என நம்புகிறோமோ
அந்த அரசுதான், பாகிஸ்தானிய அரசுதான்
இந்தப் பாதகர்களைப் பிடித்திட உதவியதாம்!

மானுடத்தின் மேலுள்ள நம்பிக்கை இன்னும் இறுகியது!
மதங்களைத் தாண்டி மனிதரும் இருக்கிறார்
என்கின்ற உண்மையும் அப்போதே வலுப்பட்டது!
நானறிந்த நல்ல நண்பர்கள்- இஸ்லாமிய நண்பர்கள்
நாள்தோறும் என்னிடம் சொல்லிவந்த மெய்யுணர்வும் புரிந்தது!

'எங்கள் மதம் வன்முறை மதமல்ல!

வன்முறையால் சாதியுங்களென குரானில் சொல்லப்படவில்லை!

மதிகெட்ட சிலபேரின் முறையற்ற செயல்களுக்கு

தினம் தினம் சாகிறோம்,.......

உயிராலும், உள்ளத்தாலும்!

இஸ்லாம் அமைதியையே விரும்புகிறது!

எங்களில் சிலர் இவருக்குத் துணைபோகும்

அவலமெமை அன்றாடம் வாட்டுகிறது'
என

அவர் சொன்ன வார்த்தைகள் அர்த்தமாயின!

மனமகிழ்கிறோம் என் நண்பனே!
பாகிஸ்தானிய சகோதரனே!
மனமார்ந்த நன்றி உனக்கு!
இதோ நாங்கள் கை கொடுக்கிறோம்!
வா! இருவரும் சேர்ந்து
வன்முறையில்லா புத்துலகம் படைப்போம்!

வலைப்பூவில் விஷம் தூவும்
இந்து-இஸ்லாமிய நண்பர்களே!
இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்!
பழிக்குப் பழியென, பதிவுக்குப் பதிவு என
பதிவெழுதிப் பகைக்க வேண்டாம்!
அன்பை வளர்க்க முயலுங்கள்!

மதங்களை மீறியது அன்பு!
உணர்வுகளை மீறியது உறவு!


"உறவுக்குக் கைகொடுப்போம்!
உணர்வுகளைக் கட்டி வைப்போம்!"


இன்னுமொரு பொங்கல் வாழ்த்தெனவே
பாலாவும் சொல்லட்டும் பாஸ்டனிலிருந்து!
போட்டிக்கு அனுப்ப இல்லை இது!
உள்ளதைச் சொல்ல என்றுமே நடுக்கமில்லை!


[பி.கு.: இது தேன்கூடு போட்டிக்கல்ல!]
இதைப் படிப்பவர் அனைவரும் உடனே தங்கள் பதிவில் ஒரு "பாகிஸ்தானுக்கு நன்றி"பதிவு போட்டு தமிழ்மணத்தின் முகப்பு முழுதும் ஒருநாள் முழுதும் நிரப்பச் செய்தால் மிகவும் மகிழ்வேன்!

Read more...

Wednesday, August 09, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!"

"இன்னாபா! நா நட்பை பத்தி சொன்னது புடிச்சுதா ஒன் ஃபிரன்டுங்களுக்கு?" என்ற பழக்கமான குரல் கேட்டு தெற்கு மாடவீதியில் போய்க்கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தால்...மயிலை மன்னார் ஒரு டீக்கடை வாசலில் நின்று கொண்டு ஒரு பீடியை வலித்துக் கொண்டிருந்தான்.

"உன்னைப் பாக்க இன்னிக்கு சாயங்காலம் வரலாம்னு இருந்தேன்! நீ இங்கேயே இருக்கியே" என்று அவன் அருகில் சென்றேன்.

" உன்னுடைய குறள் விளக்கம் ரொம்பப் பேருக்குப் பிடித்துத்தான் இருந்தது; ஆனால்,....." என்று இழுத்தேன்.

"இன்னா: இன்னா விசயம்? ஏன் பம்முற?" என்று அதட்டினான் மன்னார்.

"தயக்கம் எல்லாம் ஒன்றுமில்லை. நட்பைப் பற்றி நல்லாத்தான் சொன்னே நீ! இப்போ சில மக்களுக்கு ஒரு சந்தேகம். நட்பின் பெருமை எல்லாம் சரிதான். நல்ல நட்பு எது? தீய நட்பு எது? என்று எப்படி இனம் கண்டு கொள்வது? என்று கேட்கிறார்கள்" என்றேன்.

" இம்புட்டுதானே! இத்த சொன்ன அய்யன் அத்த சொல்லாமப் பூடுவாரா என்ன? அந்த புக்குல எம்பதாவது அதிகாரத்தை பொரட்டு! ஒண்ணொண்ணா ஒயுங்கா படி. நா சொல்றத எய்திக்கோ!" என்று அதிகாரமாய்ச் சொன்னான்.

நான் ஒன்றொன்றாகக் குறள்களைப் படிக்க அவன் சொன்னது பின் வருவது!


"நட்பாராய்தல்"

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. [791]


இதான் நீ மொதல்ல தெரிஞ்சுக்க வேண்டியது. கவனமாக் கேட்டுக்கோ!
இப்ப, நீ ஒருத்தராண்ட தோஸ்தாவறதுக்கு முன்னாடியே, இவன் யாரு, இந்த ஆளோட நட்பு வெச்சுக்கறது நமக்குத் தேவைதானான்னு யோசிச்சு முடிவு பண்ணணும். ஏன்னா, அப்படி ஆயிட்டேன்னு வெச்சுக்கோ; அதுக்கு அப்பால, நீ இன்னா பண்ணினாலும் ஒன்னால உடவே முடியாது.கால சுத்தின பாம்பு மாதிரி அது சுத்திக்கினே இருக்கும்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும். [792]


மேல சொன்ன மாரி, யோசிக்காம ஃப்ரென்சிப் வெச்சுக்கிட்டியோ, அது ஒன்னை சாவற வரைக்கும் வுடாது. ஒன்னியே போட்டுத்தள்ளாம போவாது! சொல்லிப்புட்டேன்...ஆமாம். அதுனால, நல்லா ஆராஞ்சு பாக்கணும்கறது ரொம்ப முக்கியம்.

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு. [793]


சரி! அப்பிடி இன்னாத்த ஆராயணும்னு கேக்கிறியா? அவன்ட்ட இருக்கற கொணம் இன்னா?, அவன் பொறந்த எடம் எப்பிடியாப்பட்டது?, அவன்ட்ட இன்னென்னா கெட்ட கொணம் இருக்குது, அவன் கூட இருக்கற சொந்தத்துல எவனாச்சும் கேப்மாரி இருக்கானா? இத்தெல்லாம் நல்லா விசாரிச்சுப் பாத்து அப்பாலதான் அவனோட தோஸ்தாவணும்!

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. [794]


நல்ல குடும்பத்துல ஒர்த்தன் பொறந்துருக்கான்னு வெச்சுக்க, அவன் இந்த பளி, பாவத்துக்கெல்லாம் அஞ்சறனா;..... அவனை கப்புன்னு புடிசுக்கோ! அதுக்கோசறம், அவன் இன்னா கேட்டாலும் மறுப்பு சொல்லாம கொட்த்துட்டு அவனோட சேந்துக்கோ! அவன் சிகரட் புடிக்கக் கூடாதுண்றானா, இல்ல, தெனம் கொறளைப் படிக்கணும்றானா, இது மாரி வேற எதுனாச்சும் கேக்கறனா, அல்லாத்துக்கும் சரி, சரின்னு சொல்லி செஞ்சிடு!

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். [795]


நீ எதுனாச்சும் ராங்கா செய்யணும்னு அவன்ட்ட போய் சொன்னவொடனே ஒன்னை பளாருன்னு அறைஞ்சி, ஒன் மொவத்துல காறித்துப்பி, "அடப் பேமானி! ஒனக்கு ஏன் இப்பிடி புத்தி எத்தையோ திங்கப் போவுது"ன்னு சொல்லி ஒன்னிய அள வெச்சுட்டு, கூடவே, ஒன் மோவாயப் புடிச்சுக்கிட்டு, "கண்ணூ! இத்தச் செஞ்சியின்னா இன்னா ஆவும் தெரியுமா? போலீஸ்காரன் வந்து அப்பிடியே கொத்தா அள்ளிக்கினு பூடுவான்"ன்னு ஒனக்கு நல்லதும் சொல்றானா ஒர்த்தன்! வுடாதெ அவனை! சும்மா கொரங்குக்குட்டி கணக்கா கெட்டியாப் புடிச்சுக்கோ!

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். [796]


இல்லியா; ஒன்னை கெட்ட வளிக்குத் திருப்பி ஒன்னிய மாட்டி வுட்டுட்டு அவன் அம்பேல் ஆயிட்டானா? கவிலிய வுடு! ஒண்ணுமில்லையின்னாலும் இப்ப அவன் யாரு, எப்பிடிப்பட்டவன்னாவுது தெரிஞ்சு பூடிச்சுல்ல! அந்த மட்டும் லாபம்னு எடுத்துக்க! வுடு ஜூட்டு அவன்ட்டேந்து!

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். [797]


அப்பிடிப்பட்ட ஒரு சோமாரிய, 'சனியன் வுட்டுது'ன்னு ஓடறெல்ல? அதான் ஒனக்கு அட்ச்ச லாட்டரி பிரைசுன்னு நெனச்சுக்கொ!

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. [798]


ஒன்ன ஒர்த்தன் சதா மட்டம் தட்டிக்கினே இருக்கானா? இன்னாடா இவன் இப்பிடி நம்மள பேஜார் பண்ணிக்கினே இருக்கானேன்னு நெனைக்க வெக்கிறானா ஒன்ன? அவனோட சேராத! அதேமாரி, ஒனக்கு ஒரு கஸ்ட காலம் வர்றப்ப, கண்டுக்காம அபீட்டு ஆறான் பாரு; அவுனையும் லிஸ்டுலேந்து தூக்கிடு!

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும். [799]


அப்பிடி ஒன்னோட கெட்ட நேரத்துல வுட்டுட்டு ஓடினான் பாரு, அவன் நெனப்பு நீ சாவற காலத்துலகூட வந்து ஒம்மனசைப் போட்டு வாட்டிரும். அப்ப வர்ற, அந்த நெனப்பு இருக்கே, அது அந்த சாவ வுட கலீஜா இருக்கும், மவனெ, ஒனக்கு!

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. [800]


இப்ப இதுவரைக்கும் சொன்ன கெட்ட கொணம் அல்லாம் இல்லாதவனாப் பாத்து அவங்கூட ஃப்ரென்ட்சிப் வெச்சுக்க! அப்பிடி இல்லியா! இன்னா துட்டு செலவானாலும் சரி; இல்ல அவன் இன்னாக் கேட்டாலும் சரி அந்தக் கஸ்மாலத்தக் குடுத்தாவுது, "ஆள வுடுப்பா சாமி"ன்னு அவனக் கட் பண்ணிரு!

இப்பப் புரிஞ்சுதா? ஆர சேத்துக்கணும்? ஆர வெட்டணும்னு?

சரி, சரி, நம்ம கோவாலபொரம் கோயிந்தன் "ஏதோ பிரச்சின மாமூ"ன்னு தகவல் சொல்லி அனுப்பிச்சிருந்தான். நீயும் வா! இன்னான்னு கேட்டுட்டு வருவோம்' என்று சொல்லி உரிமையுடன் என் தோளில் கை போட்டு அணைத்தவாறு வெள்ளையாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

பெருமையுடன் நானும் அவன் தோளில் என் கையைப் போட்டுக்கொண்டு கூட நடந்தேன்!

போங்க! நீங்களும் உங்கள் நண்பர்களைப் பற்றி ஒரு திறனாய்வு செய்யுங்கள் ஐயன் சொன்னபடி!

Read more...

Saturday, August 05, 2006

அ. அ. திருப்புகழ் -- 6 "புகரப் புங்கப்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 6

"புகரப் புங்கப் பகரக் குன்றில்"

மூவரும் அறியா முதன்மொழிப் பொருளாம் "ஓம்" எனும் பிரணவப்பொருளைத் தனக்கு உபதேசிக்க அருணையார் வேண்டும் அற்புதப் பாடல் இது.
இப்பாடலின் சந்தம் பாடி மகிழக்கூடிய ஒன்று. அருஞ்சொற்கள் நிறைந்த,.. ஆனால், எளிய பாடல்!

ராகம் -- ரஞ்சனி
தாளம் --ஆதி..திஸ்ர நடை

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ......தனதான

.......பாடல்........

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் பொலிவோனும்

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் புகல்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கத் திருமாலும்

திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
தெளிதற் கொன்றைத் தரவேணும்

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் துறைவோனே

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் றருள்வோனே

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே.

-------------------------------------------------------------------------------------

[பின் பார்த்து முன் பார்ப்போம்!]

"தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றித்
தட நல் கஞ்சத்து உறைவோனே"


வீடு பேறு பெற விழைவோர் வேண்டிடும் வித்தையொன்று
இதயமெனும் தாமரையின் உள்ளின்று ஒளிர்ந்திடும்
பரமான்வாவினைத் உணர்ந்து தெரிதலே !
தகராகாசம் எனும் அவ்வழகிய தாமரையின்
உயரிய சிகரத்தின் உச்சியில் உறைவோனே!

"தருணக் கொங்கைக் குறவிக்கு இன்பத்தையளித்து
அனபுற்று அருள்வோனே"


இளமுலை நாயகியாம் குற வள்ளிப் பிராட்டிக்கு
பேரின்பம் வழங்கி அன்புவைத்து அருள்பவனே !

"பகரப் பைம்பொன் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா"


பொன் போலும் ஒளி சிந்தும் உயரிய சிகரங்களை
ஆங்காரமாய்த் தான் கொண்ட கிரவுஞ்ச மலையினை
விட்ட வேலாயுதம் விடுத்து படபடவெனப் பொடிசெய்து
இப்பூமியில் விழுமாறு செய்திட்ட அதிதீரனே!

"பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே."


பவளம்போற் சிவந்து தூய்மையுடன் விளங்கும்
திருமதில்கள் சூழ்ந்து நிற்கும் திருச்செந்தூர்
எனும் பதியில் பெருமையுடன் எழுந்தருளி நிற்கின்ற
கந்தனெனும் பெருமை மிக்க தலைவனே!

"புகரப் புங்கப் பகரக் குன்றில்"

முறம் போலும் காதினிலும், அழகிய துதிக்கையிலும்,
புள்ளிகளைக் கொண்டு மற்றெல்லா உடல் முழுதும்
வெள்ளை நிறம் கொண்டு அழகுற மலைபோல் விளங்கும்
ஐராவதம் என்னும் யானை வாகனத்தின் மீதினிலும்,

"புயலில் தங்கிப் பொலிவோனும்"

மற்றொரு வாகனமாம் மேகத்தின் மேலும்
உலவுகின்ற விண்ணவர் கோமான் இந்திரனும்,

"பொருவில் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பில் புகல்வோனும்"


இணையற்றதும், அனைத்துக் கலைகட்கும் புகலிடமுமான
வேதத் தொகுதிகளின் சீர்மிகு பொருளை உணர்ந்து
சொல்ல வல்ல நான்முகனெனும் பிரமனும்,

"திகிரிச் செம் கட்செவியில் துஞ்ச
அத் திகிரிச் செங்கைத் திருமாலும்"


மலையினை ஒத்ததும், செம்மைப் பண்புகள் மிக்கதுமாய
ஆதி சேடன் எனும், கண்களே காதாய்க் கொள்ளும்
அரவத்தின் மேல் அறிதுயில் கொள்பவரும்,

"அத் திகிரிச் செங்கைத் திருமாலும்"

சக்கராயுதம் தாங்குவதால் சிவந்த கரமலருடைய
நாரயணன் என்னும் திருமாலும்,

"திரிய"

இவர்கள் அனைவரும் தமக்கிந்த உபதேசம்
கிடைத்திடவில்லையே என இங்கும் அங்குமாய்
அலைந்து திரிந்திடும் வேளையினில்,

"பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் தரவேணும்"


மனதினிலே உவகை பொங்கி, எண்ணமெனும் மாய அலைகள்
என் உள்ளத்தினின்று அகன்று செல்லுமாறும்
பேரின்பப் பொருளான சிவானுபூதியினை
யான் உட்கொண்டு, என் உள்ளம் தெளியும் வண்ணம்
அருள் மொழி ஒன்றினை அடியேன் எந்தனுக்கு
உபதேசித்து அருள வேணும்.
-------------------------------------------------------------------------------------

"அருஞ்சொற்பொருள்"

புகர = புள்ளிகளை உடைய
புங்க; துங்க = தூய்மையானது
பகர = அழகியது; ஒளி பொருந்தியது
பொரு இல் = இணையற்றது
சுருதிச் சங்கம் = வேதத் தொகுப்புகள்
திகிரி = மலை; சக்கரம்
கட்செவி = கண்+செவி= கண்ணையே காதாய் உடைய்து பாம்பு. பாம்புக்கு காதுகிடையாது. கண்களாலேயே உணரும் ஆதலின், கட்செவி எனப்படும்.
செங்கை = செம்+கை + சிவந்த கை
திரை அற்று = [எண்ண]அலைகள் நீங்கி
தகரம் = இதயத் தாமரை எனும் கோயில் = தகராலயம்; தகராகாசம் = தகரத் தடம் = எல்லையற்ற பரந்த ஆனந்த வெளி
கஞ்சம் = தாமரை
படி = பூமி
தொடு = விட்டு எறிந்த
புரிசை = மதில்
பெருமாளே = பெருமை மிக்கவரே
-------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!


********************************************************************

Read more...

Thursday, August 03, 2006

கூடா நட்பு!

கூடா நட்பு!


அனைவருக்கும் நட்பு வார வாழ்த்துகள்!

நட்பைப் பற்றி நண்பர் சிறில் ஒரு அருமையான பதிவிட்டிருந்தார்.
http://theyn.blogspot.com/2006/08/blog-post_03.html

அதைப் பார்த்ததும், கூடாநட்பைப் பற்றி ஐயன் சொன்னதை இங்கு போட்டிருக்கிறேன்!

விளக்கம் என்னவென்று என் நண்பன் மயிலை மன்னாரைக் கேட்ட போது அவன் உதிர்த்த முத்துகள் அடைப்புக்குறிக்குள்!!

கூடா நட்பு! [அதிகாரம் 83]

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. [821]


[நல்லா பதமா பழுத்த இரும்பை கரீட்டா அந்தக் கல்லுல அடிக்கற மாதிரி, மன்சுல வஞ்சம் வெச்சுக்கிட்டு வெளில ஃப்ரெண்டு மாரி இருக்கறவன் நட்பு, சமயம் பாத்து நம்மை அடிச்சுரும். உசாரா இருக்கணும்!
நம்ம வைகோவைக் கேட்டுப்பாரு, எப்பிடீன்னு சொல்லுவாரு!]

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். [822
]

[உள்ளே ஒண்ணு, வெளில ஒண்ணுன்னு சினேகம் பண்றது வேசி உம்மேல காதல்னு சொல்ற மாரிதான்.
நம்ம தந்திரியக் கேட்டா இன்னும் விளக்கமா சொல்வாரு!]

பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது. [823]


[உள்ளுக்குள்ள சுத்தமா இல்லைன்னா, நீ எத்தினி பொஸ்தவம் படிச்சாலும், உன்னால நல்ல மன்சோட பளக முடியாது.]

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். [824]


[உள்ளுக்குள்ளார கெருவம் வெச்சுக்கிட்டு, வெளில சிரிக்கறவனைப் பாத்தா பய்ந்து ஓடியே பூடு!]

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. [825
]

[மெய்யாவுமே உம்மேல நட்பா இல்லாதவன் சொல்றான்னு எந்த ஒரு காரியத்திலியும் எறங்காதே!]

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். [826]


[ஒன் எதிரி இன்னாதான் நைச்சியமாப் பேசினாலும், அதெல்லாம் ஆவாத கதைன்னு வெரசலாவே தெரிஞ்சுரும்!]

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். [827]


[வில்லு வளையறது ஒம்மேல அம்பு எறியறதுக்குத்தான்! அதுபோல, ஒன் எதிரி வளைஞ்சு 'அண்ணே, வணக்கம்'னு சொல்றது ஒன் காலை வார்றதுகுத்தான்னு புரிஞ்சுக்கோ!]

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. [828]


[அதே ஆளு, [827-ல சொன்ன அதே ஆளு,] கையக் கூப்பி வணக்கம்னு சொல்றப்போ, அதுக்குள்ளே ஒரு கத்தி வெச்சுருப்பான்! அவன் அளுது கண்ணிரு வுடறது கூட அத்தே மாரித்தான். நம்பிராதே!]

மிகச்செய்து தம் எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. [829]


[ஒங்கிட்ட மூஞ்சில சிரிப்பக் காட்டிக்கினு, உள்ளார பொருமிக்கிட்டு இருக்கறவன்ட்ட, நீயும் அதே மாரி, சிரிச்சுக்கினே, அதே சமயம் உள்ளார அவன் இன்னார்னு கவனம் வெச்சுக்கோ!]

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். [830]


[அதேக்காண்டி, அவனோட நட்பா இருக்கணும்னு ஒரு நேரம் வந்துச்சின்னா, பொறத்தால மட்டும் ஃப்ரெண்டா இரு! மன்சை அவன்ட வுட்டுறாதே!]

நா வர்ட்டா! அப்பால பாக்கலாம்! எதுனாச்சும் டவுட்டு வந்திச்சின்னா கூப்ட்டனுப்பு! சரியா!


[பி.கு.: இதுபோல வேறொரு அதிகாரத்தை எடுத்து ஒருவர் தொடரலாமே, அவருக்குப் பிடித்த பாணியில்!
திருக்குறளும் படித்த மாதிரி இருக்கும்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP