Sunday, August 26, 2007

"ஈக்களின் வழக்கு"

[காற்றின் வேகம் தாளாமல் பறந்திடும் பறவை]


"ஈக்களின் வழக்கு"


மன்னவன் முன்னால் முறையிட்டு நின்றன
முறையீட்டு மணியைப் பலமாக அடித்தன
ஈக்கள் வந்து மணியடிப்பதைப் பார்த்து
அதிசயத்தில் ஆழ்ந்தான் மன்னவனும்!

'அருந்தகை அரசே அடியவர்க்கெளியவா
எவர்க்கென்ன குறையெனினும் தீர்ப்பவா
சிறியவர்க்கும் துணை வருபவா
எமைவிடவும் எளியார் இங்குண்டோ
இன்றோ நாளையோ எனவிருப்போர் யாம்
எமையொருவர் வருத்துகின்றார்
எங்களைக் காத்தருள்வாய்' என்ற ஈக்களை
இரக்கத்துடன் பார்த்தான் மன்னவனும்!

"யாரும்மைத் துன்புறுத்தியது?
எவருமக்குத் தீங்கிழைத்தது?
தண்டிக்காமல் விடமாட்டேன்"
சினத்துடன் கேட்டான் மன்னவனும்!

"காற்றின் மீதே எம் வழக்கு
எமை அலைக்கழிப்பதே அவர் செய்கை
நிலைகொள்ள விடாமல் துரத்துகிறார்"
என்றவரைப் பார்த்து சொன்னான் மன்னவனும்!

"நும் சொல்லில் பொருளுளது
உம் வேதனை புரிகின்றது என்றாலும்
அடுத்தவர் தரப்பின் நியாயத்தைக்
கேளாமல் தீர்ர்ப்பளிக்க ஒப்பாது என் மனமும்
காற்றின் கருத்தினையும் கேட்டிடுவோம்"
எனவுரைத்தான் மன்னவனும்!

"அப்படியே ஆகட்டும்" என்றிட்டார் ஈக்களும்
'கூப்பிடுங்கள் பருவக்காற்றை
இப்போதே வரச் சொல்லுங்கள்'
ஆணையிட்டான் மன்னவனும்!

ஆணையின்னும் செல்லவில்லை
அதற்குள் சுழன்றது ஊழிக்காற்று
பேரிரைச்சலோடு விரைந்து வந்தது
தாங்காமல் திகைத்திட்டான் மன்னவனும்!

சட்டெனத் திரும்பிப் பார்த்தான்
'சொல்லுங்கள் உங்கள் வழக்கை'
ஈக்களை அங்கே காணவில்லை
சிரித்திட்டான் மன்னவனும்!


இதுபோல்தான் இறைமறுப்பாளரும்
இறைமாட்சி எதிர்வருகையில்
காணாமல் போய்விடுவார்
அதுவரையில் குறைசொல்வார்
மாமன்னன் வரும் போதோ
மறைந்தே போய்விடுவார்!

[ரூமியின் ஒரு கவிதையைத் தழுவி!]

Read more...

Sunday, August 19, 2007

"இயலாமை எனக்கில்லை"


"இயலாமை எனக்கில்லை"

உலகமெனும் மேடை இதில்
ஒவ்வொருநாளும் நடிப்பதே
வாழ்வெனப்போனபின்னர்
நான் நானென்பதை மறந்து
என் பாத்திரம் எதுவெனவுணராமல்
என்னை மட்டுமே நினைத்து
நடிக்கத் தொடங்கினால்
வழுக்கி மட்டும் போக மாட்டேன்
கல்லெறியும் கூடவே கிடைக்கும்

நேற்றைய நாடகத்தில் நானே ராஜா
கைப்பற்றிய ராணி தவிரவும்
எனைப்பற்றிய பெண்டிரும் அங்கிருந்தார்
இன்றோ எனக்குப் பிச்சைக்காரன் வேடம்
நேற்றைய நினைப்பில் நான் நடித்தால்
இன்றும் கல்லெறி நிச்சயமே.

பிரபஞ்சமெனும் ஒரு கோட்டில்
பலகோளுக்கு நடுவே நானும்
ஒரு புள்ளியாய் பால்வெளியில்
மிதக்கின்ற வேளையினில்
பரமன் ஆட்டிவிட்ட பம்பரம்போல்
புள்ளிகளில் புள்ளியாய்
சுவாசத்தில் சுவாசமாய்
பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும்
வயதான ஓநாயாய் என் நினைவுகள்
இன்னமும் சென்றதையே எண்ணி இன்றும்
புண்ணாகிப் போன புண்ணாக்கு நிகழ்வுகளை
எண்ணியே இன்று இன்றைய சுகங்களைத்
தொலைத்தலைந்து புலம்புகிறேன்

எனைத் தாங்க எவர் வருவார் என நானும்
உனைக் கேட்டே வாழ்கின்றேன்
எனை நானே நம்பாத போது
எனைக்காக்க நீ வருவாயென
உனை நினைத்து நான் வாழுவதும்
கனியிருப்பக் காய் கவருவது போலவேயென
இன்னும் எனக்குப் புரியாததேனோ!

எனது முட்கள் நானே ஏற்றவை
நானே சூடிக் கொண்டவை
பிடித்தோ பிடிக்காமலோ
விரும்பியோ விரும்பாமலோ
சம்மதமின்றியோ சம்மதித்தோ
அந்தரங்கங்களே அந்தரத்தில் இன்று
தொந்தரவாய் ஆடுது என் முன்னே
இதிலே சுயமென்ன அசலென்ன

பிறக்குமுன்னமேயே சொல்லிவிட்டான்
ஆழ்கடலில் நீந்தித்தான் வெளிவருவாயென
தாயின் கருவில் ஒருகடலில் இருந்தேன்
வாயின் வழியே வந்தவுடன் ஓர் புதுக்கடல்
எவராலும் ஆளப்பட்ட இளமைக்காலம் ஒரு கடல்
இடையிலே சிலகாலம் காதலெனும் தீவினிலே
மீண்டும் என் வாழ்வை முடிவெடுக்க படிப்புக் கடலில்
சம்சார சாகரத்தில் மூழ்கி பல கடமைகள் ஆற்றி
இக்கடலினின்று மீண்டு பேரின்பக் கடல் நோக்கி
இப்போது செய்கின்றேன் என் பயணம்

இதற்கிடையில், என் இதயம்
நிற்கும் போது நிற்கட்டும்
என்றும் தொடரும் என் பயணம்
மூச்சிருப்பதும் நிற்பதுவும்
என்கையில் இருக்குதடா
உன்னைக் கேட்டா முடிவெடுப்பேன்
எனக்கில்லை இயலாமை!

Read more...

Thursday, August 16, 2007

"ஆடி வெள்ளி தேடி உன்னை"


"ஆடி வெள்ளி தேடி உன்னை"



இன்று ஆடி கடைசி வெள்ளி!

அம்மனுக்கு மிகவும் உகந்த நாள்!

இந்த நன்நாளில், கிடைத்தற்கரிதான, படித்தாலே எல்லா நலன்களும் நல்கும் "பாலா திரிபுரசுந்தரி கவசம்" என்னும் பாசுரத்தை இங்கு பதிகிறேன்.

அனைவரும் படித்து அன்னையின் அருளடைய வேண்டுகிறேன்.

[ஒரு சின்ன தகவல். இதை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய 'கந்தகுரு கவசம்' ராகத்தில் பாடிப் பாருங்கள்! மிகச் சரியாக வரும்!]

நேரமிருப்பின், "மாரியம்மன் தாலாட்டையும்" ஒருமுறை படிக்கலாமே!!


பாலா கவசம்



கணபதி துணை




ஓம்கார கணபதி ரீங்கார கணபதி

உன் பாதம் நாடுகின்றேன்

உன்னருள் துணையாலே என்னவள் கவசத்தை

உளமுருகிப் பாடுகின்றேன்

தீங்கேதும் வாராது நீங்காத துணையாக

தும்பிக்கை வேண்டுகின்றேன்

தேனான சுவையோடு தெய்வீக ஒளியோடு

தெய்வமே ஆண்டருள்வாய்.



பாங்கான தெய்வம் பாலா திரிபுர

சுந்தரி திருக்கவசமே

பாலோடு தேனாக பாகோடு தானாக

செய்வதும் நினது வசமே

ஏங்காத நிலையருள் ஏத்திடும் வரமருள்

எந்நாளும் காத்திருப்பாய்

ஏழையேன் என்னுடை அன்பினை வைக்கிறேன்

ஹ்ருதயத்தில் பூத்திருப்பாய்.



கவசம்



அன்னையாம் பாலாதிரிபுரசுந்தரி

அருள்தனை நீ பாடுவாய்

அன்னையைத் தேடுவாய் அன்னையைத் தேடுவாய்

அன்போடு நீ தேடுவாய்

அன்னையை நாடுவாய் அன்னையை நாடுவாய்

அவள் பாதம் நீ நாடுவாய்

அன்னையின் அருகினில் ஆடுவாய் ஆடுவாய்

ஆனந்தமாய் ஆடுவாய்



பாலா எனச் சொல்லு பாலா எனச் சொல்லு

பவவினை யாவும் தள்ளு

பாலா எனக் கூறு பாலா எனக் கூறு

பாதாரவிந்தமே சேரு

பாலா எனப் பாடு பாலா எனப் பாடு

பாலாவின் கருணையைத் தேடு

பாலா என்றே ஓது பாலா என்றே ஓது

பாலாவினால் மறையும் தீது



திரிபுரசுந்தரி திருவடித் தாமரை

தினம் வந்து நமைக் காக்குமே

திரிபுரசுந்தரி திருவிழிப் பார்வையில்

தெய்வீக நிலை பூக்குமே

திரிபுரசுந்தரி திருக்கரம் படுவதால்

தீமைகள் தான் விலகுமே

திரிபுரசுந்தரி திருமுடி காண்கையில்

தேன் வாழ்வுதான் மலருமே



பாலாவை நீ பாடு பங்காரு காமாக்ஷி

பாங்கான உரு தெரியுமே

பாலாவை நீ நோக்கு மதுரையாள் மீனாக்ஷி

புன்னகைதான் புரியுமே

பாலாவை நீ காணும் போதந்த காசியாள்

விசாலாக்ஷியை அறிகுவாய்

பாலாவின் தோற்றத்தில் மயிலையின் கற்பகம்

பலவரம் தான் அருளுவாள்



இல்லையென்று பாலா திரிபுரசுந்தரி

யாருக்கும் சொன்னதில்லை

இன்பத்தினை நாடும் அன்பர்க்கு கருணையை

ஈயாமல் விட்டதில்லை

தொல்லையென்றவள் எல்லையில் வந்தோர்க்கு

துயரேதும் வந்ததில்லை

தூயவள் அவளுக்கு அருளதைப் பொழிவதில்

ஜாதிகள் மதமுமில்லை



அன்னையாம் பாலாதிரிபுரசுந்தரி

அன்புக்கு எல்லையில்லை

அன்னைக்கு செல்வர் ஏழையர் என்கின்ற

பேதங்கள் ஏதுமில்லை

தன்னையே வேண்டிடும் அன்பர்க்கு அருளதை

தாராமல் போனதில்லை

தாயவள் பாசமே பொழிவதில் ஆகாய

மாரியும் இணையுமில்லை



காயத்ரியாகவே கண்களைக் காப்பாள்

சிவசக்தி சிரமே காப்பாள்

காளியாய் வந்து கரங்களைக் காப்பாள்

கௌமாரி கால்களைக் காப்பாள்

மாயையை நீக்கி மஹேஷ்வரி காப்பாள்

மாதாவாய் மனதைக் காப்பாள்

மூகாம்பிகை என்றும் முகத்தையே காப்பாள்

மோகினி மூளை காப்பாள்



தாய் தில்லைக் காளியாள் தலையினைக் காப்பாள்

தர்மாம்பா தோளைக் காப்பாள்

தில்லைச் சிவகாமியாள் தொடையினைக் காப்பாள்

துர்கையாள் தொண்டை காப்பாள்

கைநிலவு அபிராமி கழுத்தினைக் காப்பாள்

வைஷ்ணவி வயிறு காப்பாள்

கருமாரியாய் வந்து குரல்வளம் காப்பாள்

காந்திமதி காது காப்பாள்



அருள்மிகு தேவி அன்னை பாலாதிரிபுர

சுந்தரி பெயர் மந்திரம்

அமைதியைத் தந்திட நெமிலியில் வந்தனள்

அவள் திருவடி எந்திரம்

இருள்தனை நீக்கிடும் தாயவள் விழிகளே

இன் துணை என வந்திடும்

இன்முக தேவியை உன்னகம் வைத்திடு

எல்லாமே தான் தந்திடும்



மருள்தனை நீக்கிடும் மாதாவின் கவசமே

மனமொன்றி நீ கூறுவாய்

மகிழ்ச்சியைத் தந்திடும் மாதாவின் கவசமே

மலரடி நீ சேருவாய்

பொருள்தனைக் கொடுத்திடும் பாலாவின் கவசமே

புவியினைக் காக்கும் நிஜமே

புகழ் நிறை நெமிலியில் பொலிகிறாள் சத்தியம்

புகலிடம் அவள் நித்தியம்



அமைதியைப் பெற்றிட அன்பர்கள் அனைவரும்

அவளையே நாட வேண்டும்

சுமைகளைக் குறைத்திடும் சுந்தரி இல்லத்தில்

சந்ததம் பாட வேண்டும்

இமையது கண்களைக் காப்பது போல் கவசம்

எந்நாளும் காக்க வேண்டும்

நெமிலியில் எழில்மணி பணிவுடன் எழுதிய

கவசமே பூக்க வேண்டும்



பாலாவின் கவசத்தைப் பாராயணம் செய்தால்

பவவினை தான் போகுமே

பாலாவின் கவசத்தைப் பாராயணம் செய்தால்

தவவினை நமைச் சேருமே .



ஓம் ஓம் ஓம் !

Read more...

Saturday, August 04, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --15[இரண்டாம் பகுதி] "புணர்ச்சி மகிழ்தல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --15[இரண்டாம் பகுதி] "புணர்ச்சி மகிழ்தல்"


வஸந்தபவனில் என்னென்ன ஆர்டர் பண்ணினோம் என்பதெல்லாம் கேட்க உங்களுக்குப் பொறுமை இருக்காது எனத் தெரியுமாதலால், மிச்சமிருக்கும் ஐந்து குறள்களுக்கு மயிலை மன்னார் என்ன சொன்னான் எனத் தெரிந்து கொள்வதில்தான் உங்கள் ஆர்வம் இருக்குமென்பதால்,
நேராக அதற்கே வருகிறேன்!

[முதல் ஐந்து குறள் விளக்கம் சென்ற பதிவில் பார்த்தோம்.]

நடு நடுவே மன்னாரின் உபசரிப்பையும் காணலாம்!

அதிகாரம் 111. "புணர்ச்சி மகிழ்தல்" [1106-1110]

"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்." [1106]

"நம்ம நாயர் கடை டீ, மசால்வடைக்கு, இங்கே சாப்படற மசால்தோசையும், பூரி மசாலாவும் எவ்வளவோ மேலுன்னு நெனக்கற நீ! பொறு, பொறு!

இப்பத்தானே ஆர்டர் பண்ணிருக்கோம்! இன்னும் வரல!

நீசொல்வியே அந்த தேவலோகம்... அங்கே ஆரும் சாவறதே இல்லியாம்!

அல்லாரும் அமிர்தம் குடிச்சிட்டாங்களாம்!

அப்டீன்னு சொல்றாங்க!

ஆனா, ஐயன் அதையே எப்டி உல்ட்டா பண்னி சொல்றார்னா, ..

இவன் ஒரு பொண்ணை லவ் பண்றானாம்!

அதுவும் இவன டீப்பா லவ் பண்ணுதாம்.

எப்பலாம் இவன் அந்தப் பொண்ணோட தோளைத் தொடறானாம்.
அவ்ளோதான்!

இவனுக்கு புதுசா இன்னொரு ஜென்மம் எடுத்தாப்பல, அவன் உசிரு தளைக்குதாம்!


அதுனால, இவனுக்கு இவளோட தோளே அமிர்தம் மாரித் தோணுதாம்!

தொடறப்பவெல்லாம் புது உசுரு வர்றதுனால!


"தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு." [1107]


சரி, சரி! தோசை வந்திருச்சு! சாப்டு!

இப்படி இந்த ஓட்டல்ல ஒக்காந்து ஒனக்கு வாங்கிக் கொடுத்து, நானும் சாப்டறதுக்கே எனக்கு இம்மாம் சந்தோசம் வருதே.... சரி, சரி!... நீதான் பில்லுக்கு பணம் கொடுக்கப் போறேன்னாலும்!....

சரி, குறளுக்கு வருவோம்!

ஒன் பர்ஸுலேர்ந்து பணத்தை எடுத்து இப்ப எனக்கும் சேர்த்துக் கொடுக்கறே இல்ல?


அது மாரி, தன்கிட்ட இருக்கற ஒரு பொருளை இன்னோர்த்தனுக்கும் கொடுத்து தானும் சந்தோசப்படற இந்தப் பொண்ணோட சேர்றது அவனுக்கு இன்பமா இருக்காம்!

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு." [1108]


இப்ப சொல்லப் போறது கொஞ்சம் சூட்சுமமான மேட்டரு!

சாப்டறத நிப்பாட்டிட்டு கவனமாக் கேளு!

ரெண்டு பேரு ஒர்த்தர ஒர்த்தர் விரும்பறாங்க!

பாக்கறாங்க! பேசறாங்க, தொடக் கூடத் தொடறாங்க!

அதெல்லாம் ரொம்பவே இன்பமாத்தான் இருக்கும்.

ஆனா, ஒர்த்தர ஒர்த்தர் கட்டிப் பிடிச்சு, இறுக்கமாக் கட்டிக்கும் போது....

அதாவது, காத்துக் கூட நடுவுல பூராத மாரி இறுக்கக் கட்டிக்கறாங்களாம்!...

அப்படிக் கட்டிப் பிடிச்சு இருக்கக் கொள்ள, அவங்களுக்கு வர்ற சந்தோஷம் இருக்கு பாரு!

அதுக்கு ஈடு இணையே கிடையாதாம்!!!

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்." [1109]

இந்தக் காதல் பண்றவங்களுக்கு, வெறுமன காதல் பண்றது மட்டுந்தான் வேலைன்னு நெனைக்காதே!

சும்மா காதல் மட்டுமே பண்னினா அதுல ஒரு த்ரில்லு இல்லியாம்!

சின்ன சின்னதா சண்டை போடணுமாம்!

அது பெருசாவறதுக்கு முன்னாடியே சமாதானம் ஆயிறணுமாம்!

அப்பத்தான், மனசுல ஒண்ணும் வெச்சுக்க மாட்டாங்க!

பெரிய சண்டை ஆயிருச்சுன்னு வையி!

அது கொஞ்சம் பேஜாராயிடும்.

அதனால... இன்னா பண்ணனும்னா.... சின்னச் சின்னதா சண்டை போடணும்....அப்பப்ப!

அத்த ஆரு போட்டாலும், ஆராவது ஒர்த்தர், விட்டுக் கொடுத்து ராசியாயிடணும் வெரசலா!

அதுக்கப்பறம், ரெண்டு பேரும் சேரணும்!

அது ரொம்பவே ஜாலியா இருக்குமாம்.

இதெல்லாம் காதலால வர்ற நல்ல விசயமாம்!

சரி, சரி, பூரி கிளங்கு வந்தாச்சு, எடுத்துக்கோ!

அப்டியே ரெண்டு டீ சொல்லிடு!


"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு." [1110]


இப்போ ஒரு புக்கு படிக்கறே! நல்ல நல்ல விசயம்லாம் அதுல இருக்கு!

படிக்கக் கொள்ள ஒனக்கே புரியுது.... இதெல்லாம் இத்தினி நாளு தெரிஞ்சுக்காம இருந்திட்டோமேன்னு!

ஒன்னோட அறிவு இன்னும் ஜாஸ்தியாவுது!

அதே மாரித்தான் இந்த காமம்ன்றதும்!

ஒவ்வொரு தபாவும் புதுசு புதுசா ஒண்ணொண்னு தெரியுமாம்!

சரி, பில்லைக் கொடுத்திட்டு வா!

நான் வாசலாண்ட நிக்கறேன்"

எனச் சிரித்தவாறே கிளம்பினான், மயிலை மன்னார்!


அவ்ளோதாங்க!

பிறகு சந்திக்கலாம்!

Read more...

Thursday, August 02, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 15 [வயது வந்தோர்க்கு மட்டும்!]

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 15 "புணர்ச்சி மகிழ்தல்"

வாரா வாரம் எனக்குக் குறளின்பம் தந்து கொண்டிருந்த நண்பனை இப்போதெல்லாம் மாதா மாதம் சந்திக்கும்படியான நிலை
வந்துவிட்டதே என மிக வருத்தம் எனக்கு!

சரி, இதையாவது விடக்கூடாது என்ற ஒரு வெறியோடு, ஆடி வெள்ளி மயிலை கற்பகாம்பாளைத் தரிசித்த பின்னர்,
மயிலைக் குளத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன், அவனைப் பார்க்கும் ஆவலோடு!

கிடைக்கவில்லை!

மனம் தளர்ந்து, கடைசி முறையாக நாயர் கடைக்கு வந்து, 'அண்ணனை எங்கனெயும் நோக்கியோ, சேட்டா?' என
எனக்குத் தெரிந்த அரைகுறை மலையாளத்தில் வினவினேன்.

'இல்லியே ஸாரே! கிட்டில்லா ஆ ஆளு!' என நாயர் சொன்னதும் என் நம்பிக்கை தகர்ந்தது.

சரி, இன்னிக்கு நமக்கு கொடுப்பினை இல்லை என நொந்தவாறே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கலானேன்.

திடீரென ஒரு குரல்!

பரிச்சயமான குரல்!

"நா சொன்னா சொன்னதுதான்! அவனவன் அனுபவிச்சாத்தான் புரியும்! அத்த வுட்டுட்டு, இது எப்டி இருக்கும்னு
கேட்டேன்னு வெச்சுக்கோ, நீதான் ஒலகத்துலியே மஹா முட்டாள்" என யாருடனோ பேசிக்கொண்டு மயிலை மன்னார்
நாயர் கடை வாசலில் ஆஜரானான்!

என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை!

மன்னாரைப் பார்த்தது மட்டுமல்ல; என் நண்பரொருவரைக் குறித்து, என் மனதில் ஓடிக் கொண்டிருந்த அதே விஷயத்தைப் பேசிக் கொண்டும் மன்னார் வந்தது எனக்கு பேராச்சரியம்!

என்னைப் பார்த்தவுடன் இன்னும் அதிகமாகவே குஷியானான் மன்னார்.

'இன்னாப்பா! வா, வா, வா! நீயும் இந்த ஜோதில ஐக்கியமாயிக்கோ! காதல்ண்றதே ரொம்ப குஜாலான மேட்டரு. இதுல காதல் கைகூடி,
அது கனிஞ்சு ரெண்டு பேரு சேர்றதுல இருக்கு பாரு ஒரு குஜாலு!... அட! அட! அட! அத்தச் சொல்ல வார்த்தையேகிடையாது!
ஐயன் இன்னா சொல்றார்ன்னா...."என ஆரம்பித்தவுடன், பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு அவன் சொல்வதை எழுதலானேன்!

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 111. "புணர்ச்சி மகிழ்தல்"

"கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள." [1101]

நல்லாக் கேட்டுக்கோ!

இப்போ நமக்கு அஞ்சு விதமான உணர்வுங்க இருக்கு.

பாக்கறது, கேக்கறது, புவா துண்றது, மோந்து பாத்து வாசனை இன்னான்னு தெரிஞ்சுக்கறது,
தொடறது அப்டீன்னு அஞ்சு!

ஆனாக்காண்டி, இந்த அஞ்சும் சேந்த மாரி ஒரு விஷயம் ஒலகத்துல கிடையாது!

நீ இன்னா ஒரு பொருளை வோணும்னாலும் எடுத்துக்கோ!

ஒதாரணத்துக்கு, ஒரு பூவை எடுத்துக்கோ!

பாக்கலாம், தொடலாம், மோந்து பாக்கலாம், சிலதை பிச்சி கூடத் துண்லாம்.

ஆனா , கேக்க முடியுமோ? முடியாது!

சரி, அது வோணாம்!

டீவி இருக்கு!

பாக்கலாம், கேக்கலாம், தொடலாம் ...அவ்ளோதான்.

இப்டி, இன்னா ஒரு விசயத்த எட்த்துக்கினாலும், அல்லாமும் கூடி வராது.

ஆனா, ஒரு ஆம்பளையும், பொம்பளையும் விருப்பப்பட்டு சேரும் போது....?

ஒர்த்தரை ஒர்த்தர் பாக்கலாம், பேசறதைக் கேக்கலாம், கிஸ் அடிக்கக்கொள்ள துண்ணக்கூட துண்ணலாம், மோந்து பாக்கலாம், தொடவும் செய்யலாம்!

அத்தத்தான் நம்ம ஐயன் சும்மா கணக்கா சொல்லி இருக்காரு இதுல!

ஒரு ஆம்பளை சொல்றான்.... இந்தாமாரி, இந்த அஞ்சு விதமான உணர்ச்சியையும், நல்லா வளையில்லாம் போட்டுகினு இருக்கற
இவகிட்ட எனக்கு கிடைக்குதுன்னு!


"பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. [1102]


ஒனக்கு ஒரு அடி படுது.

கல்லு தடிக்கின்னு வெச்சுக்கோயேன்.
ரெத்தம் கொட்டுது.
இன்னொரு கல்லை எடுத்து,... இல்ல,.... அதே கல்லை எடுத்து அது மேலியே இன்னோரு போடு போட்டா அது சரியாயிடுமா?

சரி, அது வோணாம்.
ஜொரம் வருது! மளைல நனைஞ்சு!
திருப்பியும் ஒன்னியக் கொட்டற மளைல நிக்க வெச்சா ஜொரம் சரியாப் பூடுமா?

டாக்டரைப் பாக்கணும்!
காயத்துக்கு மருந்து போடணும்.
இல்லேன்னா, ஜொரத்துக்கு ஊசி மாத்திரை எடுத்துக்கணும்.
அப்போத்தான் சரியாவும்.
சர்த்தானே நான் சொல்றது?

ஆனாக்க, இந்தப் பொம்பள இருக்கே, அதாம்ப்பா... அளகா வளைல்லாம் போட்டுகிட்டு, நகை நட்டெலாம் போட்டுகிட்டு ஒன்னிய மயக்கி வெச்சாளே,..... அவதான்...!


அவளால ஒனக்கு இப்ப ஒரு நோவு வந்திருக்கு!

அதாம்ப்பா, காதல் ஜொரம்!

அதுக்கு இன்னா மருந்துண்ற?

எந்த டாக்டர் இதுக்கு மருந்து வெச்சிருக்கான்?

ஆனா, ஐயன் சொல்றாரு, இதுக்கு மருந்தும் அந்தப் பொண்ணேதானாம்.
அவளாலதான் இத்த தீக்க முடியுமாம்!

இதுமாரி, நோவும் கொடுத்து, அத்த தீக்கற மருந்தையும் வெச்சிருக்கறது, ஒரு விருப்பப்பட்ட பொண்ணாலதான் முடியுமாம்!


"நாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு." [1103]


நம்ம சங்கர் அடிக்கடி சொல்லுமே, அந்த சொர்க்கம்.... அதாம்ப்பா... பெருமாள் இருக்கற எடம்... வைகுண்டம்.. ... அங்கே
இன்னான்னாமோ கிடைக்குமாம்!


மெத்து மெத்துன்னு படுக்கை விரிச்சு, அப்சரஸுங்கல்லாம் விசிறி வீசுவாங்களாம்!


அத்த ஆரு பாத்திருக்கா?
இன்னாமோ சொல்றாங்க!

ஸரி! அத்த உண்மைன்னே வெச்சுப்போம்!

ஒன்னோட மனசுக்குப் பிடிச்ச பொண்ணோட,.... அதுவும் ஒன்னை விரும்புது.... அத்தோட மெல்லிசான தோள்ல சாஞ்சுகிட்டு
ஒரு பத்து நிமிஷம் கண்ணை மூடற பாரு... அதுக்கு ஈடவுமா, இந்த சொர்க்கலோகம்லாம்னு ஐயன் கேக்கறாரு!


"நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணெண்ணும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்." [1104]


சடாரென ஒரு தீக்குச்சியைக் கிழித்தான் மன்னார்!

அந்த நெருப்பை என் கிட்ட கொண்டு வந்து என் முகத்தருகில் நீட்டினான்!

பட்டென விலகினேன் நான்!

"இப்ப ஏன் தள்ளிக்கினே?

நெருப்பு சுட்டுருமேன்னுதானே!

அதான் நெருப்போட கொணம்.

கிட்ட வந்தா சுடும். தள்ளி நின்னா ஒண்ணும் பண்ணாது!

ஆனா, ஒனக்குப் பிடிச்ச பொண்ணு, ஒம்மேல பிரியமா இருக்கு!

அது ஒரு அஞ்சு நிமிஷம் தள்ளிப் போச்சுன்னு வையி!

மவனே! தக தகன்னு ஒன் ஒடம்பு கொதிக்க ஆரம்பிச்சிடும்!

அதே அவ கிட்டக்க வந்தான்னா... அவ்ளோதான், சும்மா ஐஸுல தூக்கிப் போட்ட மாரி, பல்லு கிட்டிப் போயி,
குளுர்ல நடுங்கி தந்தியடிக்க தொவங்கிடும்!

அப்பிடியாப்பட்ட வினோதமான நெருப்பு இவகிட்ட மட்டும் எப்டி வந்திச்சுன்னு ஐயன் ஒரு கொஸ்சின் கேக்கறாரு!
"

"வேட்டபொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்." [1105]

நாயர் கடையாண்ட நிக்கறே நீ!

இன்னா கிடைக்கும் இங்க?

மிஞ்சி மிஞ்சிப் போனா, டீ, மசால்வடை!

அதிகமாக் கேட்டியானா, பன், ரஸ்க்கு, கடலை மிட்டாய்!

அவ்ளோதான்!

இப்ப நீ இன்னா நெனைக்கற...

மணி 9 ஆச்சு! இன்னும் சோறு துண்ணல.

இப்பமட்டும், ஒரு மசால் தோசையும், கெட்டி சட்னியும், நாலு பூரியும், கூடவே மசால் கிளங்கும் கெடச்சுதுன்னா இம்மாம் ஜாலியா இருக்கும்னு!

பார்றா! இன்னா ஆச்சரியம்!

டக்குன்னு ஒன் முன்னால வந்து நிக்குது அதெல்லாம்!

அதே மாரி, நீ இன்னான்னா நெனக்கறொயோ, அத்தினியும் ஒனக்குக் கிடைச்சுதுன்னா, எம்மாம் சந்தோசமா இருக்கும்?

அப்டி இருக்குமாம, நீயும் நல்லா அடர்த்தியான தலைமுடியில பூவெல்லாம் வெச்சுகிட்டு இருக்கற பொண்னும் ஒர்த்தரை ஒர்த்தர்
விரும்பி, நீ அவ தோள்ல சாஞ்சுகிட்டியானா!

நான் சொல்லலைப்பா... ஐயன் சொல்றதுதான் இது!


என்று சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்!

திறந்த வாயை மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த நான், ' என்னப்பா! இவ்வளவுதானா? மொத்தம் பத்து குறளாச்சே ஒரு அதிகாரத்துல" என
அடக்க முடியாமல் கேட்டேன்!

ஆசையைப் பார்றா!

இருக்கு இருக்கு!
இன்னும் அஞ்சு குறளுஇருக்கு!

ஆனா, இப்ப பசிக்குது!
மசால் தோசை, பூரி கிளங்குன்னதும் வவுறு கபகபான்னு கிள்ளுது!
வா, வஸந்த பவனுக்குப் போயி
சாப்ட்டுகிட்டே மிச்சத்தையும் சொல்றேன்"


என எனை இழுத்துக் கொண்டு சென்றான் மயிலை மன்னார்!

அவன் பேச்சுக்கு மறுப்பேது?

சாப்பிட்டு வந்து மீதி அவன் சொல்லிய மீதி ஐந்து குறள் விளக்கத்தைத் தருகிறேன்!

இப்போதைக்கு இதை "அனுபவியுங்கள்"!


:))
***************************************************


ஒண்டொடி கண்= வளையணிந்த பெண்
பிறமன்= பிற பொருட்கள்
வேட்ட= விருப்பப்பட்ட
தோட்டார் கதுப்பினாள்= பூக்கள் நிறைந்த கூந்தலை உடைய பெண்

Read more...

Wednesday, August 01, 2007

"கந்தகுரு கவசம்"


முருகனருளில் தொடராக வந்த "ஸ்ரீ கந்தகுரு கவசம்" அனைவரும் பிரதி எடுத்துப் படிக்க வசதியாக இங்கு பதியப்படுகிறது!

முருகனருள் முன்னிற்கும்!




ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள்
அருளிய
"கந்த குரு கவசம்"


... விநாயகர் வாழ்த்து ...

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

... செய்யுள் ...

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... 55

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... 60

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... 65


கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... 70

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... 75

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... 80

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... 140

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... 145

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... 150

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... 155

கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... 160

ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... 165

உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... 170

[முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது!
மந்திரம், அதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி.
மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி.
ஆனால், இங்கு ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.

முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! ]

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285

எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் ...... 305

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320

பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... 325

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... 330

கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... 335

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... 340

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... 345

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... 350

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... 355

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... 360

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... 365

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... 370

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... 375

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... 380

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... 385

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... 390

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... 395

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... 400

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415

உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447

ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.


இந்தப் புனித கவசத்தை இங்கு அளிக்க அருள் புரிந்த ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளுக்கும், இதனைத் தொடர்ந்து படித்து வந்த அனைவருக்கும் எனது நன்றி!

முருகனருள் முன்னிற்கும்!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP