Monday, July 16, 2007

"ஆடிக்கூழ் குடிக்க வாங்க!"


"ஆடிக்கூழ் குடிக்க வாங்க!"

செல்வி விஜி ஒரு சிந்திக்க வைக்கும் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
//ஆடியில் ஏன் கூழ் காய்ச்சுகின்றார்கள்? அறிந்தவர்கள் சொல்லுங்களேன்....
அறியும் பேராவலோடு...//


இதோ என் கருத்து!

தை மாதம் !

அறுவடை முடிந்து அனைவரும் மகிழ்வோடு இருக்கும் காலம்.

இதில் வந்த வளம் வைத்து அடுத்த 3 மாதம் ஓடுகிறது.

சித்திரை பிறக்குது.

இன்னும் கொஞ்சம் அரிசி இருக்கு.

வைகாசி, ஆனி....

மிச்சம் மீதி குருணை வைத்து காலம் ஒட்டியாச்சு.

ஆடி பிறக்குது.

ஆடிப்பெருக்கு வர இன்னும் 18 நாள் இருக்கு.

அதன் பின்தான் நிலம் ஈரமாகும்.

உழவே முடியும் அப்போதுதான்!

சம்பா விதைக்கமுடியும்.

ஆடிப்பட்டம் தேடி விதைக்க முடியும்.

இங்கோ....!

வெயில் கொளுத்துது.

வீட்டில் தண்ணீர் கூட இல்லை.

ஒரு பிள்ளைக்கு அம்மைநோய் வேறு!

வீட்டில் தாளிக்கக் கூடாது என்னும் கட்டுப்பாடு வேறு.

சோறும் கிடையாது.

இருக்கும் சில மணி அரிசிகளோ மூட்டை மூட்டையாய் பணம் படைத்தவர் வீட்டில்.

பார்த்தாள் அம்மன்!

அருள் வந்து ஆடினாள்.

அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊத்துடா! அம்மன் கேக்கறா! எல்லாருக்கும் ஊத்து! அப்பதான் என் மனம் குளிரும்!

அரிசி யாரிடம் இருந்ததோ?

அவன் பயந்தான்.

கொண்டுவந்தான் கோயிலுக்கு.

கூழ் காய்ச்சினான்.

அல்லாரும் வாங்கடேய்! அம்மன் கூழ் குடிங்கடேய்!


வீட்டில் தண்ணி கூட கிடைக்காத ஏழைமக்கள் கோயிலுக்கு பாத்திரம் ஏந்தி வந்தனர்.

அம்மன் ஊற்றிய கூழைப் பிரசாதமெனப் பெற்று பசியாறினர்!

அம்மனும் மகிழ்ந்தாள்...... அல்லல் படுவோரைக் காப்பாற்றிய மகிழ்வில்!

மடை திறந்த வெள்ளமாய்ப் பிறந்தாள்!

ஆடிப்பெருக்கு !
ஆடிப்பட்டம் !
ஆடிச் சம்பா !

அதன் பின்னர் தை வரைக்கும் ஆட்டம் தான்! பாட்டம்தான்!!

அம்மன் அருள் எங்கும் பொலிக!

ஆடி வெள்ளி அன்றாவது மாரியம்மன் தாலாட்டு படியுங்கள்!



அதெல்லாம் சரி!

இந்தக் கூழை எப்படி காய்ச்சுவது?

இதோ அதன் பக்குவம்!



ஈழத்துப்பாடல் ஒன்று!!

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்திரப்புலவர்

ஆடிக்கூழ்:

தேவையானவை

ஒரு கைப்பிடி வறுத்த பயறு
கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது
ஒரு பேணி - பச்சரிசி மா
அரைமூடித்தேங்காய்ப்பால்
பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு
மிளகுத்தூள் தேவையான அளவு
சீரகத்தூள் தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு

முதலில் சுத்தமாக கழுவிய வாணலியில் அல்லது பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))...


கலவை 1
இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும்.


பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும்.

எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும்

அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்...

! காரம்+இனிப்பு சேர்ந்த இனிய கலவையில் மணக்கும்!!

சுவை மிகச்சுவை எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்வும் பிடிக்கும்...

கொழுக்கட்டையும் உண்டு!!..:))

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP