Sunday, February 22, 2009

"உந்தீ பற!" -- 22

"உந்தீ பற!" -- 22

பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

நானென் றெழுமிட மேதென நாடவுண்
நான்றலை சாய்ந்திடு முந்தீபற
ஞான விசாரமி துந்தீபற. [19]

நான் என்று எழும் இடம் ஏது என நாடவும்
நான் தலை சாய்ந்திடும் உந்தீ பற
ஞான விசாரம் இது உந்தீ பற.


’நான்’என இங்கே நம்முள் எழுவது
ஏதென சற்றே எண்ணிடும் போது

உரித்திட உரித்திட ஒன்றுமில்லாதுபோகும்
வெங்காயம் போலவே இதுவெனப் புரிந்திட

நானிதைச் செய்தேன் அதனைச் செய்தேனென
செயலினைப் புரிந்து பயனை உணரும்

அதுவல்ல 'நான்'என நன்கே தெளிந்திட
நான் தலைசாய்ந்து ஞானத்தேடல் மேலும்தொடரும் .


திரு. வடுவூர் குமார் உன்னிப்பாகக் கண்டுபிடித்தபடி, பதினேழாம் பாடலில் இருந்து, பகவான் ரமணர் ‘நான்’ என்பதின் தோலை ஒவ்வொன்றாக உரித்துக் காண்பிக்கத் துவங்குகிறார்.

மனம் அழிய முதலில் மனதை ஒருமைப்படுத்தி, எண்ணங்களை
ஒழுங்குபடுத்தி, ‘நான்’ இது’ என்னும் இரண்டுக்குள் குறுக்கி, பின்னர்,
அதையும் சுருக்கி, ‘நான் எனும் எண்ணம்’ என்பதிலிருந்தே எல்லாம் தொடங்குகிறது எனச் சொல்லியவர்,இந்த ‘நான்’ என்பதின் துவக்கம் எங்கே என ஆராயச் சொல்கிறார்.

அப்போது, இந்த எண்ணமும் மறைந்து, ‘நான்’ என்பதே நிலைபெறுகிறது.

பொதுவாக ‘நான்’ என்றாலே ஒரு கர்வம், அஹங்காரம் என்பதே நாம் அனைவரும் அறிந்த ஒரு பொருள்!

’நான்’ என ஒருவர் சொல்லும்போது, அப்படியே அனைவரும் இதை அணுகி ஒரு தவறான கருத்தைப் பொதுவில் கொள்கிறோம்.

வேதாந்தத்தில் இந்த ‘நான்’ வேறு பொருளில் உணரப்படுகிறது.

மனம்,உடல்,புத்தி இவற்றின் விளைவால் ஏற்படும் செய்கையும், அதனால் விளையும் உணர்வுகளுமே ‘நான்’ என இங்கு அறியப்படுகிறது.

‘நானே இந்த உடல்’, ‘நானே இதனைச் செய்கின்றேன்’ என்பது போல.

இந்த ‘நானைத்தான்’ மேலும் அறியத் தூண்டுகிறார் பகவான் ரமணர்.

இதுவே ஞானத் தேடல்!

பதின்மூன்றாம் பாடலில் இதனை வேறு விதமாக, ‘லயம், நாசம்’ எனச் சொல்லி,
எவ்விதமாக மனத்தை ஒடுக்குவது எனக் காட்டியது இனி மேலும் ஆழ்ந்து விளக்கப் படுகிறது.
*****************

[தொடரும்]

குருவருள் அனைவருக்கும் கிட்டட்டும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP