Saturday, November 03, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 31

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 31

முந்தைய பதிவு இங்கே!




29.

"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின் இருந்து வாழ்வார் பலர்." [1160]

'வா, போகலாம்' எனச் சொன்னவர், திரும்பி வந்த வழியே தான் இருந்த குகைக்குத் திரும்பினார்.

'செல்லும் முன் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எனக்கு சில வேலைகள் இருக்கின்றன. நல்லா சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடு. இனிமேல் நாம் போகும் தூரம் மிகவும் அதிகம். நடைதான்! அநேகமா இதுவே நீ எடுக்கப் போகும் கடைசி ஓய்வா இருக்கும் கொஞ்ச நாளைக்குன்னு நினக்கறேன்'
எனச் சொல்லிவிட்டு வெளியில் சென்றார்.

கந்தனுக்குத் தூக்கம் வரவில்லை.

பொன்னியை இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பார்க்க முடியாது என்ற எண்ணம் அவனை வாட்டியது. போகும் முன் அவளை ஒருமுறை சந்திக்கணும் எனத் தோன்றியது.

எழுந்து அவள் வீடு நோக்கி நடந்தான்.

பொன்னியின் தம்பி கண்னில் பட்டான்.

'உங்க அக்கா வீட்டுல இருக்கா?' எனக் கேட்டான்.

'உள்ளேதான் இருக்கு. அப்பா வெளியில போயிருக்காரு. எங்க போயிருந்தீங்க இம்மாந்நேரம்? நீங்க இன்னும் சாப்பிட வரலியேன்னு சொல்லிகிட்டு இருந்தாரு. கொஞ்சம் இருங்க. 'எனச் சொல்லி உள்ளே சென்றான்.

பொன்னி வெளியில் வந்தாள்.

'நான் சித்தரைப் பார்த்துட்டேன்! அவர் என்னைக் கூட்டிகிட்டு போறேன்னு சொல்லியிருக்காரு. காலையில கிளம்பறோம். போறதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்னு தெரியாது. நான் உன்னை விரும்பறது மட்டும் உறுதின்னு உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு...' என சொல்ல ஆரம்பித்த கந்தனை 'பேச வேண்டாம்' என்பது போல் சைகை செய்துவிட்டு,

'ஒண்ணும் சொல்லாதீங்க. ஒருத்தரை விரும்பறதுக்குக் காரணமே நாம அவங்க மேல வைச்ச அன்பாலதான். அதுக்கு வேற எந்தக் காரணமும் சொல்லத் தேவையே இல்லை. ' எனப் பொன்னி தலை குனிந்தவாறே தழுதழுத்த குரலில் சொன்னாள்.

'அப்படியும் சொல்ல முடியாது! நான் பாட்டுக்கு ஆடு மேச்சுகிட்டு என் ஊருல இருந்தேன். எனக்கு ஒரு கனவு வந்திச்சு. அதை ஒரு கிழவி புதையல் பத்தியதுன்னு சொல்லி ஊக்கப் படுத்தினா. அதைத்தான் நீ தொடர்ந்து போகணும்னு தங்கமாலை போட்ட ஒரு பெரியவர் வந்து என்னை அனுப்பினாரு.நடுவுல கொஞ்ச நாளு ஒரு ஓட்டலை நிர்வாகம் பண்ணினேன். அது போதும்னு அலுத்துப் போயி, அங்கேருந்து கிளம்பினேன். நடுவுல இப்படி ஒரு கலவரம் வந்ததால இந்த மலைக்கு ஒரு
சித்தரைத் தேடிகிட்டு வந்து, வந்ததுல உன்னைப் பார்த்தேன். பார்த்ததோட மட்டும் இல்லாம, இப்ப உன்னை விரும்பவும் ஆரம்பிச்சு, அதை உன்கிட்ட
சொல்லவும் சொல்லிட்டேன்! இதெல்லாம் எப்படி நடந்திருக்குன்னு நினைக்கறே? இந்த உலக ஆத்மாவே இதுதான் நடக்கணும்னு நினைச்சதால மட்டும்தான். இதை நீ புரிஞ்சுக்கனும் என் அன்பே!' எனச் சொல்லியவாறே அவளை அணைத்தான்.

பொன்னி முதல் முறையாக அவன் அணைப்பை மறுக்காமல், விலக்காமல் தன் கைகளால் அவனுடன் இணைந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் தீண்டியது இதுவே முதல் தடவை. இன்பமாயிருந்தது இருவருக்கும். ஒரு சில கணங்கள் அப்படியே ஒன்றும் பேசாமல் இருவரும் அந்த அணைப்பின் சுகத்திலேயே இருந்தார்கள்.

சட்டென விலகினாள் பொன்னி.

'விரைவில் திரும்பிடுவேன்' என்றான் கந்தன்.

'இதுவரைக்கும் இந்த மலைக்காட்டை நேசிக்கற ஒரு சாதாரனப் பொண்ணாத்தான் திரிஞ்சுகிட்டு இருந்தேன். ஆனா, இப்ப... இந்த நொடியிலேர்ந்து, இந்தக் காட்டை ஒரு நம்பிக்கையோட எதிர்பார்த்துத் தவிக்கப் போற ஒரு பொண்ணா இருக்கப் போறேன். எங்க அப்பா கூட இப்படி ஒரு நாளைக்குப் போனவருதான்! கொஞ்ச நாளு கழிச்சு திரும்பி வந்தாரு. அது போலவே, நீயும் ஒரு நாளு வருவேன்னு நம்பறேன்.' என்றாள் பொன்னி.

பேசிக்கொண்டே நடந்தவர்கள் வீடு வரை வந்து விட்டார்கள்.

அவள் கைகளைப் பிடித்துக் கொண்ட கந்தன், அவள் கண்களை நோக்கிய வண்ணம் உறுதியாகச் சொன்னான், ' கண்டிப்பா உங்க அப்பா திரும்பி வந்த மாதிரி, நானும் வருவேன். கவலைப் படாதே!'என்றான்.

பொன்னியின் கண்கள் குளமாயின.

'என்ன அழுவறியா? எதுக்கு?' எனப் பரிவுடன் கேட்டான் கந்தன்.

'நான் ஒரு மலைஜாதிப் பொண்ணுதான். ரொம்ப தைரியசாலின்னு பேர் வாங்கினவ! இருந்தாலும், நானும் ஒரு பொண்ணுதானே! போயிட்டு நல்லபடியா வாங்க!' என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டே சிரிக்க முயன்றாள் பொன்னி.

அவன் கைகளை ஒரு அழுத்து அழுத்திவிட்டு, அவைகளை விடுத்து, திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குள் நுழைந்தாள்.

கதவு சாத்தப்பட்டது.

தனக்காக ஒரு உள்ளமும், உயிரும் உள்ளே காத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு, கந்தன் திரும்பி நடந்தான்.

'இனி அவள் வாழ்க்கை முழுதுமாக மாறிப் போகும். நேற்று வரை சுதந்திரமாகத் திரிந்தவள், நாளை முதல், வழி மேலே விழி வைத்து தான் வரும் நாளுக்காய் காத்து நிற்கப் போகிறாள். காற்றில் தனது அன்பினை அவனுக்கு தூது அனுப்பி வைத்துக் கொண்டிருப்பாள்..... அது அவனைச் சேருமோ சேராதோ என்பதைத் தெரியாமலேயே ' என்ற எண்ணம் அவன் மனதை அழுத்தியது. அதே சமயம் ஒரு உற்சாகத்தையும் கொடுத்தது.... அவள் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்து போனதில்!
ஒருநாள் திரும்பவும் வருவான் என்ற அவள் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருப்பதில் தன் பங்கும் இருப்பது ஒரு பதட்டத்தையும், அதே சமயம் ஒரு புதுத் தெம்பையும் கொடுத்தது.

ராபர்ட் இருக்கிறானோ எனப் பார்த்தான். எங்கும் தென்படவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான் என எண்ணியவாறே, அவள் குடிசை கண்ணிலிருந்து மறையும் வரைக்கும், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான்.


சற்று நேரத்தில் அவன் நடை வேகமாகியது!
******************************



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 30

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 30

முந்தைய பதிவு இங்கே!



28.
"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு." [73]


'ம்ம்.. எழுந்திரு! இப்பக் கிளம்பினாத்தான் சரியா இருக்கும்' என்றவாறே கந்தனை எழுப்பினார் சித்தர்.

'எங்கே?' எனக் கேட்டவாறே அவசர அவசரமாய் எழுந்தான் கந்தன்.

அந்த அதிகாலையிலேயே, இருள் இன்னும் மறையாத நேரத்திலேயே, குளித்து முடித்து, நெற்றியிலே பளீரென விபூதி பூசி, ஒரு தேஜஸுடன் திகழ்ந்தார் சித்தர்.

'கிளம்பு. என்கூட வந்து..காணும் உலகில் வாழும் உயிர் காட்டு, பார்க்கலாம்!' என்றார்.

'எப்படி அதைக் காணுவது என எனக்குத் தெரியலியே' என்றான் கந்தன், அப்பாவியாக.

'உயிர் உயிரை அழைக்கும்! உனக்கே புரியும்! வா!' மேலும் புதிர் போட்டார் சித்தர்.

கந்தனுக்கு எதுவோ புரிந்தும் புரியாமலும் போல் தோன்றியது.

ஒன்றும் பேசாமல் முன்னே நடந்தான்.

ஒரு மணிநேர நடைக்குப் பின், ஒரு பாறையருகில் அவன் கால்கள் நின்றன.

மேலே செல்லத் தோன்றவில்லை.

'இங்கே ஒரு உயிர் இருக்குன்னு நினைக்கறேன்' அவனையுமறியாமல் அவன் வாயிலிருந்து சொற்கள் எழுந்தன.

சித்தர் ஒன்றும் பதில் சொல்லாமல், அவன் நின்றிருந்த பாறை அருகே நின்றார்.

பாறையின் அடியில் ஒரு சிறிய பொந்து.

தன் வலது கையை அந்தப் பொந்துக்குள் விட்டவர், ஒரு சில நொடிகளில் கையை வெளியே எடுத்தார்.

அவர் கையில் ஒரு ராஜ நாகம் நெளிந்தது கொண்டிருந்தது.

'பாத்து! பாத்து!கடிச்சுறப் போவுது!' கந்தன் பயத்தில் அலறினான்.

அவனைப் பார்த்து மெல்லச் சிரித்த சித்தர், தன் கையில் இருந்த கம்பால் தரையில்ஒரு வட்டமிட்டு, அதற்குள் அந்தப் பாம்பை மெதுவாக விட்டார்.

'சித்தருக்கு வயசு இருநூறுக்கும் மேலேன்னு சொல்றாங்க' ராபர்ட்டின் குரல் கந்தனுக்குள் கேட்டது.

நாகம் அசைவின்றி அந்த வட்டத்துகுள் சுருண்டது. அப்படியே கிடந்தது.

'பயப்படாதே! அது ஒண்ணும் பண்ணாது. ஒரு உயிரைக் கண்டு பிடிச்சிட்டே! நான் எதிர்பார்த்த சகுனம் எனக்குக் கிடைச்சிடுச்சு' என்றார்.

'என்ன சொல்றீங்க?' ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்துக் கேட்டான் கந்தன்.
'உனக்குப் புரியாது. நான் சொல்லுவதை மட்டும் கேட்டுக்க. உன்னை இந்தக் காட்டிலேர்ந்து பத்திரமா மஹாபலிபுரம் கொண்டு சேர்க்கறது இனிமே என் பொறுப்பு. கவலைப் படாதே!' என்றார் அந்த மஹான்.

கந்தனின் குழப்பம் இன்னும் அதிகரித்தது!

'இங்கேதான் நான் பொன்னியைப் பார்த்தேன். எனக்கு இங்கிருந்து போக விருப்பமில்லை. புதையலை விட எனக்கு இது ரொம்ப முக்கியம்'
என்று முரண்டினான் கந்தன்.

'பொன்னி மலைநாட்டுப் பொண்ணு. அதுக்கு தெரியும் ஆம்பளைங்க இப்படி ஒரு விஷயத்துக்காக தூரதேசம் போவாங்கன்னு. அதுக்குத் தேவையான புதையல் அவளுக்குக் கிடைச்சாச்சு. அதான் நீ! இப்ப நீதான், உனக்குன்னு விதிச்ச புதையலை அடையணும். அதான் அவ விரும்பறதும் கூட. சும்மா உளறாதே!' எனச் சற்றுக் கோபமாகச் சொன்னார் சித்தர்.

'நான் இங்கேயே தலைவர் கொடுத்த வேலையைச் செஞ்சுகிட்டு இருந்தா என்ன?' என வீம்புடன் எதிர்க் கேள்வி போட்டான்.

'என்ன ஆகும்னு நான் சொல்றேன் கேட்டுக்கோ! முத்துராசா சொன்ன மாதிரி, நீ ஒரு குறி சொல்ற ஆளா இங்கே இருப்பே. நிறையப் பணம் கிடைக்கும். பொன்னியைக் கல்யாணமும் பண்ணிப்பே.

எல்லாரும் உன்னைக் கொண்டாடுவாங்க. ஒரு வருஷம் போனதும், மறுபடியும் உனக்கு அந்தப் புதையல் நினவுக்கு வரும். ஆன, நீ கிளம்ப மாட்டே! இங்கே கிடைக்கற சொகுசு உன்னைப் போகவிடாது. ஒரு குழந்தை கூட பெத்துப்பே!
மூணாம் வருஷம் ஆனதும், மறுபடியும், அந்த சகுனமெல்லாம் திரும்ப நடக்கும். புதையல் நினைப்பு உன்னை வாட்டும். உன்னோட வாழ்க்கை லட்சியமே அதுதான்னும், நீ இதுவரைக்கும் வாழ்ந்து வந்த வாழ்க்கை அத்தனையுமே வெறும் போலின்னும் புரிய வரும்.

நிம்மதி இல்லாம, குழந்தையையும், பொன்னியையும் விட்டுப் போக மனசில்லாம, இந்தக் காட்டுலியே திரிய ஆரம்பிப்பே. காரணமே இல்லாம பொன்னி மேல உனக்கு கோபம் கோபமா வரும். அவளுக்கும் தான் தான் இத்தனைக்கும் காரணம்னு ஒரு நினைப்பு வந்து அவளை வருத்தும்.

ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருக்கற அன்பு மட்டும் குறையாது. ஆனா, உன் உள்மனசு மட்டும் உன்னை அரிச்சுகிட்டே இருக்கும். அவ சொன்ன மாதிரியே நாம அப்பவே போயிருந்தா இந்நேரம் புதையலோட வந்திருப்போமேன்னு அது சொல்லி சொல்லிக் காட்டும். ஆனா, எங்கே, போனா, அவ நமக்கு கிடைக்காம போயிருப்பாளோன்ற பயம் தான் உன்னைப் போக விடாம தடுத்துதுன்னும் உனக்குப் புரியும்.

அப்போ ஒரு குறி உனக்குத் தோணும். இனிமே போயி பிரயோஜனம் இல்லை. இனிமே அந்தப் புதையல் உனக்குக் கிடைக்காதுன்னு! அதுல வெறுத்துப் போயி, நீ இந்த குறி சொல்றதையே நிறுத்த ஆரம்பிச்சிருவே! ஏன்னா, அதுவரைக்கும் உனக்கு மனசுல தெரிஞ்சுகிட்டு இருந்த இந்த குறி சொல்ற வித்தை உன்னை விட்டுப் போயிரும்! இந்த வேலையும் உன் கைய விட்டுப் போயிரும்.

அதுக்குள்ள உனக்கு கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கும். பொன்னியோட குடும்பம் நடத்திகிட்டே உன் காலம் முடிஞ்சிரும். ஆனா, கடைசி வரைக்கும் உன் மனசை விட்டு,'அடடா! நாம மட்டும் அன்னிக்குப் போயிருந்தோம்னா.....' அப்படீன்னு நினைச்சுகிட்டே மனசுல நொந்துகிட்டு இருப்பே சாவற வரைக்கும்!'

'உனக்கு ஒண்ணு தெரியணும்! காதலோ, அன்போ ஒரு மனுஷன் அவன் அடைய நினைக்கற வாழ்க்கைக்கு ஒரு தடையா இருக்கவே முடியாது!
அந்த நம்பிக்கையை அவன் கை விட்டான்னா, அதுக்குக் காரணம் அவன் வைச்சிருந்த அன்பு உண்மையானது இல்லைன்றதுதான்.
ஏன்னா, அன்பு தான் இந்த உலகம் எல்லாரோடேயும் பேசற ஒரு மொழி.'

பேசி முடித்ததும், பாம்பு படுத்திருந்த வளையத்தின் ஒரு பகுதியைத் தன் காலால் கலைத்தார் சித்தர். பாம்பு அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்று மறைந்தது.

கந்தன் அவர் சொன்னதை எல்லாம் மெதுவாக உள்வாங்கி மனதுக்குள் அசை போட்டான். அவன் மனதில், காசிக்குப் போகணும் என்ற கனவில் வாழும் அண்ணாச்சியும், தங்கம் எடுக்கணும் என்று அலையும் ராபர்ட்டும் நிழலாடி மறைந்தனர். தன் மேல் நம்பிக்கை வைத்துச் சொன்ன பொன்னியும் கூடவே தலை காட்டிச் சிரித்து மறைந்தாள்!

'நான் உங்க கூட வரேன். எனக்கு வழி காட்டுங்க!' எனச் சொல்லி அவர் கால்களில் விழுந்தான் கந்தன்.

சித்தர் ஒரு திருப்தியுடன் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

'வா, போகலாம்!' என்றார்.
*************************

அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP