Wednesday, December 12, 2007

நிஜமான நிழல்கள்!

நிஜமான நிழல்கள் !

'என்னங்க! இன்னிக்காவது சீக்கிரமா வீட்டுக்கு வந்திருவீங்கல்ல?' என்ற ஷோபாவை எரிச்சலுடன் பார்த்தான், கிரீஷ்.

'இதென்ன கேள்வி தினத்துக்கும்? எப்பவும் போல ஆஃபீஸ் முடிஞ்சதும் வெளியில போயிட்டு லேட்டாத்தான் வருவேன். ஏன்? இன்னிக்கு என்ன திடீர் விசேஷம்?' என்று உறுமினான்.

'அதுக்கில்லீங்க! எங்க அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்கு மேல ஊரிலேருந்து வரேன்னு டெலிஃபோன் பண்ணினாரு. எப்படியும் வர்றதுக்கு ஒன்பது மணிக்கு மேல ஆயிடும். இன்னிக்காவது கொஞ்சம் சீக்கிரமா வந்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும். அதுக்குத்தான்......' எனத் தயங்கியபடியே சொன்னாள் ஷோபா.

'ஆமா! பெருசா அள்ளிக் கொண்டு வரப் போறாரு பாரு உங்க அப்பா! இதோ பாரு! யாருக்காகவும் என் வழக்கத்தை என்னால மாத்திக்க முடியாது! இன்னிக்கு என் ஃப்ரெண்ட் குணாவுக்கு பர்த்டே! ஒரு பார்ட்டி கொடுக்கறான் எங்களுக்கெல்லாம். வர்றதுக்கு 11 க்கு மேலியே ஆகும்! எல்லாம் அவரை நாளைக்குப் பார்த்துக்கலாம். நீ சீக்கிரமா ஆஃபீஸ்லேர்ந்து வந்து உங்கப்பாவைக் கவனிச்சுக்கோ!' என்றபடியே கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு காரைக் கிளப்பினான் கிரீஷ்.

அவன் போவதை ஒரு அலுப்புடன் பார்த்துக் கொண்டே, கிளம்பத் தயாரானாள் ஷோபா.
************
கல்யாணமாகி 4 வருடங்கள் ஆகின்றன கிரீஷ்-ஷோபா தம்பதியினர்க்கு. ஆரம்பத்தில் ரொம்பவே அன்பாகத் தான் இருந்தான் கிரீஷ். இப்பவும் வார இறுதியில் வெளியில் செல்வது எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அலுவல் நாட்களில், இப்போதெல்லாம், கடந்த 2 வருடங்களாக தினமும் வெளியில் நண்பர்களுடன் பாருக்குச் சென்று குடித்துவிட்டு, 10-11 மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறான். பெரிய கம்பனியில் நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். ஷோபாவும் ஒரு நல்ல வேலையில்தான் இருக்கிறாள். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. ஒருவேளை அதுதான் இதற்கெல்லாம் காரணமோ?

ஷோபாவும் முதலில் இது பற்றிக் கேட்டுப் பார்த்துவிட்டு, 'சரி, போ! குடிக்கறது வீட்டுல வேணாம்னு வெளியில குடிக்கிறார்' என விட்டுவிட்டாள்.
********************
'என்ன மாப்ளே! இன்னிக்கு எங்கே பார்ட்டி?' என அலைபேசியில் விசாரித்தான் கிரீஷ்.

'ரம்பாவுக்கு வந்திரு மச்சி! அங்கே உனக்கு ஒரு புதுவித அனுபவம் கிடைக்கப் போகுது! நாம இதுவரைக்கும் போகாத இடம்! அப்பிடியே வர்றப்போ, ராஜுவையும், செழியனையும் பிக்கப் பண்னிகிட்டு வந்திரு! சரியா? ' என மறுமுனையில் குஷியாகச் சொன்னான் குணா.

'அதுக்கென்ன! அப்படியே செஞ்சிடறேன். ரம்பாவா? எங்கேப்பா இருக்கு அது?' என வழியை விசாரித்து வைத்துக் கொண்டான்.

மாலை ஆனதும் நண்பர்களை சேர்த்துக் கொண்டு, அந்த ஹோட்டலை அடைந்தான். சாப்பிடும் இடம், வசதியான தங்கு அறைகள் இவற்றுடன் ஒரு தனி பாரும் சேர்ந்த ஹோட்டல் அது! இதற்குள் செல்ல மட்டும் தனியே டிக்கட் வாங்க வேண்டும்! குணா எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தான். நகரின் எல்லையைத் தாண்டி, அமைந்திருக்கிறது.

அடுத்தவர் முகம் கூடத் தெரியாத அளவுக்கு மங்கலான விளக்கொளியில், ஒரே இரைச்சலாக இருந்தது அந்த பார். புகை மண்டலம் வேறு! நல்ல கூட்டம்! குடித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல ஜோடிகள் இருந்தார்கள்.

குடிப்பானே தவிர... அதுவும் நண்பர்களுடன் சேர்ந்து மட்டுமே.. .... கிரீஷுக்கு இது போன்ற இடத்துக்கு வருவது இதுவே முதல் தடவை. கொஞ்சம் வியப்பாகவும், அச்சமாகவும் இருந்தது.


'என்னடா குணா! இங்க கூட்டிகிட்டு வந்திட்டே!' எனக் கடிந்து கொண்டான், விஸ்கியைச் ருசித்தபடியே!!

'அட! சும்மா குடிச்சுகிட்டே இருந்தா மட்டும் போதுமா? இங்க வந்தா பலானது பலானதுல்லாம் கூட கிடைக்குமாம்! ஏன்! உனக்கே மச்சம் இருந்தா, உன்னைக் கூட யாராச்சும் வந்து கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க!' எனக் கண்ணடித்தான் குணா!

'ரொம்ப நல்லாருக்கு போ! எனக்கு வேணாம்ப்பா அதுல்லாம்! நமக்கு வீட்டுல ஆளு இருக்கு! நீங்க நடத்துங்க!' என்றபடியே பார்வையைப் படர விட்டான்.

செழியனும், ராஜுவும் உற்சாகமாக யாருடனோ ஆடிக் கொண்டிருந்தனர். அதேபோல் இன்னும் பலரும்!. முகம் தெரியாத சில ஜோடிகள் ஆடிக் கொண்டே ஒரு பக்கக் கதவைத் திறந்து , அறைகள் இருந்த பக்கமாகச் செல்வதையும் பார்த்தான்!

'என்ன பாக்கற! இதுக்கெல்லாம் கூட உடனே ரூம் செட் பண்ணிக் கொடுத்திருவாங்க இங்க!' என்று அவனிடம் வந்து சொல்லிவிட்டு, ஒரு பெண்ணுடன் நகர்ந்தான் குணா!

கிரீஷுக்கு வெறுப்பாய் இருந்தது. மணியைப் பார்த்தான். 8.30.
சட்டென காலையில் ஷோபா சொன்னது நினைவுக்கு வரவே, குணாவைத் தேடிக் கண்டு பிடித்து, அவனிடம் விடை பெற்றான் கிரீஷ்!

'டஃப் லக்!' என குணா கத்தியது அவன் காதுகளில் விழுந்தது.

ஒருமணி நேரம் கழித்து, வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மாமனார் வந்த அசதியில் அடுத்த அறையில் படுத்திருந்தது தெரிந்தது. ஷோபா உள்ளே சமையலறையில் இருக்கும் சத்தம் கேட்டது.

நடந்ததை நினைத்துக் கொண்டே வெறுப்புடன் தன் கைப்பெட்டியை பக்கத்தில் இருந்த முக்காலியில் வீசினான்... குடிபோதையில்! ஷோபாவின் கைப்பை மேல் பட்டு அது கீழே விழுந்து சிதறியது.

அதை எடுத்து வைக்கக் குனிந்தான்.

உள்ளிருந்து 'என்னங்க சீக்கிரமே வந்துட்டீங்களா?' எனக் கேட்டவாறே கையில் கரண்டியுடன் வந்த ஷோபா திக்கித்து நின்றாள்!



கிரீஷ் கையிலிருந்த ஷோபாவின் கைப்பையில் இருந்து இரண்டு 'ரம்பா' டிக்கட்டுகள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன!
**********************


[சர்வேசனின் 'ந.ஒ.க. போட்டிக்கு]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP