"பரிசேலோர் எம்பாவாய்" [9]
"பரிசேலோர் எம்பாவாய்" [9]
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9
[ஒருவழியாக, அனைவரையும் எழுப்பிச் சேர்த்த பின்னர், அவன் பெருமையைப் பாடியவண்ணம்.....] அனைவரும்:
பழமையென இவ்வுலகில் சொல்லும் அனைத்துப் பொருள்களுக்கும்
பழமையாக முந்தி நிற்கும் பெரும் பொருளாம் சிவபரனே
பின்னர், புதுமையென ஒவ்வொன்றாய்த் தோன்றி வருகின்ற
அனைத்திற்கும் இன்னும் புதுமையினை அளிப்பவனே!
உன்னை எங்கள் தலைவனாகப் பெறும் பேறு பெற்ற
உன்னடியவரான நாங்கள் என்றும் உன் அடியார்களை
வணங்கிடுவோம்! அவர்களை எம் உற்றவராகக் கொள்வோம்!
அத்தகைய அடியாரையே நாடி மணம் புரிவோம்!
அவர்கள் சொல் கெட்டு அவர்களுக்கு அடியவராகி
அவர் இடும் பணியினையும் செய்திடுவோம்!
இவ்வாறே எங்கட்கு எம்பிரானாகிய நீவிர் அருள் செய்தால்
ஏதாகிலும் குறையுமுண்டோ! சொல்லடி என் பெண்ணே!
அருஞ்சொற்பொருள்:
பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு
- அடிமை