Tuesday, August 05, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [2]

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [2]
முன் பதிவு இங்கே!

காட்சி - 2

[சனிக்கிழமை காலை. மணி 8.10. சங்கர் பரபரக்கிறான். ரயிலைப் பிடிக்கணும் அவனுக்கு. இன்னும் கண்ணனும் அவன் நண்பனும் வரவில்லை. கிளம்ப நினைக்கிறான். அப்போது கண்ணன் இன்னொரு ஆளுடன் நுழைகிறான்.]

ச: [சற்று கோபத்துடன்] என்னடா, இவ்ளோ லேட் பண்ணிட்டே! சரி, சரி, இந்தா சாவியைப் பிடி. இதான் உன் ஃப்ரெண்டா? வீட்டை ஒழுங்கா பார்த்துக்கோங்க ஸார்.

மூ: மன்னிச்சுக்கோடா. இவனைக் கூட்டிகிட்டு வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாயிடுச்சு. இவன் பேரு கதிரவன். என்னமோ சிறுதொழில்னு சொல்றாங்களே! அதைப் பண்ணிகிட்டு இருக்கான். சேலையூர் தாண்டி இருக்கு இவன் வீடு. நாளைக்கு ஒரு ரெண்டு மூணு பேரை இங்கே சென்னையில பார்க்கணுமாம். அதுக்குத்தான் இங்கியே ஒரு இடம் இருந்தாத் தேவலைன்னு சொன்னான். நீதான் ஊருக்குப் போறியேன்னு தான் உன்னைக் கேட்டேன். கதிரவன், இவந்தான் சங்கர். என்னோட நெருங்கிய நண்பன். இதை உங்க வீடாட்டமே நீங்க நினைச்சுக்கலாம்.

ச: [மனத்துக்குள்] அடப் பாவி! விட்டா, வீட்டையே எழுதிக் கொடுத்திருவான் போலிருக்கே!]
[முகத்தில் ஒரு சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு]
அ..அ.. ஆமாம். தாராளமாத் தங்குங்க. உங்க வீடாட்டமே நினைச்சுக்கோங்க, கதிரவன்.

கதி: உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப நன்றிங்க. நீங்க கவலையே படாதீங்க. கண்ணன் சொன்னான். நான் இங்க தங்கறதோட மட்டுமில்லாம, போறப்ப, உங்க வீட்டையும் சுத்தப் படுத்தி திங்கள்கிழமை நீங்க வரும்போது பளபளன்னு வைச்சிடறேன்.

ச: அதெல்லாம் தேவையில்லை. எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம். எனக்கு இப்பிடி அலங்கோலமா இருந்தாத்தான் பிடிக்கும்!

கதி: ஹ!ஹ! நல்லா ஜோக் அடிக்கறீங்க ஸார்! எவ்ளோ பெரிய உதவி பண்ணியிருக்கீங்க. நான் என்னால முடிஞ்ச உதவியைச் செய்துதான் ஆகணும். எனக்கும் இதெல்லாம் செய்யப்பிடிக்கும்.

ச: சரி! உங்க இஷ்டம். இந்தாங்க சாவியைப் பிடிங்க.

கதி: நம்ம வீட்டுக்கு ஒரு நாளு நீங்க சாப்பிட வரணும். உங்களுக்கு வேற ஒண்ணும் ப்ரொக்ராம் இல்லேன்னா, வர்ற செவ்வாய்கிழமை வாங்களேன். கண்ணன் நீங்க உங்க நண்பரைக் கூட்டிகிட்டு வாங்க. இது என்னோட அன்புக் கட்டளை. சரியா?

க: அவ்ளோதானே! கவலையை விடு. நான் கூட்டிகிட்டு வரேன்.




ச: அப்போ நான் வர்ட்டா! பாக்கலாண்ண்டா கண்ணா! வறேன் மிஸ்டர் கதிரவன்!

[சங்கர் கிளம்புகிறான்.]

[திரை]

காட்சி - 3

[சங்கர் வீடு. திரும்பி வந்தவன், ஒவ்வொரு பொருளாய்ப் பார்த்து அதிசயிக்கிறான். சுகுமார் உடன் இருக்கிறான்.]

ச: டேய்! என் வீடா இது? அந்த ஸோஃபாவைப் பாரேன். எவ்ளோ சுத்தமா இருக்கு? இந்த சமையலறையைப் பாரேன்! இது என்னுதான்னே எனக்கு சந்தேகமா இருக்கு!

சு: ஆமாண்டா! ஃப்ரிட்ஜ் கூட சுத்தமா இருக்கு! வேண்டாதையெல்லாம் தூக்கியெறிஞ்சு, ரொம்ப நல்லா அடுக்கி இருக்கு! என்னாலியே நம்ப முடியலை. கதிரவன் ரொம்......ப நல்லவண்டா!

ச: வீட்டை இது மாதிரி அப்பப்ப கொடுக்கறது கூட நல்லதுதான்னு நினைக்கற மாதிரி பண்ணிட்டுப் போயிட்டாண்டா கதிரவன்! நீங்களும் இருக்கீங்களே!

சு: உலகத்துல எங்களைப் போல நல்லவங்களும் இருக்காங்கன்றதுக்கு உதாரணம் நம்ம கண்ணனோட கதிரவன்.

ச: நீ!...... நீ சொல்றே.... நல்லவன்னு! மேல ஒரு வார்த்தை பேசினே, கொலை விழும் இங்க! ஒரு துரும்பை எடுத்துப் போட்டிருப்பீங்களாடா நீங்கள்லாம்! சரி, சரி! செவ்வாய்கிழமை சாப்பிட வரச் சொல்லி இருக்கான் அவன்! கண்டிப்பா போய் நன்றி சொல்லணும். அதுக்காகவே போகணும்.

சு: போயிட்டு வாடா! இது மாரி ஆளுங்க ரொம்பவே அபூர்வமாத்தான் கிடைப்பாங்க! விட்டுராதே! [மனசுக்குள்] சீக்கிரமா அந்த ஆளைத் திருத்தணும். இதெல்லாம் நல்லால்லே! நம்ம பொழைப்பைக் கெடுத்துருவான் போலிருக்கே! ஏதாவது பண்ணனும்.


[திரை]

காட்சி - 4

[கதிரவன் வீடு. கண்ணனும் சங்கரும் நுழைகிறார்கள். கதிரவன் மனைவி அவர்களை வரவேற்கிறார்]

கதி.மனைவி: வாங்க வாங்க! உங்களைப் பத்தித்தான் அவர் சொல்லிக்கிட்டிருந்தாரு. நீங்க செஞ்ச உதவியை எங்களால மறக்கவே முடியாது. இந்தக் காலத்துல யாருங்க தன்னோட வீட்டை அப்டி 'டக்'குன்னு கொடுப்பாங்க! நீங்க கொடுத்தீங்களே! ரொம்பப் பெரிய மனசுங்க உங்களுக்கு!

ச: [சற்று கூச்சத்துடன்] அப்படி என்னங்க நான் செஞ்சிட்டேன்? என் நண்பன் சொன்னான். நான் சரின்னேன். இதுக்குப் போயி இவ்ளோ புகழறீங்களே! கதிரவன் எங்கே காணும்?

கதி.ம: இல்லீங்க! இதுக்கெல்லாம் ரொம்பப் பெரிய மனசு வேணும்! அவரு இப்ப வந்திருவாரு. சரி, உட்காருங்க. நான் போய் டீ போட்டு கொண்டு வரேன்.
[கதிரவன் மனைவி செல்கிறார். சங்கர் எழுந்து வரவேற்பறையைப் பார்வையிடுகிறான். அவன் பார்வை ஒரு இடத்தில் குத்திடுகிறது! அங்கே......... அதே பொம்மை!!!!!!!!!!!!!!]

ச: கண்ணா!........... இதோ பார்த்தியா?

க: என்னடா? என்ன ஆச்சு? மறுபடியும் எதுனாச்சும் அதிசயம் நிகழ்ந்திருக்கா? எதுக்கு இப்படி குதிக்கறே!

ச: அதோ... அதோ... பார்த்தியா? அதே பொம்மை!

க: எந்த பொம்மை? எனக்கு ஒண்ணும் புரியலை நீ சொல்றது!

ச: ஓ! நீ அப்ப இல்லேல்ல! அதான் உனக்குத் தெரியலை! இந்தப் பொம்மையைத்தான் சுகுமார் தனக்கு வேணும்னு சொன்னான். நானும் ஒரு தப்பாட்டம் ஆடி, மூர்த்தி கிட்டேருந்து பிடுங்கி, அதை அவனுக்குக் கொடுத்தேன். இப்போ அது இங்க! இரு.. இரு! இதுதான் அதுவான்னு இப்பவே செக் பண்ணிடறேன்.

[அலைபேசியை எடுத்து மூர்த்தியை அழைக்கிறான்.]

ச: ஹலோ! மூர்த்தி???

மூ: என்னடா? என்ன விஷயம்?

ச: நீ இப்பவே என்னோட வீட்டுக்குப் போய்....

[கதிரவன் மனைவி தேநீர்த்தட்டுடன் உள்நுழைகிறார்! சங்கர் பேச்சை மாற்றுகிறான்]

ச: சரிடா! நாளைக்குப் போகலாம் சினிமாவுக்கு. இப்ப நான் கதிரவன் வீட்டுல கண்ணனோட இருக்கேன். அப்புறமாப் பேசலாம் சரியா! என்ன? சரி. சரி. அம்மாவைக் கேட்டதாச் சொல்லு. நாளைக்குப் பேசலாம். பை!

[அவசர அவசரமாக அணைக்கிறான் அலைபேசியை!]

கதி.ம: யாருங்க?

ச: ஒண்ணுமில்லை. என்னோட நண்பன் மூர்த்தி. இப்ப பிஸியா இருக்கேனு சொல்லிட்டேன். இந்த டீயை மிஸ் பண்ண முடியுமா? [அசடு வழிகிறான்!]

: [கண்ணனிடம் மெலிய குரலில்] இதேதாண்டா! திருடிட்டாண்டா உன்னோட நண்பன்!

க: பிரச்சினை பண்ணாதேடா~! உண்மையைத் தெரிஞ்சுக்காம எதுவும் சொல்லாதே! எனக்கு அவனால கொஞ்சம் காரியம் ஆக வேண்டியிருக்கு. ஏதாவது சொல்லி கெடுத்துறாத.

கதி.ம: சாப்பிட வாங்க! எல்லாம் தயாரா இருக்கு!

ச: இல்லீங்க! எனக்கு ஒரு அவசர வேலை வந்திருச்சு. நான் உடனே போகணும். மன்னிச்சுக்கங்க. இன்னொரு நாளைக்கு வரேன்.

[கண்ணன் தடுத்தும் கேளாமல் விரைவாக வெளிச் செல்கிறான் சங்கர். கண்ணனும் கூடவே செல்கிறான்!]

[திரை]

காட்சி - 5

[சங்கர் வீடு. சுகுமார், மூர்த்தி, கண்ணன் எல்லாரும் இருக்கிறார்கள்.]

ச: திருடிட்டான்யா..... திருடிட்டான்! வேணும், வேணும். .வீட்டை அவங்கிட்ட கொடுத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்! ச்சே! இப்பிடிப் பண்ணுவான்னு நினைக்கலியே நான்.

க: எதையும் ஆராயாம சட்டுன்னு ஒரு முடிவுக்கு வரக் கூடாது!

சு: என்னடா நீ! இங்க இருந்திச்சு ஒரு பொம்மை. நானும் மூர்த்தியும் அதுக்காக ஆக்கு பாக்கு ஆட்டம் கூட ஆடினோம்! இப்ப அது இங்க இல்லை! அது அங்க இருக்குன்றான் சங்கர்! இதுக்கு என்னடா அர்த்தம்?

க: ஒரு அர்த்தமும் இல்லை. இங்க இருந்திச்சுன்னுதுக்கு என்ன ஆதாரம்? இதுக்கு முன்னாடி நான் இங்க ஒரு பொம்மையும் பர்த்ததில்லை. அது அங்க எப்படி இருக்குன்னு அவனைக் கேட்காம நாமளா எப்படி ஒரு முடிவுக்கு வர்றது? எதுக்கும் ஒரு நியாயம் வேணாமா?

மூ: நீ சொல்றது நல்லா இருக்குடா! நானும் சுகுவும் ஆக்கு பாக்கு போட்டதெல்லாம் உனக்கும் இப்பத் தெரியுந்தானே! நானே பெரிய மனசா விட்டுக் கொடுத்தது இப்ப அங்கே இருக்குன்னா அதுக்கு என்னடா அர்த்தம். சங்கர் சொல்றது சரிதான். இது ஒரு அப்பட்டமான திருட்டு. வீட்டுல தங்க வந்தவன், வீட்டைக் க்ளீன் பண்றேன்னு சொல்லிட்டு, இப்ப க்ளீனே பண்ணிட்டுப் போயிட்டான்னுதானே அர்த்தம்?

க: அப்படியெல்லாம் அபாண்டமா ஒருத்தன் மேல பழி போடக்கூடாது. அவன் ரொம்ப நல்லவன். இப்படியெல்லாம் செஞ்சிருப்பான்னு எனக்குத் தோணலை!

ச: ஓ! உனக்குத் தோணலைல்லை? அவனுக்கு ஒரு ஃபோன் போடு! என்னன்னு கேட்டுருவோம்!

[கண்ணன் ஒரு வருத்தமான முகத்துடன் கதிரவனைக் கூப்பிடுகிறான்]

க: ஹலோ! கதிரவன்!

கதி: என்ன கண்ணன்? என்ன விசேஷம்?

க: ஒண்ணுமில்லை. உன்னை ஒரு கேள்வி கேட்கணும்.

கதி: கேளுப்பா!

க: உங்க வீட்டுல ஒரு பொம்மை ஷோகேஸுல புதுசா இருக்கே. அதைப் பத்தித்தான்.

கதி: ஓ! அதுவா! நானே சொல்லணும்னு நினைச்சேன். நாம இதைப் பத்தி தனியாப் பேசலாமா! நாளைக்கு சவேராவுக்கு வாயேன். சொல்றேன்.

க: சரி. நாளை மாலை 6 மணிக்கு சவேராவுல சந்திக்கலாம். சரியா.

கதி: சரி. பை.

க: பை

க: [சங்கரைப் பார்த்து] நாளைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு சவேராவுக்கு வரச் சொல்றான். இதைப் பத்திச் சொல்லுவானாம்.

சு: [ஆவேசத்துடன்] நாங்களும் வருவோம். என்ன சொல்றான்னு ஒளிஞ்சிருந்து கேப்போம்!

க: எனக்கென்னப்பா இதுல? தாராளமா வாங்க! ஏன் சுகு இப்படி ஆவேசப்படறான்னு எனக்குப் புரியலை!

ச: நீ ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதே கண்ணா! அவனுக்கு அந்தப் பொம்மை மேல ஒரு கண்ணு. அதுல ஒரு பெரிய கதை இருக்கு. அதான் இப்படில்லாம் பேசறான்.

மூ: எனக்கென்னவோ இது திருட்டுன்னுதான் தோணுது.

ச: எல்லாம் நாளைக்குத் தெரிஞ்சிடப் போவுது. எல்லாம் என் தலைவிதி! எனக்குன்னு வந்து வாய்ச்சீங்களே!

[திரை]
*******************

[நாளை நிறைவடையும்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP